எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, April 12, 2021

அத்திவரதன் மீண்டும் வந்துவிட்டான்!

"அத்திமலைத்தேவன்" இரண்டாம் பாகத்தில் அந்த நாட்களில் கோயில்கள் பராமரிக்கப்பட்ட விதம் பற்றியும் இரவுக் காவலன் ஒருவன் கோயிலில் சுற்றி வந்து காவல் காத்ததையும் சொல்லுகிறது. அதோடு இல்லாமல் சோழ இளவரசன் கரிகாலன் ரகசியமாகக் காஞ்சிக்கு வந்து தமிழ் கற்றதையும், பல்லவ இளவரசனும், கரிகாலனும் உறவு என்பதும் நமக்கு/எனக்குப் புதிய செய்தி! அக்கா/தங்கையின் பிள்ளைகள். அந்த வழியில் உறவு. கரிகாலன் உறவைப் போற்றி வளர்க்க நினைக்க, இளந்திரையனோ ஆரம்பத்தில் அதைப் புரிந்து கொள்ளவே இல்லை.  பின்னர் காஞ்சியை அனைத்துத் துணை நகரங்களையும் சேர்த்து ஒரே நகரமாக இருவரும் நிர்மாணிக்கின்றார்கள்.  சரித்திர ரீதியாக மட்டுமின்றி பூகோள ரீதியாகவும் ஆறுகள் உற்பத்தி ஆகிச் சேர்ந்த இடங்களைக் குறித்தும் எழுதி இருக்கிறார் நரசிம்மா! முன்னர் பாலாறு காஞ்சியின் வடக்கே ஓடியதாகவும், காலப் போக்கில் பாலாறு காஞ்சியின் தெற்கே இப்போது இருப்பது போல் ஓடுவதையும் குறிப்பிட்டு வடக்கே ஓடி இருக்கக் கூடும் என்பதற்கான ஆதாரங்களையும் செயற்கைக்கோள்கள் மூலமும் தொல்லியல் சான்றுகள் மூலமும் தெரிந்து கொள்ள முடிவதாகச் சொல்லி இருக்கிறார்.

இன்றைய அடையாறும், கூவம் நதியும் பாலாறு வடக்கே ஓடியதின் மிச்சங்களே என்பதைத் தொல்லியல் அதிகாரி மூலம் உறுதிப் படுத்தி இருக்கும் நரசிம்மா குசஸ்தலை ஆறு என்பது வடமொழிச் சொல் அல்ல என்பதையும் கொசவர்கள் வாழ்ந்து வந்த கிராமத்தின் கரையில் ஓடியதால் கொசஸ்தலை என்றும் குஷஸ்தலை என்றும் அழைக்கப்படுவதாய்ச் சொல்கிறார். நாவல் முழுவதும் இம்மாதிரி முக்கியத் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அனைத்தும் தர்க்கரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் ஏற்கப்படக் கூடியதாயும் உள்ளன.  இந்தக் கொசவர்கள் தாம் பெருமாள் கோயில்களில் மடப்பள்ளியில் சமைக்க மண் பாத்திரங்களைச் செய்து கொடுத்திருக்கிறார்கள் என்பதையும் சொல்கிறார். ஒரு நாள் சமைத்த பாத்திரங்களில் மறுநாள் சமைக்க மாட்டார்கள். ஆகவே ஆற்றங்கரையிலேயே வாழ்ந்து வந்த கொசவர்கள் தினம் தினம் புத்தம்புதியதாகப் பானைகளையும், சட்டிகளையும் செய்து பெருமாள் கோயில்களில் மடப்பள்ளிக்குக் கைங்கரியம் செய்து வந்ததாயும் சொல்கிறார், இந்தக் கொசவர்களின் தலைவனே இரவு வேளைகளில் கோயிலைப் பாதுகாக்கவும் செய்வானாம்.

