எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, October 06, 2016

நவராத்திரி ஏழாம் நாளைக்கான தகவல்கள்!

நவராத்திரி கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாக வழிபடுவோம். இன்றைய தினம் தேவியின் திருநாமம் காலராத்ரி! பொதுவாக சனிக்கிழமைகளில் இவளை வழிபடுவார்கள். என்றாலும் சிலர் ஏழாம்நாளுக்கான தேவியாக வணங்குகின்றனர்.  காலராத்ரி” “காலி” என்றெல்லாம் அழைக்கப் படும் அம்பிகை ஆவாள். கால என்பது காலத்தை மட்டும் குறிக்காமல், கறுப்பு நிறத்தையும், காற்றையும் குறிக்கும். காற்றின் வேகத்தில் நம்மிடம் வந்தடைவாள் காலி என அழைக்கப் படும் மஹாகாளி. காலத்தை வென்றவளான இவள் இரவைப் போன்ற கரிய நிறத்துடன் சற்று அச்சம் தரும் கோலத்திலேயே காணப் படுகின்றாள். என்றாலும் அன்பர்களுக்கு அருளும் தயவான உள்ளம் படைத்தவள் இவள். கரிய நிறத்துடன் மங்களங்களை அள்ளித் தருவதாலேயும் இவளுக்குக் காலராத்ரி எனப் பெயர் ஏற்பட்டது. ராத்ரி என்னும் சொல்லுக்கு இரவு என்ற பொருள் மட்டுமில்லாமல் மங்களம் என்னும் அர்த்தமும் உண்டு. மங்களகரமான காலத்தை ஏற்படுத்துவதாலும் மங்களகாலி என்றும் அழைக்கப் படுவாள் இவள். நவராத்திரி சனிக்கிழமைகளில் இவளை வணங்கலாம். சனீஸ்வரனின் ஆதிக்கத்தின் வலிமை கொஞ்சம் குறையும் என்பதோடு அதைத் தாங்கும் மனவல்லமையையும் அளிக்க வல்லவள் இந்தக் காளி. ஈசன் தாருகாமுனிவர்கள் ஏவிய கஜாசுரனைக் கொன்று யானைத் தோல் போர்த்தி ஆடிய ஆட்டம் பூதத் தாண்டவம் எனப் படும் அந்தத் தாண்டவத்தின் போது தோன்றியவள் காலராத்திரி என்பார்கள்.



சித்தாத்ரி: இவளும் சனிக்கிழமைகளில் வழிபடவேண்டியவளே. கேதுவின் பார்வையால் தீது வருமோ என அஞ்சுபவர்கள் இவளை வழிபடலாம். சித்தர்களுக்கும், ரிஷி, முனிவர்களுக்கும், அஷ்ட சித்திகளும் அளிக்க வல்லவள் இவள். அணிமா, மகிமா, கிரிமா, லகிமா, ப்ராப்தி, பரகாம்யம், ஈஷித்வம், வாஷித்வம் என்னும் அட்டமாசித்திகளை அளிப்பதால் இவளுக்கு சித்தாத்ரி எனப் பெயர் ஏற்பட்டது. நினைத்த காரியங்களில் சித்தியடையவும் இவளை வழிபடலாம் என்று சொல்கின்றனர். நவரசங்களையும் வெளிப்படுத்து நவரச நாட்டியத்தை சிவ நடனம் அல்லது சிருங்காரத் தாண்டவம் என்பார்கள். ஈசன் இந்தத் தாண்டவம் ஆடும்போது தோன்றியவளே சித்தாத்ரி அல்லது சித்தி ராத்திரி.

சித்தாத்ரி க்கான பட முடிவு

ஶ்ரீவித்யா உபாசகர்கள் இவளை ஶ்ரீவித்யா பீஜாக்ஷரியாக ஆராதிக்கின்றனர். சண்ட, முண்டர்களை நேருக்கு நேர் மோதி அழித்த தினம் என்பதால் அன்னையின் சக்தி அதிகமாக ஆகும் தினமாகச் சொல்லுவார்கள். இன்றைய தினம் அன்னையை தங்கப் பீடத்தில் வீணா, புஸ்தக தாரிணியான சாம்பவியாக அலங்கரிக்கலாம். எட்டு வயதுப் பெண் குழந்தையை சாம்பவி என்னும் பெயரால் வழிபட வேண்டும். வெண்ணிற மலர்கள் மிகவும் உகந்தவை. மல்லி, நித்தியமல்லி, நந்தியாவட்டை போன்றவை உகந்தவை.
செண்பகம், ரோஜா, பன்னீர் இலை, புஷ்பம் போன்றவற்றால் திட்டாணிக் கோலமோ, வட்ட வடிவமான கோலமோ போடலாம்.

