எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, May 24, 2016

எல்லாம் தலைகீழ் விகிதம் தான்!

இப்போதெல்லாம் பெண்களுக்கு  எளிதில் விவாகம் நிச்சயம் ஆகிவிடுகிறது. ஆனால் நிச்சயம் ஆன விவாகங்கள் தொடர்ந்து அந்தக் குறிப்பிட்ட முகூர்த்தத் தேதி வரை நிலையாக இருக்கும் என்பதில் சந்தேகங்கள் இருக்கின்றன. ஏனெனில் திடீர் திடீர் எனப் பெண் வீட்டுக்காரர்களின் மனோபாவங்கள், மனோநிலைகள் மாறி விடுகின்றன. ஜாதகம் பார்த்துச் செய்யும் பல திருமணங்களிலேயும் பெண்ணுக்குக் கல்யாணம் ஆக வேண்டுமே என்ற கவலையில் பெண்ணின் ஜாதகத்தைப் பிள்ளை விட்டுக்கு அனுப்பி வைக்கும் பெற்றோர் மிகக் குறைவு.  இப்போது இதை எல்லாம் கல்யாணத் தரகு வேலை செய்யும் இணையங்கள் செய்கின்றன. அங்கிருந்து ஜாதகத்தை ப்ரின்ட் அவுட் எடுத்துப்பிள்ளை வீட்டில் பொருத்தம் பார்த்துப் பெண் வீட்டிற்குத் தகவல் தெரிவித்தால் அவங்க சொல்வது, நாங்க பார்த்துட்டுச் சொல்றோம் என்பது தான்.

அப்படி உடனே சொல்லிடவும் மாட்டாங்க. நாமளும் பொறுத்துப் பார்த்து விட்டுத் தான் கூப்பிட்டுக் கேட்போம். அவங்களுக்கு வருமே கோபம்! அப்படி ஒண்ணும் உங்க பிள்ளைக்காக எங்க பொண்ணு காத்திட்டு இருக்கலை. அவளுக்கு நிறைய வரன் வருதுனு சொல்வாங்க. நாம் பொருத்தம் பார்த்தாச்சானு கேட்கலைனால் நீங்க ஏன் முன்னாடியே கேட்கலை! இப்போ நாங்க வேறே இடம் நிச்சயம் பண்ணிட்டோம்னு சொல்லிடுவாங்க. எல்லாவற்றையும் மீறிப் பெண் வீட்டார் சம்மதம் சொல்லிப் பெண்ணும், பிள்ளையும் பார்த்துக் கொண்டு பேசிக் கொண்டு முடிவு செய்த பின்னரும் பிள்ளைக்குச் சரியான வேலை இல்லை; சம்பளம் பத்தலை! எங்க பொண்ணை வைச்சுக் குடித்தனம் நடத்த இந்தச் சம்பளம் போதுமா என்கிறார்கள்.  எங்க பொண்ணே ஐம்பதாயிரம்/ஒரு லட்சம் சம்பாதிக்கிறா! அவளுக்குச் சமமாக உங்க பையரும் சம்பாதிச்சா எப்படிப் போதும்னு கேட்கிறாங்க. இத்தனைக்கும் வயசு வித்தியாசமும் அதிகம் இருக்கக் கூடாது. கிட்டத்தட்ட சம வயசில் இருக்கணும். அப்போ எப்படிப் பையர் பெண்ணை விட அதிகமா சம்பாதிக்க முடியும்? அதற்கான அனுபவமும், வயசும் வர வேண்டாமா?  எடுத்த எடுப்பிலேயே இரண்டு லட்சம் சம்பளம் எல்லோருக்குமா கிடைக்கும்? இருக்கிற சம்பளத்துக்குள்ளே சிக்கனமாச் செலவு செய்தது எல்லாம் எந்தக்காலமோ ஆகி விட்டது! இப்போதெல்லாம்  ஆடம்பரச் செலவுகள் தான் அதிகம். கல்யாணம் ஆகி இருக்கும்போதே பிள்ளைக்கு வீடு, கார் அல்லது நல்ல பைக் இருக்கணும்.  பெரியவங்களோட அனுசரிச்சுப் போறதும் ரொம்பக் குறைவே!  ஒரு சில பெண்கள் இப்படி இல்லாமல் இருக்கலாம். ஆனால் பொதுவாகச் சரியாக இல்லைனு தான் சொல்லணும். கல்யாணம் ஆகிப் போகும்போதே பையருக்கு ஒரு லட்சத்துக்கு மேல் வருமானம் இருக்கணும்னா, அப்போத் தான் கட்டுபடி ஆகும்னா அப்போ அவங்க பொண்ணு செலவாளினு ஒத்துக்கறாங்களா? புரியலை! அதை ஜாதகம் பார்க்கிறச்சேயே கவனிச்சிருக்க மாட்டாங்களா? எல்லாம் பேசி முடிச்சுக் கிட்டத்தட்டக் கல்யாணம் நிச்சயம் பண்ணத் தேதி குறிப்பிடுகையில் சொல்வாங்க.

என்னதான் நினைச்சுட்டு இருக்காங்கனு தெரியலை! எங்களுக்குத் தெரிஞ்சவங்க மூலமா ஒரு பெண்ணோட ஜாதகம் வந்தது. தெரிஞ்ச பையருக்குப் பார்த்தோம். எல்லாம் சரியாக இருந்தது. பெண்ணுக்குப் பெற்றோர் இருவரும் இல்லை. சித்தப்பாதான் கவனிக்கணும். ஆனால் பெண்ணோடு கூடப் பிறந்த மற்ற இரு சகோதரிகளும் யார் மூலமாகவோ ஜாதகப் பொருத்தம் பார்த்துவிட்டு எங்களுக்குச் சம்மதம்னு பையர் வீட்டுக்குத் தொலைபேசிச் சொன்னாங்க. சரினு பெண்ணின் சித்தப்பாவைக் கூப்பிட்டுப் பேசினால் முதலில் அந்தப் பெண்ணுக்குப் பரிகாரம் பண்ணணும். அதுக்கப்புறமாப் பார்க்கிறோம். என்று சொன்னார். சொல்லி நாலு வருடங்கள் ஆகியும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இப்போ சமீபத்தில் அந்தப் பெண்ணின் இன்னொரு தங்கை மீண்டும் பையரின் வீட்டைத் தொலைபேசி மூலம் அணுகினால் மீண்டும் சித்தப்பா! ஜாதகம் பார்க்கவே இல்லை! பார்த்துட்டுச் சொல்றேன்னு சொல்லி ஒரு வருஷம் போல் ஆகிறது. கூப்பிடவே இல்லை! இத்தனைக்கும் பொதுத்துறை வங்கியில் அதிகாரியாக இருந்து பணி ஓய்வு பெற்றவர்!