பொதுவாகப் பல்லவர்களிடையே அதிகம் குழந்தைகள் பிறந்ததாய்த் தெரியவில்லை. முக்கியமாய்ப் பெண் குழந்தைகள். ஆங்காங்கே அங்கொன்றும் இங்கொன்றுமாகவே குழந்தைகள்! இங்கேயும் சாணக்கியர் காலத்துத் திருலோச்சன பல்லவன் குழந்தை வரம் வேண்டி அத்தியூரின் அத்திமலைத் தேவனுக்குப் பச்சை சாற்றிக் குழந்தை வரம் வேண்டுகிறான். பல்லவ அரசர்களுக்கு அத்திமலைத் தேவனே குலதெய்வம் என்றாலும் பல தேசத்து மன்னாதி மன்னர்களும் இந்த அத்திமலைத் தேவனைக் கொண்டு போய்விட எண்ணுகின்றனர். இவரை வைத்து அஸ்வமேத யாகம் செய்தால் உலகனைத்தும் அடக்கி ஆளலாம் என்னும் எண்ணமும் பல மன்னர்களின் பேராசைக்குக் காரணமாய் அமைந்தது. 

முக்கியமாய் பௌத்தர்களுக்கு இந்த தேவ உடும்பர மரத்தின் தேவை மிக அதிகம். புத்த கயாவில் இருந்த தேவ உடும்பர மரம் அசோகனின் மனைவியால் அழிக்கப்படவே அவர்கள் தெற்கே இருக்கும் மரத்தைக் கண்டு பிடித்து அந்த உடும்பர மரத்தால் புத்தர் சிலையை நிர்மாணிக்க வேண்டும் என்னும் ஆவல் கொண்டிருந்தார்கள்.  மேலும் ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை அவதரிக்கும் புத்த அவதாரம் சரிவர நடைபெற வேண்டுமானால் தேவ உடும்பர மரம் இல்லாமல் முடியாது. ஆகவே அவர்கள் பங்குக்கு பௌத்த சந்நியாசிகளும், சந்நியாசினிகளும் (இவர்களில் அசோகனின் பிள்ளை மஹிந்தா, பெண் சங்க மித்தா ஆகியோரும் அடங்குவார்கள்.)  வந்து காஞ்சிக் கடிகையில் படிக்க வந்திருப்பவர்கள் போல் நடித்து எப்படியேனும் அத்திமலைத் தேவனைக்கொண்டு போய்விடக் காத்திருந்தார்கள். ஆனாலும் அவர்கள் எண்ணம் பலிக்கவில்லை.  இப்போது தான் ஆம்ரபாலி உள்ளே நுழைகிறாள். ஆம்ரபாலி பற்றி ஹிந்தி படிக்கையில் நிறையப் படித்திருந்தாலும் இதில் படித்தது தனி அனுபவம். 

நாம் படித்த ஆம்ரபாலி மகத தேசத்து மன்னன் பிம்பிசாரனை மணந்து புத்த பிக்குணியாவாள். அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளையும் பிக்ஷுவாக ஆகிவிடுவான். ஆனால் இங்கே ஆம்ரபாலி சரியான வில்லி. பலரை அழிக்கிறாள். ஒழிக்கிறாள். கடைசியில் பிரசவத்தின்போது ஏற்படும் சிற்சில சிக்கல்களில் முதலை வாயில் போய் இறக்கிறாள். கொடூரமான சாவு!  திரைப்படமாக வந்தபோது வைஜயந்திமாலா நடிச்சிருந்தார்னு நினைக்கிறேன். இங்கே வேறே மாதிரி வந்திருக்கும்.  அதே போல் வேகவதி நதியில் விடும் அத்தியோலைகள் முக்கூடல் சங்கமத்தில் அவரவர் கைரேகைகளை வைத்துக்  கண்டெடுக்கும் நிகழ்வும் ஆச்சரியமாக இருக்கிறது. இந்த மாதிரிச் சடங்குகள், சம்பிரதாயங்கள் எனப் பலவும் எக்காலத்திலும் இருந்து வந்திருக்கிறது என்பதே நமக்கும் ஆச்சரியம் அளிக்கும் விஷயம். இதிலும் சதிவேலை நடக்க, அதிலிருந்து இயற்கையே காப்பாற்றிக் கொடுக்கும் அற்புதங்களும் நடைபெறுகிறது. அதிலும் இலைகளைக் கொண்டு வந்து கொடுப்பது யார் என்பதை நினைத்தால் இன்னமும் ஆச்சரியம் தான்! 


