எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, January 17, 2019

பால் பொங்கிற்றா?

எல்லாரும் பொங்கல் கொண்டாடி முடிச்சிருப்பீங்க, சிலர் கொண்டாடிட்டு இருப்பீங்கனு நம்பறேன். பொங்கல் கொண்டாடுவது எப்போவுமே சிறப்பான ஒரு பண்டிகையாக இருந்து வருகிறது. உழவுத் தொழிலைச் சிறப்பித்து மட்டுமில்லாமல் அதற்கு உதவும் இயற்கை வளங்களையும் கொண்டாடும் ஒரு பண்டிகை இது. பொங்கலுக்கு எப்போவுமே சில வீடுகளில் புதுப் பானை வாங்குவாங்க. இன்னும் சிலர் இருக்கும் பானையையே சுத்தம் செய்து அலங்கரித்து வைப்பார்கள். மண்பானையிலும் பொங்கல் வைப்பது வழக்கமாய் இன்றளவும் இருந்து வருகின்றது. பொதுவாக அடுப்பு மூட்டி சூரியனைப் பார்த்த வண்ணமே பெரும்பாலோர் பொங்கல் வைக்கின்றனர். எங்க வீட்டில் பூஜை மட்டும் வீட்டுக் கிணற்றடியிலோ அல்லது முற்றம் இருந்தால் முற்றத்திலோ தான். அம்பத்தூரில் இருந்தவரைக்கும் கொல்லைக்கிணற்றடியில் கோலம் போட்டு அங்கே வழிபாடு செய்வோம்.அநேகமாக நான் சமையல் வேலைகளை முடித்துக் கொண்டு உபாத்தியாயம் செய்வதற்குத் தயாராக வரணும். மாமனார் காலத்தில் இருந்தே ஆவணி அவிட்டம், பிள்ளையார் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, பொங்கல் சூரியநாராயண பூஜை எல்லாத்துக்கும் நான் தான் புரோகிதர் வேலை பார்த்துட்டு இருக்கேன். இப்போ இங்கே திருச்சி வந்தப்புறமா 2,3 வருஷமா அந்த வேலைக்குப் போக முடியலை! என்றாலும் கடைசியில் என்னைக் கூப்பிட்டு விடுவார்.


சென்னையிலே இருக்கும்போதெல்லாம் அநேகமாய்ப் பொங்கலுக்குக் கிராமத்துக்கு மாமியார் வீட்டிற்கே செல்வது வழக்கம். அங்கே விறகு அடுப்புத் தான் என்பதாலும் அதிலே தான் பொங்கல் வைக்கவேண்டும் என்பதாலும் நகரத்துக்கு வந்தப்புறமும், எரிவாயு அடுப்பு இருந்தாலும், பொங்கலுக்கு விறகு அடுப்பு மூட்டி அதில் தான் வைக்கிறது வழக்கம்னு அப்படித் தான் செய்துட்டு இருந்தோம். அப்புறம் கொஞ்ச நாட்கள் கரி அடுப்பிலே பொங்கல் வைத்துக் கொண்டிருந்தோம். அதுக்கு அப்புறம் இன்னும் முன்னேற்றம் உண்டாகி பம்ப் ஸ்டவிலே பொங்கல் வைத்தோம். ஒரு கட்டத்தில் இந்த எதுவுமே எனக்கு ஒத்துக்காது என்ற சூழ்நிலை உருவானதும், வேறே வழியில்லாமல் எரிவாயு அடுப்பிலே பொங்கல் வைக்கின்றோம். ஆனால் இப்போவும் வெங்கலப் பானை தான். ஒரு சிலர் குக்கரிலேயே பொங்கல் வைக்கின்றார்கள். என்ன இருந்தாலும் அது அவ்வளவு ருசியாய் இருக்கிறதில்லை. (நமக்குத் தான் நாக்கு நீளம் ஆச்சே, இறங்காது!) ஆகவே வெண்கலப் பானையிலே தான் பொங்கல் இந்த வருஷமும்.

