எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, July 10, 2008

கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 71

“என்னுடைய விருப்பத்தைத் தெரிந்து கொள்ளாமல், நீ எப்படி தேரைத் திருப்பிக் கொண்டு வரலாம். என்னைக் கோழை என நினைத்தாயோ? அற்பமதி படைத்தவன் என நினைத்தாயோ??? உன் இஷ்டப் படி தேரைத் திருப்பிவிட்டாயே? தீயவனே! எதிரியின் கண் எதிரேயே என்னை இவ்வாறு இழிவு செய்த நீ எனக்கு எப்படி நண்பனும், ஊழியனும் ஆவாய்?? எப்படி இவ்வாறு செய்யத் துணிந்தாய்?? ஆஹா, என்னுடைய போர்த்திறனையும், இத்தனை காலமாய்ப் பல தவங்களும், விரதங்களும், வழிபாடுகளும், வேள்விகளும் நடத்தை நான் பெற்ற அனைத்துக் கெளரவங்களையும் இந்த ஒரு நொடியில் நாசமாக்கி விட்டாயே? முதலில் தேரைத் திருப்புவாயாக! என்னிடமிருந்து நீ பெற்ற நன்மைகளை மறந்துவிட்டாயா?? “ என்று கடுமையாகக் கடிந்து கொள்கின்றான்.

தேரோட்டி மிக்க வணக்கத்துடன், “ஐயா, தங்களிடமிருந்து பெற்ற நன்மைகளை நான் மறந்து செய்ந்நன்றி கொன்றவன் ஆகிவிடவில்லை. எதிரிகள் யாரும் என்னை அவர்கள் பக்கம் இழுத்தும் விடவில்லை. தங்கள் நன்மைக்காக வேண்டியே நான் தேரைத் திருப்பவேண்டியதாயிற்று. மேலும் தாங்களும், கடும் யுத்தத்தின் காரணமாயும், மன உளைச்சல் காரணமாயும் களைத்துவிட்டீர்கள். தங்கள் தேரின் இந்தக் குதிரைகளும் களைத்துவிட்டன. உங்கள் வீரம் நான் அறியாத ஒன்றா?? நான் தேரை மட்டும் ஓட்டினால் சரியாகவும் இருக்காது ஐயா, தங்கள் பலம், வீரம் மட்டுமின்றி உங்கள் உடல் சோர்வு, மனச்சோர்வு அனைத்தையுமே நான் கவனித்தாகவேண்டும். உங்கள் உடல்நிலையோ, மனநிலையோ மேலும் யுத்தம் செய்யக் கூடிய தகுதியில் இருக்கின்றதா எனவும் நான் கவனிக்கவேண்டும். ஐயா, தேரைச் செலுத்தும் பூமியைக் கூட நான் கவனித்து, எங்கே வேகம் வேண்டுமோ, அங்கே வேகமாயும், எங்கே மெதுவாய்ச் செல்லவேண்டுமோ, அங்கே மெதுவாயும், எந்த இடத்தில் எதிரிப் படையை ஊடுருவ முடியுமோ அங்கே ஊடுருவதல் செய்தல் , எப்போது பின்வாங்க வேண்டுமோ அப்போது பின் வாங்குதல் என முறையாகச் செய்யவேண்டும் ஐயா! இதில் தங்கள் நலன் ஒன்றே என் கருத்து.” என்று மிகவும் தயவாகச் சொல்கின்றான்.