22 comments:

  1. வணக்கம் சகோதரி

    அருமையான விமர்சனம். உங்கள் விமர்சனத்தை படிக்க படிக்க இந்த நாவலின்பால் சுவாரஸ்யம் கூடுகிறது. இந்த நூலினால் நிறைய தகவல்களை தெரிந்து கொள்ளலாம் போலிருக்கிறது. வாங்கி படிக்க வேண்டும். எத்தனை கதைகள் ஒன்றோடு ஒன்றாக பின்னிப் பிணைகிறது. நீங்களும் அழகாக விமர்சனம் செய்துள்ளீர்கள். இந்த அத்தி மலை வரதரை படிக்கும் நேரத்தை அந்த ஆண்டவனேதான் அமைத்துத் தர வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா! எழுதிட்டு சேமிப்பில் போட்டிருந்த நினைவு. தவறாய்ப் பப்ளிஷ் கொடுத்துட்டேன் போல! பதிவு வந்து கருத்துரைகளும் வந்தாச்சு! நான் எழுதி இருப்பது கொஞ்சமே கொஞ்சம்!

      Delete
  2. சட்டென முடித்து விட்டீர்களோ!

    ReplyDelete
    Replies
    1. @ஸ்ரீராம், ஹிஹிஹி, அ.வ.சி. யுகாதி நல்வாழ்த்துகள்.

      Delete
  3. சுருக்கமாகச் சொல்லி விட்டீர்களே கீதாமா.

    அத்திவரதருக்காக இவ்வளவு நடந்திருக்கிறதா!!

    நிறைய செய்திகள். மிகச் சிறந்த சரித்திர நிகழ்வுகள். அத்தனையையும் ஆதாரத்தோடு எழுதி இருக்கிறார் என்று அறிய வரும்போது
    வரும் ஆச்சரியத்தை அளவிட முடியாது. முக்கியமாக
    ஆறுகள் பற்றிய தகவல்.
    இவ்வளவையும் படிக்க நிறையப்
    பொறுமை வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, வல்லி! சுருக்கமாக நானாவது சொல்வதாவது! அது தானாக வெளிவந்திருக்கு அல்லது நான் தப்பாய்ப் பப்ளிஷ் கொடுத்திருக்கேன். :))))) மறு வாசிப்பில் இருக்கேன் இப்போ!

      Delete
  4. நல்லதொரு வாசிப்பனுபவம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ஊருக்கு வரும்போது தான் படிக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், நன்றி. சுமார் எழுநூறு பக்கங்களை ஐந்தாறு பத்திகளில் அடைக்க முடியுமா என்ன?

      Delete
  5. சட் என்று முடித்துவிட்டீர்கள். ஆனால் சுவாரசியமாக இருக்கிறது.

    காலச்சக்கரம் நரசிம்மாவின் இன்னொரு நாவலைப் படிக்க ஆரம்பித்தேன். அவ்வளவு நன்றாக இருந்தது. தொடர்ந்து படிக்க நேரம் வரணும்.

    ReplyDelete
    Replies
    1. ஓரிரண்டைத் தவிர்த்து அவர் நாவல்கள் அனைத்துமே படித்திருக்கேன். எல்லாமே புதுமை, வரலாறு என்று தான் இருக்கின்றன. வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்களுக்குப் படிக்க ஆவலாக இருக்கும்.

      Delete
  6. அன்புள்ள கீதாம்மா ,இன்னும் இன்னும் கூறுங்கள் என கேட்கத் தோன்றுகிறது !