சாம்பவி க்கான பட முடிவு

படங்களுக்கு நன்றி கூகிளார்!

இன்றைய நிவேதனம் எலுமிச்சைச் சாதம். மாலை சிவப்புக்காராமணியில் வெல்லம் போட்ட சுண்டல் அல்லது பயறு வெல்லச் சுண்டல் செய்யலாம். வியாழக்கிழமை என்பதால் வெள்ளைக் கொண்டைக்கடலைச் சுண்டலும் செய்யலாம்.

எலுமிச்சைச் சாதம்:- சாதத்தை உதிராக வடித்துக் கொண்டு நல்லெண்ணெய், பெருங்காயத் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஆற வைக்கவும். எலுமிச்சம்பழம் பிழியவும்.  பின்னர் ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, உபருப்பு, கபருப்பு, வேர்க்கடலை தாளிக்கவும், வேர்க்கடலை வெடித்ததும் அடுப்பை அணைத்துவிட்டுப் பச்சை மிளகாய், கருகப்பிலை சேர்க்கவும். இஞ்சி தேவையானால் சேர்க்கவும். (நான் சேர்ப்பதில்லை) பின்னர் இந்தக் கலவையை ஆறிய சாதத்தில் ஊற்றிக் கலக்கவும்.  நன்கு ஊறியதும் பரிமாறவும்.

கொண்டைக்கடலையை அல்லது பயறு அல்லது காராமணியை ஊற வைத்துக் கொள்ளவும்.  பின்பு குக்கரில் தேவையான உப்புச் சேர்த்து வேக விடவும். இனிப்புச் சுண்டல்னா உப்பு ஒரு அரை டீஸ்பூன் மட்டும் சேர்த்தால் போதுமானது. உப்புச் சுண்டலுக்குக் கொண்டைக்கடலையை வடிகட்டிக் கொண்டு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு, மிவத்தல், கருகப்பிலை, பெருங்காயம் சேர்த்துக் கொண்டு வெந்த கடலையைப்போடவும். மி.வத்தல், கொத்துமல்லி விதையை எண்ணெயில் வறுத்துப் பொடி செய்து கொண்டு அதை இதில் சேர்க்கவும். தேங்காயைச் சிறு கீற்றுக்களாக அல்லது துருவலாகச் செய்து கொண்டு இதில் போடவும்.

இனிப்புச் சுண்டலுக்கு வேக வைத்ததை வடிகட்டிக் கொண்டு, கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு மட்டும் ஒரு சின்ன மிவத்தலோடு தாளித்துக் கொண்டு வெந்ததைப் போட்டு விட்டு, ஒரு கிண்ணம் பயறு/காராமணி எனில் அரைக்கிண்ணம் வெல்லம் தூளைச் சேர்க்கவும். வெல்லம் சேரும் வரை நன்கு கிளறிப் பின்னர் தேங்காய்த் துருவலைச் சேர்த்துவிட்டுத் தேவையானால் ஏலக்காய்ப் பொடி சேர்க்கவும்.

நான் இன்று மொச்சைச் சுண்டல் செய்யப் போகிறேன். இன்னமும் வேக விடவில்லை!  படம் போடப் போறதில்லை! :) சுண்டல் வதக்கறச்சே எடுக்க முடியுதானு பார்க்கிறேன். நினைவு இருக்கணும்! :)

11 comments:

  1. நல்ல தகவல்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஶ்ரீராம்.

      Delete
  2. ஏழாம்நாள் பதிவு ஏற்றமுடன் இருந்தது வாழ்க நலம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  3. அருமையான தகவல்கள்...சுண்டலோடு சேர்த்து

    ReplyDelete
    Replies
    1. நன்றி துளசிதரன்.

      Delete
  4. இன்று என் வீட்டுக்கு வெற்றிலை பாக்கு வாங்க வந்தவர்களுக்கு வெள்ளைக் கடலை சுண்டல் கொடுத்தாள் என் மனைவி. எனக்கும் கிடைத்தது

    ReplyDelete
    Replies
    1. நம்ம ரங்க்ஸுக்கு வெள்ளைக் கொ.கடலைன்னா பிடிக்கிறதில்லை. ஆகையால் அது வாங்கறதே இல்லை! :)

      Delete
  5. அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  6. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுண்டல் - பார்த்து மட்டும் ரசிக்க முடிகிறது! இங்கே நோ அழைப்பு, நோ சுண்டல்! :)

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, இங்கே வரவும், கம்மி, செலவும் கம்மி! :)

      Delete