எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, December 11, 2006

ஊர்மிளையின் விரகம்-லாவண்யாவுக்காக

ராமாயணத்தில் பேசப்படும் கதாபாத்திரங்களில் ராமர், சீதை, ராவணன் தவிர, கைகேயி, கெளசல்யா, சுமித்திரா போன்றவர் இருந்தாலும் அதிகம் பேசப்படாத கதாபாத்திரங்களில் ஒன்று லட்சுமணனின் மனைவியான ஊர்மிளை ஆவாள். சீதையுடன் ஜனகரின் மற்ற புத்திரிகளான மாண்டவி, பரதனையும், ஊர்மிளை லட்சுமணனையும், சுருதகீர்த்தி, சத்ருக்கனனையும் மணந்தார்கள். இதில் மாண்டவியும், சுருதகீர்த்தியும் தத்தம் கணவன்மார்களோடு இருக்க, சீதையோ ராமனுடன் வனவாசம் போனாள். இதில் தனித்து விடப்பட்டது லட்சுமணனின் மனைவியான ஊர்மிளை ஆவாள். அவள் லட்சுமணனைப் பிரிந்து எவ்வாறு துன்பப்பட்டாள் என்பதைக் குறிப்பதே "சாகேத்" எனப்படும் ஹிந்தி மொழியிலான கவிதைத் தொகுப்பு. ஸ்ரீமைதிலிசரண்குப்தாவினால் எழுதப்பட்ட இந்தக் கவிதைத் தொகுப்பு 12 அத்தியாயங்களால் ஆனது. இதை எழுத அவருக்குக் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் பிடித்தது. 1914-ல் எழுத ஆரம்பித்தவர் 1931-ல்தான் முடித்திருக்கிறார். கிட்டத்தட்ட ராமாயணக் கதைகளின் அடிப்படையிலேயே ஒரு புது நோக்கோடு செல்லும் இந்தக் கவிதைத் தொகுப்பின் நோக்கம் "ஊர்மிளையின் விரகம்" என்னும் உள்நோக்கத்தைக் குறித்தே செல்லுகிறது.
இதில் 9-வது அத்தியாயத்தில் ஆரம்பித்துப் பத்தாம் அத்தியாயமும் ஊர்மிளை தன் விரகத்தை நினைப்பதைக் குறிப்பதோடு பின் 11, 12-ல் ஸ்ரீராமர் திரும்புவதையும், லட்சுமணன் ஊர்மிளையுடன் சேருவதையும் குறிக்கிறது.

இது வரை யாரும் தொடாத இந்தப் பாகத்தை எழுதிய கவிஞர் ஊர்மிளை எப்படி தைரியமாகத் தன் கணவனின் பிரிவை ஏற்றுக் கொண்டாள் என்பதை இவ்வாறு குறிப்பிடுகிறார். ஊர்மிளை தன் கணவனுடன் சந்தோஷமாய் இருப்பதைக் குறிப்பிடும் கவிஞர் அடுத்த நாளே கைகேயியின் வேண்டுகோளை நிறைவேற்ற ராமர் வனவாசம் செல்வதையும், கூடவே லட்சுமணனுன் தயாராவதையும் குறிப்பிடுகிறார். அந்தச் சமயம் தசரதன் தன் சத்தியம் நிறைவேறுவதிலும், கெளசல்யா தன்னுடைய பிரேமையைக் காட்டுவதிலும், சுமித்திரை ஒரு க்ஷத்திரியப் பெண்ணாகத் தன் வைராக்கியத்தைக் காட்டுவதிலும், சீதை தன் கணவனுடன் சென்று தன் பதிவ்ரதைத் தனத்தை நிரூபிப்பதிலும் கவனமாய் இருக்க ஊர்மிளையைப் பற்றி நினைத்தவர் யார்? லட்சுமணன் ஒருவனைத் தவிர? ஊர்மிளையின் நிலையைப் பார்த்த லட்சுமணன் அவளைப் புரிந்து கொண்டு தன் மனத்தில் இவ்வாறு நினைக்கிறானாம். கவியின் வார்த்தைகளில் பார்ப்போமா?
"ரஹோ, ரஹோ, ஹே ப்ரியே, ரஹோ!
யஹ பி மேரே லியே ரஹோ!"
என்று தன் மனத்தினால் ஊர்மிளைக்குக் கட்டளையிட, அல்லது வேண்டுகோள் விடுக்க அதைப் புரிந்து கொள்கிறாளாம் ஊர்மிளை, தன் கணவன் எண்ணம் என்னவென்று.
வஹ பி சப் குச் ஜான் கயி!
விவஷ் பாவ் ஸே மான் கயி! அடுத்த கணமே தன் மனத்தைத் திடப் படுத்திக் கொண்டு மனதுக்குக் கட்டளை இடுகிறாள்,
"ஹே மன்! தூ ப்ரிய-பத் கா விக்ன ந பன்!" மனதில் எவ்வளவு வைராக்கியம் இருந்தால் இம்மாதிரி ஒரு எண்ணம் ஏற்படும்?