பெண் வீட்டுக்காரங்க எல்லாம் பிள்ளை பார்க்கையில் எடுத்த எடுப்பில் அந்தப் பையர்கள் ஒரு லட்சத்துக்குக் குறையாமல் சம்பாதிக்கணும் என்று எதிர்பார்க்கிறாங்க.  எல்லோருமே இஞ்சினியர் பிள்ளையாகப் பார்த்தால் மற்றத் துறைகளில் வேலை செய்யும் பையர்களைக் கல்யாணம் பண்ணிக்கப் பெண்களே முன் வரமாட்டாங்க போல! சம்பளம் பத்தலை, வேலை செய்யும் இடம் திருப்தி இல்லை! பையர் பார்க்கும் வேலையிலே எங்களுக்குத் திருப்தி இல்லைனு ஆயிரம் நொட்டுச் சொல்றாங்க! இத்தனைக்கும் பெண்களுக்கு 27 க்கு மேல் வயசு ஆகி இருக்கும். அப்படியும் பெண்ணின் தரப்பில் எங்களுக்கு அவசரமில்லை என்றே பதில் வருகிறது!  ஒரு பக்கம் மருத்துவர்கள் எல்லாம் 30 வயசுக்குக் குழந்தை பெத்துக்கறது ஆரோக்கியமானது இல்லைனு சொல்றாங்க. இன்னொரு பக்கம் பெற்றோர் முப்பது வயதுக்குக் குறைந்து பெண்களுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறதில்லைனு நிச்சயமா இருக்காங்க.

என்னதான் நினைக்கறாங்க இந்தப் பெண்களைப் பெற்றவர்கள்னு புரியவே இல்லை. அதையும் மீறிக் கல்யாணம் ஆகிவிட்டாலோ ஒரே வருஷத்திலே விவாகரத்து! :(  எதுக்குனே தெரியறதில்லை.  பார்க்கவும், பழகவும் இரண்டு பேரும் எளிமையாத் தான் இருப்பாங்க. ஆனால் எங்கேயோ எதிலேயோ மன வேறுபாடு வந்து ஒரே வருஷத்தில் விவாகரத்து ஆகி விடுகிறது! அப்போக் கல்யாணத்துக்குச் செலவு செய்த பணம்?  அதை எல்லாம் யாரும் நினைச்சுப் பார்ப்பாங்களா தெரியலை! பல நடுத்தரக் குடும்பங்களிலே கல்யாணக் கடனே முடிஞ்சிருக்காது. அதுக்குள்ளே விவாகரத்தும் ஆகி விட்டிருக்கும். அதிலேயும் இப்போல்லாம் கல்யாணங்களுக்கு ஆகிற செலவு பத்திக் கேள்விப் பட்டால் தலையைச் சுத்துது! எங்களால் எல்லாம் இப்படி ஆடம்பரக் கல்யாணம் நிச்சயமாப் பண்ணி இருக்க முடியாது. நல்லவேளையாகப் பெண்ணுக்கும், பையருக்கும் இந்த மாதிரி ஆடம்பரங்கள் எல்லாம் வரும் முன்னரே கல்யாணத்தைப் பண்ணி வைச்சுட்டோமோ, பிழைச்சோம்!


 தெரிஞ்சவங்க ஒருத்தர் வீட்டில் பெண் கல்யாணத்துக்குச் சத்திர வாடகையே ஒரு நாளைக்கு இரண்டு லட்சம்னு சொன்னாங்க. அதைத் தவிரச் சாப்பாடு இப்போது உயர்தர சமையல் கான்ட்ராக்டராக இருக்கும் ஏ.எஸ்.ராஜசேகரனைக் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்தால் ஒரு சாப்பாட்டின் விலை குறைந்த பட்சமாக 750 ரூபாய் ஆகிறது.  காலை டிஃபனுக்கு இரண்டு (சின்னதாய்த் தான் இருக்கும்.) இட்லி (ஸ்டிக்கர் பொட்டு சைஸில்) ஒரு சின்ன வடை, ஒரு சின்ன ஊத்தப்பம், ஒரு சின்னக்கரண்டி பொங்கல், ஏதேனும் (அநேகமாய் அசோகா போடுவாங்க) ஒரு ஸ்வீட்+ அரைக் கப் காஃபி (அந்தக் காஃபிக் கப்பே  ரொம்பச் சின்னது! அதிலும் அரைக்கப் தான் கொடுப்பாங்க)  இவற்றுக்கு 450 ரூபாய் ஆகிறது.  ஒருத்தருக்குக் குறைந்தது 1,200 ரூபாய்! இதிலே எல்லோரும் போட்டதைச் சாப்பிடுறாங்களானு பார்த்தால் இல்லை! இலையில் வைச்சது வைச்சபடியே இருக்கும்! நிறைய உணவு வீணாகும். இப்படியே மூணு நாள் கல்யாணம்னா ஒவ்வொரு வேளைக்கும் கணக்குப் போட்டுப் பாருங்க! தலை சுத்தல்! இவற்றைக் குறைக்கலாம்னு நாம் ஆலோசனைகள் சொன்னால் கிட்டத்தட்ட நம்மை அடிக்காத குறைதான்!