    ReplyDelete
    Replies
    1. எழுதினால் பக்கம் பக்கமாக வரும் வானம்பாடி. கூடியவரை முக்கியமானவற்றையே சொல்கிறேன். அதுவே பெரிசா ஆயிடுது.

      Delete
  7. இதெல்லாம் ஆச்சர்யமான தகவல்கள்..
    படிக்க வேண்டும் அவசியம்...

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாகப் படிக்கணும் துரை.

      Delete
  8. அத்திமலைதேவன் விமர்சனம் நன்றாக இருக்கிறது.
    படிக்கும் ஆவலை தூண்டும் விமர்சனம்.
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி. அங்கே நூலகங்களில் கிடைக்குதானு பாருங்க!

      Delete
  9. முந்தின  அத்திமலை பதிவிற்கும் இதற்கும் அளவில் வித்யாசமா இருக்கே !! என்று நினைச்சேன் :) பதிவு  தானே பப்லிஷ் பண்ணியிருக்கு :)  .ஆனாலும் இன்ட்ரெஸ்டிங்கா போகுது . ஆம்ரபாலி அவ்ளோ கெட்டவரா !!! 
     இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் கீதாக்கா 

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சல்! நாம் பார்த்த/படித்த ஆம்ரபாலிக்கும் இதில் வரும் ஆம்ரபாலிக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள். அதே போல் வந்தியத் தேவன், ஆதித்த கரிகாலன், குந்தவை ஆகியோருக்கும். படிச்சால் அதிர்ச்சியாகிடும்.

      Delete
  10. அஞ்சு என்னமோ சொல்றா எனக்கொண்டும் புரியவில்லை.. குறை நினைக்காதீங்கோ கீசாக்கா, எனக்கும் கொஞ்ச நாட்களாக வெதர் மாற்றத்தால தலைக்குள் பிரச்சனை.. தலைச்சுத்து, ட்ரவ்சினெஸ் ஆக இருக்குது.. மற்றும்படி யூ ரியூப்பில் பிசி இல்லை, அது தொல்லை இல்லாத உலகம்.. வீடியோ எடுத்தமா போட்டமா.. என முடிஞ்சிடும்.. புளொக் தான் கஸ்டமான உலகம் தெரியுமோ ஹா ஹா ஹா.. எனிவே.. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்... எல்லாம் நல்லபடி அமையட்டும் இவ்வருடம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க யூ ட்யூப் செஃப். எப்போப் பார்த்தாலும் சமையலறைக்குள் இருந்தால் இப்பூடித் தான்! கொஞ்சம் வெளியே வந்து ஓய்வு எடுங்க! சரியாயிடும். இவ்வருடம் உங்களுக்கும் நல்லபடி அமையப் பிரார்த்திக்கிறோம்.

      Delete
  11. படிப்புக்காக சரித்திரம் படிப்பதே சிரமமான காரியம். பல்லவன் எப்படி போனா என்ன கரிகாலன் எப்படி போனா என்னனு நினைக்கிறவங்களுக்கு (சீமான் மாதிரி எல்லாரையும் முப்பாட்டன் பாட்டினு சொல்ல தாராள (!) மனம் வேணும்) சரித்திரக் கதைகள் இன்னும் அலர்ஜியாக இருக்கும். பொறுமையாகப் படித்து விமரிசனம் எழுதி நிறைய
    சுவாரசியமான தகவல்கள் தந்துள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க அப்பாதுரை! பல வருடங்களுக்குப் பின்னர் வந்திருக்கீங்க! பள்ளியில் எனக்குப் பிடித்த பாடமே சரித்திரம் தான். வருஷங்கள் தப்பாமல்/மாற்றாமல் எழுதி எல்லோரையும் ஆச்சரியப் பட வைச்சிருக்கேன். இப்போக் குறைஞ்சிருக்குனு சொல்லணும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete