எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, September 07, 2016

வேதனைக்கு மேல் வேதனை!

நேற்றைய செய்தி ஒன்று மனதை வேதனைப் படுத்துகிறது. இன்னமும் அதன் கோரத்தை ஜீரணிக்க முடியவில்லை. நேற்றுக் காலை வந்த மன்னார்குடி விரைவு வண்டியில் மாம்பலத்தில் ஓர் குடும்பம் இறங்க வேண்டும். இறங்கி இருக்காங்க. அவர்களிலே வயது முதிர்ந்த இருவர் முன்னால் இறங்கி இருக்காங்க. சரிதான். தப்பில்லை. அடுத்து இரு நடு வயதுக்காரர்கள் அல்லது இளைஞர்கள் இறங்கி சாமான்களை எல்லாம் இறக்கி இருக்காங்க. கடைசியில் கைக்குழந்தையுடன் அந்தக் குடும்பத்து மருமகள் இறங்குகையில் ரயில் கிளம்பிவிட்டது. யாருக்குமே பதட்டம் வரத் தான் செய்யும். இந்தப் பெண்ணும் பதட்டத்தில் செய்வதறியாது கிட்டத்தட்டக் குதித்திருக்கிறாள்.

ரயில் போகும் திசையிலேயே இறங்க வேண்டும் என்பது அந்தப் பெண்ணுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்திருந்தாலும் அப்போது இருந்த பதட்டத்தில் அதைக் கடைப்பிடிக்கத் தோன்றாது தான். கீழே உள்ளவர்களாவது அந்தப் பெண்ணிடமிருந்து குழந்தையை ஒருவர் வாங்கிக் கொண்டு இன்னொருவர் அநேகமாய்ப் பெண்ணின் கணவராகவும் இருக்கலாம், அந்தப் பெண்ணைக் கீழே இறக்கி இருக்க வேண்டும். வேடிக்கை பார்த்திருக்கின்றனர். விளைவு! குழந்தை ரயில் நிலைய நடைமேடையின் இடுக்கு வழியாக தண்டவாளத்தில் விழுந்து குழந்தையின் மேல் ரயில் சக்கரம் ஏறி இரண்டு துண்டாகி இருக்கிறது. அந்தப் பெண் குழந்தையைக் காப்பாற்றப் போய் நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையில் மாட்டிக் கொண்டு இப்போது இரண்டு கால்களையும் இழந்து தவிக்கிறாள்.

வயது முதிர்ந்தோரை இறக்கி விடும்போதே அந்தப் பெண்ணையும் சேர்த்தல்லவோ இறக்கி இருக்கணும்! குழந்தையுடன் இருக்கும் பெண்ணைக் கடைசியில் இறங்கச் சொல்லலாமா? ஒரு ஆண் ரயிலில் இருந்து கொண்டு சாமான்களைக் கொடுத்தால் கீழே உள்ளவர்கள் வாங்கி வைக்கலாம். பெரியவங்களாவது இறங்கும்போதே அந்தப் பெண்ணையும் கூடவே இறங்கும்படி வற்புறுத்தி இருக்கணும். அநியாயமாய் ஒரு சின்னப்பிஞ்சு உயிர் போனதோடு இல்லாமல் அந்தப் பெண்ணுக்கும் கால்களை இழக்க வேண்டிய கட்டாயம்! ஒரு சின்ன அஜாக்கிரதையினால் விளைந்த  விளைவு மிகக் கோரமாய் ஆகி விட்டது. இனி அந்தப் பெண்ணின் கதியை நினைத்தாலே கவலையும், பயமும் வருகிறது.

நான் ஒவ்வொரு முறை சென்னை வரும்போதும் பல்லவன் விரைவு வண்டியிலிருந்தோ அல்லது மலைக்கோட்டை விரைவு வண்டியிலிருந்தோ மாம்பலத்தில் இறங்கும்போதும், திரும்பி ஶ்ரீரங்கம் வருகையில் ஶ்ரீரங்கத்தில் இறங்கும்போதும் ஶ்ரீரங்கத்தில் பல்லவனில் ஏறும்போதும் திக் திக் திக் என்று கவலையும், பயமுமாக இருக்கும்.  ஏறி உட்கார்ந்ததும் தான் அப்பாடா என்று இருக்கும். அதே போல் வண்டியை விட்டு இறங்கினதும் தான் மூச்சே விட முடியும். அப்படியும் ஒரு முறை ஃப்ளாஸ்க், ஆகாரங்கள் அடங்கிய பையை ரயிலிலேயே விட்டு விட்டுக் கொஞ்ச தூரம் வந்த பின்னர் நம்ம ரங்க்ஸ் ஓடிப் போய் ரயிலில் ஏறி எடுத்து வந்தார். இறங்குகையில் ரயில் நகர ஆரம்பித்து விட்டது. அவருக்குப் பழக்கம் இருந்ததாலும் ரயில் கிளம்பி விடும் என்பது தெரிந்திருந்ததாலும் கவனமாகக் காலைக் கீழே வைத்து ரயில் ஓடும் பக்கமாக இறங்கினார். அதன் பின்னரே மூச்சு வந்தது.