பொங்கல் வைக்க நேரமும் பார்க்கிறதுண்டு. எங்க வீடுகளிலேயும், உறவினர் வீடுகளிலேயும், தை மாதம் பிறக்கும் நேரத்தைக் கணக்கிட்டுக் கொண்டு அந்த நேரமே பொங்கல் வைத்து வருகின்றோம். சில சமயம் அது இரவு 9-00 மணிக்குக் கூட வரும். அன்று பூராவும் சாப்பிடாமல் இருக்கும்படி ஆயிடும். இந்த வருஷம் நல்லவேளையாக் காலை 7--30க்கு அப்புறம் , 9-00 மணிக்குப் பின்னர் பொங்கல் வைக்க நல்லவேளை என்று சொல்லப் பட்டது. அதுக்கு முன்னாலேயே சமையலை முடிச்சு வைத்துவிட்டுப் பின்னர் பொங்கல் வைத்து, சூரிய பூஜை செய்து முடித்துச் சாப்பிட 12-00 மணிக்கு மேலே ஆகி விட்டது.

பொங்கல் பானையை நல்லாத் தேய்த்துச் சுத்தம் செய்து சந்தனம், மஞ்சள், குங்குமம் தடவி, ஸ்வாமி அலமாரி இருந்தால் அதுக்கு முன்னால் கோலம் போட்டுப் பானையை வைத்து, மஞ்சள் கொத்து கட்டி, இஞ்சிக் கொத்து வழக்கம் உண்டானால் அதுவும் கட்டிட்டு, பின்னர் வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து "பொங்கலோ பொங்கல்" சொல்லச் சொல்லிவிட்டு எல்லார் கையாலேயும் பாலைப் பொங்கல் பானைக்குள் விடச் சொல்லவேண்டும். சின்ன வயசில் போட்டி போட்டுக் கொண்டு தெருவுக்கே கேட்கிறாப் போல் பொங்கலோ பொங்கல் என்று நானும், என் தம்பியும் கத்துவோம். வழக்கம்போல் தம்பிக்குப் பாராட்டும், எனக்குத் திட்டும் பரிசாய்க் கிடைக்கும். கவலையே பட்டதில்லை. அது ஒரு காலம். ம்ம்ம்ம்ம் :( பின்னர் பொங்கல் பானையை அடுப்பில் ஏற்றி, வறுத்து வைத்த பாசிப் பருப்பை அதில் போட்டுப் பருப்புக் கரைந்ததும், வறுத்த பச்சரிசியை நன்றாய்க் களைந்து அதிலேயே போடவேண்டும். எங்க அம்மா வீடுகளிலே பொங்கல் கரைய விட தண்ணீர் அதிகம் சேர்ப்பது இல்லை. பாலிலேயே கரைய விடுவோம். அவரவர் வசதிக்கேற்ற மாதிரிச் செய்து கொள்ளலாம். ஒரு ஆழாக்கு (200 கிராம் அரிசி என்றால் குறைந்தது 50கிராமிலிருந்து 100 கிராம் பருப்பு ஆகும். ருசியைப் பொறுத்து) அதற்கு அரை லிட்டர் பாலாவது தேவைப்படும். பத்தலைனா தண்ணீர் சேர்த்துக்கலாம். நான் ஒரு மு.ஜா. மு. அக்காவாச்சே.  முன்னெல்லாம் ஒரு வாரம் முன்னாலே இருந்தே அரை கப் பாலாகச் சேர்த்து, சேர்த்து எடுத்துக் காய்ச்சி வைப்பேன்.  முதலில் புதுப்பாலைக் கொஞ்சம் விட்டுப் பருப்பைக் கரைய விட்ட பின்னர் காய்ச்சி வச்சிருந்த பாலையும் சேர்த்துக் கொள்வேன்.  இந்த வருடம் புதுப்பாலே சீக்கிரம் கிடைத்து விட்டது.

