எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, January 15, 2019

பொங்கலோ பொங்கல்! 2

நம்ம வீட்டுப் பொங்கல் காட்சிகள் சில இங்கே போட்டிருக்கேன். பார்க்கலாம். காலை நாலு மணிக்கு எழுந்தது! எல்லாம் முடிஞ்சு உட்காரும்போது சரியா ஒரு மணி! இடைவிடாத வேலை! :) முன்னெல்லாம் சுலபமாகச் செய்தவை எல்லாம் இப்போ நேரம் எடுத்துக்கொள்கிறது அல்லவா! அதான்! :))))


கிழக்கைப் பார்த்த பால்கனியில் அமர்ந்து நம்ம ரங்க்ஸ் சூரியனாருக்கு வழிபாடுகள் நடத்துகையில் எடுத்த படம். இது எடுக்கும்போது வழிபாடு முடிஞ்சு கடைசியில்னு நினைக்கிறேன்.  ஹிஹி, இல்லை, இல்லை, பிரசாதங்கள் இருக்கே! அவர் கையை வைச்சு மறைச்சுட்டு இருக்கார். இருங்க அடுத்த படத்தில் பிரசாதங்கள் பார்க்கலாம். :)

சூரியனாருக்கு உளுந்து ப்ரீதி என்பதால் உளுந்து வடை, சர்க்கரைப்பொங்கல் வெண்கலப்பானையில், பக்கத்தில் சின்ன வெண்கலக்குண்டில் அவிசு எனப்படும் பால், நெய் சேர்த்த சாதம், மஹா நிவேதனம் எனப்படும் அன்னம், பருப்பு, பக்கத்தில் ஓர் தட்டில் ஏழு வகைக்கூட்டுகள் கொஞ்சம் கொஞ்சம், வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய்!


நிவேதனம் முடிஞ்சதும் அவற்றை எடுத்து அந்த இடத்தைச் சுத்தம் செய்த பின்னரே கற்பூரம் காட்டணும், இது எல்லா வழிபாடுகளிலும் கடைப்பிடிக்க வேண்டிய முறை. கற்பூரம் காட்டியதும் கீழே வைத்திருக்கார்.
பின்னர் வழக்கமான நம்ம வீட்டு உம்மாச்சிங்களுக்கும் எல்லாமும் நிவேதனம் செய்தோம்.



இப்போ நேற்றைய பதிவின் தொடர்ச்சியைக் கீழே படிக்கலாம். நாளை கணுப்பிடி வைப்போம். அதற்கான பதிவை இன்றே ஷெட்யூல் செய்து விடுவேன். காலை வர முடியாது, காலையில் பாருங்க! 

&&&&&&&&&&&&&&&

சங்க காலத்தில் "தை நீராடல்", "பாவை நோன்பு" என்றெல்லாம் அழைக்கப் பட்டது பொங்கல் பண்டிகையாக இருக்கலாம் என்பது சிலர் கூற்று.  ஏனெனில் நல்ல மழையையும், விளைச்சலையும் காண்பதற்காகவே இயற்கை அன்னையை, பூமித்தாயைப் போற்றிக் கன்னிப் பெண்கள் இந்த விரதம் இருந்திருக்கலாம் எனக் கூறுகின்றனர்.  சாண உருண்டையைப் பிள்ளையாராகக் கருதுவார்கள் என்பதை ஏற்கெனவே நாம் பார்த்திருக்கிறோம்.  இந்தச் சாண உருண்டையை ஒரு சிலர் வரட்டியாகத் தட்டிப் பொங்கல் அன்று அடுப்பு எரிக்கப் பயன்படுத்துவதாகவும், மற்றும் சிலர் வழக்கப்படி சாண உருண்டைகள் சேகரிக்கப் பட்டு, பொங்கலுக்கு மறுநாள் ஒரு கூடையில் அவற்றைப் போட்டுக் கொண்டு சிறு குழந்தைகள் ஒன்று கூடிக் கிளம்புவார்கள்.  வீடு வீடாகச் சென்று கும்மியடித்துப் பாடிக் காசுகளை வாங்கிக் கொண்டு அதில் பொரிகடலை, நாட்டுச் சர்க்கரை வாங்கிக் கூடைப் பிள்ளையாருக்குப் படைத்துவிட்டுப் பின்னர் ஊர்ப்பொது வாய்க்காலில் அந்தச் சாண உருண்டைகளைக் கரைப்பார்கள்.  இந்த வாய்க்காலில் கரைக்கப்படும் சாணம் எருவாகி, ஊரின் நிலங்களுக்கு நீர் பாய்கையில் பயிர்களைச் செழிப்பாக வளர வைக்கும் என்பது நம்பிக்கை.

