![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtYRaLYUUgJqRLVPfQ6MRLNiIwh98Jr7uUsqEUdm7DBDCUYqTjjasuY6oLi_onpN7gel_i_I1KiK9YCrsdOxR-5psYhNlbt_WhNNhHnvIKgZLSOZB2yXyRxi7GiN5erYj8wfxtdA/s320/imagesarudra.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQiVV5j7oj2kyuB3XBgMl-BeLtP73FLbZEMscWVHAW7N3I6soqoFTe3ft4fpouPfzzsJEBPnusBXT4p4stT2nd0ZtrKEMkHnWaYjQQs8fEUfCzuhYzxZk4eFuH6ZmHPdrMnWpKMA/s320/imagesshivnatraja.jpg)
கற்பனைக்கெட்டாத அருட்பெருஞ்சோதியான எம்பெருமான் தன் கூத்தினாலேயே இவ்வுலகை இயக்குகிறார். நம் போன்ற சாமானியருக்கெல்லாம் புரியாத இந்த அற்புதக் கூத்தைச் செய்யும் எம்பெருமானை நடராஜராகக் காணும் நாளே திருவாதிரைத் திருநாள் ஆகும். எங்கும் நிறைந்த பரம்பொருள் தாமே எல்லாமுமாகி, எல்லாவற்றையும் காத்து, அழித்து, மறைத்து, மோக்ஷத்தை அளித்து என்று அனைத்தையும் நிகழ்த்துவதே நடராஜரின் தத்துவம் ஆகும். அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாத இந்தத் தத்துவத்தை நம்மால் புரிந்து கொள்ள இயலாது. நமக்குத் தெரிந்ததெல்லாம் காலையில் நீராடி உடல் தூய்மையோடு உள்ளத் தூய்மையுடன் கோயிலுக்குச் சென்று நடராஜரை வழிபடுவ்துதான்.
அன்று காலை களி செய்து, எல்லாக் காய்களையும் போட்டுக் குழம்பு வைத்து வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காயுடன் நடராஜருக்குப் படைப்பதுதான் நமக்குத் தெரியும். ஆனால் இந்தக் களிக்கும் ஒரு கதை உண்டல்லவா? களி என்றாலே மகிழ்ச்சி தானே பொருள்?? அத்தகைய களியைத் தன் அடியாருக்குத் தந்தார் ஈசன்.
சோழநாட்டின் அரசர்களுக்கு முடிசூட்டுவது தில்லை வாழ் அந்தணர்களே ஆகும். ஆகவே சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு அதிக அளவில் திருப்பணிகளும் சோழ மன்னர்களால் செய்யப் பட்டது. சேந்தனாரின் காலம் சரிவரத் தெரியவில்லை எனினும் சில குறிப்புகள்கண்டராதித்த சோழனுக்கு முற்பட்டவர் என்றும், சில குறிப்புகளால் முதல் ராஜராஜ சோழன் காலம் எனவும் கூறுகின்றனர். எப்படி இருந்தாலும் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சேந்தனார் பட்டினத்து அடிகளின் தலைமைக் கணக்கராய் விளங்கினார். பட்டினத்து அடிகள் துறவு மேற்கொண்ட பின்னர் அவரின் கட்டளைப்படி பட்டினத்தடிகளின் கருவூலத்து பொக்கிஷத்தைத் திறந்துவிட்டு எல்லோரும் அவரவர் விரும்பிய வண்ணம் அள்ளிக்கொள்ளச் செய்தார். இதைக் கண்டு கோபம் கொண்ட சோழமன்னன் சேந்தனாரைச் சிறையில் அடைத்தான்.
பொக்கிஷத்தைப் பகிர்ந்து கொடுத்த சேந்தனாரோ தம் வாழ்க்கையைக் கழிக்க விறகு வெட்டியே பிழைத்துவந்தார். அதை அறியாத மன்னன் சிறையில் அடைக்க, சேந்தனாரின் மனைவியும், மகனும் பிச்சை எடுக்கவேண்டியதாயிற்று. உறவினர் அனைவரும் கேலி செய்ய சேந்தனாரின் மனைவி தங்கள் குருவான பட்டினத்தாரை வேண்ட, அவரும் விநாயகரை வேண்டித் துதித்தார். மேலும் திருவெண்காட்டு ஈசன் மேல் தனிப்பாடலும் இயற்றித் துதித்தார்.