வெல்லம் அவங்க அவங்க ருசிக்கு ஏற்றாற்போல் சேர்த்துக் கொள்ளவும். எப்படியும் அரை கிலோ வெல்லத்துக்கு மேல் வேண்டும் மேலே சொன்ன அளவு அரிசி, பருப்புக்கு. வெல்லம் சேர்ந்து வெல்ல வாசனை போகப்பொங்கல் கொதித்ததும், நெய்யில் முந்திரிப் பருப்பு, திராட்சை, தேங்காய் பல், பல்லாய்க் கீறிப் போட்டு வறுத்துப்பொங்கலில் சேர்க்கவும். ஏலக்காய், ஜாதிக்காய் வாசனைக்கு போடவும். வீட்டு முற்றம், கிணற்றடி, அடுக்குமாடிக் குடியிருப்பென்றால் சூரிய வெளிச்சம் படும் இடத்தில் சுத்தம் செய்து சூரியக் கோலம் போடவும். சிலர் வீட்டில் சந்திரனும் போடுவதுண்டு. சூரியன் வடக்கே நகருவதால் சூரியக் கோலமும் கொஞ்சம் வடக்கே போடணும்னு சொல்லுவாங்க. பின்னர் மஞ்சள் கொத்து, இஞ்சிக் கொத்து, வாழைப்பழம், கரும்பு, அரிசி, வெல்லம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, ஊதுபத்தி, சூடம், சாம்பிராணி, விளக்கு, மஞ்சள் பொடி, அட்சதை(மஞ்சள் தூளில் கலந்த அரிசி அட்சதை), தட்டு, கிண்ணங்கள், பசும்பால், தீப ஆராதனைத் தட்டுகள்,பூக்கள், மாலை கிடைத்தால் மாலை போன்றவற்றோடு உட்கார்ந்து முதலில் பிள்ளையார் பூஜை செய்து முடித்துவிட்டுப் பின்னர் சூரிய வழிபாடு செய்யவேண்டும். கற்பூர தீப ஆராதனைக்கு முன்னர் பொங்கலை செய்த பானையோடு கொண்டு வைத்து, கூடவே சாதம், பருப்பு, காய்வகைகள் போன்றவையும் வைத்து சூரியனுக்கு நிவேதனம் செய்யவேண்டும். பின்னர் கற்பூர தீபாராதனை செய்து விட்டுப் பின்னர் வீட்டில் ஸ்வாமி அலமாரியில் உள்ள தினமும் நிவேதனம் செய்யும் அனைவருக்கும் செய்துவிட்டுப் பின்னர் காக்கைக்குப் பொங்கல், சாதம், பருப்பு கொடுத்துவிட்டுப் பின்னர் விநியோகம் செய்ய வேண்டிய உறவினர், நண்பர்கள் இருந்தால் கொடுத்துவிட்டுச் சாப்பிடலாம்.

எல்லாத்தையும் விட முக்கியமானது இன்று பொங்கல் செய்யும் பானையையோ, அல்லது சாதம் வைக்கும் பானையையோ காலி செய்து இன்றே தேய்த்துச் சுத்தம் செய்யக் கூடாது என்பது ஐதீகம். பானை இன்று நிறைந்து இருந்தால் வருடம் பூராவும் இதே போல் நிறைந்து இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை!  இப்படியாகத் தானே இந்த வருஷப் பொங்கல் நிறைவுற்றது. 

