எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, December 28, 2010

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 12

கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்று பால்சோர
நனைத்தில்லஞ் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்!
இனித்தானெ ழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத் தாரும் அறிந்தே லோரெம்பாவாய்!

கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்று பால்சோர
நனைத்தில்லஞ் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!= எருமை மாடுகள் கறக்க ஆளில்லாமல் பால் கட்டி அவஸ்தைப் படுகின்றனவாம். அதோடு கன்றுக்கு ஊட்டவும் முடியாமல் மாடுகள் கட்டிப் போடப் பட்டிருக்கின்றன. இங்கே கட்டுதல் என்பது அறியாமையில் நாம் கட்டப் பட்டிருப்பதையும் சொல்லலாம். எருமையும் அறியாமையின் அடையாளமே என முன்னரே பார்த்தோம். அப்படிக் கட்டிப் போட்டிருக்கும் எருமைகள் பால் கனம் தாங்க முடியாமல் தானாகவே பாலைச் சொரிகின்றன. அந்தப்பாலெல்லாம் கீழே விழுந்து கோபர்களின் இல்லமெல்லாம் பாலும், மண்ணும் கலந்து சேறாகிவிட்டதாம். இந்த கோபன் இல்லை போலும், அதான் பால் கறக்க ஆளில்லை!

அவன் எங்கேயும் போகவில்லை. நற்செல்வன் ஆச்சே! வெறும் பொருளால் ஆகிய செல்வம் மட்டும் இல்லை அவனிடம், அவனிடம் சிறந்த பக்திச் செல்வமும் இருப்பதாலேயே கோதை அவனை நற்செல்வன் என்று கூறுகிறாள். அத்தகைய நல்ல பக்திச் செல்வம் நிறைந்தவனின் தங்கை வீட்டிற்கு இப்போது போயிருக்கிறாள் ஆண்டாள். அவளை எழுப்புகிறாள்.

பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்! = பனி கொட்டுகிறது. அதுவும் கோகுலத்தில் கேட்கவும் வேண்டுமா?? கொட்டும் பனியில் நனைந்து கொண்டு கீழே நிற்கலாம் என்றால் கீழேயும் பால் கொட்டிச் சேறு. இத்தனை அமர்க்களத்தில் நாங்கள் நிற்க முடியாமல் உன் வீட்டு வாசல் கதவைப் பிடித்துக்கொண்டு நிற்கிறோம். என்கிறாள் ஆண்டாள். அப்படியும் அவள் அசைந்தே கொடுக்கவில்லை.

சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற = சினம் என்ன சாதாரண சினமா? தன் மனைவியைச் சிறைப்பிடித்த சினம். சிறைப்பிடித்தவனும் சாமானியன் அல்லவே. சிறந்த சிவபக்தன். நவகிரஹங்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அவற்றைத் தான் மிதிக்கும் படியாகப் போட்டுக்கொண்டவன். தன் அண்ணனாகிய குபேரனின் செல்வத்தைக் கொள்ளை அடித்து அவனை லங்காபுரியிலிருந்து அலகாபுரிக்கு விரட்டி அடித்தவன். ஈசனிடமே சரிக்குச் சரியாக நின்று அவரை ஆட்டி வைக்கப் பார்த்துப் பின்னர் அவர் கால்விரலின் கனம் தாங்காமல் கத்தோ கத்துனு கத்தி அதனால் ராவணன் என்ற பெயரும், சந்திரஹாசம் என்ற வாளும் பெற்றவன். இப்படிப் பட்ட ராவணனைத் தோற்கடித்தவன் யார்??

மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்!
இனித்தானெ ழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத் தாரும் அறிந்தே லோரெம்பாவாய்! =வேறே யாரு? நம்ம மனதுக்கு இனியவனே என்கிறாள் ஆண்டாள். ஆமாம், இந்தக் கண்ணன் படுத்தற பாடு தாங்கலை தான். கோபியர்களை அங்கேயும், இங்கேயும் அலைக்கழிக்கிறான். திடீர்னு ஒருத்திக்குப் பூச்சூட்டுகிறான் இன்னொருத்திக்குத் தலை வாரிவிடுகிறான். வேறொருத்தியின் வீட்டில் வெண்ணெய் சாப்பிடுகிறான். சரினு பார்த்தால் நம் வீட்டு முற்றத்திலே நிற்கிறான். புல்லாங்குழல் பாட்டிசையைக் கேட்டுப் போனால் ஒளிஞ்சுக்கறான்.

