எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, October 10, 2016

அனைவருக்கும் ஆயுதபூஜை வாழ்த்துகள்.

அம்பிகையை வெண்பட்டாடை உடுத்திய சரஸ்வதியாகவும் அலங்கரிக்கலாம். இன்றைய தினம் சரஸ்வதிக்கே முக்கிய வழிபாடு. என்றாலும் தாமரை மலர் மீது நான்கு திருக்கரங்களுடன் வீற்றிருக்கும் சித்தாத்ரி தேவியையும் வட மாநிலங்களில் வழிபடுவார்கள். சரஸ்வதி பிரம்மாவின் மனைவி எனப் பொதுவாகச் சொல்லப்பட்டாலும் இவளும் ஆதி பராசக்தியின் ஓர் அங்கமே ஆவாள். சாவித்திரி, காயத்திரி, பிராமணி ஆகிய பெயர்களிலும் வழிபடப்படுகின்றாள். சரஸ்வதி ஸூக்தம் இவளையே உலகின் ஆதி காரணி என்று சொல்கிறது. சக்தி தாசர்களின் தாரா வழிபாட்டில் வழிபடப்படும் சரஸ்வதியின் எட்டு வடிவங்கள் வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா(சியாமளா), கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகியோர்கள் ஆவார்கள்.  கட சரஸ்வதியை தண்டி மகாகவியும், சித்ரேஸ்வரியை சாலிவாகன மன்னனும் சியாமளா தேவியைக் காளிதாசனும் வழிபட்டதாக சரஸ்வதி மகாத்மியம் கூறுகிறது.

சரஸ்வதி ரவிவர்மா படம் க்கான பட முடிவு

நதியாக ஓடி அந்தர்யாமியாகக் காட்சி கொடுப்பவளும் இவளே ஆவாள். சரஸ் என்னும் பெயருக்கேத் தடையில்லாமல் பிரகாசிக்கும் ஒளி என்று பொருள். கலைகளைத் தடையின்றிப் பிரவாஹிக்கச் செய்யும் சக்தி இவளிடமே உள்ளதால் சரஸ்வதி என்ற பெயர் பெற்றாள். நதியாக ஓடியதற்கும் ஒரு காரணம் உண்டு. அது பின்னர் விளக்குகிறேன்.

யஜுர்வேத மந்திரம் ஒன்று, “வீரமும் அறிவும் நிறைந்த சரஸ்வதி திடசித்தமுடையவர்களாக எங்களை விருத்தி அடையச் செய்வாளாக!” என்று பிரார்த்தித்துக் கொண்டு யக்ஞத்தில் நெய்யை அளிக்கிறது. ஞானாம்பிகை, ஞானேஸ்வரி, ஞானசக்தி என்று போற்றப் படுபவளும் இவளே. நாவில் சரஸ்வதியை வைத்திருப்பதாய்ச் சொல்லும் பிரம்மனே இவளைத் துதித்ததும் தான் சனத்குமாரருக்கு “பதிஞானத்தின்” உட்பொருளை உபதேசித்தான் என்கின்றனர் பெரியோர்கள். தேவகுருவான பிரஹஸ்பதியும் கலைமகளைத் துதித்ததுமே “சப்தசாஸ்திரம்” என்னும் நூலை இந்திரனுக்குக் கற்பித்தார். சரஸ்வதியின் அருட்கடாட்சம் பெற்றே கவிஞன் காளிதாசன், சியாமளா தண்டகம், சியாமளா தந்திரம், போன்றவற்றில் தேவியின் சொரூபத்தையும், லீலைகளையும் பற்றி எழுதியுள்ளான்.
சிருங்கேரி சாரதை க்கான பட முடிவு
சிருங்கேரி சாரதை க்கான பட முடிவு
படங்களுக்கு நன்றி விக்கி பீடியா!
சகல கலைகளுக்கும் அதி தேவதையான இவளே சாரதை எனவும் போற்றப் படுகிறாள். தனம் தரும் லக்ஷ்மியாகவும், வீரம் செறிந்த துர்க்கையாகவும் வணங்கப் படுபவளும் இவளே. இவளைக் குறித்தே சாரதா நவராத்திரி கொண்டாடப் படுகிறது. இந்த சாரதையை சிருங்கேரியில் நல்ல முஹூர்த்த வேளை பார்த்துப் பிரதிஷ்டை செய்தவர் ஆதிசங்கரர் ஆவார். ஸ்ரீசக்ரமும் இங்கே பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது.