என்றாலும் லட்சுமணன் காட்டிற்குச் சென்றதும் ஊர்மிளைக்கு அவன் பிரிவைத் தாங்க முடியவில்லை. சீதையோ என்றால் தன் கணவனுடன் இருந்தாள். அதனால் அவளுக்கு வனமும் நந்தவனம் ஆகி விட்டது. ஊர்மிளையோ நந்தவனத்தில் இருந்தாலும் வனத்தில் இருப்பது போல் உணர்வதோடு அல்லாமல் தன் கவனிப்பு இல்லாமல் நந்தவனச் செடிகள் பராமரிப்பு இல்லாமல் இருப்பதையும் உணர்கிறாள். தன் தோழியரைக் கூப்பிட்டு வாடும் நந்தவனச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றச் சொல்கிறாள். லட்சுமணன் பிரிவால் வாடும் அவள் மனமாகிய நந்தவனச் செடி மலர்வது எப்போது? இந்த இடத்தில் கவி சொல்கிறார். ரகுகுலத்திற்கே ஒரு திலகம் போன்றவள் ஊர்மிளை என்றும், அவளால் ரகுகுலத்திற்கு ஏற்பட்ட களங்கம் துடைக்கப் பட்டது என்றும் சொல்கிறார். கைகேயி தான் வாழ்க்கைப் பட்ட ரகுகுலத்தின் நல்வாழ்வைப் பற்றி நினையாமல் சுயநலத்துடன் இருந்தது போல் அல்லாமல் தன் சுகத்தைப் பற்றி நினைக்காத ஊர்மிளை மிகவும் உயர்ந்து விட்டாள். பிரிவாற்றாமை என்னும் நெருப்பில் வெந்து கொண்டிருந்த ஊர்மிளை தன் தியாகத்தால் புடம் போட்ட பொன்னைப் போல் ஒளிர்ந்தாள் என்கிறார் கவிஞர். அவள் கண்களில் லட்சுமணன் தான் எப்போதும் தெரிகின்றான். தனக்கு வேண்டிய சுகதுக்கங்களை மறந்த அவள் தன்னையே மறந்தாள். யோகசாதனை செய்பவர்கள் தன்னை மறந்து தன் யோக சாதனையின் உச்சகட்டத்திலேயே நினவு வைத்திருப்பதைப் போல் அவள் தன் பெயரையும் மறந்தாள், தன்னையும் மறந்தாள்.
"தன்னை மறந்தாள், தன் நாமம் கெட்டாள்!
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே!" என்று நாவுக்கரசர் சொன்னதைப் போல் ஊர்மிளை தன்னை மறந்து தன் பெயரையும் மறந்து இருந்தாள். "ருதந்தி" என்னும் வேர் பண்டைய நாட்களில் ரசவாதத்துக்கு உபயோகப்பட்டது என்றும், அதன் ரசத்தைப் பிழிந்துத் தாமிரப் பாத்திரத்தில் இட்டு அக்னியில் காய்ச்சினால் தங்கம் கிடைக்கும் என்றும் சொல்வார்கள். அது போல ஊர்மிளையின் கண்ணீரான ரசத்தில் அவள் கற்பாகிய நெருப்பில் பொசுங்கித் தங்கம் போல் ஒளிர்ந்தாள் என்கிறார் கவிஞர். அவள் உள்ளமாகிய சமுத்திரத்தில் மூழ்கிய லட்சுமணனின் நினைவுகளால் அவள் கண்களில் இருந்து மழைபோல் கண்ணீர் பெருகுவதாய்க் குறிப்பிடுகிறார்.