ஒரு மாதம் கோலத்தில் வைத்த சாணப்பிள்ளையார் அந்த மாதம் முழுதும் சுவரில் காய்ந்து கொண்டு இருப்பார்.  ஆனாலும் வாய்க்காலில் கரைக்கையில் சிறு குழந்தைகளுக்குத் துக்கம் தாங்க முடியாமல் அழுகை வந்துவிடும்.  அப்போது அவர்கள் பாடும் கும்மிப் பாடல் கீழ்க்கண்டவாறு:

வட்ட வட்டப் பிள்ளாரே, வாழக்காயும் பிள்ளாரே
உண்ணுண்ணு பிள்ளாரே ஊமத்தங்கா பிள்ளாரே
வார வருசத்துக்கு வரவேணும் பிள்ளாரே
போன வருசத்துக்குப் போயி வந்தீர் பிள்ளாரே
வாடாம வதங்காம வளத்தினோமே பிள்ளாரே
வாய்க்காலு தண்ணியிலே வளர விட்டோம் பிள்ளாரே
சிந்தாம சிதறாம வளத்தினோமே பிள்ளாரே
சித்தாத்துத் தண்ணியிலே சிந்துறோமே பிள்ளாரே
போய் வாரும் போய் வாரும் பொன்னான பிள்ளாரே
வர வேணும் வர வேணும் வருசா வருசம் பிள்ளாரே
என்று பாடி ஆடிக் கொண்டு பிள்ளையாரை வழியனுப்பி வைப்பார்கள்.

பொங்கல் பண்டிகையை மூன்று நாட்கள் கொண்டாடுவது நம் மரபு.  முதல்நாளை போகி என்னும் "பழையன கழிதல்" நடைபெறும்.  ஊர்ப் பொதுவில் ஓர் இடத்தில் அவரவர் வீட்டுப் பழைய பாய், கூடைகள், முறங்கள் போன்ற இயற்கையான நாரினால் செய்யப் பட்ட பொருட்களைப் போட்டு எரிப்பார்கள்.  இப்போது போல் அப்போது ப்ளாஸ்டிக் குடங்களோ, ப்ளாஸ்டிக் பாய்களோ கிடையாது.  மக்கள் இயற்கையாய்க் கிடைக்கும் நார்களில் இருந்தும், பூமியில் கிடைக்கும் மண்ணிலிருந்துமே பாத்திரங்கள், பாய்கள், படுக்கைகள் செய்து பயன்படுத்தினார்கள்.  இவற்றை எரித்துப் புதியதாய்ப் பொங்கலுக்கு வாங்குவார்கள்.  இந்த வழக்கம் இன்று ரப்பர், ப்ளாஸ்டிக், தெர்மாகோல், பாலிதீன் பைகள் போன்றவற்றைப் போட்டு வலுக்கட்டாயமாய் எரித்து மூச்சு விடத் திணறும் அளவுக்குப் புகைமண்டலத்தை எழுப்பும் வழக்கமாக ஆகி விட்டது.  அதோடு முன்பெல்லாம் கிராமங்களில் இந்தப் பழைய பொருட்களைப் போட்டு எரிக்கும் தீயிலிருந்தே நெருப்பு எடுத்துப் போய்ப் பொங்கல் பானைக்கு அடுப்பு மூட்டும் வழக்கமும் இருந்து வந்தது.