ராவணன் மனம் ஒருவாறு மகிழ்ந்தது. தேரோட்டிக்கு அப்போது தன் கையில் இருந்த ஆபரணங்களில் ஒன்றைப் பரிசாக அளித்துவிட்டுத் தேரைத் திரும்ப யுத்த களத்திற்கு ஓட்டச் சொன்னான். தேரும் திரும்பியது. இதனிடையில் ராமரும் களைத்துப் போயிருந்தமையால், அவரும் சற்று இளைப்பாறுவதோடு அல்லாமல், ராவணனை வெல்வது எப்படி என்ற சிந்தனையும் செய்ய ஆரம்பித்தார். அப்போது இந்த யுத்தத்தைக் கவனித்துக் கொண்டிருந்த தேவர்கள், ரிஷிகள், முனிவர்களில் இருந்த சிறப்பும், தனிப் பெருமையும் வாய்ந்த அகத்தியர் ராமன் இருக்கும் இடம் நோக்கி வந்தார். ராமரைப் பார்த்துப் பேசத் தொடங்கினார்."ராமா, என்றும் அழியாத ஒரு விஷயத்தைப் பற்றி நான் இப்போது உன்னிடம் கூறுகின்றேன். இந்தப் பூவுலகில் நிலையானவனும், அனைவரும் ஏற்கக் கூடியவனும், தினம் தவறாமல் தன் ஒளியால் அனைவரையும் வாழ்விப்பவனும், கண்ணால் காணக் கூடிய ஒரு கடவுளும், அழிவற்றவனும், அனைவராலும் தினம் தினம் வணங்கப் படுபவனும் அந்த சூரியன் ஒருவனே ஆவான்! அவனே பிரம்மா, அவனே விஷ்ணு, அவனே ருத்திரன், அவனே கார்த்திகேயன், அவனே ப்ரஜாபதி, அவனே இந்திரன், அவனே குபேரன்! காலனும் அவனே! சோமனும் அவனே! வருணனும் அவனே! வசுக்களும் அவனே, மருத்துக்களும் அவனே, பித்ருக்களும் அவனே! வாயுவும் அவனே, அக்னியும் அவனே, மனுவும் அவனே, பருவங்களும் அவனே, ஒளியும் அவனே, இருளும் அவனே, இந்த உலகின் ஒவ்வொரு மூச்சுக்காற்றிலும் அவனே நிறைந்துள்ளான். அப்படிப் பட்ட சூரியனைக் குறித்த இந்தத் துதியை உனக்கு நான் இப்போது சொல்கின்றேன். இந்தத் துதியை நீ மும்முறை தோத்தரித்து, அந்தச் சூரியனை வேண்டிக் கொண்டு, பிரார்த்தித்துக் கொண்டு ஒருமித்த மனத்தோடு சூரியனை வழிபட்டு, நீ ராவணனை வெல்வாய்! சக்தி வாய்ந்த இந்தத் துதி சாஸ்வதம் ஆனது, என்றும் நிலையானது, புனிதமானது. எல்லாப் பாவங்களையும் ஒழிக்கவல்லது. எதிரிகளை அழிக்கவல்லது." என்று சொல்லிவிட்டு "ஆதித்ய ஹ்ருதயம்"என்னும் ஸ்லோகத்தைச் சொல்லி விட்டு, அவ்விடத்தை விட்டு அகன்றார்.
அகஸ்தியரின் உபதேசத்தைக் கேட்ட ராமரும், அவ்வாறே மனக் குழப்பம் நீங்கி, ஆதித்திய ஹ்ருதயம் என்னும் ஸ்லோகத்தை மும்முறை, ஒரு மனதுடன் சூரியனை நோக்கித் துதிக்கவும், அவருடைய குழப்பமும், கலக்கமும் நீங்கித் தெளிவு பெற்றார். மீண்டும் யுத்தம் செய்யத் தயாராக வந்த ராவணனைப் பார்த்து அவனை வென்றே தீருவது என்ற மன உறுதியோடு ராமரும் மீண்டும் ராவணனோடு போருக்குத் தயார் ஆனார். அவருடைய மன உறுதியையும், தன்னை முழுமனத்தோடு துதித்ததையும் கண்ட சூரியனும் அவருக்கு "ஜெயம் உண்டாகட்டும்" என்று ஆசி வழங்கினான். சகுனங்களும் ராமருக்கு சாதகமாகவே சுபமாக ஏற்பட்டன. சகுன சாஸ்திரத்தில் வல்லவர்கள் ஆன அனைவரும் மட்டுமின்றி, ராமரும் சகுன சாஸ்திரத்தை அறிந்தவர் ஆதலால் அவரும் மனம் மகிழ்ந்தார். ராவணனுக்கு முடிவு நெருங்கிவிட்டது என்பதை ராவணனும் அறிந்திருந்தான். எனினும் தீரத்துடன் போரிட முன்வந்தான். கடும்போர் மூண்டது. அங்கே ராவணனின் தேரில் ரத்த மழை பொழிந்தது. பூமி நடுங்கியது. பறவைகள் இறந்து வீழ்ந்தன ராவணனின் தேரில். கழுகுகள் வட்டமிட்டன. அனைத்தையும் எதிர்கொண்டு ராவணன் ராமரோடு போரிட்டான். அசுர குலத்தைச் சேர்ந்த ராவணனுக்கும், மனிதன் ஆன ராமனுக்கும் நடந்த பெரும்போரை வர்ணிக்க இயலாது. இரு தரப்பு வீரர்களும் தங்கள் சண்டையை நிறுத்திவிட்டு, ஓவியத்தில் எழுதிய