இவள் மற்ற மதங்களிலும் முக்கியமாய் சமணம், பெளத்தம் ஆகிய மதங்களிலும் காணப்படுகிறாள். சமணர்கள் வாக்தேவி, ஸ்ருதிதேவி என்றும் ஜின ஐஸ்வர்யா என்றும், ஜினவாணி, ஆகமஸ்வரூபி என்றும் அழைப்பார்கள். பெளத்தர்கள் மகா சரஸ்வதி, வஜ்ர சாரதா, வஜ்ரவீணாதாரா, ஆர்ய சரஸ்வதி, வஜ்ர சரஸ்வதி, என ஐந்து வடிவங்களில் சரஸ்வதியை அமைத்து வழிபடுகின்றனர். மஞ்சுஸ்ரீ எனவும் பெளத்தத்தில் சரஸ்வதி அழைக்கப் படுகின்றாள்.

நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்றைய வழிபாடு இவளுக்கே உரியது. புத்தகங்கள் வைத்தும் வழிபடுவார்கள். ஆயுதங்களைச் சுத்தம் செய்து அவற்றையும் வைத்து வழிபடுவார்கள். இசைக்கருவிகளுக்கும் சிறப்பு வழிபாடு உண்டு.



இன்று நான் நெய்ப்பாயசம் கொஞ்சம் போல் செய்தேன். அப்புறமா வடை, அப்பம் மட்டுமே.  பூஜைக்கான படங்கள் கீழே போட்டிருக்கேன். சுண்டல் மாலை தான் செய்யப் போகிறேன். ஆகவே இப்போ நோ சுண்டல்! :)

இன்றைய சுண்டல் அநேகமாக அனைவரும்  வடமாநிலங்களில் கூட இன்று கொண்டைக்கடலையே செய்வார்கள். கறுப்புக் கொண்டைக்கடலை தான் நல்லது. கடலையை முதல் நாளே முன்னர் சொன்னது போல் சோடா உப்புச் சேர்த்து ஊற வைக்கவும். பின்னர் மறு நாள் நன்கு கழுவிவிட்டுப் புதிய நீர் விட்டு வைக்கவும். அதன் பின்னர் குக்கரில் உப்புச் சேர்த்து வேக வைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, பெருங்காயம், கருகப்பிலை, இரண்டு மி.வத்தல் போட்டு வெந்த கடலையைக் கொட்டிக் கிளறவும். மி.வத்தல், தனியா இரண்டும் வறுத்துப் பொடி செய்து அதைச் சேர்க்கவும். இதற்குச் சாம்பார்ப் பொடி போட்டால் நன்றாக இருக்காது/ தேங்காயைத் துருவலாகவோ, அல்லது பல்லுப் பல்லாகக் கீறியோ சேர்க்கவும்.

இன்று பூராவும் வழிபாட்டில் இருக்கும் புத்தகங்கள், ஆயுதங்கள், இசைக்கருவிகளை விஜயதசமி அன்று எடுத்துப் பயன்படுத்துதல் சிறப்பாகக் கருதப் படும். பள்ளிக்கு முதன் முதல் செல்லும் குழந்தைகளுக்கு விஜயதசமி அன்று பள்ளியில் சேர்த்தல் சிறப்பாகக் கருதப் படும். அன்றைய தினம் ஒரு தாம்பாளத்தில் அல்லது சுத்தம் செய்யப் பட்ட தரையில் நெல் பரப்பி அந்த நெல்லில் "ஹரி ஓம்" எனக் குழந்தையின் அம்மாவோ, அப்பாவோ குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு எழுதச் செய்வார்கள்.

அம்பிகை பத்தாம் நாளான விஜயதசமி அன்று சிவசக்தி ஐக்கிய சொரூபிணியாகத் தோற்றம் அளிக்கின்றாள். அன்று மாலையில் நக்ஷத்திரங்கள் தோன்ற ஆரம்பிக்கும் விஜயா என்னும் முகூர்த்தத்திலேயே அவள் அம்பு போட்டு அசுரனை வதம் செய்ததால் அந்த நேரம் சுப முஹூர்த்தநேரமாகவும், நல்ல காரியங்களை ஆரம்பிக்கக் கூடிய நேரமாகவும் குறிப்பிடப் படுகின்றது. தீய சக்திகளை அம்பிகை அழித்த அந்த நல்லநேரமே விஜயதசமி என இன்றும் அம்பு போடுதல் என்னும் நிகழ்ச்சியாகப் பல கோயில்களிலும் சிறப்பாய் நடக்கின்றது. நம் வாழ்விலும் தீமைகளை அழித்து, நன்மைகள் பெருகி வாழ்வில் வளம் பெற அம்பிகையைப் பிரார்த்திப்போம்.