பொங்கலுக்கு முதல் நாளே வீடு சுத்தம் செய்யப் பட்டுப் பொங்கல் பானை வைக்கும் இடம் நல்ல பசுஞ்சாணத்தினால் சுத்தம் செய்யப்படும்.  சாணத்தினால் மெழுகுவார்கள். அவரவர் வழக்கப்படி அரிசி மாவினால் கோலம் போடுவார்கள்.  ஒரு சிலர், அடுப்பு வைக்கும் இடத்திலேயே சூரியன், சந்திரன் போலக் கோலம் போடுவார்கள்.  சில வீடுகளில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் இடத்தில் சூரியன், சந்திரன் போல் கோலம் போடுவார்கள்.  இது அவரவர் வீட்டு வழக்கத்தை ஒட்டியே வரும். மனித மனத்தின் முக்கிய மூன்று கரணங்கள் ஆன மனம், வாக்கு, காயம்  ஆகியவற்றை நினைவு கூரும் விதமாக மூன்று கற்கள் முக்கோணமாய் வைக்கப்பட்டதாய்த் தெரிய வருகிறது..முக்கரணங்களின் உதவியால் தெய்வீகமான பாலைப் பொங்க விட்டு, ஆத்ம ஞானமென்னும் பொங்கலைப் பெறலாம் என்பதைச் சுட்டிக்காட்டுவதே இதன் முக்கிய தத்துவமாகவும் அறிகிறோம்.

பொங்கல் வைக்கப் போகும் பானை ஒரு சிலர் புத்தம்புதியதாக வாங்குவார்கள்.  மண் பானை இல்லாமல் வெண்கலமாய் இருந்தாலும் சில வீடுகளில் புதிய பானை வாங்குவது வழக்கம்.  மற்றபடி சென்ற வருடங்களில் உபயோகித்த வெண்கலப் பானையையே நன்கு சுத்தம் செய்து, மஞ்சள், சந்தனம், குங்குமம் தடவி, மஞ்சள் கொத்துக் கட்டிப் பாலும் நெய்யும் சேர்த்து வீட்டில் இறைவனை வழிபடும் பூஜை இடத்தினருகே வைத்து வழிபட்டுப் பின்னர் அடுப்பில் நல்ல நேரம் பார்த்து ஏற்றுவார்கள். சூரியன் மகர ராசியில் நகர ஆரம்பிப்பதால் மகர சங்கிராந்தி எனவும் அழைக்கப்படும் இந்தப் பொங்கல் பண்டிகையில் பொங்கல் வைப்பதை சங்கராந்தி காலம் ஆரம்பிக்கும் தை மாசம் பிறக்கும் நேரத்தில் செய்வதைச் சில வீடுகளில் வழக்கமாய்க் கொண்டிருக்கிறார்கள்.  அதன்படி பார்த்தால் இந்த வருடம் காலை ஒன்பது மணிக்கு மேல் பத்தரைக்குள் பொங்கல் வைக்க நல்ல நேரம் எனச் சொல்கின்றனர்.

சூரியன் தெற்குத் திசையிலிருந்து வடக்கு நோக்கி நகர்வதையே மகர சங்க்ரமணம் அல்லது உத்தராயண புண்யகாலம் என்கிறோம். பொங்கல் பொங்கி விட்டு அன்றைய தினம் விளையும் எல்லாக் காய்களையும் போட்டுக் குழம்பு வைப்பது பல வீடுகளில் வழக்கம்.  பொதுவாக இதற்கு நாட்டுக்காய்களான, கத்திரி, வாழை, சேனை, பூஷணி, பறங்கி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, அவரை, மொச்சை, கொத்தவரை, சிறு கிழங்கு, பெருகிழங்கு  போன்றவையே பயன்படுத்துவார்கள்.  காலப் போக்கில் இன்றைய பழக்கத்திற்கு ஏற்ப ஒரு சிலர் உருளைக்கிழங்கு, காரட், பீன்ஸ், செளசெள போன்றவையும் தக்காளியும் சேர்க்கின்றனர். இனிப்பான பொங்கலை உண்பதற்குக் காரமான குழம்பு தான் தொட்டுக்கொள்ள உதவும் என்று மட்டுமில்லாமல், இறைவனுக்கு நிவேதனமாகவும் படைப்பதால் பூமியில் விளையும் அனைத்தும் அவன் அருளால் கிடைத்தது என்று நன்றி கூறும் விதமாகவும் இதைச் செய்கின்றனர்.  மண்ணின் அடியில் விளையும் கிழங்குகள், மண்ணின் மடியில் படரும் கொடிகளின் காய்கள், செடிகளின் காய்கள், மரங்களின் காய்கள் என அனைத்து வகைக்காய்களும் இந்தக் குழம்பில் இடம் பெறும். பின்னர் அந்தக் குழம்பை தினம் தினம் சுண்ட வைத்துக் கொஞ்ச நாட்களுக்குச் சாப்பிடுவதுண்டு.