பெண் வீட்டுக் கல்யாணங்களில் இப்படிச் செலவுன்னா பிள்ளை வீடுகளிலும் ஒண்ணும் குறைச்சல் இல்லை! எல்லோருக்கும் கொடுக்கப் புடைவை, வேஷ்டி, டீ ஷர்ட்(இப்போல்லாம் இதான் கொடுக்கிறாங்க) அல்லது நல்ல ப்ரான்டட் கம்பெனி ஷர்ட் வாங்கறாங்க! இதுவே பட்ஜெட் மூணு லட்சத்துக்குப் போயிடும். அப்புறமாப் பெண்ணுக்குச் செய்ய வேண்டிய முறைகள், பெண் வீட்டாருக்குப் பதில் மரியாதைக்குச் செய்ய வேண்டிய முறைகள், கல்யாணத்திற்கு வரும் உறவுக்கும் நட்புக்கும் கொடுக்க வேண்டிய பரிசுப் பொருட்கள், பிள்ளையும், பெண்ணும் ஹனிமூன் போகச் செய்ய வேண்டிய ஏற்பாடுகள்னு ஒரு பெரிய லிஸ்டே இருக்கு. ஏதேனும் விட்டிருந்தால் நினைவு படுத்துங்க!

இனி போகப் போக என்ன ஆகுமோ? ஆனால் இதுவே மீண்டும் முப்பது வருடங்களில் சுற்றிக் கொண்டு வந்து நிலைமை தலைகீழாக மாறும் என்று எதிர்பார்க்கிறேன். ஏனெனில் பெண்கள் பிறப்பு அதிகமாக இருப்பதாகச் சொல்கின்றனர். இப்போப் பெண்களே கிடைப்பதில்லை என்னும் நிலை! இது மாறிப் பெண்கள் அதிகமாயும் ஆண்கள் குறைவாயும் பிறப்பதால் காலம் மாறும் என்கின்றனர். இரண்டுமே சரியில்லை!  பெண்ணோ, ஆணோ ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்துச் சென்றால் பிரச்னை இல்லை! 

49 comments:

  1. என்ன இப்படிக குமுறி, கொட்டித் தீர்த்துட்டீங்க?

    ReplyDelete
    Replies
    1. இன்னும் இருக்கு! சொன்னது ரொம்பவே குறைவு! என்றாலும் இப்போதெல்லாம் முதிர் கன்னிகளை விட முதிர் கன்னர்களே அதிகம் தென்படுகின்றனர். நம்ம வீட்டிலேயே இரண்டு! :( அதான் குமுறல்! :(

      Delete
    2. ரொம்ப நாள் கழித்துப் படிக்கிறேன். சமீபத்தில் மைலாப்பூர் ஆண்டவன் ஆஸ்ரமத்துக்குப் போயிருந்தபோது, யாரோ ஒரு மாமி, இந்தாங்கோ எங்க வீட்டுப் பையன் ஜாதகம். இந்த மாத இஷ்யூல போடுங்கோ என்று அங்கிருந்த பப்ளிகேஷன் ஆபீசர்கிட்ட (ஆஸ்ரம பப்ளிகேஷன்) சொன்னபோது, அவர், என்னம்மா.. எல்லோரும் பையன் ஜாதகமாக் கொண்டுவரேள்.. பொண் ஜாதகம் இல்லையா? பெண்ணே இல்லையே அம்மா என்றார். நான் நினைத்துக்கொண்டேன்... எத்தனை தலைமுறையாக (decade) பெண்ணைப் பெற்றவர்களை ஏறிமிதித்தோம்.. எவ்வளவு எள்ளி நகையாடினோம் (சொல்வது பொதுவாக கம்யூனிட்டியை). இப்போ அவர்கள் கொடுக்கும் நேரம் என்று நினைத்தேன்.

      5 வருடங்களுக்கு முன்பு, கணிணித் துறையில் 1 வருடமாக வேலை பார்க்கும் (புரோக்ராமர்) ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தபோது, என் வீட்டுல அண்ணா, அம்மால்லாம் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி கம்பெல் பண்றா. யாரு கல்யாணம் பண்ணிண்டு வரப்போகிறவனுக்கு சமைச்சுண்டு இருக்கறது. வேற வேலையில்லை என்று சொன்னார் (தெய்வ பக்தியுள்ள பெண்.. சொல்லும்போது கொஞ்சம் நகைச்சுவை உணர்வுடன் சொன்னார். இது இப்போதைய பெண்களின் மன நிலை என்றால் மிகையல்ல)

      Delete
  2. நானும் சொல்ல நிறைய இருக்கு.... ஆனால் என்னத்தைச் சொல்ல? எங்கள் வீட்டிலும் இப்போ அனுபவிச்சுகிட்டு இருக்கோம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், இதில் லேசாகத் தொட்டிருக்கேன், அவ்வளவு தான்! ஆனால் சொல்ல நிறைய இருக்கு! :(

      Delete
    2. அப்படித் தப்பித் தவறி அமைந்து விட்டாலும் ஒரே கோத்திரமாகி விடுகிறது!



      பெரும்பாலான பெண்கள் பொறியியல் படித்திருப்பதால், மணமகன்கள் அதற்கு மேல் படித்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அல்லது அவர்களின் பெற்றோர் அப்படி நினைத்துப் பேசி விடுகிறார்கள். மாப்பிள்ளை பற்றி விசாரிக்கும்போது பெண்ணின் தாயோ, தந்தையோ ஆரம்பத்திலேயே பேச்சைப் பட்டுக் கத்தரித்தாற்போல வெட்டி விடுகிறார்கள்.