அவள் நினைவில் தன் சிறுபிராய நினைவுகள் மோதுகின்றன. தானும், சீதையும், மாண்டவியும், சுருதகீர்த்தியும் விளையாடியதும், தாங்கள் நால்வரும் சகோதரர் நால்வரைத் திருமணம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டதையும் தன் திருமணம் பற்றிய நினைவுகளும் தோன்றுகின்றன அவள் உள்ளத்தில். பின் ராம, ராவண யுத்தத்தைப் பற்றி வசிஷ்டர் தான் அறிந்ததைக் கூறுகிறார். ராமர் திரும்புவதைப்பற்றியும் கூறுகிறார்.

பின் ராமர் அயோத்தி திரும்பும்போது கூடவே திரும்பும் லட்சுமணனைப் பார்த்து அப்படியே நிற்கிறாள் ஊர்மிளை. சீதை தன் தங்கையின் நிலையைப் பார்த்து அவளைப் புதுத் துணிகள் அணிந்து வருமாறு கூற அதற்கு அவள் இவ்வாறு கூறுவதாய்க் கவிஞர் கூறுகிறார்:
"நஹி, நஹி, ப்ராணேஷ் முஜி ஸே சலி ந ஜாவே!
மை ஜைஸா ஹூம் நாத் முஜே வைஸா ஹி பாவே!"
என்கிறாள். அதற்கு லட்சுமணன் சொல்வது என்னவென்றால்,
வஹ வர்ஷா கி பாட் கயி, உஸ்கோ ஜானே தோ!
ஷுச்சி-கம்பீரதா பிரியே! ஷரத் கீ யஹ ஆனே தோ!"
ஊர்மிளை சொல்வது" நான் எப்படி இருக்கின்றேனோ அப்படியே என் ஸ்வாமி என்னை ஏற்றுக் கொள்ளட்டும்" என்று. லட்சுமணன் அவளைச் சமாதானப் படுத்துகிறான், "போனது போகட்டும், இனி நம் வாழ்வில் வசந்தம் தான்!" என்று. ஒரு பெரிய நீண்ட பிரிவுக்குப் பின் இருவரும் கூடுவதோடு முடிகிறது.

லாவண்யா கேட்டுக் கொண்டதுக்கிணங்க எனக்குத் தெரிந்த வரை எழுதி இருக்கிறேன். கவிதை முழுதும் கிடைக்கவில்லை. கிடைத்ததில் எனக்குப் பிடித்த வரிகளை மட்டும் எழுதி இருக்கிறேன். இதைப் படிக்கும்போது நம்மால் கண்ணீரை அடக்க முடியாது, இம்மாதிரி வெளியில் சொல்ல முடியாத அளவு தியாகங்களைப் புரிந்தவர்கள் நம்மிடையே இன்றும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட" UNSUNG HEROES" எல்லாருக்கும் நம்முடைய உள்ளார்ந்த வணக்கங்களைச் சமர்ப்பிப்போம்.

24 comments:

  1. Nicely written. i too like this Urmila charecter very much.

    first i checked the site name that is it geetha madam's blog or TRC sir blog, coz of your famous mokkai posts. he heee :)

    paravayilla after months, you too posted a good one. :)

    ReplyDelete
  2. அற்புதம்..

    எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை... இது போல் நம் ஊரில் நிறைய பேர்களின் வாழ்க்கை அமைந்திருக்கிறது. எதற்காகவோ தியாகம் செய்ய ஆரம்பித்துவிட்டு கடைசியில் எந்த ஒரு இன்பமும் இல்லாமல் கடமையே உயிரென மறைந்தவர்கள் பலருண்டு..

    எனக்குத் தெரிந்து சின்ன வயதிலேயே கணவரை இழந்து ..முடி துறந்து மாங்கல்யம் துறந்து.. வெறும் நார்மடி மட்டும் உடுத்தி தன் ஒரே மகனுக்காக எல்லாம் தியாகம் செய்து வளர்த்த் ஒரு பாட்டி எனக்குத் தெரியும்...

    ஊர்மிளைக்காவது இலக்குவன் திரும்ப வந்தார்.. இந்தப் பாட்டிக்குத் அவர் இலக்குவன் திரும்பவேயில்லை...

    அன்புடன்,
    சீமாச்சு...

    ReplyDelete
  3. //இம்மாதிரி வெளியில் சொல்ல முடியாத அளவு தியாகங்களைப் புரிந்தவர்கள் நம்மிடையே இன்றும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட" UNSUNG HEROES" எல்லாருக்கும் நம்முடைய உள்ளார்ந்த வணக்கங்களைச் சமர்ப்பிப்போம்//

    சிறந்த படைப்பு. இப்போதுதான் உங்கள் வலைப்பூ பக்கம் வருகின்றேன். பாராட்டுக்கள்.