பொங்கல் நிவேதனத்தில் பயன்படும் மஞ்சள் கொத்து மங்கலத்தையும், தோகையுடைய கரும்பு இனிப்பையும், இஞ்சிக் கொத்து காரத்தையும், வெற்றிலை, பாக்கு துவர்ப்பையும் கொடுக்கின்றன என்பதால் இந்தச் சுவைகள் அனைத்தும் வாழ்வில் இடம் பெறும் என்பதையும் கூறாமல் கூறுகிறது. தமிழ் நாட்டில் உழவர் திருநாள், தமிழர் திருநாள் என்றெல்லாம் அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை, மற்றச் சில மாநிலங்களில் மகர சங்கிராந்தி எனவும், லோகிரி எனவும், மஹாபிகு எனவும் அழைக்கப்படுகிறது. விவசாயிகள் அவர்கள் விவசாயத்துக்குப் பயன்படும் அனைத்துப் பொருட்களையும் சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் பூசி வழிபடுவார்கள்.  ஏர்க்கலப்பை, கருக்கரிவாள், மரக்கால், உழக்கு, கூடை முறங்கள், களைக்கொட்டு,மண்வெட்டி, கடப்பாரை போன்ற பொருட்கள் இதில் அடங்கும். ஆந்திராவில் பொங்கல் சமயத்தில் பொம்மைக்கொலு வைப்பார்கள் என்றும் தெரிய வருகிறது. குஜராத், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மஹாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் அன்று பட்டம் விடும் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள்.  மேலும் எள், வேர்க்கடலை ஆகியவற்றில் வெல்லம் சேர்த்து உருண்டைகளாகவோ, வில்லைகளாகவோ செய்து ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வார்கள்.  இதன் மூலம் ஒருவருக்கொருவர் அன்பு வலுப்படும் என்பது அவர்கள் நம்பிக்கை.

நிலைப்படிகளை நன்கு கழுவிக் கோலம் போட்டு மாவிலைக்கொத்துகளாலும் வேப்பிலைகள், பூளைப்பூ போன்றவற்றால் தோரணங்கள் கட்டித் தொங்க விடுவார்கள்.  வாசலில் சூரியனுக்கு வழிபாடு நடப்பதால் பெரிய தேர்க்கோலம் ஒற்றைச் சக்கரத்தோடு போடுவார்கள்.  ஒரு சிலர் வாசலிலேயே வடக்கே சூரியனின் உருவத்தையும், தெற்கே சந்திரனின் உருவத்தையும் வரைவார்கள். தீஞ்ச தீபாவளி,(வெடிகள் வெடிப்பதால் தீய்கிறது அல்லவா) காஞ்ச கார்த்திகை(கார்த்திகைக்கு அப்புறம் மழை நின்றுவிடும்.  மண் காய்ந்து கொண்டு வரும்) இவை எல்லாம் போய் நல்ல விளைச்சல் கண்டு அறுவடை செய்யும் நாளை மஹாராசன் பொங்கல் என உழவர்கள் சொல்வார்களாம்.