36 comments:

  1. இந்த காட்சிகள் நினைவுகள் எல்லாம் ஊரோட போயாச்சு .ஆனா இந்த வருஷம் இங்கிருக்கிற ஆசிய கடையில் பெரிய கரும்புகள் அப்புறம் வாழை மரங்கள் எல்லாம் பார்த்தேன் .மண் பானையில் சட்டியில் சமைப்பது நல்லது ..அம்மா மண் பானையில் தான் பொங்கல் செய்வாங்க :) ஹீ ஹீ நானும் குக்கர்லதான் இந்த வருஷம் பொங்கல் செஞ்சேன் :)


    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சல், முந்தைய இரண்டு பதிவுகளில் ஆளைக் காணோமே? குக்கர் பொங்கல் என்ன இருந்தாலும் வெண்கலப்பானை, மண்பானைப் பொங்கல் மாதிரி தளதளப்புடன் இருக்காது என்பது என் கருத்து.

      Delete
  2. பொங்கலை விட எழுத்து இனிப்பாக,
    இப்பொழுதெல்லாம் கரும்புகடிக்க
    ஆள் இல்லாமல் போனார்கள்
    அது கரும்பு வியாபாரத்திலேயே தெரிந்தது,/

    ReplyDelete
    Replies
    1. வாங்க விமலன். முதல்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  3. >>> என் தம்பியும் கத்துவோம்.
    வழக்கம்போல் தம்பிக்குப் பாராட்டும்,
    எனக்குத் திட்டும் பரிசாய்க் கிடைக்கும்.
    கவலையே பட்டதில்லை...<<<

    நாம எதுக்குத் தான் கவலப்பட்டுருக்கோம்!?...

    கவலப்பட்டு ஆகப்போறதென்ன.. அப்படிங்கற ஞானம் தானே!...

    வாழ்க வளமுடன்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை! ஆமாம், இப்போக்கூட எனக்கும் அவருக்கும் ஒரு வாதம்/விவாதம். எல்லாத்துக்கும் அதிகம் யோசிச்சு டென்ஷன் பண்ணிப்பார்/அது வேண்டாம்னா கேட்பதில்லை! நான் நடக்கிறபடி நடக்கட்டும்னு விட்டுடுவேன். :))))

      Delete
  4. ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே!...

    பொங்கல் புராணம் அருமையோ... அருமை!...

    அந்தக் காலத்தில் எங்கள் வீட்டிலேயும் இப்படித்தான்...
    பசுக்கள் இருந்ததால் இரட்டிப்பு கொண்டாட்டமாக இருக்கும்!...

    90 ஆண்டுகளுக்கு முன்னால் ஏதோ ஒரு வருடத்தில்
    அடுப்பிலேற்றிய மண்பானை விரிசல் விட்டதால் சகுனத் தடையாகக் கொண்டு அதன்பின் வெங்கலம் தானாம்..

    இப்போது நவநாகரிகமாக எவர்சில்வர்.. அப்போதைக்கு அப்போது மாற்றிக் கொள்வது!..

    ReplyDelete
    Replies
    1. துரை, நான் இன்னமும் வெண்கலப்பானை, இரும்புச் சட்டி, கல்சட்டி தான் பயன்படுத்தறேன். அம்பத்தூரி இருந்த வரை அம்மி, ஆட்டுக்கல்லும் உண்டு. தனி வீடு என்பதால் வசதியா இருந்தது. இங்கே வைத்துக்கொள்ளும் வசதி இல்லை. என்ன இருந்தாலும் ரசத்துக்கு, தேங்காய்த் துவையலுக்கு எல்லாம் அம்மியில் அரைச்சுச் சாப்பிடுவது போல் வராது! :( இங்கே வந்ததில் இருந்து மிக்சி தான். அங்கே அம்மியும் பயன்பாட்டில் உண்டு. மிக்சியும் உண்டு.

      Delete
  5. பானை இன்று நிறைந்து இருந்தால் வருடம் பூராவும் இதே போல் நிறைந்து இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை! //
    எங்கள் வீட்டிலும் அம்மா அப்படித்தான் சொல்வார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, உடம்பு தேவலையா? பொங்கல் கொண்டாடியது பற்றி எழுதி இருப்பதைப் படித்தேன். இந்த வருஷம் இங்கே அதிகம் பொங்கல் செய்யவில்லை. கணக்காகத் தான்! ஆகவே சரியாக இருந்தது.