      Delete
    3. வேறு வழியில்லைனா பெண்ணுக்கும் பிள்ளைக்கும் பொருந்தி இருந்தால் ஒரே கோத்திரமாக இருக்கையில் பெண்ணைத் தாய் மாமா மூலமோ, அத்தை மூலமோ கோத்திரம் மாற்றித் தாரை வார்க்க வேண்டியது தான்! எனக்குத் தெரிந்து இப்படி ஒரு கல்யாணம் (ஆனால் அவங்க கிட்டத்தட்ட எங்க வயசுள்ளவங்க, அல்லது எங்களை விடப் பெரியவங்க) நாற்பது வருடங்கள் முன்னர் நடந்தது. விஷயம் என்னன்னா, ஜாதகப் பொருத்தம் பார்க்கையிலே பெண்ணின் ஜாதகத்திலே கோத்திரமே குறிப்பிடலை. ஜாதகம் பொருத்தம் பார்த்துப் பெண் பார்த்துத் திருமணமும் நிச்சயித்துப் பின்னர் கல்யாணத்துக்கு முதல் நாள் விரதம் நடக்கையிலே தான் பெண்ணின் கோத்திரமும், பிள்ளை வீட்டுக் கோத்திரமும் ஒன்றே எனத் தெரிய வந்தது. அதன் பின்னர் பெண்ணின் பெரியம்மாவை (அம்மாவின் அக்கா) விட்டுத் தாரை வார்த்துக் கொடுக்கச் செய்தனர். அவங்களுக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்து சௌகரியமாக சந்தோஷமாகவே வாழ்க்கை நடத்தினார்கள். அந்த மாமி தான் இப்போது இல்லை. இறந்துவிட்டார். :(

      Delete
  3. சரியாகத்தான் சொன்னீர்கள். என் இரண்டாவது பையனுக்கு பெண் தட்டி தட்டிப் போனது இப்படித்தான். இத்தனைக்கும் அமெரிக்காவில் வேலை. கடைசியாக 30 வயதில் தான் அதுவும்
    பாரத் மாட்ரிமோனி மூலமாக நடந்தது.

    உறவில் ஒரு 35 வயது gulf வரனுக்கு கல்யாணம் அடுத்த மாதம் நடக்கிறது.
    --
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. அண்ணா, 30 வயதுக்குள் உங்கள் பையருக்குத் திருமணம் ஆனது அவர் அதிர்ஷ்டமே! இப்போதெல்லாம் முப்பதைத் தாண்டி ஐம்பது வயதில் கூட பிரமசாரிகள் இருக்கின்றனர். திருமணத்திற்குத் தவிக்கிறார்கள். :(

      Delete
  4. எல்லாம் ஒரு சைக்கிள். 40 வருஷம் முன்னே பெண்களை கல்யாணம் பண்ணிக்கொடுக்க படாத பாடு பட வேண்டி இருந்தது. இப்ப விவாகரத்து. அப்ப வாழா வெட்டியா பெண்ணை வீட்டுக்கு அனுப்பி வெச்சுடுவாங்க. பெண்களை வளர்க்கிற விதம் சரியில்லை. நாராயணா காப்பாத்து!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், தம்பி. அது புரிகிறது. ஆனால் இப்போது வாழாவெட்டனாக இருக்கும் முதிர்கன்னர்களுக்கு என்ன பதில்? அதான் மனதைக் கலங்க அடிக்கிறது! :(

      Delete
    2. இந்தப் பதிவின் பக்கப்பார்வை கிட்டத்தட்ட ஐநூறுக்கு வந்திருக்கிறது! ஆனால் பலருக்கும் கருத்துச் சொல்ல இஷ்டமில்லை போலும்! :(

      Delete
    3. தினப்படி பெருமாளையும் தாயாரையும் பத்தாயிரம் பேர் தரிசனம் செஞ்சுட்டு தான் போகிறார்கள்.

      எல்லோருமா அர்ச்சனை செய்கிரார்கள் ?

      திவாஜி சார். சரியா ?

      சுப்பு தாத்தா.

      Delete
    4. ஹூம், பக்கப்பார்வை அறுநூறைத் தாண்டி இருக்கு சு.தா. ஆனால் அர்ச்சனை செய்தவர்கள் சொற்பம் தான்! :)

      Delete
  5. இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு என்னுடன் ஒரு கூட்டத்தில் பங்கு கொண்ட எனது நண்பர் (அவரும் ஒய்வு பெற்ற மிகப்பெரிய அலுவலர்) விழா முடிந்தபின் தனியே பேசிக்கொண்டு இருந்தபோது குறிப்பிட்டார். அவரது பையனுக்கு 5 வருடமாக பெண் தேடிக்கொண்டு இருக்கிறார். பக்கத்தில் வருகிறது. நின்று போய் விடுகிறது. நாங்கள் எந்த டிமாண்ட் டும் செய்வதில்லை. நல்ல குடும்பம் போதும். பெண் வேலை பார்க்கவேண்டும் என்ற தேவை இல்லை. கிராஜுவேட் போதும். சப் கேஸ்ட் கூட பார்க்கவேண்டாம். ஏதாவது வது இருந்தால் சொல்லுங்கள். என்றார்.
    பெண்ணுக்கு
    வயது 28 வரை. கிராஜுவேட். நல்ல குடும்பம். போதும்.
    பையன் ஒரு தனியார் வங்கியில் நல்ல பொறுப்பான அலுவலர். சென்னை.

    பெண் எங்கே இருக்கிறாள் ?

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. இதே மாதிரிப் பெண்ணைத் தான் எங்க வீட்டிலும் என் தம்பி பையருக்காகத் தேடுகிறோம். வேலை பார்க்கணும்னு கட்டாயம் இல்லை. விரும்பினால் பார்க்கட்டும் என்பது தான் ஒரே நிபந்தனை. ஆனால் கிட்ட வருகிறது. நிச்சயம் என்று சொல்லித் தேதி பார்த்துப் பின்னர் நின்று விடுகிறது. அல்பமான காரணங்களுக்காக! :( இப்போச் சொல்லி இருப்பது பெண்ணின் பெரியப்பாவுக்கு எங்க தம்பி பையர் பார்க்கும் வேலையில் திருப்தி இல்லையாம். வாழப் போவது அந்தப் பெண் தான். பெரியப்பா இல்லை! இதை யார் போய்ச் சொல்வது? :(

      Delete
  6. இதை எல்லாம் அனுபவித்து 12 வருடங்கள் ஆச்சு.
    நான் எழுத வேண்டிய முக்கியமான விஷயங்கள் நிறைய இருக்கு.