மத்தளை தயிருண்டானும் மலர்மிசை மன்னினானும்
நித்தமும் தேடிக் காணா நிமலனே அமலமூர்த்தி
செய்த்தலைக் கயல்பாய் நாங்கூர்ச் சேந்தனை வேந்தனிட்ட
கைத்தளை நீக்கி என்முன் காட்டு வெண்காட்டுளானே"
என்று இறைவனைப் பட்டினத்தடிகள் வேண்ட. இறைஅருளாலும் பட்டினத்தடிகள் வேண்டுதாலும் சேந்தனாருக்கு விடுதலை கிடைத்தது. தில்லையம்பதி சென்று அங்கும் விறகு வெட்டிப் பிழைத்த சேந்தனார் அன்றாடம் தாம் சம்பாதிக்கும் பொருளில் இருந்து ஒரு சிவனடியாருக்கு உணவு சமைத்துப் போட்டுப் பின்னரே தாம் உணவு அருந்தும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தார்.
மழைக்காலம் வந்துவிட்டது. வெட்டும் விறகெல்லாம் மழையில் நனைந்து போயிற்று. விற்க முடியவில்லை. ஈரவிறகை வாங்க யாருக்கும் இஷ்டமில்லை. யோசித்த சேந்தனார் சிவனடியார் எவருக்கேனும் உணவு பரிமாறவேண்டுமே என்பதால் பண்டமாற்று முறையில் விறகைக் கொடுத்து அரிசிமாவையும், வெல்லத்தையும் பெற்று வந்துக் களிசமைக்கச் சொன்னார். கொல்லையில் இருந்த கீரைத்தண்டோடு கொல்லையிலேயே கிடைத்த சில காய்களையும் போட்டுக் குழம்பும் சமைத்துச் சாப்பிட அடியாரைத் தேடிக் காத்திருந்தார். ஆனால் அடியாரே தென்படவில்லை. துன்பத்தோடு அமர்ந்திருந்த சேந்தனர் கண்களுக்கு ஒரு முதிய அடியார் தள்ளாட்டத்தோடு வருவது தெரிந்தது. பசியினால் விளைந்த தள்ளாட்டம் என்பது புரிந்து அவரை அழைத்துச் சென்று களியும், குழம்பும் உண்ணக் கொடுத்தார். பெரியவரும் திருப்தியாகச் சாப்பிட்டு விட்டு, "மிச்சம் இருப்பதையும் கொண்டா" என்று கேட்டு வாங்கிக் கொண்டு போயிவிட்டார்.
இங்கே தில்லை வாழ் அந்தணர்கள் திருவாதிரைத் திருநாளுக்கான ஏற்பாடுகள் செய்து வந்தார்கள். அப்போது கருவறையில் ஈசனருகே களியாகச் சிதறிக் கிடந்ததைக் கண்டு திகைத்தனர்.
உடனேயே மன்னனுக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டது. மன்னனும் தீர விசாரித்துச் சேந்தனாரே இதன் மூலகர்த்தா என உணர்ந்து அவரைப் பிடித்துவருமாறு கட்டளையிடுகிறான். அப்போது நடராஜப் பெருமானின் திருத்தேரை இழுக்கும் அடியார்களில் ஒருவராய்ச் சேந்தனார் திருத்தொண்டு செய்து வந்தார். திடீரெனத் தேர் நின்று போக, அனைவரும் திகைத்தனர். மன்னன் தேரை நிலைக்குக் கொண்டு வர ஆட்களை அழைக்கத் தேர் இம்மியளவும் நகரவில்லை. அப்போது அசரீரியால் ஈசன், "சேந்தனாரே, நீர் திருப்பல்லாண்டு பாடும் தேர் நிலைக்கு வரும்" எனக் கூற சேந்தனார் முதலில் திகைத்தாலும் பின்னர் ஈசன் அருளால் திருப்பல்லாண்டு பாடி அருள தேரும் நிலைக்கு வந்தது.
மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்
வஞ்சகர் போயகலப்
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
புவனியெல் லாம்விளங்க
அன்ன நடைமட வாள்உமை கோன்அடி
யோமுக் கருள்புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப்
பல்லாண்டு கூறுதுமே.
மிண்டு மனத்தவர் போமின்கள்
மெய்யடியார்கள் விரைந்து வம்மின்
கொண்டும் கொடுத்தும் குடிகுடி யீசற்காட்
செய்மின் குழாம்புகுந்
தண்டங்கடந்த பொருள்அள வில்லதோர்
ஆனந்த வெள்ளப்பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே
பல்லாண்டு கூறுதுமே.
No comments:
Post a Comment