      Delete
  6. இவ்வருடம் மகளின் தலைப்பொங்கலை பரமக்குடியில் கொண்டாடினோம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, நல்லபடியாகப்பொங்கல் கொண்டாடி இருப்பீர்கள் என நம்புகிறேன். உங்கள் மகள், மருமகன் ஆகியோருக்கு எங்கள் ஆசிகள்.

      Delete
  7. நல்ல கவிதையா காட்சியை கண் முன் கொண்டுவந்திருக்கீங்க.

    உங்க அம்மா இப்போ இருந்தால் கேட்கலாம். 'அம்மா... உங்க பொண்ணு அவங்க ரொம்ப அப்ப்ப்ப்பாவின்னு சொல்றாங்களே... அது உண்மையா' என்று. ஹா ஹா

    ஆமாம், அவனவன் பொங்கல் பொங்கி சாப்பிட்டு, அடுத்த நாள் கனுப்பொடி முடிந்து.... சும்மா உட்கார்ந்திருக்கான்... இப்போ போய் பொங்கல் பொங்கிச்சான்னு கேட்கறீங்களே... அப்போ தீபாவளி முடிந்து இரண்டு நாட்கள் கழித்துத்தான் 'கங்கா ஸ்னானம் ஆச்சா'ன்னு கேபீங்களோ?

    ReplyDelete
    Replies
    1. நெ.த. பொங்கல் அன்னிக்கே இதை எல்லாம் எழுதினா அவசரத்தில் படிக்கிறவங்க இருக்க மாட்டாங்க. ஒண்ணு முன்னாடி எழுதணும். இல்லைனா அப்புறமா எழுதணும். புது வருஷம் பிறந்தால் அந்த மாசம் முழுவதும் வாழ்த்துச் சொல்றதில்லையா என்ன? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

      Delete
    2. அம்மா போய் 30 வருடங்களுக்கும் மேல் ஆச்சு! :( ஆனால் அம்மாவை நினைக்காத நாளே இல்லை. அதிலும் எங்காவது காமாட்சி அம்மன் ஸ்தோத்திரம் சொல்வது கேட்டால் அம்மா குரல் காதில் ஒலிக்கும். "அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாட்சி, உமையே!" என்னும் வாசகங்கள்! :(

      Delete
    3. பொண்ணு, அப்பா செல்லம்பாங்க. இங்க என்ன உல்டாவா இருக்கு?

      இருந்தாலும் தை மாதத்தில் ஏன் இந்த அப்பாவிகிட்ட 'கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"?

      Delete
    4. உங்களுக்கு சகோதரிகள்/சகோதரி இல்லை அல்லவா? அதான் தெரியலை. பெண்கள் அம்மாவுக்கும் உருகுவார்கள். அதோடு எங்க வீட்டைப் பொறுத்தவரையிலும் நான் இரண்டு சகோதரர்களுக்கிடையே ஒரே பெண்ணாக இருந்தாலும் என் அப்பாவைப் பொறுத்தவரை நான் ஒரு liability தான். ஆகவே என்னை மட்டும் அவர் நடத்தும் முறையே தனி! ஆனால் அதுவே என்னைப் பின்னால் பல பிரச்னைகளில் இருந்தும் மீண்டு வர மனோபலத்தைக் கொடுத்தது. பிறந்த வீட்டில் இருக்கும்போது இதுக்கெல்லாம் அப்பாவோடு சண்டை போடுவேன். வாங்கிக் கட்டிப்பேன். :)))) அப்பாவைப் பொறுத்தவரை நான் ஒரு ரெபெலியன்.எனக்குப் பெண் பிறந்ததும் அந்தப் பெண்ணை நன்கு சீராட்டிப் பாராட்டி வளர்க்கணும்னு தீர்மானித்து அப்படியே வளர்த்தோம். பெண்ணையும் வேலைகள் கற்றுக்கொள்ள வைத்ததோடு அல்லாமல் பிள்ளையையும் அப்படியே வளர்த்தோம். எங்க பையரும் எல்லா வேலைகளையும் திறம்படச் செய்வார்.