அடுத்து ஒரு முறை மலைக்கோட்டை விரைவு வண்டியில் சென்னையிலிருந்து வருகையில் ராத்திரி முழுக்கத் தூங்கவே இல்லை. காலை அசந்து விட்டது. ஶ்ரீரங்கம் வந்ததே தெரியலை. யதேச்சையாக ரங்க்ஸ் எழுந்து பார்த்தால் ஶ்ரீரங்கம் ரயில் நிலையம். என்னை எழுப்பினார். நல்ல வேளையாக சாமான்கள் எதுவும் இல்லை. ஒரே ஒரு பை தான். ஆகவே உடனே கீழே இறங்க ஆரம்பித்தோம். அப்படியும் நான் அங்கே வந்து கொண்டிருந்த ஒருவரிடம் என்ன நிலையம் என்பதைக் கேட்டுத்தெரிந்து கொண்டு அவர் உதவியோடு இறங்கினேன். பின்னாலேயே அவரும் இறங்கினார். இரு முறை இப்படி ஆகி இருக்கிறது. ஆகவே கூடியவரை காலை நேரத்துக்குப் போய்ச் சேரும் வண்டிகளில் செல்லக் கூடாது என்று எண்ணுகிறேன். நல்லவேளையா எனக்கோ அவருக்கோ தூக்கக் கலக்கம் இல்லை! பிழைத்தோம்! :(

வண்டி நிற்க அனுமதித்திருக்கும் நிலையங்களில் குறைந்த பட்சமாக மூன்று நிமிடங்களில் இருந்து ஐந்து நிமிடங்கள் வரை நிற்கவேண்டும் என்று ஓர் கட்டாய உத்தரவே பிறப்பிக்கலாமோ என்று தோன்றுகிறது. இல்லை எனில் காசைப் பார்க்காமல் எழும்பூர் வரை சென்று திரும்பி வர வேண்டும். வேறு வழியில்லை. காசு போனால் சம்பாதிக்கலாம்! உயிர்? அதிலும் இப்போது பெண்களுக்கு மிகவும் சோதனைக்காலம் போல இருக்கிறது! :(

32 comments:

  1. பதிவை முழுமையாகக்கூடப் படிக்கவில்லை. இந்தச் செய்தி எல்லாம் பகிர வேண்டாமே...மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வேதனைப் படுத்தறதுக்காகப் பகிரலை ஶ்ரீராம். இனியாவது அனைவரும் கவனமாக இருக்கணும் என்பதும், ரயில்வே நிர்வாகம் விரைவில் இதுக்கு ஒரு முடிவு எடுக்கணும் என்பதற்காகவுமே போட்ட பதிவு இது!

      Delete
    2. என் சித்தி பையர் (அசோகமித்திரன் பிள்ளை மூத்தவர்) ஹைதராபாதிலிருந்து சார்மினாரில் வருகையில் நெல்லூருக்கருகே ஏதோ ஒரு ரயில் நிலையத்தில் ரயில் சிக்னலுக்கு நிற்கவும் எதிரே இருந்த ஓர் மருந்துக்கடையில் மாத்திரை வாங்க இறங்கி இருக்கார். ரயில் கிளம்பினாலும் ஓடி வந்து ஏறலாம்னு எண்ணம். அவர் மாத்திரை வாங்கும்போதே ரயில் கிளம்ப ஆரம்பிச்சிருக்கு. இவர் இறங்கினது தெரியாமல் கதவை யாரோ மூடி வைக்க இவர் பக்கத்துப் பெட்டியில் ஏறாமல் அவர் ஏறவேண்டிய பெட்டியின் கதவைப் பிடித்துத் தொங்கப் பாதங்கள் இடைவெளியில் சிக்கிக் கொண்டு! :((((( போதும், போதும்! இப்போது அவருக்கு ஒரு பாதம் போனது போனது தான்! :( இதை எல்லாம் பார்த்ததினால் தான் இனியாவது இப்படி நடக்கக் கூடாது என்று மனம் விரும்புகிறது.

