எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, August 28, 2008

மைத்துனனுக்கு வீடு கொடுத்த மாப்பிள்ளை!

எங்கள் ஊரான பரவாக்கரையின் பெருமாள் கோயில் பற்றிய பதிவுகள் போட்டிருக்கின்றேன். அந்தக் கோயில் எப்போது கட்டியது என்று சொல்ல முடியவில்லை என்றாலும் 300-ல் இருந்து 500 வருடங்களுக்கு முற்பட்டதாய் இருக்கலாம். ஆனால் அந்தக் கோயிலின் கட்டுமானத்திற்கு உட்பட்ட கற்களில் பழைய தமிழ் எழுத்துக்கள் காணப் பட்டன. அவற்றைக் கல்வெட்டுப் படிப்பவர் மூலம் ஆராய வேண்டி ஒருவரை அனுப்புமாறு நண்பர் மரபூர் சந்திரசேகரனிடம் சொல்லிக் கொண்டிருந்தோம். அதற்கு நேரம் இப்போது தான் வந்தது.புதுசாய்ப் படிக்கிறவங்களுக்காக அந்தக் கோயில் பற்றிய விபரங்கள்
இங்கே மற்றும்
இங்கே பார்க்கலாம். அந்தக் கோயிலைத் திருப்பணி செய்து மீண்டும் நித்தியப் படி வழிபாடுகள் நடக்கச் செய்து வரும் முயற்சிகள் ஓரளவு பலனை அளித்து வருகின்றது. இது ஒருபக்கம் இருக்கட்டும். கோயிலில் இருக்கும் கட்டுமானத்திற்கு உபயோகிக்கப் பட்ட கற்களில் உள்ள எழுத்துக்களை ஆராயR.E.A.C.H. Foundation உறுப்பினர் ஆன சந்திரசேகரன், அதன் அமைப்பாளர் ஆன சத்திய மூர்த்தியிடம் சொல்லி ஆவன செய்ததின் மூலம் சென்ற ஞாயிறு அன்று திரு சத்தியமூர்த்தி அவர்கள், தகுந்த வல்லுனர்களோடு கூடிய குழுவை அழைத்துக் கொண்டு, கும்பகோணம் ரீச் ஃபவுண்டேஷன் உறுப்பினர் ஆன திரு லட்சுமிநாராயணன் மூலம் பரவாக்கரை சென்று மேற்சொன்ன கோயிலைப் பார்வை இட்டிருக்கின்றார். கல்வெட்டுக்களின் வார்த்தைகள் தமிழே என்றாலும் அது பல்லவர் காலத்துக்கு முந்தைய எழுத்தாய் இருக்கலாமோ என ஒரு கருத்து திரு சத்தியமூர்த்திக்கு ஏற்பட்டுள்ளது. அது பற்றி மேலும் ஆய்வு நடப்பதால் பின்னர் அது பற்றித் தெளிவான கருத்து வரும்.