      Delete
    5. Nellai, Check your mail. I have sent you some links about Pathanjali Sthothram which was recited by the Dhikshitars of Chidambaram in the video sent by you via Whatsapp.

      Delete
    6. நீங்க அனுப்பிட்டீங்க கீதா சாம்பசிவம் மேடம். ரெண்டு முறை என் லேப்டாப் இருக்கற ரூம்ல சிக்னல் சரியா வரலை. விரைவில் பார்க்கிறேன்.

      உங்க ஞாபக சக்திக்கும், எளியேனை நினைவில் வைத்திருப்பதற்கும் என் பாராட்டுகள், நன்றிகள்

      நீங்க சொன்ன லையபிலிடி சென்ற தலைமுறையைப் பொறுத்தவரை உண்மைதான். அதையும் மீறி, பெண்கள் ஒரு லெவலுக்கு வரும்போது, நம்மை "மடியில் கட்டி வைத்திருக்கும் நெருப்பு" என்ற நோக்கில் இன்னொரு குடும்பத்தில் விளக்கேற்ற வைக்கும் பொறுப்பினால்தான் அப்படி இருந்தார்கள் என்று புரிந்துகொள்வார்கள் என நினைக்கிறேன்.

      Delete
  8. நிதானமாக ஒவ்வொன்றையும் சொல்லி, எதையும் மறக்காமல் படிப்படியாக செய்முறைகளையும் விவரித்து, இதுவல்லவோ பொங்கல்...

    மனம் நிறைய பொங்குகிறது அம்மா மகிழ்ச்சி...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி டிடி. நெ.த.வுக்குத் தான் ஒண்ணும் தெரியலை/புரியலை! மனமார்ந்த நன்றி.

      Delete
    2. இல்லை கீசா மேடம்... என்னுடையது வம்பு வளர்க்கும் பின்னூட்டம்.

      மற்றபடி நான் ஒரு இடுகை எழுதும்போது எப்படி இப்படி மிஷின் மாதிரி இடுகை வெளியிடுறாங்கன்னு பிரமிப்பேன். அதுவும் உங்களோடது நிறைய விஷயங்களோடு எழுதப் படுபவை. நான் பாராட்டறேன்

      Delete
  9. இந்தப் போஸ்ட்டுக்கு நான் நேற்றே வந்திட்டேன் என்றெல்லோ நினைச்சுக் கொண்டிருக்கிறேன்ன்.. ஒரு நாளிலேயே ரெண்டு போஸ்ட் போடுமளவுக்கு உடம்பு நலமாகிட்டுதுபோல அவ்வ்வ்வ்வ்வ் கீசாக்கா அடிக்கப்போறா கண் போட வேணாம் என:)) ஹா ஹா ஹா..

    ReplyDelete
    Replies
    1. இஃகி, இஃகி, அமுதசுரபி, படம் அதே படம் போட்டிருக்கேன் இல்லை! அதான்! இது 2015 ஆம் வருஷத்துப் படம்னு நினைக்கிறேன். காமிராவில் எடுத்திருப்பேன். ஒரு நாளைக்கு இரண்டு பதிவு போட்ட காலமும் ஒன்று இருந்தது. இது தினம் ஒன்றாகப் போட்டது தான்! :))))

      Delete
  10. //பொங்கல் வைக்க நேரமும் பார்க்கிறதுண்டு. எங்க வீடுகளிலேயும், உறவினர் வீடுகளிலேயும், தை மாதம் பிறக்கும் நேரத்தைக் கணக்கிட்டுக் கொண்டு அந்த நேரமே பொங்கல் வைத்து வருகின்றோம். சில சமயம் அது இரவு 9-00 மணிக்குக் கூட வரும்//

    தைப்பொங்கல் என்பது சூரியனுக்குப் படைக்கும் ஒன்றாயிற்றே பிறகு எப்படி இரவில் படைப்பது?.. நாங்கள் பொங்கல் எப்பவும் அதிகாலையில்தான், சூரியன் எழும்போது படைப்போம்.