    அப்போது கொதித்த கோபம் இப்போது தணிந்துவிட்டது.
    ஒரு பெண் நிச்சயம் ஆன பிறகு ,சிங்கப்பூருக்குப் போய்விட்டாள்.
    திருமணம் பிடிக்கவில்லையாம்.
    எத்தனை பேருக்கு ஃபோன் செய்திருப்பேனோ தெரியாது.
    செலவழித்து இந்தியா வந்த பையர் திரும்பிச் சென்றார்.
    காலம் நல்லபடி திரும்ம்பட்டும்.

    ReplyDelete
    Replies
    1. மனசு வேதனையில் வெந்து போகிறது போங்க! எங்க பையருக்கும் கல்யாணத்துக்குப் பார்க்கையில் ஒரு சில அனுபவங்கள் ஏற்பட்டன. ஆனாலும் ரொம்பவும் பிரச்னை இல்லாமல் பார்த்துக் கொண்டோம். இப்போத் தான் தம்பி பையருக்கு ரொம்பவே சிரமமாக இருக்கிறது.

      Delete
  7. சரியான குமுறல்!!.. அத்தனையும் சரி தான்!!.. கொஞ்சம் நீளமா கருத்து சொல்லணும்..

    இப்போ, சுமாராகப் படித்து, சுமாரான வேலையில், ஓரளவு நல்ல சம்பளத்தில் இருக்கும் பையர்களுக்குப் பெண்ணே கிடைக்காது!!.. அவங்களே தேடிட்டாத் தான் உண்டு!!..

    பெண்களின் எதிர்பார்ப்பு என்பதை விடவும் பெண்ணைப் பெற்றவர்களின் அலட்சிய மனோபாவம் என்றே சொல்லணும்.. மிக அதிகமாக பெண்கள் சம்பாதிப்பதால், பிள்ளை வீட்டார், கொத்தடிமையாக தங்கள் பெண்ணுக்கு இருக்கணும் என்றே எதிர்பார்க்கின்றனர். இன்றைய சூழலில், பிள்ளையைப் பெற்றவர்கள் கொஞ்சமேனும் கௌரவமாக இருக்கணும் என்றால், தங்கள்
    கடைசி காலத்துக்கு கொஞ்சம் பணம் காசு சேர்த்து வைத்துக் கொண்டு, பிள்ளைக்குத் திருமணமானதும், தனியே வைத்து விடுதல் உத்தமம்..இல்லையெனில், சமையல், குழந்தை வளர்ப்பு, பண்டிகை கொண்டாடுதல், விருந்தோம்புதல் எதிலும் மருமகளின் பங்களிப்பை சுத்தமாக எதிர்பார்க்கக் கூடாது. மாமியார், மாமனாரே செய்துடணும். வீட்டுக்கு நேரந்தவறி வருவது,
    பார்ட்டிக்குப் போவது, காலதாமதமாக எழுவது, குளிக்காமல் சாப்பிடுவது எல்லாத்தையும் பொறுத்துப் போகணும்..

    பெரும்பாலும் சாஃப்ட்வேர் வேலைகள் என்பதால், அந்த உலகமும் கலாசாரமும் நம்முடைய பழகிப் போன கலாசாரத்துக்கு முற்றிலும் முரணாகவே இருக்கும்..சமைத்த உணவை நிவேதனம் செய்து உண்ணுவதே சரியென்று நாமிருக்க, அதை ஃபோட்டோ எடுத்து, வாட்ஸப் குரூப்பில் பெருமையடித்துக் கொள்வதே சிரேஷ்டமென அவர்களிருப்பார்கள். பெரும்பாலும் பிள்ளையிலிருந்து பெற்றவர்கள் வரை, உரிமையையும் அதிகாரத்தையும் எதிர்பார்க்காமல், சர்வாதிகாரத்தையும் பெண் கையில் கொடுத்தால் ஆச்சு!.. இல்லையெனில் டைவோர்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!!...

    ReplyDelete
    Replies
    1. பெண்ணைப் பெற்றவர்கள் தான் நிபந்தனைகளே போடறாங்க! என்னவோ போங்க! ஒண்ணும் புரியலை!

      Delete
  8. ///ஏதேனும் விட்டிருந்தால் நினைவு படுத்துங்க!///

    தேவையற்ற ஆடம்பரங்கள்.. இது ஒரு லிஸ்டே இருக்கு!.. கல்யாணத்துக்கு முதல் நாள் மெஹந்தின்னு ஒரு ஃபங்க்ஷன்..இதில் ஒருத்தர், கல்யாணப் பெண் முதல் அத்தனை பேருக்கும் மெஹந்தி போடுவார். அதற்கும் சேர்த்து, திருமண மண்டபம் அல்லது ஒரு சின்ன மண்டபம் வாடகைக்கு எடுத்து, விருந்தோடு கொண்டாட்டம்.. அதுக்கப்புறம் சங்கீத்னு ஒண்ணு.. பெண், பிள்ளையை அலங்கரித்து அமர வைத்து, இரு பக்க சொந்தக்காரங்களும் அமர்ந்து பரஸ்பரம் அறிமுகப்படுத்தும் விழா... இதில் அநேகமாக, சொந்தக்காரங்களே குரூப் குரூப்பாக, சின்ன வயசுப் பெண்கள் குரூப், அத்தைகள், மாமிகள் குரூப், சித்தப்பா, பெரியப்பாக்கள் குரூப் அப்படின்னு, டான்ஸ், பாட்டு இப்படி பெர்ஃபார்மன்ஸ் குடுக்குறாங்க.. இதுவும் லேட்டஸ்டா வந்திருக்கு..

