எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, October 14, 2015

இன்னிக்குச் சுண்டல் உண்டு வாங்க, வாங்க!

நேற்று நிவேதனம் சாப்பிட நிறையப் பேர் வந்திருக்காங்க. ஆனால் எல்லோரும் சாப்பிட மட்டும் தான் வந்திருக்காங்க! க்ர்ர்ர்ர்ர்! :)  கருத்துச் சொல்லலை! போகட்டும்! இனி நவராத்திரி மூன்றாம் நாளைக்கான வழிமுறைகளைப் பார்ப்போமா?




படத்துக்கு நன்றி விக்கிபீடியா


நவராத்திரி மூன்றாம் நாளுக்கான தேவி சந்திரகாந்தா ஆவாள். ஒரு சிலர் ஸ்கந்தமாதா என்றும் அழைப்பார்கள்.  இன்று வசதி இருந்தால் முத்துக்களால் மலர்க்கோலம் போடலாம். அல்லது  பாசிமணிகளாலாலோ அல்லது மலர்களாலேயே கோலம் போடலாம். இன்றைய தினம் வழிபட வேண்டிய கன்னிகையைக் "கல்யாணி" என அழைப்பார்கள். நான்கு வயதுள்ள பெண் குழந்தையைக் கல்யாணியாகப் பாவித்து வழிபட்டுக் குழந்தைக்குப் பிரியமான சிவப்பு நிற வஸ்திரங்களைக் கொடுக்கலாம். அல்லது வெண்மையும் சிவப்பும் கலந்த நிறத்திலும் கொடுக்கலாம். இன்றைய நிவேதனமாக சர்க்கரைப் பொங்கல் செய்து கொடுக்கலாம். அல்லது ஒரு சிலர் தயிர்சாதமும் செய்வார்கள். இரண்டும் உகந்ததே! இன்று தேவியை மஹிஷத்தின் மீது அமர்ந்திருக்கும் கோலத்தில் அலங்கரிக்கலாம்.

சர்க்கரைப் பொங்கல் செய்முறை: ஒரு கிண்ணம் பச்சரிசி, அரைக்கிண்ணம் பாசிப்பருப்பைச் சிவக்க வறுத்துக் கொண்டு ஒரு கிண்ணம்பால் சேர்த்து வேகவிடவும். தேவைப்படும்போது நீரைக் கொதிக்க வைத்துச் சேர்க்கலாம். குக்கரில் வைப்பவர்கள் பாலும் நீருமாகக் கலந்து வைக்கலாம். பின்னர் நன்கு குழைய வெந்ததும் இரண்டு கிண்ணம் தூளாக்கப்பட்ட பாகு வெல்லம் சேர்க்கவும். வெல்லம் நன்கு சேர்ந்து கலந்து கொண்டு பொங்கல் இறுக ஆரம்பிக்கையில் இன்னொரு அடுப்பில் வாணலியை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி முந்திரிப்பருப்பு, திராக்ஷைப்பழம், பொடியாக நறுக்கிய தேங்காய்க் கீற்றுகளை வறுத்து நெய்யோடு பொங்கலில் சேர்க்கவும். ஏலக்காய்ப் பொடி போட்டுக் கிளறிப் பரிமாறவும்.

தயிர் சாதம்: ஒரு கிண்ணம் அரிசியை ஒரு கிண்ணம் பால், ஒரு கிண்ணம் நீர் சேர்த்துக் கொண்டு குழைவாக வடிக்கவும். குக்கரில் வைத்தால் ஒரு கிண்ணம் பாலோடு தேவையான அளவு நீரைத் திட்டமாகச் சேர்க்கவும். குக்கருக்கு அழுத்தம் அதிகம் கொடுத்தால் மேலே பொங்கி வழிந்து பாலெல்லாம் குக்கர் பாத்திரத்தில் போய்விடும். பின்னர் சாதம் சூடாக இருக்கும்போதே நல்லெண்ணெயை  இரண்டு டீஸ்பூன் வாணலியில் ஊற்றிக் காய வைத்துக் கொண்டு கடுகு, பெருங்காயத் தூள், இஞ்சி, பச்சைமிளகாய், கருகப்பிலை சேர்க்கவும். தாளிதத்தைச் சாதத்தில் சேர்த்துத் தேவையான உப்போடு ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெயும் சேர்க்கவும். பின்னர் தேவையான தயிரைச் சேர்த்துக் கிளறிக் கொத்துமல்லிப் பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். விரும்பினால் மாதுளை முத்துக்கள், காரட், வெள்ளரி போன்றவை பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம்.