    ஆனா சிட்திரைப் புத்தாண்டுதான் இப்படி, நேரம் கணக்கிட்டு, அது பின்னேரம் எனில் பகல் முழுக்க சாப்பிடாமல் இருந்து, வருசம் பிறந்ததும் மருத்துநீர் வைத்து தோய்ந்து புது உடுப்பு போட்டு, கை விசேடம் பரிமாறிக் கொண்டு , கோயில் போவோம்.

    அழகிய நினைவுகள்.. ஒவ்வொரு பண்டிகையின்போதும் பழைய நினைவுகள் தானாக வந்து ஒட்டிக் கொள்ளும்.

    ReplyDelete
    Replies
    1. எனக்குத் தெரிந்து 82 அல்லது 83 ஆம் ஆண்டு அப்படி இரவில் வந்தது. அதன் பின்னர் ஒரு முறை மாலையில் வைக்கும்படி வந்தது. இந்த வருஷமும் மாசம் திங்களன்று மாலையே பிறந்து விட்டது. ஆனால் பொங்கல் வைக்கத் தான் செவ்வாயன்று காலை நேரம் சொல்லி இருந்தார்கள். சூரியன் மறைவதோ, தோன்றுவதோ இல்லையே! :)))))

      Delete
  11. பொங்கியதே... பானைப்பொங்கல்! நாங்களும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்....டாடினோமே...

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், பால் பொங்கி வழியணும்னு இப்பல்லாம் சொல்றாங்க. நாங்க சின்னவங்களா இருந்தப்போப் பால் பொங்கி வழியக்கூடாது, அதுவும் அடுப்பில்னு சொல்லுவாங்க! காலத்துக்கேற்றாற்போல் எல்லாமும் மாறுகிறது.

      Delete
  12. நாங்கள் புதுப்பானை எல்லாம் வாங்குவது இல்லை! மண்பானையே வாங்குவது இல்லை! வெண்கலப்பானை.

    ReplyDelete
    Replies
    1. மண்பானையெல்லாம் நானும் பயன்படுத்தியதில்லை. கல்சட்டி, வெண்கலப்பானை, ஈயச் செம்பு இவை தான். சில, பல பித்தளைப்பாத்திரங்கள் உள்ளே ஈயம் பூசி. இப்போல்லாம் தேய்க்க முடியறதில்லைனு அதையும் ஜாஸ்தி எடுப்பதில்லை.

      Delete
  13. பால் பொங்கிச்சு அக்கா....ஆனா என்ன எனக்குத்தான் உடம்பு சரியில்லாம ஆகி இப்ப பெட்டர்...அதான் வந்தாச்சு..பதிவு பார்த்துட்டு வரேன்...அங்க கறிவேப்பிலை பூண்டு குழம்புல இருந்தேன் இதோ வரேன்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா, என்ன ஆச்சு உடம்புக்கு? இப்போ நலமா? உடல்நிலை அந்த ஊரின் சீதோஷ்ணம் காரணமாப் பாதிச்சிருக்கலாம். பானுமதியும் அந்தக் குளிர் வித்தியாசமா இருக்குனு சொல்றாங்க. நாங்களும் அங்கே குடியேற நினைச்சுப் பின்னர் நான் வேண்டாம்னு சொன்னதாலே போகலை! இல்லைனா போய் 20 வருஷம் இருக்கும். :)

      Delete
  14. அழகான நினைவுகள் கீதாக்கா....நானும் வெ பானைதான் பொங்கல் செய்ய....பாலில் வேக வைத்துத்தான் பருப்பும் போட்டு. பிறந்த வீட்டில் அரிசி மட்டும் பாலில் வேக வைத்து பருப்பில்லாமல் செய்வாங்க...ஏன்னா இது சர்க்கரைப் பொங்கல் அது அக்காரை வடிசல் என்று....மாமியார் வீட்டில் நீங்கள் சொல்லியிருப்பது போலத்தான்...