வட மாநிலங்களில் ராவணன் வதம் விஜயதசமி அன்று நடந்ததாகச் சொல்லப்படுகிறது. ராம்லீலா என்று ராவண வதம் குறித்த சிறப்பு நிகழ்ச்சி அங்கே பெரிய அளவில் நடைபெறும். ஒரு சிலர் குருக்ஷேத்திரப் போருக்கு முன்னர் அர்ஜுனன் ஆயுதங்களைச் செம்மை செய்து வன்னி மரத்திலிருந்து எடுத்த நாள் என்றும் சொல்வார்கள். எப்படியாயினும் நமக்கு வேலையை எளிதாக்கும் ஆயுதங்கள் அனைத்துக்கும் நன்றி தெரிவித்துப் பூஜை போடும் நாள் ஆயுத பூஜை.

இன்றைய நிவேதனம் தயிர்சாதம். முன்னர் சொன்னாற்போல் தயிர்சாதம் செய்து நிவேதனம் செய்யவும். இன்றைக்குச் சுண்டல் செய்வதில்லை. இரவு படுக்கப்போகும் முன்னர் ஒரு பொம்மையைக் கிழக்கு, மேற்காகப் படுக்க வைக்கவேண்டும். பொதுவாக மறுநாள் பொம்மைகளைப் பெட்டியில் எடுத்து வைக்கும் வழக்கம் இருந்தாலும் இந்த வருஷம் மறுநாள்  புதன் கிழமை தான். ஆகவே பொம்மைகளை எடுத்துப் பத்திரப் படுத்தி வைக்கலாம். அனைவருக்கும் நாளை அக்டோபர் 11-ஆம் தேதி விஜயதசமிக்கான வாழ்த்துகள்.

10 comments:

  1. படிச்சுட்டேன்.

    ReplyDelete
  2. கையினால் நீங்கள் ஏத்திக்கொண்டிருக்கும் தீபத்தில், சரஸ்வதி (முதலில் எனக்கு கிருஷ்ணர் ஞாபகம்தான் வந்தது) கையை உயர்த்தி ஆசீர்வாதம் செய்வதுபோல் தோன்றுகிறது. (என்ன நிவேதனம் பண்ணுகிறீர்கள் என்று படத்தைப் பெரிதுபடுத்திப்பார்த்தேன். எங்க நெல்லைத்தமிழன் கூர்ந்துபார்த்து கமென்ட் பண்ணுகிறார் என்று நீங்கள் 'நிவேதனத்துக்கு வைத்திருந்த நெய்ப்பாயசம் உட்பட எதையும் போட்டோ பிடிக்கவில்லை. அதுனால கமென்ட் பண்ணறதை நிறுத்தமாட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. நிவேதனத்தை எல்லாம் எடுத்த பின்னர் தான் தீபாராதனை காட்டுவோம். காட்டுவது, பூஜை செய்தது எல்லாமே நம்ம ரங்க்ஸ்! தீபாராதனை காட்டிக் கொண்டிருப்பது அவர் தான்! :) நெய்ப்பாயசத்தை மட்டுமில்லை, அப்பம், வடை, மஹா நிவேதனம் எனப்படும் சாதம் எதையுமே படம் பிடிக்கலை. மாலை பிடிக்க நினைத்திருந்தேன். அப்புறமா திடீர்னு மனம் மாறிப் படம் எடுத்தேன். நிவேதனத்தை அப்புறப்படுத்திய பின்னரே கற்பூரம் காட்டணும்! :)

      Delete
  3. சரஸ்வதி பூஜா வாழ்த்துகள்

    ReplyDelete
  4. தங்களுக்கும் ஆயுதபூஜை வாழ்த்துகள் சகோ

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  5. தாமதமான வருகை! நல்ல தகவல்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி துளசிதரன்.

      Delete