மாலை சிவப்புக் காராமணியை ஊற வைத்துக் காரச் சுண்டல் பண்ணலாம். காராமணியைக் கல் அரித்துக் களைந்து கொண்டு முதல்நாளே ஊறப்போடவும். ஊறும்போதே கொஞ்சம் சமையல் சோடா கால் டீஸ்பூன் சேர்க்கவும். பின்னர் மறுநாள் மீண்டும் ஒரு முறை களைந்து கொண்டு குக்கரில் அல்லது ப்ரஷ்ர்பானில் நீரை விட்டுக் கொதிக்க வைத்துக் காராமணியை உப்புச் சேர்த்து வேக விடவும். நான்கு அல்லது ஐந்து விசில் கொடுக்கவும். காராமணி நன்கு குழைந்து வெந்ததும் கீழே இறக்கி நீரை வடிகட்டிக் கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, கருகப்பிலை, மிவத்தல், பெருங்காயம் தாளித்துக் கொண்டு காராமணியைக் கொட்டிக் கலக்கவும். மிவத்தல், கொ,மல்லிவிதையை வறுத்துச் செய்த பொடியைக் கொஞ்சமாகத் தூவிக் கிளறவும். அல்லது ஒரு அரை டீஸ்பூன் சாம்பார் பொடியையும் போடலாம். நன்கு கலந்ததும் தேங்காய்த் துருவலைச் சேர்க்கவும். கீழே இறக்கி விநியோகிக்கவும்.



காராமணிச் சுண்டல்!


தேங்காய் ஏற்கெனவே பயன்படுத்தியது என்பதால் துருவிய தேங்காயை நிவேதனம் ஆனதும் சேர்த்தேன். தேங்காய் சேர்க்காத சுண்டல் உள்ளே கிண்ணத்தில் வைத்திருக்கிறேன்.  அப்புறமா எல்லாத்தையும் கலந்தாச்சு! சுண்டல் நல்லா வந்திருக்கிறதா ரங்க்ஸ் சொன்னார். சீக்கிரமா எல்லோரும் எடுத்துக்குங்க! 


12 comments:

  1. காராமணி சுண்டலா....? கொஞ்சமா எடுத்துக்கறேன்! போதும்!

    ReplyDelete
    Replies
    1. ஏன், காராமணி பிடிக்காதா? இந்தச் சுண்டலுக்குப் பின்னால் ஒரு கதையே இருக்கு! :)

      Delete
  2. நவராத்திரி மூன்றாம் நாள் விளக்கம் சிறப்பு! எளிமையாக சுண்டல், தயிர்சாதம் சொல்லிக் கொடுத்தமைக்கு நன்றி! காராமணி சுண்டல் நல்ல டேஸ்ட்! நன்றி!

    ReplyDelete
  3. சுண்டல்.... எடுத்துக் கொண்டேன்.... :) அள்ள அள்ளக் குறையாத சுண்டல்!

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, நேத்திக்கு போணி ஆயிடுச்சு! இன்னிக்கு நிறையப் போட்டிருக்கேன்! எப்படினு தெரியலை! :)

      Delete
  4. நல்ல காம்பினேஷன்!

    ReplyDelete
  5. நேற்று இனிப்புச் சுண்டல் பிரசாதமாக வந்தது. இன்று உங்கள் பதிவுச் சுண்டல்

    ReplyDelete
    Replies
    1. காராமணியிலும் இனிப்புச் சுண்டல் செய்யலாம். ஆனால் அவ்வளவாப் பிடிக்கிறதில்லை! :)

      Delete
  6. சுண்டல் எடுத்துக்கிட்டேன். இன்னொரு பாத்திரத்தில் என்ன? பானகமா?

    நான் நேத்து சிகப்புக் காராமணி சுண்டல் செஞ்சேன். இன்றைக்கு நோ சுண்டல் டே! மோர்க்குழம்பு, தானுக்கு உளுந்து வடை, மஹா நைவேத்யம் இவைதான் இன்றைக்கு!

    ReplyDelete
    Replies
    1. இதுவும் சிவப்புக் காராமணி தான். பாத்திரத்தில் பானகம் இல்லை. தேங்காய் போடாத சுண்டல் நிவேதனத்துக்குனு தனியா எடுத்து வைச்சேன். :)

      Delete