ஶ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளின் மார்கழி உற்சவம் பொங்கல் அன்றே நிறைவு பெறும். அன்று தண்டியல் எனப்படும் வாகனத்தில் ஆய்ச்சியரைப் போல் கொண்டை போட்ட வண்ணம் எழுந்தருளும் ஆண்டாளுக்கு பக்தர்கள், கரும்பு, மஞ்சள் எனப் பல பொருட்களைக் காணிக்கையாகக் கொடுப்பார்கள்.  அவற்றைப் பெற்றுக் கொண்டு ஆண்டாள் திருவீதிகளில் உலாவரும் காட்சி சிறப்பாக இருக்கும்  என்று தெரிய வருகிறது.  ஆந்திரத்தில் ஆண்டாள் திருக்கல்யாணத்தை இந்த மார்கழி கடைசியில்/தை மாதம் ஒன்றாம் தேதி சிலர் கொண்டாடுகின்றார்கள். ஆண்டாள் ரங்கமன்னாரோடு ஐக்கியமானதும் தைமாதம் ஒன்றாம் தேதி என்றும் சொல்கின்றனர். 

26 comments:

  1. பிள்ளையார் பாட்டு புதியது...

    பழையனவற்றைப் போட்டுக் கொளுத்தும் வழக்கத்தைப் பார்த்தது இல்லை..

    மற்றபடி மங்கலச் செய்திகள் அருமை..

    அன்பின் இனிய பொங்கல் வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, கருத்துக்கு நன்றி. தை மாதம் பிறந்ததும் உங்கள் வாழ்வில் வளமும், நிம்மதியும் கொண்டு வரட்டும். பிரார்த்தனைகள்.

      Delete
  2. நிறைய அரிய விடயங்கள் தெரிந்து கொண்டேன்.
    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள். கல்யாண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் என நம்புகிறேன். உங்கள் மகள், மருமகன் ஆகியோருக்குத் தலைப்பொங்கல். மகனுக்கும் அடுத்த வருடம் சீரோடும் சிறப்போடும் தலைப்பொங்கல் அமையவேண்டும். அதற்குள்ளாக ஒரு பேரனோ, பேத்தியோ பிறக்க வேண்டும்.

      Delete
    2. என்ன விஷயம் கில்லர்ஜி? அ.வ.சி.???? :)))))

      Delete
  3. உங்களுக்கும், மாமாவுக்கும் வாழ்த்துக்களும், நமஸ்காரங்களும்

    ReplyDelete
    Replies
    1. அட! மௌலியா இது? நம்பமுடியவில்லை. ம்பமுடியவில்லை, பமுடியவில்லை, முடியவில்லை, டியவில்லை, யவில்லை, வில்லை, ல்லை, லை, ஐ !!!!!!!!!!!!!!!! எக்கோ! உங்களுக்கும் வாழ்த்துகள் ஆசிகள்.

      Delete
  4. பொங்கலைப் பற்றிய செய்தி அருமை.

    'வட்ட வட்ட பிள்ளையாரே' - கேள்விப்பட்டதே இல்லை. தொலைக்காட்சி காலத்தில் இதெல்லாம் வழக்கொழிந்து போய்விடும்.

    வடை பார்க்க நல்லா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த. வடை சாப்பிடவும் நல்லாவே இருந்தது. வட்டவட்டப்பிள்ளையாரே கிராமாந்தரங்களில் சிறுபிள்ளைகள் விளையாட்டில் இடம் பெறும். பூஷணிப்பூ, பறங்கிப் பூ வைப்பதைக் கூடக் காரணத்தோடு செய்வதாகச் சொல்லுவார்கள். ஒரு சிலர் நடுவில் வைக்கும் பூ ஶ்ரீகிருஷ்ணன் எனவும் சுற்றி வைக்கும் பூக்கள் கோபியர் எனவும் சொல்கின்றனர். இன்னும் சிலர் பறங்கிப்பூ வைத்திருந்தால் அந்த வீட்டில் கன்னிப்பெண் திருமணத்துக்குத் தயாராகக் காத்திருப்பதாகச் சொல்லுவார்கள். நிறைய இருக்கு பொங்கல் பத்தி எழுத!