    சில இடங்கள்ல, ரிசப்ஷனோட சங்கீத் வைக்கிறாங்க.. அப்ப, டிஜேவும் வரணுங்கறது கண்டிஷன்..இது ஒண்ணு தான் சொன்னேன்.. இப்படி நிறைய்யா...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், இதை எல்லாம் முன்னர் ஒரு பதிவில் எழுதி இருந்தேன். ஆகையால் இப்போது குறிப்பிடவில்லை! இந்த ஆடம்பரங்கள் எல்லாம் வட மாநிலங்களைப் பார்த்து வந்தது. ஒரு பக்கம் ஹிந்தி வரக்கூடாது! ஹிந்தி ஒழிகனு சொல்றாங்க. இன்னொரு பக்கம் அவங்களைப் பார்த்து பராத், ரிசப்ஷனில் நடனம், க்ரூப் டான்ஸ் அப்படினு செய்யறாங்க! ஒண்ணும் சரியில்லை! நம்ம கலாசாரம்னா என்னனே இப்போ இருக்கிறவங்களுக்குத் தெரியலை!

      Delete
  9. பல குடும்பங்களின் குமுறல்களையே வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறீர்கள்!
    எனக்கு கல்யாணம் ஆகிவிட்டதோ பொழைச்சேனோ!!

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, உங்களுக்கு இப்போக் கல்யாணம்னா எப்படி இருந்திருக்கும்னு கற்பனை பண்ணிப் பார்த்தேன்! :)

      Delete
  10. இதைப் பத்தி சொன்னா நிறுத்தாம சொல்லிண்டே இருக்கலாம். இதுனால தான் அந்த காலத்துல பெரியவா பால்ய விவாகம் ஏற்படுத்தினாளோ ? பெண் வீட்டுக்காரா பண்றது ஒரு பக்கம் நா நீங்க சொல்ற மாதிரி கல்யாண செலவைக் கேட்டா மயக்கமே வரது ! சாப்பாடு தவிர பேக்ட்ராப் , இன்ன பிற அலங்காரங்களுக்கு பண்ற செலவுல சிம்பிளா ஒரு கல்யாணமே பண்ணலாம். ஒன்னும் சொல்லிக்கராப்போல இல்லை .

    ReplyDelete
    Replies
    1. கடைசியில் பால்ய விவாகத்துக்குத் தான் திரும்புவோமோ? தெரியலை! இங்கே எழுதி இருப்பதைத் தவிர நிறைய மனக்குமுறல்கள் எனக்கும் இருக்கு தான்! எல்லாவற்றையும் எழுதினால்! அவ்வளவு தான்! :)

      Delete
  11. நாளை வருகிறேன் சகோ.

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, பயந்துட்டீங்க போல!

      Delete
    2. நாங்க எதற்கு பயப்படுறோம் ? இரவு நேரமாச்சே பதிவு பெரிதாக இருக்கின்றது விசயமும் கடினமாக இருக்கின்றது நாளை படித்து அலசி கருத்துரை எழுதுவோம்ணு போனது தவறா ?

      Delete
  12. இந்த பதிவுக்கு நான் என்ன கருத்து சொல்ல
    அதற்கான வயது இன்னும் எனக்கு ஆகவில்லை
    என்பதே எனது கருத்து...

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, உங்களுக்குத் திருமண வயதா? அப்படின்னால் சீக்கிரமாப் பெண்ணைத் தேடிக் கல்யாணத்தை முடிச்சுடுங்க! :)

      Delete
  13. பெண் வீட்டாரின் இந்த மெத்தெனப் போக்கு எதற்கு என்றேப் புரிவதில்லை. அதற்கும் மேல், நீங்கள் சொல்வது போல் விவாகரத்தும் பெருகிக் கொண்டேப் போகிறது.
    ஒண்ணுமே புரியல.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், இந்த விவாகரத்து ஏன் நடக்கிறது என்பது தான் எனக்கும் புரியறதே இல்லை! :(

      Delete
  14. நமது சமூகம் தான் எப்படி மாறிவிட்டது! ஒரு 25-30 வருடமுன்பு கல்யாணவயதில் பெண்கள் வீட்டில் இருக்க, வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டதைப்போல தீராக்கவலையோடு அலைந்த பெற்றோர்கள்தான் எத்தனை எத்தனை? அப்போது, பிள்ளைகளை வைத்திருக்கிறோம் என்கிற மமதையில், (அந்தப் பிள்ளைகள் பார்ப்பதற்குக்கூட நன்றாக இல்லாவிட்டாலும், உருப்படியாக அப்படி ஒன்றும் பெரிய வேலையில் இல்லாவிட்டாலும்) மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் குதித்த குதிதான் எத்தனை? ஆண்டவனுக்கே அது பிடிக்கவில்லை. மாற்றிவிட்டான் எல்லாவற்றையும் என எடுத்துக்கொள்வோமா!

    ReplyDelete
    Replies
    1. மாற்றம் தான் ஏகாந்தன், இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் ஆரோக்கியமான மாற்றம் இல்லை. நெடுந்தொடர்களில் வரும் பழி வாங்கல் போல அப்போப் பிள்ளை வீட்டுக்காரங்க நடந்து கொண்ட முறைக்கு இப்போது பெண் வீட்டுக்காரர்கள் பழிவாங்கறாங்க போல! ஆனால் இதுவும் விரைவில் மாறுமே! அப்போ என்ன செய்வது! அதோடு இப்படி எல்லாம் இருந்தும் பல ஆண்கள் திருந்துவதாகவும் தெரியவில்லை. ஆங்காங்கே மனைவியை வரதட்சணைக் கொடுமையில் கொல்வது, பாடாய்ப் படுத்துவது, வீட்டை விட்டு விரட்டுவது என்றெல்லாம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இன்னொரு பக்கம் பெண் வீட்டுக்காரங்களின் அலட்டல் தர்பார்! மொத்தத்தில் நம் சமூகமே ஒட்டுமொத்தமாகக் கலாசாரத்தை மாற்றிக் கொண்டிருக்கிறது.