    சென்ஷி

    ReplyDelete
  4. ராமாயணம் படிக்கும் போது
    ஊர்மிளைக்காக வருத்தப்படுவேன்.இலட்சுமணன் செய்தது சரியா ?
    எந்த விதத்தில் அவள் தியாகம் செய்து
    இருந்தாலும் அவளுக்கு மற்றவர்கள்
    தீமை செய்து விட்டார்கள் என்றுதான்
    மனதுக்கு தோன்றுகிறது.

    ReplyDelete
  5. நல்ல பதிவு. உங்களது வலைப்பதிவுக்கு அதிகம் வந்ததில்லை. நிதானமாக ஒரு சுற்று வர வேண்டிய வலைப்பதிவு என்று தோன்றுகிறது. நேரம் கிடைக்கும்போது முழுவதுமாக வாசிக்க முயல்கிறேன்.

    ReplyDelete
  6. சாகேத் - ஸ்ரீமைதிலிசரண்குப்தா ----புதிய செய்தி....நன்றி.

    ReplyDelete
  7. கீதா,என்ன ஒரு அருமையாஅன பெண்.
    சீதை துன்பத்திற்குக் காரணம் இருந்தது.
    ஊர்மிளையின் மேல் திணிக்கப் பட்ட வேதனைக்கு என்ன பதில்.
    இப்படி ஒரு கவிதைத் தொகுப்பை தமிழுக்குக் கொண்டு வந்ததற்கும் அழகாக எடுத்துச் சொன்னதற்கும் ரொம்ப நன்றிப்பா.

    ReplyDelete
  8. யாரு இந்த ஊர்மிளை,லாவன்யா நான் கேள்வி பட்டதே இல்லயே...புதுசா வந்த படத்துல எதுனா நடிச்சு இருக்காங்களா :-)

    ReplyDelete
  9. மேடம்.. தலைக்கு மேல வேலை.. மெதுவ அபடித்து பின்னூட்டம்..

    இப்போ.. உள்ளேன் ஐயா மட்டும்..

    ReplyDelete
  10. எல்லாருக்கும் நல்ல செய்தி, இன்னும் 2 நாள் ஆகும் என்னுடைய கணினி வருவதற்கு. அது வரை சந்தோஷமா இருங்க.

    ReplyDelete
  11. ஊர்மிளை கானகத்திற்கு செல்லாமலே கணவன் சொல் மீறாமல் அவனை எண்ணியே வாழ்ந்த பதிவிரதை.இந்தக் கவிதை தொகுப்பின் சில வரிகள் போட்டாலும்,போட்டுள்ள அத்தனையும் உருக்கமான வரிகள்.--SKM

    ReplyDelete
  12. //எல்லாருக்கும் நல்ல செய்தி, இன்னும் 2 நாள் ஆகும் என்னுடைய கணினி வருவதற்கு. அது வரை சந்தோஷமா இருங்க//

    இதுல எது நல்ல செய்தினு எனக்கு புரியல...இன்னும் ரெண்டு நாள்ல எங்க சந்தோசத்துக்கு ஆப்புன்னு சொல்றீங்க... :-)

    ReplyDelete
  13. மேடம்.. உங்க கணினி சீக்கிரம் வர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. என் பெயரை விட்டு விட்டதற்கு மிகவும் வன்மையாக வருத்தப்படுகிறேன்.எதோ அந்த unsung லிச்டுலாயாவது இருப்பேன்னு நினைக்கிறேன்.சரி சொப்பன வாழ்வில் மகிழ்ந்தேன் சுப்பிரமணிய சுவாமி உனை மறந்தேன்.......

    ReplyDelete
  15. அருமையாக இருக்கிறது.
    'லட்சுமணன் இருக்கும் இடம் தான் அயோத்தி' என்று ஊர்மிளை சொல்லாதது ஏனென்று தோன்றும்.
    இந்தப் புத்தகம் தேடிப் பார்க்க வேண்டும்.. ரொம்ப இந்தி தெரியணுமோ புரிஞ்சுக்க?