      Delete
  5. அருமையான பதிவு கீதாமா. திருமங்கலத்தில் இந்த பூசணிப் பூ கொண்டாட்டம் நாங்கள் செய்த நினைவு இருக்கிறது.
    நகரங்களில் பார்க்க முடிவதில்லை.

    பிள்ளையார் பாட்டு மிக அழகு.
    நாளை கனுவுக்கு இன்றே வாழ்த்துகள் சொல்லிக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரேவதி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உடனே அடுத்த பதிவும் வந்ததால் இதுக்கு ஆளே இல்லை. போணி ஆகாமல் காத்தாடுது!:)))) க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஶ்ரீராமுக்கு மட்டும் எல்லோரும் வராங்க! :))))) (இன்னிக்குப் பொழுதுக்கு!)

      Delete
  6. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. ஆஹா! எவ்வளவு விஷயங்கள். நல்ல பதிவு. பொங்கல்,கனு வாழ்த்துகளும் ஆசிகளும். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க அம்மா. நீங்க வந்ததிலும் கருத்துச் சொன்னதிலும் மகிழ்ச்சி. முடிஞ்சா கணுப்பதிவையும் படிங்க! வலைப்பக்கம் வரும்போது!

      Delete
  8. நாங்கள் மார்கழி மாதம் கோலத்தில் வைக்கும் சாணி பிள்ளையாரை 11 மணிக்கு எடுத்து தட்டி வைத்து விடுவோம். அதை வைத்து சிறு வீட்டு பொங்கல் அன்று சிறு குழந்தைகளை வைத்து பொங்கல் வைப்போம்.
    தை பொங்கல் அன்று 11, 9 கண்க்கில் பிள்ளையார் பிடித்து வைத்து அதற்கு முன் இலையில் சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், வாழைபழத்தை சிறு துண்டுகளாக வெட்டி வைப்பார்கள், வெல்லத்தை சிறு கட்டிகளாக உடைத்து வைப்பார்கள். அதை நீர் நிலைக்கு குழந்தைகள் கொண்டு போய் சாணபிள்ளையாரையும் மற்ற பிரசாதங்களை நீர் நிலையில் கரைத்து குதுகலித்து விளையாடி களித்து வருவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி அநேகமா இந்த வழக்கம் தென்மாவட்டங்களிலேயே அதிகம் இருக்கிறது என நினைக்கிறேன். பலருக்கும் தெரிவதில்லை.

      Delete
  9. அடுப்பு வைக்கும் இடத்திலேயே சூரியன், சந்திரன் போலக் கோலம் போடுவார்கள். சில வீடுகளில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் இடத்தில் சூரியன், சந்திரன் போல் கோலம் போடுவார்கள்//

    நாங்கள் அப்படித்தான் போடுவோம். சூரியன் வரைந்த இடத்தில் மண்ணில் பிடித்த பிள்ளையாரை மண்ணில் செய்த சின்ன தட்டில் வைப்போம் அதற்கு செம்மண் அடித்து வெள்ளை பட்டை கோடுகள் போடுவோம்.
    சந்திரன் வைத்து இருக்கும் இடத்தில் பசுஞ்சாணத்தில் பிள்ளையார், மஞ்ச்சள் பிள்ளையார் பிடித்து வைப்போம். நடுவில் குத்து விளக்கு குத்துவிளக்கு பக்கம் நாழியில் நெல், அல்லது பச்சரிசி. நெல் பலகாலமாய் பத்திரபடுத்தி வைத்து இருக்கிறேன் அதை வைத்து தான் பூஜை செய்கிறேன்.