      Delete
  2. ஐயோ................ என்ன கொடுமை................. :-(

    ReplyDelete
  3. மிகவும் கொடுமை. மிக ஜாக்கிரதையாக ஆண்கள் முன்கூட்டியே திட்டமிட்டு செய்யவேண்டும். நான் எப்பவும் அதிகாலை 3.45 க்கு மாங்களூர் எக்ஸ்பிரஸ் டிரைன் செங்கல்பட்டில் இறங்க, அலார்ம் வைத்து இருந்தாலும் விழுப்புரத்தில் இருந்தே தூங்காம வருவேன்.

    ReplyDelete
    Replies
    1. பெண்கள், குழந்தைகள், முதியவர்களை முன்னால் இறக்கி இருக்கணும்! நாங்களும் பொதுவாகக் காலை இறங்கணும்னா அதுவும் பாதியில் இறங்கணும்னா தூங்க மாட்டோம். அன்னிக்கு அலைச்சல் ஜாஸ்தி, அதனால் தூக்கம்! :(

      Delete
  4. மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது, ஆறவேயில்லை

    ReplyDelete
  5. இருக்கிற கஷ்டத்துல இந்தச் செய்தியுமா? குழந்தைகள், வயதானவர்கள், பெண்கள் அப்புறம் வீட்டு ஆண் இந்த வரிசையில் அல்லவா இறங்கவேண்டும்? சிறிய தவறு, பெரிய விளைவு. உங்களுக்கும், ஸ்ரீரங்கத்தில் இறங்க மறந்துவிட்டால், ஓசி இரயில் பயணம் என்று அடுத்த ஸ்டேஷனில் மெதுவா இறங்கினாப் போறது. அதுவும் கொஞ்சம் வயதானால் (55க்கு மேலே.. முறைக்கவேண்டாம். கர்ர்ர்ர்ர்ர்ர்) எதுக்கும் அவசரப்படாமல் இருப்பது அவங்களுக்கும் சுத்தி இருக்கறவங்களுக்கும் நல்லது. வாழ்க்கையிலே எதுக்கு அவசரம்?

    ReplyDelete
    Replies
    1. நாங்க அவசரப் பட்டெல்லாம் இறங்கறதே இல்லை. கூடியவரை முன்னால் சென்று விடுவோம். ஏனெனில் என்னால் வேகமாக இறங்க முடியாது! வயசு ஆயிடுச்சுனு ஒத்துக்கலைனாலும் இறங்க முடியலைனு ஒத்துக்கலாமே!

      Delete
  6. Replies
    1. இன்னமும் கவலையாத் தான் இருக்கு. அந்தப் பெண் என்ன ஆனாளோ என்று தவிக்கிறது மனம்.

      Delete
  7. இது எல்லாவற்றிற்கும் காரணம் ஆட்டோமேட்டிக் சிக்னல் சிஸ்டம் தான். முன்பெல்லாம் புறப்பட மணி அடிப்பார்கள். கார்ட் விசில் ஊதுவார். பச்சை கொடி அல்லது பச்சை விளக்கு காண்பிப்பார்.அதற்கு அப்புறம் வண்டி புறப்படும். தற்போது ஆட்டோமேட்டிக் சிக்னல். ஆகையால் மணி இல்லை விசில் இல்லை கார்ட் டிரைவருடன் வாக்கி டாக்கியில் பேசுகிறார். இறங்குவது ஏறுவது கவனிப்பது இல்லை.

    எனக்கும் இது போன்று அனுபவங்கள் உண்டு. ஒரு தடவை கடலூர் திருச்சி பாசஞ்சரில் திருவரங்கத்தில் நாங்கள் 8 பேர் இறங்கும்போது ஒரு பையை வண்டியில் தவற விட்டோம். ஆனால் அந்தப் பையில் ஒரு தண்ணீர் குப்பி, இரண்டு கொய்யாக்காய்கள் மற்றும் காலி பிளாஸ்டிக் சாப்பாடு டப்பாக்கள் மட்டுமே இருந்தன. நஷ்டம் இல்லை.