ஆனால் ஸ்ரீராமன் அப்படி இல்லை. கருணாமூர்த்தி! தனக்குத் தீமை செய்தவர்களுக்குக் கூட நன்மையே செய்பவன், ராவணனைக்கூட இன்று போய் நாளை வா என்றே பெருந்தன்மையாய்க் கூறினான் அன்றோ! ஆகவே ஏ, பெண்ணே இந்தக் கண்ணன் நாமம் வேண்டாம், சரியா, ராவணனுக்கே சரணாகதி கொடுக்கத் தயாராய் இருந்த ஸ்ரீராமன் நமக்கும் கொடுப்பான். அத்தகைய மனதுக்கு இனிய நற்குணங்கள் நிரம்பிய ஸ்ரீராமனைப் பாடுவோம் வா, நாங்களும் அவன் புகழைப் பாடுகிறோம். நீ என்னன்னா இன்னும் தூங்குகிறாயே! எழுந்திரு பெண்ணே! இனியாவது எழுந்திரு! அக்கம்பக்கம் எல்லாம் பார்க்கிறாங்க பார்! எங்களுக்கு ஒண்ணுமில்லை அம்மா, உனக்குத் தான் அவமானம், இப்படியும் ஒரு பெண் இத்தனை பேர் இத்தனை நேரம், இத்தனைப் பாட்டுப்பாடியும் தூங்கறாளேனு சொல்லுவாங்க. வா, வா சீக்கிரமாய்!

இத்தகைய பக்தியைப் பற்றி நாராயண பட்டத்திரி சொல்வது:
"ஸோயம் மர்த்யாவதாரஸ்தவ கலு நியதம் மர்த்ய ஸிக்ஷார்த்தமேவம்
விஸ்லேஷார்த்தி: நிராகஸ்த்யஜநமபி பவேத் காமதர்மாதி ஸக்த்யா:
நோ சேத் ஸ்வாத்மாநுபூதே: க்வ நு தவ மநஸோ விக்ரியா சக்ரபாணே
ஸ த்வம் ஸத்வைகமூர்த்தே பவந புரபதே வ்யாதுநு வ்யாதிதாபாந்

குருநாதரின் வாதநோயைத் தனதாக்கிக்கொண்ட பட்டத்திரி மஹாவிஷ்ணுவின் திவ்ய சரித்திரத்தைப் பாடுவதன் மூலம் தன் வாத நோய் தீரும் எனத் தீர்மானத்தோடு மஹாவிஷ்ணுவின் ஒவ்வொரு அவதார மகிமை பற்றியும் பாடி வந்தார். அதிலே ஸ்ரீராமாவதாரத்தின் மகிமை பற்றிக்கூறுகையில் ஸ்ரீராமாவதாரமானது சாமான்ய மக்களுக்குப் படிப்பினை சொல்லுவதற்காகவும், ஒரு மனிதன் எவ்வாறு வாழவேண்டும், தர்மம் என்பது எந்த எந்த சமயங்களில் எவ்வாறு கடைப்பிடிக்கவேண்டும் என்பதைக்கூறுவதாயும் அமைந்திருப்பதை எடுத்துக்காட்டுகிறார். நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு அன்பிற்குரியவர்கள் கொஞ்ச நேரம் கண்கள் எதிரே இல்லைனாலும் மனம் சஞ்சலம் அடையும், கவலை அடையும், வருத்தம் கொள்வோம். ஆனால் ஸ்ரீராமரோ தன் கண்ணுக்கும் மேலாக அன்பு செலுத்தி வந்த மனைவியை முதலில் ஸ்ரீராவணன் அபகரித்துச் சென்றபோது பிரிந்தார். பின்னர் அரச தர்மத்தைக் காக்கவேண்டி, நாடு முழுதும், தன் நல்லாட்சியைப் பாராட்டும் அதே சாமான்யக் குடிமக்கள் ராவணன் ஊரில் அசோகவனத்தில் சிறை இருந்த சீதையைத் தான் திரும்ப ஏற்றுக்கொண்டது சரியில்லை என்ற கோணத்தில் பேசிக்கொள்வதையும், இனி தாங்களும் அவ்வாறுதான் இருக்கவேண்டுமோ என்றும் பேசிக்கொள்வதை ஒற்றர்கள் மூலம் கேட்டுத் தெரிந்து கொண்டு மனைவியை நிரந்தரமாய்ப் பிரிகிறார். குடிமக்களின் நல்வாழ்க்கைக்காகவும், அவர்களுக்கு ஒரு சரியான முன்னுதாரணமாய் இருக்கவேண்டியும் தன் அன்பு மனைவியைப் பிரிந்தார் ராமர். இவ்வாறு திவ்யச் செயல்கள் புரிந்த ஸ்ரீராமர் குற்றமற்ற சீதையை எப்படிப் பிரிந்தார்?? தர்மத்தின் மேல் வைத்த அதீதப் பற்றா?? இவ்வளவு புகழ் வாய்ந்த ஸ்ரீராமர் இப்போது குருவாயூரப்பன் உருவில் வந்து இறங்கி இருக்கிறாரே, அவரே என் வாத நோயைப் போக்கி அருளவேண்டும் என்கிறார்.

ஆண்டாள் கண்ணனை விடுத்து ஸ்ரீராமனை மேற்கோள் காட்டியவாறு பட்டத்திரியும் மஹாவிஷ்ணுவின் அளப்பரிய லீலைகளை நினைத்து ஆநந்தம் அடைவதோடு நம்மையும் அடையச் செய்கிறார். சதா விஷ்ணுவின் லீலைகளைக் கண்ணாரக் கண்டு ஆநந்திக்கும்படியும் கூறுகிறார்.

No comments:

Post a Comment