      Delete
  15. மாமனார்,மாமியார் கூட இருப்பாளா. எங்க பெண் வேலையை விடமாட்டா. அதனாலென்ன தாய்தந்தையர் உடன் இருப்பதும் தற்சமயம் இல்லாதிருக்கலாம். வயதானால்? பெண் அவள் குடும்பத்தைப் பார்த்துக் கொள்வாள்..மாமனார் மாமியார்தான் வேண்டாம். ஸமீபத்தில் தன் மகனுடன் பாரினில் முதன் முறையாகச் சென்றவர்கள் பலவித கோணங்களில் படம் வெளியிட்டிருந்தார்கள். அனுபவித்துக் கொள் ஸந்தோஷத்தை. இனி இம்மாதிரி சான்ஸ் கிடைக்காது. என்று நினைத்துக் கொண்டேன். அவர்கள் யாரும் எனக்குத் தெரியாது. பேரன் பேத்திகள் சிறிதுகாலம் வேலை வாய்ப்பு வழங்கலாம். மற்றபடி கன்னிகா தானமில்லை. வரன் தானம் செய்து விடலாம். காதல் ஆனாலும் ஸரி, பார்த்து செய்ததானாலும்ஸரி பெண்ணிற்குத்தான் டிமாண்ட். பவர் அதிகமும் அவர்களுக்குத்தான். இன்னும் எவ்வளவோ இருக்கு. பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அம்மா, பலவிதமான நிபந்தனைகள். :( பெண்ணடிமைனு ஒரு பக்கம் சொல்றோம். இன்னொரு பக்கம் இந்தக் கூத்து! :(

      தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

      Delete
  16. நீங்கள் கூறி உள்ளதெல்லாம் மிடில் க்லாஸ் அல்லது அப்பர் மிடில் க்லாஸ் கேஸ்களாக இருக்கும் எல்லோரும் லட்சக் கணக்கில் சம்பாதிக்கிறார்களா என்ன...?கதையல்ல நிஜம் என்று சில பதிவுகள் எழுதி இருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. அநேகமாக இப்போ லோயர் மிடில் க்ளாஸ்னு இருக்கிறதாத் தெரியலை! வீட்டுக்கு ஒருத்தர் வெளிநாட்டிலே இருக்காங்க. லட்சக்கணக்கில் எல்லோரும் சம்பாதிப்பதில்லை என்பது தான் நான் சொல்வதும்!

      Delete
  17. தங்களது மனக்குமுறல் நியாயமான பொதுநலமானதே எமது கருத்தும் இதுவே...
    //வயசு வித்தியாசமும் அதிகம் இருக்கக் கூடாது கிட்டத்தட்ட சம வயசில் இருக்கணும் அப்போ எப்படிப் பையர் பெண்ணை விட அதிகமா சம்பாதிக்க முடியும் ?//

    அருமையாக கேட்டீர்கள் இதை பலரும் உணர்வதில்லை இவர்களின் எண்ணங்கள் எனக்கு புரியவே இல்லை.
    *-----------------------------*
    //பல நடுத்தரக் குடும்பங்களிலே கல்யாணக் கடனே முடிஞ்சிருக்காது. அதுக்குள்ளே விவாகரத்தும் ஆகி விட்டிருக்கும்//

    இதுவும் சரியான கேள்வி வாழ்க்கை ஒரு முறைதான் அதை அழகாக கடக்கத் தெரியாமல் பலரும் அசிங்கப்படுகின்றார்கள் இதன் தொடக்கம் பெண்கள் என்பது எனது ஆணித்தரமான கருத்து ஒரு பெண் தனது மகளுக்கு ஒரு நீதி, தனது மருமகளுக்கு ஒரு நீதி என்ற போக்கு மாறவேண்டும் இதுதான் நியாயம் என்பது பலரும் அறிந்ததே ஆனால் அதன்படி நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சொற்ப நபர்களே...

    இதில் மாற்றம் வந்து மீண்டும் பழையநிலை வருமா ? என்றால் வராது என்பது எனது கணிப்பு காரணம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இப்பொழுது இருபாலருக்கும் இல்லை இதை சொல்லிக்கொடுக்கும் மனப்பான்மையுள்ள முதியவர்கள் பலரும் முதியோர் இல்லத்தில் ஆகவே இது இப்படித்தான்.

    அருமையான உளவியல் ரீதியான பொதுநல கருத்தை முன் வைத்தமைக்கு எனது வாழ்த்துகளும், நன்றிகளும் சகோ - கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். கில்லர்ஜி! பையர் அவங்க கேட்கும் சம்பளம் வாங்குகையில் வயது முப்பதுக்கு மேல் ஆகிவிடாதா? எனக்குத் தெரிந்து பலரும் திருமணம் செய்துவிட்டுக் கடனில் மூழ்கித் தவிப்பதைப் பார்க்க நேரிடுகிறது! வருத்தமாக இருக்கிறது. பழைய நிலை நிச்சயம் வராது தான். ஆனால் இந்தப் புதிய நிலையில் ஒரு சில ஆலோசனைகள், கருத்துப் பரிமாற்றங்கள் தேவை!

      Delete
  18. நல்ல அலசல்!NRI வரன்கள் பற்றியும் சில வரிகளை உதிர்த்தால் உபயோகமாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. என் ஆர் ஐ பையர்கள் ஆரம்பத்தில் நிபந்தனைகள் போட்டாலும் பின்னால் சமரசம் அடைந்து விடுகின்றனர். பலருக்கும் தன் மனைவி இந்தியப் பெண்ணாக இருக்கணும் என்பது தான்!

      Delete
  19. உண்மையான நிலையை குமுறலாக கொட்டி இருக்கிறீர்கள்! எங்கள் ஊர் காரியசித்தி கணபதி கோயிலில் திருமணத்தடைக்கு பரிகாரம் செய்கிறோம். நிறைய முதிர் ஆண்கள் வருகிறார்கள் பரிகாரம் செய்தும் பலருக்குத் தட்டிப் போகின்றது.அதே சமயம் பெண்களுக்கு உடனே முடிந்துவிடுகின்றது. திருமணச்செலவுகளில் விருந்து செலவு வீண் ஜம்பம்தான் என்பது என் அபிப்பிராயம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், இந்த விருந்துகளில் பணம் செலவாகிறாற்போல் எதிலும் ஆவதில்லை!