இப்போது தெரியவேண்டிய முக்கியமான விஷயம் அந்தக் கோயில் கட்டக் கொண்டு வரப்பட்ட கற்கள் அனைத்தும், பெருமாள் கோயிலில் இருந்து 2 கி.மீ தூரத்தில் முன்னொரு காலத்தில் இருந்ததாய்ச் சொல்லப் படும் ஈசனின் மாடக்கோயிலின் கற்கள் என்றும் சொல்லப் படுகின்றது. அந்த மாடக் கோயில் இன்று இல்லை. எனினும் இந்தக் கோயிலைப் பற்றி ஆய்வு செய்த பேராசிரியர் திரு செளந்தரராஜன் அவர்கள் (ஓய்வு), இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சைன்ஸ், பங்களூரு, சொல்லுவது, அந்த மாடக் கோயில், கோச்செங்கணான் காலத்திற்கும் முன்னால் திருமூல நாயனாரால் கட்டப் பட்டது என்று சொல்கின்றார். திருமூலரைப் பின்பற்றி, சைவ யோக மரபைப் பின்பற்றிய கோச்செங்கணான் பின்னர் எழுபது மாடக் கோயில்களைக் கட்டி இருக்கின்றான் என்றும் சொல்லுகின்றார். திருமூலர் தான் இந்தப் பரவாக்கரையில் மாடக் கோயில்கள் இரண்டை ஈசனுக்கு எழுப்பி இருக்கின்றார் என்றும் சொல்லுகின்னார். ஒன்று அருள்மிகு மரகதவல்லி உடனுறை மரகத மாணிக்கேஸ்வரர் கோயில் (சிதிலமாகிப் போன இந்தக் கோயில் 4,5 ஆண்டுகளுக்கு முன்பு, திருப்பணி எடுக்கப் பட்டு, கும்பாபிஷேகம் கண்டது. ஆனால் இந்தக் கோயிலின் மூலஸ்தானத்தில் இருந்த பழைய விக்கிரஹங்கள் கிடைக்கவில்லை. புதியதாகவே வைக்கப் பட்டுள்ளது.) இதைத் தவிர, இந்தப் பெருமாள் கோயிலின் மூலவர் ஆன வேங்கடநாதனையும் திருமூலர் பாடி இருப்பதாய்ச் சொல்லும் திரு செளந்தரராஜன், அடுத்துச் சொல்லுவது, பெருமாள் கோயிலின் கிழக்கே இருந்த இந்த மாடக் கோயிலின் கற்களைக் கொண்டே பெருமாள் கோயிலும், மரகத மாணிக்கேஸ்வரர் கோயிலிலும் பயன்படுத்தப் பட்டிருக்கின்றது என்பது சமீபத்திய ஆய்வு.

ஆனால் திரு செளந்தரராஜன் அவர்கள் இந்த மறைந்த ஞானானந்தேஸ்வரர் ஆலயத்தின், மிக மிகப் பழமையான மரகத லிங்கத்தை ஆய்வு செய்து, அந்த லிங்கம் திருமூலரால் அன்றி வேறு யாராலும் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்க முடியாது என்றும் சொல்லுகின்றார். இந்தப் பரவாக்கரையே திருமூலரால் வண்தில்லை என அழைக்கப் பட்டதாயும், இந்த வண்தில்லையின் இரு சிவபதிகளும் திருமூலரால் கட்டப் பட்டிருக்கின்றது என்று சொல்லுகின்றார். ஞானானந்தேஸ்வரர் ஆலயம் இருந்ததற்கான அடையாளம் எதுவும் இன்று இல்லை. அங்கே இப்போது நெல் வயல்களே காணப் படுகின்றன. ஆனால் மிக மிகப் பழமை வாய்ந்த அந்த லிங்கம் இருக்கும் இடத்தை "லிங்கத்தடி" என உள்ளூர் மக்கள் அழைப்பதோடு, ஊரில் மழை பெய்யவில்லை என்றாலோ, அல்லது வேறு ஏதும் வேண்டுகோளை முன் வைத்தோ, லிங்கத்தடி லிங்கத்திற்கு வழிபாடுகள் நடத்துவது உண்டு என்றும் சொல்லுகின்றார்கள். ஆனால் இன்று வரையில் அந்த மரகதலிங்கனார் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும், குளிரில் நடுங்கிக் கொண்டும் இருக்கின்றார்.