    //மூன்று கற்கள் முக்கோணமாய் வைக்கப்பட்டதாய்த் தெரிய வருகிறது..முக்கரணங்களின் உதவியால் தெய்வீகமான பாலைப் பொங்க விட்டு, ஆத்ம ஞானமென்னும் பொங்கலைப் பெறலாம் என்பதைச் சுட்டிக்காட்டுவதே இதன் முக்கிய தத்துவமாகவும் அறிகிறோம்.//

    களிமண் வாங்கி குத்து போணி என்னும் சட்டியில் போட்டு கட்டி அடுப்பு செய்வார்கள் வெயிலில் காய வைத்து அதில் செம்மண் காவி அடித்து சுண்ணாம்பால் பட்டை அடித்து தயார் செய்வார்கள் மூன்று பானை வைப்பார்கள். இரண்டு வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல் என்று வீடுகளில் கூட்டம் இருக்கும் , பொங்கல் இல்லாதவரை சாப்பிட அழைப்பார்கள், வேலை ஆட்களுக்கு கொடுப்பார்கள். மறு நாளும் சாப்பிடுவார்கள்.
    இப்போது சாப்பிட ஆள் இல்லை. வீட்டுக்கு வரும் விருந்தினர்களும் பொங்கல் என்றால் கைஎடுத்து கும்பிட்டு வேண்டாம் என்கிறார்கள்.

    பானை நிறைய பொங்கல் செய்து அத்தனையும் வேலை செய்பவர்களை எடுத்து போக சொன்னனேன்.
    பொங்கல் குழம்பு எல்லா கய்கறிகளையும் போட்டு செய்த குழம்பு சர்க்கரை பொங்கலுக்கும் நன்றாக இருக்கும்,
    தேங்க்காய் துவையலும் வேண்டும் எல்லோருக்கும். எங்கள் பக்கம் அவியலும் செய்வார்கள். மீதி ஆனதை இரவே சுண்ட வைப்பார்கள். அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களும் வாங்கி செல்வார்கள் பொங்கல் சுண்ட குழம்பு என்று.
    இப்போது மீண்டும் சுண்ட வைத்த குழம்பை சாப்பிட்டால் நெஞ்ச்ரிச்சல் வருகிறது மீண்டும் மீண்டும் குழம்பை சுண்ட வைக்க கூடாது என்று சொல்கிறார்கள். அன்று வேலைகள் நிறைய பார்த்தார்கள், விறகு அடுப்பு, அதனால் முன்பே நிறைய செய்து இரண்டு நாள் அதை சாப்பிட்டு வேலையை குறைத்து கொண்டார்கள் இப்போது வேலை எளிது தினம் தினம் புதிதாக செய்து சாப்பிடுங்கள் என்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, எங்க அம்மாவீடு, புகுந்த வீடு இரண்டு இடத்திலும் பூஜை செய்யும் இடத்தில் தான் சூரியன் கோலம். வாசலில் எல்லாம் போட மாட்டோம். மிதிக்கக் கூடாது என எங்க வீடுகளில் சொல்வாங்க. அதே போல் சங்கு, சக்கரக் கோலமும் வாசலில் போட்டுக் கொண்டிருந்தேன். போடக் கூடாதுனு சொன்னாங்க.

      இதே போல் எரிச்ச குழம்பு எல்லாம் அம்மா வீட்டில் கிடையாது. புகுந்த வீட்டில் தான் இருக்கு. நான் ரொம்பக் கொஞ்சமாகச் செய்து கணு அன்று அதைத் தீர்த்து விடுவேன். மிஞ்சும்படி வைப்பதில்லை.

      Delete
    2. பொங்கலும் நெ.த. சொல்லி இருக்காப்போல் கொஞ்சமாகத் தான் செய்தேன். பொங்கலன்று சாப்பிட்டு மிச்சம் மறுநாள் கணுவுக்கு வைத்துப் பின்னர் ஒரு வாய் பழையது வாயில் போட்டுக்கும்படி இருந்தது. அவ்வளவே. கணு அன்று கட்டாயம் பழையது சாப்பிடணும்னு சொல்வாங்க. கார்த்திகைக்கு ஒரு எண்ணெயும், கணுவுக்கு ஒரு வாய்ப் பழையதும் உடன் பிறந்தவனுக்கு என்பது எங்கள் பக்கத்து வழக்கு மொழி.