சித்திரங்களைப் போல் அசையாமல் நின்று அவர்கள் இருவரின் சண்டையைப் பார்க்க ஆரம்பித்தனர். விண்ணிலோ எனில், தேவர்களும், யக்ஷர்களும், கந்தர்வர்களும், கின்னரர்களும், ரிஷி, முனிவர்களும் ஏற்கெனவே கூடி இருந்தனர். இந்திரனின் தேரை வீழ்த்த ராவணன் விடுத்த அஸ்திரம் பயனற்றுப் போய்விட்டது. கூடியவரையில் அம்புகள் குறிதவறாமல் போய் ராமரைக் காயப் படுத்தினாலும் பெரும் சேதம் ஒன்றும் நேரிடவில்லை. ராவணனால் ராமருக்கு சேதத்தை விளைவிக்க முடியவில்லை.தேரோட்டிகள் முழு மனதோடு ஒத்துழைக்க இருவருமே தீரத்துடனும், வேகத்துடனும் போரிட்டனர். போர் இன்னும் ஒரு முடிவுக்க வரவில்லையே என ரிஷி, முனிவர்கள் கவலையில் ஆழ்ந்தனர். ராவணன் கொல்லப் படவேண்டும், ராமர் ஜெயிக்கவேண்டும் என்ற பிரார்த்தனையில் மூழ்கினர் அனைவரும். ராமரும் தன் அம்பினால் ராவணனின் தலையை அறுத்து வீழ்த்துகின்றார். எனினும், என்ன ஆச்சரியம்?? அவன் தலை திரும்பத் திரும்ப முளைக்கின்றதே? ராமர் சிந்தனையில் ஆழ்ந்தார். கரன், தூஷணன், மாரீசன், விராதன், வாலி போன்றோரை வென்ற நம் அஸ்திரங்கள் ராவணனிடம் பயன் இல்லாமல் போவதேன்? எனினும் விடாமல் யுத்தம் செய்தார் ராமர். இரவும், வந்தது, யுத்தமும் தொடர்ந்தது. மீண்டும் பகல் வந்தது, மீண்டும் யுத்தம் நிற்காமல் தொடர்ந்தது. அப்போது இந்திரனின் தேரோட்டியான மாதலி, ராமரிடம், "இன்னும் எத்தனை நாட்கள் இவ்வாறு சமபலத்தைக் காட்டிக் கொண்டிருப்பீர்கள்? ராவணன் அழியும் நேரம் வந்துவிட்டது. பிரம்மா இதற்கெனத் தனியாகத் தங்களுக்கு அருளி இருக்கும் அஸ்திரத்தை ஏவ வேண்டிய நேரம் வந்துவிட்டது." எனக் கூறினான்.ராமரும் பிரம்மாவை வேண்டிக் கொண்டு, அகத்தியரால் தனக்கு அளிக்கப் பட்ட அந்த விசேஷமான அஸ்திரத்தை எடுக்கின்றார். அந்த அஸ்திரத்துக்கு உரிய மந்திரங்களைச் சொல்லியவண்ணம், அஸ்திரம் குறி தவறாமல் ராவணனை வீழ்த்தவேண்டும் என வேண்டிக் கொண்டு, ஊழித் தீபோலவும், உலகையே அழிக்கக் கூடிய வல்லமை கொண்டதும், அனைத்து ஜீவராசிகளையும் ஒழித்துவிடுமோ என்ற அச்சத்தைத் தரக்கூடியதும் ஆன அந்த அஸ்திரத்தை வில்லில் பூட்டி, நாண் ஏற்றினார். அஸ்திரம் பாய்ந்தது. ராவணனின் இதயத்தைப் பிளந்து அவனுடைய உயிரை எடுத்துவிட்டு, மீண்டும் அந்த அஸ்திரம் ராமரின் அம்பறாத் தூணிக்கே வந்து சேர்ந்தது. ராவணன் இறந்தான். அரக்கர் படை கலக்கத்துடன் ஓடிச் சிதறியது. வானரங்கள் ஜெயகோஷம் போட்டனர். வாத்தியங்கள் மங்கள இசை இசைத்தன. விண்ணில் இருந்து வானவர்கள் பூமாரி பொழிந்தனர். ரிஷி, முனிவர்கள் ராமரை வாழ்த்திப் பாடினர். சூரியனின் ஒளி பிரகாசித்தது.

விபீஷணன் விம்மி, விம்மி அழுதான்.

3 comments:

  1. //நான் தேரை மட்டும் ஓட்டினால் சரியாகவும் இருக்காது ஐயா, தங்கள் பலம், வீரம் மட்டுமின்றி உங்கள் உடல் சோர்வு, மனச்சோர்வு அனைத்தையுமே நான் கவனித்தாகவேண்டும்.//

    இந்த விஷயங்கள்தான் எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு - வெறும் கதை மட்டும் சொல்லாம பல விஷயங்களை ஊடாக சொல்லிகிட்டு போகிறது!

    ReplyDelete
  2. @திவா,
    பாராட்டுக்கு நன்னி, ஹிஹிஹி, me quick in the uptake! he he he, அதான் இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் என் கண்ணிலே மட்டும்(???) பட்டுத் தொலைக்கும்! :)))))))))

    ReplyDelete
  3. படித்தேன். நெகிழ்ந்தேன்.

    ReplyDelete