    --
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. அந்த ஃப்ளாஸ்க் பையை எடுக்கலைனா எங்களுக்கும் நஷ்டமெல்லாம் இல்லை தான்! அதில் ஒன்றும் விலைபெற்ற சாமான்கள் வைக்கலை. ஆனால் நாங்கள் வந்த பெட்டியின் வாயிலருகே தான் சென்று கொண்டிருந்ததால் அப்படியே ஏறிட்டார். நல்லவேளையாக் கடவுள் கருணையால் எதுவும் ஆகவில்லை எனினும் இது அசட்டுத் தனம் என்பது நன்கு தெரியும். :(

      Delete
  8. அய்யோ கொடுமைமா...எனக்கும் ஒவ்வொரு முறையும் பயம் வரும் கீழா விழுந்து விடக்கூடாதே என...மனசு கஷ்டமாருக்கும்மா..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், கவலையாத் தான் இருக்கும். பயமும் வரும்! :(

      Delete
  9. ஆண்டவா - உன்
    திருவிளையாடலில்
    இப்படியுமா?
    துயர் தாங்க முடியாமல்
    நாம்
    அழுவதைப் பார்த்து - நீ
    சிரிக்கலாமா?

    ReplyDelete
    Replies
    1. இறைவன் சிரிக்கிறான் என்று எப்படித் தெரியும்? இது கொஞ்சம் இல்லை, அதிகக் கவனக்குறைவினால் ஏற்பட்ட மாபெரும் தவறு! மனிதர்கள் செய்தவற்றுக்கு இறைவன் பொறுப்பாவானா? ஆனால் நமக்குனு வந்தால் இறைவனைத் தான் குற்றம் சொல்வோம். என்னையும் சேர்த்து! :(

      Delete
  10. கேட்கவே வேதனையாக உள்ளது. பாவம் அந்தப்பெண்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், பாவம் தான்! :(

      Delete
  11. கொடுமை. பல சமயங்களில் சரியான முறைப்படி இறங்குவதில்லை. திருவரங்கத்தில் சில வண்டிகளுக்கு ஸ்டாப்பிங் இல்லை. நடு இரவில் சில சமயங்கள் ஸ்டாப்பிங்க் இல்லாத வண்டிகள் நிற்கும் போது நிறைய பேர் இறங்குவதுண்டு - என்னையும் சேர்த்து. ஒரு முறை கைக்குழந்தையோடு ஒருவர் இறங்க, அந்த சமயத்தில் வண்டி நகர ஆரம்பித்தது. நடைமேடையில் குதித்து விட்டார் - தட்டுத் தடுமாறி கீழே விழப் போக, என் Luggage-ஐ கீழே போட்டு அவரைப் பிடிக்க வேண்டியிருந்தது..... குழந்தையோடு கீழே விழுந்தால் ரணம் தான்.

    படிக்கவே கஷ்டமாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஸ்டாப்பிங் இல்லைனா நாங்க இறங்கவே மாட்டோம். எதுக்கு இப்படியெல்லாம் சிரமப்பட்டு வேலை செய்யணும்! கொஞ்சம் பொறுத்திருந்து திருச்சியில் இறங்கித் திரும்ப வந்துட்டால் ஆச்சு!

      Delete
  12. கைக்குழந்தையுடன் ஒரு பெண் இறங்குகையில் அவரை முதலில் இறங்கவைத்து மற்றவர்கள் இறங்குவதுதான் முறை. இந்தக் காலத்தில் `முறை` என்று ஆரம்பித்தால் முறைப்பார்கள். அல்லது, `வயசாயிடுச்சு பாவம்.. ஏதோ ஒளற ஆரம்பிச்சுட்டான்!`என்று எக்ஸ்பர்ட் கமெண்ட் அடித்து நகர்ந்துவிடுவார்கள்.
    பொதுவாக நம்மவர்களுக்கு -தமிழர்கள் மட்டுமல்ல, எல்லா இந்தியர்களையும் சேர்த்து- ஏகப்பட்ட மூட்டை முடிச்சுகளுடன் பயணம் செய்தால்தான் ரயில்பயணம் செய்வது மாதிரி இருக்கும்! அதுவும் ஒரு குடும்பம் பயணிக்கிறது என்றால் ஊரையே சுருட்டி எடுத்துக்கொண்டு ரயிலில் ஏறுவார்கள்.ஒரு பயணி தன்னால் எவ்வளவு தூக்கமுடியுமோ அவ்வளவை மட்டும் ஒரு back-pack -இலோ, briefcase -இலோ எடுத்துக்கொண்டு பயணித்தால் போதாதா. இதற்கெல்லாம் அரசா பாடம் நடத்தமுடியும். அவரவர்க்குத் தெரிய வேண்டாமா? இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் நமது சமூகம் திருந்தும் என்கிற நம்பிக்கைமட்டும், சாரி, இல்லை.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அதைத் தான் செய்திருக்கணும். நாம இப்போல்லாம் சொல்லவும் முடியலை! லக்கேஜ் எடுத்துச் செல்வதில் குஜராத்தியரையும், ராஜஸ்தானியரையும் யாரும் மிஞ்ச முடியாது. அவ்வளவு சாமான்கள் எடுத்துச் செல்வார்கள். சாப்பாடுகளே இரண்டு கூடைகள், இரண்டு பைகள் என்று இருக்கும்.