      Delete
  20. கேரளத்தில் எல்லாம் இப்படி இல்லை அதாவது மலையாளிகள் கல்யாணங்களைச் சொன்னேன். ஆனால் திரை மறைவுப் பரிமாற்றங்கள் உண்டு. (சொத்து ட்ரான்ஸக்ஷன்கள் உண்டு..அதாவது பெண்களுக்குப் பரம்பரையாக வருவதுதான். ஆண்களுக்கும் உண்டு....) நீங்கள் இங்கு குறிப்பிட்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட சமூகக் கல்யாணங்கள் இன்னும் தமிழ்நாடளவிற்கு ஆகவில்லை என்றே நினைக்கின்றேன்.

    கீதா: கீதாக்கா முதலில் கை கொடுங்கள் அப்படியே எனது மன எண்ணங்களை இங்குக் கொட்டி விட்டீர்கள். அதே அதே....எங்கள் உறவினர் குடும்ப நண்பர் குடும்பத்தில் இரு பையன்கள். மூத்தவனுக்கு இப்போது 37 வயதும் இரண்டாமவனுக்கு 35 அம் ஆகின்றது. மூத்தவனுக்கு நிச்சயமாகி அப்புறம் கான்சல் ஆகியது. அப்போதே வந்த பெண்கள் எல்லோரும் சரி அவர்கள் பெற்றோரும் சரி நீங்கள் சொல்லியிருக்கும் அதே கேள்விகள்தான்.

    கல்யாணங்கள் ஆடம்பரம் என்றால் ஆடம்பரம். சரி விட்டுப் போனவை இருக்கின்றதே உங்களுக்குத் தெரியாததா என்ன...மெஹந்தி என்ற ஒன்று....வரும் உறவினர்கள் எல்லோருக்கும் கல்யாணத்திற்கு முதல் நாள் மெஹந்தி இடுவது...ஃப்ரீ என்பதால் எல்லோரும் கை நீட்டத்தான் செய்வார்கள். ஒரு கைக்கு 50 முதல் 75 வரை அதாவது சின்ந்ன்ன்ன்ன்ன்ன டிசைன் என்றால்.

    பஃபே என்று நார்த், சவுத், சாட் என்று தனி தனியாக போர்டுடன் ரிசப்ஷன் அன்று சாப்பாடு....

    பிள்ளை வீட்டாருக்கும் செலவுதான் நீங்கள் சொல்லியிருப்பது போல்....விளையாடல் என்று இப்போது எல்லாம் அதில் வைக்கும் சாமான்கள் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று போட்டி ரேஸ் ...அதற்கென்று கடைகளும் வந்துவிட்டன.. சென்னையில் இதுவும் இப்போது நல்ல பிசினஸ்.

    அது போன்று வரவேற்பதற்கு இருவர்கள் ஏதேனும் பொம்மைகள் (மிக்கி மவுஸ், டொனால்ட் டக் இப்படி) வேஷம் இட்டு வாசலிலோ இல்லை மண்டபத்திற்குள்ளோ வளைய வருகின்றார்கள். இவர்களுடன் கை குலுக்கு புகைப்படங்கள் என்று...

    அப்புறம் ஜீஸ் கடைகள், காப்பி கடைகள் என்று என்னென்னவோ அடுக்கலாம்.

    ஆனால் பாருங்கள் இப்படிப்பட்ட திருமணங்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில்தான் நடப்பதாகத் தெரிகின்றது அக்கா. அதி பயங்கரமாக பெருகிப் போய் இருப்பதும் அதில்தான்..அதுவும் 2 1/2 நாள் கல்யாணம் என்று....இங்கு சென்னையில்...

    அதுவும் நீங்கள் சாப்பாடு பற்றிக் குறிப்பிட்டிருப்பது அப்படியே அதே அதே...வீணாவதைப் பார்க்கும் போது மனம் மிகவும் வேதனைப்படும் எனக்கு. வேண்டாம் என்று கூடச் சொல்லாமல் எல்லாவற்றையும் வாங்கிப் போட்டுக் கொண்டு வீணாக்குவது....

    யதார்த்தம் இதேதான்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசிதரன், கேரளத்திலும் திருமணச் செலவு ஆடம்பரமாக இருப்பதாக முகநூல் மூலம் அறிந்தேன். பிரபல நகைக்கடைக்காரங்க வீட்டுத் திருமணத்தில் எல்லாப் பெண்களுமே நகைக்கடையாகக் காட்சி அளித்தனர்.

      Delete
    2. வாங்க கீதா, நீங்கள் சொல்வது சரியே. குறிப்பிட்ட சமூகத்தில் தான் இப்படி நடக்கிறது! என்றாலும் அவர்களைப் பார்த்து மத்தவங்களும் ஆரம்பிச்சுட்டாங்களே! பிறந்த நாள் கொண்டாட்டங்களே இப்போது ஆடம்பரமாகி வருகிறது.

      Delete
    3. //பிள்ளை வீட்டாருக்கும் செலவுதான் நீங்கள் சொல்லியிருப்பது போல்....விளையாடல் என்று இப்போது எல்லாம் அதில் வைக்கும் சாமான்கள் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று போட்டி ரேஸ் ...அதற்கென்று கடைகளும் வந்துவிட்டன.. சென்னையில் இதுவும் இப்போது நல்ல பிசினஸ்.//

      உண்மை. இதை வேண்டாம் என நிராகரித்தால் இதை வைச்சுப் பிழைப்பவங்க இருக்காங்களேனு கேள்வி வருது! இதுக்கு முன்னாடி இவை எதுவும் இல்லாமல் இல்லையா? கல்யாணங்கள் தான் நடக்கவில்லையா? என்னமோ போங்க! :(

      Delete