      Delete
  10. எள், வேர்க்கடலை ஆகியவற்றில் வெல்லம் சேர்த்து உருண்டைகளாகவோ, வில்லைகளாகவோ செய்து ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வார்கள். இதன் மூலம் ஒருவருக்கொருவர் அன்பு வலுப்படும் என்பது அவர்கள் நம்பிக்கை.//
    கர்நாடக மக்கள் பெண் குழந்தைகளை உட்கார வைத்து அவர்கள் கை நிறைய கொடுப்பார்கள்.
    எங்கள் பக்கத்து வீட்டு அக்கா கொடுப்பார்கள் எங்களுக்கு.

    ReplyDelete
    Replies
    1. எங்க வீடுகளில் சின்னக் குழந்தைகளுக்கு 3 மாசம் முதல் 3 வயசு வரை உள்ள குழந்தைகளுக்குக் கணு அன்று இலந்தைப்பழம் ,கொழுக்கட்டை, காசு, கரும்புத்துண்டங்கள் ஆகியவற்றை நிறை நாழியில் வைத்து வேறொரு பத்து வயசுக்குட்பட்ட கன்னிப்பெண்ணின் மடியில் அந்தக் குழந்தையை உட்கார வைத்து சுமங்கலிகள் மற்றும் பெரியவர்கள், சின்னக்குழந்தைகளை அழைத்து இலந்தைப்பழம் காசு கொட்டுதல் எனச் செய்வோம். இதன் மூலம் குழந்தைக்கு திருஷ்டி கழியும் என்பார்கள். குழந்தையின் தலையில் கொட்டும்போது எல்லோருமே பொறுக்குவோம். சிலருக்குக் காசு, சிலருக்கு இலந்தைப்பழம் கட்டும், சிலருக்குக் கொழுக்கட்டை எனக்கிடைக்கும். பின்னர் வந்திருப்பவர் அனைவருக்கும் வெற்றிலை, பாக்கு வைத்துக் கொடுப்போம். இது ஒரு சின்னப் பண்டிகையாகவே நடக்கும். கணு அன்று முடியவிட்டால் ரதசப்தமி அன்று செய்வோம்.

      Delete
  11. பொங்கல் பற்றி நிறைய செய்திகள் தகவல்கள். கேரளத்திற்கு வந்த பிறகு பொங்கல் காணும் வாய்ப்பும் இல்லாமல் போனது.

    துளசிதரன்

    ReplyDelete
  12. அக்கா அந்தப் பிள்ளையார் பாட்டு புதுசு. மண்பானைல செஞ்சப்ப புதுப்பானை வாங்கியதுண்டு. வெ பா என்று ஆன பிறகு புதுசு எல்லாம் வாங்கியதில்லை. அதே போல பு வீட்டில் பொங்கல் செய்து ஸ்வாமி சன்னதியில் வைத்து மாமனார் ஆராதனம் செய்து அதை நெய்வேத்யம் செஞ்சு அப்புறம் சாப்பாடு. இப்படியான பூஜை செய்து பார்த்ததில்லை.

    பிறந்த வீட்டில் நெல் வீட்டிற்கு வரும். பாட்டத்திற்கு விட்ட பிறகும் வந்ததுண்டு அப்புறம் வயலை வித்துவிட்டார் பாட்டி. அப்பவும் சூரியனை பிரார்த்திப்பது உண்டு ஆனால் பூஜை எல்லாம் செய்ததில்லை...ஆனால் சாணம் வைத்துப் பூ வைத்ததுண்டு. ஊரில் இருந்தவரை....

    ஆனால் நான் சென்ற பல ஊர்களிலும் முற்றத்தில் தான் பொங்கல் செய்வார்கள். அதாவது திறந்த வெளியில். பூசை செய்வதைப் பார்த்திருக்கேன்...

    கீதா

    ReplyDelete
  13. கணுப் பொங்கல் ஊரில் இருந்தவரை ஒரே ஜாலியா இருக்கும். ஊரே ஆற்றங்கரைக்குச் சென்று கலந்த சாதம் சாப்பிடுவோம். அதெல்லாம் ஊர்விட்டு வந்த பிறகு அப்புறம் மிஸ்ஸிங்க்....எல்லாமே நினைவில்தான்..

    கீதா

    ReplyDelete