      Delete
  13. என்ன கொடுமை ஆண்டவா ? கண் எதிரே குழந்தை இறந்தது அந்த பெண்ணிற்கு வாழ்நாள் முழுதும் மறக்க முடியாத ஒரு கொடுமை அல்லவா ? அதிக நபர்களும் , சாமானும், கைக்குழந்தை என்று பயணம் செய்யும்போது எக்மோரில் இறங்குவதே சிறந்தது .

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஷோபா! அதோடு அந்தப்பெண்ணின் உடல்நிலை! எனக்கு அது தான் ரொம்பவே வேதனையாப் போச்சு. உயிருடன் இருந்தும் இல்லாத நடைப்பிணமாக அல்லவோ வாழ்நாளைக் கழிக்கணும்!

      Delete
  14. ஸ்ரீரங்கத்தில் என் நண்பரின் மனைவி அதிகாலையில் வண்டி நின்று விட்டதென்று எண்ணி இறங்கி இருக்கிறார் வண்டி நிற்பதற்கு இன்னும் சில நொடிகள் ஆகி யிருக்கலாம் என்ன செய்ய . இவர் இறங்க கால்கள் மாட்டிக் கொள்ள என்னவெல்லாமோ செய்தும் கூட பலனில்லாமல் இரு கால்களும் இயங்காமல் வெகு காலம் அவதிப் பட்டிருக்கிறார் அண்மையில் இறந்து விட்டதாகவும் செய்தி

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் அந்த இடைவெளியில் கால்கள் மாட்டிக்குமோ என்னும் பயம் ஒவ்வொரு முறை ஏறும்போதும் இறங்கும்போதும் ஏற்படும்! :(

      Delete
  15. பத்திரிக்கையில் படித்தேன்! இத்தனைக்கும் அவர் பேராசிரியர்! அவர்களே இப்படி அறியாமல் நடந்து கொள்ளலாமா? வேதனை அவருக்கு மட்டும் அல்ல!

    ReplyDelete
    Replies
    1. படிச்சவங்க தான் இப்படியான வீர,தீரச் செயல்கள் செய்யறாங்க! :(

      Delete
  16. ஐயோ படிக்கவே முடியவில்லை....என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று புரிந்து தொலைத்துவிட்டதே...

    நாங்கள் அடிக்கடிச் சொல்லிக் கொள்வது இது போன்ற இடையில் நிற்கும் நிறுத்தங்களில் கொஞ்சம் கூடுதல் சமயம் கொடுத்தால் நல்லது என்று. அதுவும் லக்கேஜுடன் இறங்குபவர்கள் இருந்தால் அவர்களுக்கும் கஷ்டம், அவர்கள் பின் காத்திருக்கும் மற்றவர்களுக்கும் கஷ்டம்...

    //வண்டி நிற்க அனுமதித்திருக்கும் நிலையங்களில் குறைந்த பட்சமாக மூன்று நிமிடங்களில் இருந்து ஐந்து நிமிடங்கள் வரை நிற்கவேண்டும் என்று ஓர் கட்டாய உத்தரவே பிறப்பிக்கலாமோ என்று தோன்றுகிறது. இல்லை எனில் காசைப் பார்க்காமல் எழும்பூர் வரை சென்று திரும்பி வர வேண்டும்.// அதே அதே...

    ReplyDelete