இவருடன் உடனுறை அம்மையைக் காணவில்லை. ஆனால் துர்கை கிடைத்திருக்கின்றாள். சாஸ்தா, பிரம்மா, மற்றும் சப்த கன்னியரில் ஒருவர், மேலும் அதி முக்கியமாய் ஜேஷ்டா தேவி கிடைத்திருக்கின்றாள். இந்த ஜேஷ்டா தேவியின் சிலை மிக, மிக அழகு வாய்ந்ததாய் இருக்கின்றது. இங்கே உள்ள படத்தில் காணப்படும் விசலூர் ஜேஷ்டா தேவியைப் பெருமளவு ஒத்து இருக்கும் இந்தச் சிலையும், கூட இருக்கும் மற்றச் சிலைகளுமே பல்லவர் காலத்துக்கு முந்தி இருக்கலாம் என்றும் சொல்லப் படுகின்றது. ஜேஷ்டா தேவி வழிபாடு ராஜராஜ சோழன் காலம் வரைக்கும் இருந்து வந்ததாயும், பின்னர் முற்றிலும் அழிந்து விட்டதாயும் சொல்லப் படுகின்றது. பலரும் நினைக்கும் வண்ணம், ஜேஷ்டா தேவி என்பவள், மூதேவி இல்லை என்றும் இந்த மூதேவி என்ற வார்த்தையே பின்னர் வந்தது என்றும் திரு செளந்தரராஜன் சொல்லுகின்றார். இந்த ஜேஷ்டா தேவியின் தாத்பரியத்தை அவர் எங்களுக்கு விளக்கினார். இப்போது வேங்கடநாதனுக்குக் கோயில் கட்டிக் கொள்ளத் தன் கோயிலின் கற்களைக் கொடுத்து உதவிய ஈசனுக்கும் புதியதாய்க் கோயில் எழுப்பப் பெரு முயற்சிகள் செய்து வருகின்றார் திரு செளந்தரராஜன் அவர்கள். 84 வயதாகும் அவர் பெரும் ஆவலுடன் இந்தக் கோயிலுக்கான அஸ்திவாரம் எழுப்பப் படும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார். இது பற்றிய விபரமான தகவல்கள் இன்னும் பல இருக்கின்றன். ஒரே பதிவில் போட முடியாது. கொஞ்சம், கொஞ்சமாய் வெளிவரும்.

7 comments:

  1. மரகத லிங்கம்?...பெயர் மட்டும் அப்படியோ?

    ReplyDelete
  2. சீக்கிரம் அடுத்த பதிவுகளையும் போடுங்க...

    அப்படியே திருமுலருக்கும் உங்க மூதாதையர்களுக்கும் இருக்கும் உறவினையும் கரெக்ட்டா சொல்லிடுங்க... :))

    ReplyDelete
  3. //ஜேஷ்டா தேவியின் தாத்பரியத்தை அவர் எங்களுக்கு விளக்கினார்//
    ம்ம்ம்ம் எங்களுக்கும் சொல்லுங்க. நாங்களும்
    " 3 தேவி" அப்படிதான் நினைச்சுகிட்டு இருக்கோம்.

    ReplyDelete
  4. "மரகத லிங்கம்" மரகதமா இருந்தா இவ்வளவு நாள் பிழைச்சு இருக்காதே!

    ReplyDelete
  5. //அப்படியே திருமுலருக்கும் உங்க மூதாதையர்களுக்கும் இருக்கும் உறவினையும் கரெக்ட்டா சொல்லிடுங்க... :))
    //

    அம்பி போயி, கேஆரெஸ் போயி,
    இப்போ மெளலி வந்தாச்சு! டும் டும் டும்! :))

    ReplyDelete
  6. //இதைத் தவிர, இந்தப் பெருமாள் கோயிலின் மூலவர் ஆன வேங்கடநாதனையும் திருமூலர் பாடி இருப்பதாய்ச் சொல்லும் திரு செளந்தரராஜன்,//

    பாடல் வரிகளும் கொடுத்தாச் சுவைப்போம்-ல! என்ன கீதாம்மா இது, சஸ்பென்ஸ் எல்லாம் வைக்கறீங்க!

    ReplyDelete
  7. @மெளலி, பெயர் மட்டும் இல்லை, லிங்கமே மரகதம் தான்! திருமூலர் எனக்கு மட்டும் மூதாதை இல்லை, தமிழ் தெரிந்த அனைவருக்கும் மூதாதை தான்.

    @திவா,அதான் சொல்லிட்டீங்களே, அம்மன் பத்தி எழுதப் போறேன், அப்போ வரும்! லிங்கம் மரகதம் தான். ஊர்க்காரங்களுக்கு நல்லவேளையா அதன் அருமை தெரியலை.

    கேஆரெஸ், எழுதணும், கொஞ்சம் முடியலை, நேரமும் இல்லை, எல்லாத்துக்கும் மேலே ஆற்காட்டார் மனசு வைக்க வேண்டி இருக்கு! என்னோட நேரத்திலே அவர் மின்சாரம் கொடுக்கறதில்லை. :P

    ReplyDelete