    ReplyDelete
  16. ஹாஹா, அப்பாதுரை, தேடிப் பிடிச்சு இல்ல படிச்சிருக்கீங்க? ஆரம்ப நாட்களில் வெறும் மொக்கை போஸ்ட் தான் கிடைக்கும். கொஞ்சம் கொஞ்சமாய்த் தான் என்னோட வேலையைக் காட்ட ஆரம்பித்தேன். எடுத்த எடுப்பில் ஆரம்பிக்கலை. :)))))))ஆனால் ஆன்மிகப் பயணம் பதிவுகளில் சமரசம் ஏதும் இல்லை! :)))))

    ஊர்மிளையின் விரகம் குறித்த இந்த சாகேத் ராமாயணம் மைதிலி ஷரண் குப்தாவின் மாஸ்டர் பீஸ் என்று சொல்லலாம். ஹிந்தியிலேயே படிக்கணும். உங்களுக்குத் தான் தெரியுமே. அந்த அறிவு போதும். :))))))

    இந்தப் பதிவில் யாருக்குமே பதில் சொல்லலை என்பதையும் இப்போத் தான் பார்க்கிறேன். :)))) எல்லாருக்கும் இன்னிக்கு இந்த பதில் போகும். :)))))

    ReplyDelete
  17. அருமையான பதிவு.
    ஊர்மிளை பாத்திரமே சீதையைவிட மிக சிறப்பாய் சொல்வார்கள்.
    சீதை லட்சுமணனை சுடுசொல் சொன்னதை தன் அக்காவிடம் அயோத்தி திரும்பிய பின் கேட்பாதாய் எதிலோ படித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், கோமதி அரசு, திருப்பூர் கிருஷ்ணன் கூட அப்படி ஒரு கட்டுரை எழுதியதாய் நினைவு.

      Delete
  18. ஹிந்தி கொஞ்சம் தெரிந்ததினாலோ என்னவோ இந்தப்பதிப்பு இப்போது படித்தபோது மிகவும் உருக்கமாக மனதைப் பாதித்தது. உங்கள் மொழிபெயர்ப்பும் சேர்ந்து மிகவும் உருக்கமான பிரிவை உருக்கமாகவே காண்பித்துக் கண்களில் நீரை வருவித்துவிட்டது. ஸாகேத் ராமாயணம் படிக்கணும். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி அம்மா, நானும் "ஸாகேத்" ராமாயணம் முழுதும் படிக்கலை. ஹிந்தி படிக்கையில் ஊர்மிளையின் விரகம் பாடப் பகுதியாக வந்தது. அப்போப் படிச்சது. பின்னால் பெண் படிக்கையில் மேலும் தெரிந்து கொண்டேன்.

      Delete
  19. ஸ்ரீமைதிலிசரண்குப்தா அவர்களை ஊர்மிளை எந்த அளவுக்கு பாதித் திருக்கிறார் எனபதை அற்புதமாக விவரித் திருக்கிறீர்கள் எல்லோருக்குமே ஊர்மிளை பாத்திரத்தின்மீது ஒரு ஈர்ப்பு இருப்பது உண்மை. என் கதையின் பின்னூட்டங்களும் அதனையே உணர்த்துகின்றன. எங்கள் பிளாக்கில் எனது கதைக்கு கருத்தும் பாராட்டும் தெரிவித்திருபதற்கு நன்றி மேடம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி முரளிதரன், ஊர்மிளை பற்றி நிறையப் பேர் எழுதி இருக்கின்றனர்,என்றாலும் மைதிலி ஷரண்குப்தாவின் "சாகேத்" ராமாயணத்தில் சொல்லி இருப்பதே பெரும்பாலும் பேசப்படுகிறது.

      Delete
    2. அதே போல் மொழி புரிந்தால் இதே மைதிலி ஷரண் குப்தாவின் "யஷோதரா"வும் அவசியம் வாசிக்க வேண்டிய கவிதைத் தொகுதி! அதில் யஷோதராவின் ஆழமான துக்கமும் அவள் கேட்கும் கேள்விகளும் மறக்க முடியாதவை!

      Delete
    3. सखि, वे मुझसे कहकर जाते,
      कह, तो क्या मुझको वे अपनी पथ-बाधा ही पाते?

      मुझको बहुत उन्होंने माना
      फिर भी क्या पूरा पहचाना?
      मैंने मुख्य उसी को जाना
      जो वे मन में लाते।//

      என்று ஆரம்பிக்கும். தோழியிடம் யசோதரா, "தோழி, அவர் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டுப் போயிருந்தால்? ஏன் சொல்லவில்லை?" என்று கேட்பது போல் ஆரம்பிக்கும்.

      Delete