    சூப்பர்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. எங்க பக்கம் அக்கார அடிசில்னாத் தான் சிலர் பருப்புச் சேர்ப்பதில்லை. ஆனால் எங்களுக்குத் தெரிந்த வைணவர்கள் வீடுகளில் அக்கார அடிசிலோ, சர்க்கரைப் பொங்கலோ பருப்புச் சேர்ப்பார்கள். எங்க வீட்டிலும் உண்டு. அரிசி, பருப்பை வாசனை வரும்படி வறுத்துப்போம். முழுக்க முழுக்கப் பால் தான்! தண்ணீர் சேர்ப்பதே இல்லை. அதே என் மாமியார் வீட்டில் பால் ஒரு கரண்டி தான் சாஸ்திரத்துக்கு! அரிசி, பா.பருப்பு, க.பருப்பு எல்லாம் சேர்ப்பார்கள். வெல்லம் வாசனையோடு அது ஒரு டேஸ்ட்.

      Delete
  15. வணக்கம் சகோதரி

    பொங்கல் சிறப்பாக இனியதாக நடந்தேறி இருக்கும். தாமதமான பொங்கல் வாழ்த்துகள் எனினும் இது பொங்கல் பற்றிய பதிவாகையால், இனிதான பொங்கல் வாழ்த்துக்கள்.

    மிகவும் அருமையாக பழைய நினைவுகளையும் பொறுமையாக விளக்கி மிக அழகாக எழுதியுள்ளீர்கள்.

    ஒவ்வொன்றையும் தாங்கள் விவரித்து கூறியது இனிப்பான பொங்கலை சாப்பிட்ட சுவையுடன் இருந்தது.

    என் அம்மா வீட்டில் இருந்த வரை புது மண் கொண்டு அடுப்புகள் செய்து அதில்தான் பொங்கல் செய்வார்கள். அடுப்புகள் பழசானாலும் அடிக்கடி அவர்களே புதிதாக செய்து கொள்வார்கள். எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து நிறைய வருடங்கள் விறகடுப்புதான். 85க்கு மேல்தான் கேஸ் அடுப்பு வந்தது. கிழக்கு பார்த்து பொங்கலிட்டு, நவகிரகங்கள் கோலமிட்டு அப்பா பூஜை செய்ய, என அப்போதைய தைத்திங்களின் முதல் நாளை தங்கள் பதிவு மீட்டு தந்தது.

    அதன்பின் திருமணத்திற்கு பின் வாடகை வீடுகளில் அதற்கு தக்கவாறு பூஜை புனஸ்காரங்கள் என்று காலத்தின் மாறுதலுக்கு அடிபணிந்து செல்ல வேண்டியதாயிற்று. ஆனாலும் இன்று வரை வெங்கல பானையில்தான் பொங்கல் வைப்பது எங்கள் வீட்டிலும் வழக்கமாக உள்ளது. (கேஸ் அடுப்பில்தான்) எதையுமே பழைய பாணியில் செய்வது மனது நிறைவை தருகிறது. பழமையை விடாமல், புதியனவற்றையும் ஒதுக்காமல் செல்லும் தங்கள் பாணியை நானும் வரவேற்று விரும்புகிறேன். ஏனெனில் நானும் அவ்வண்ணமே... பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, நாங்களும் பெரும்பாலும் வாடகை வீடுகள் தான். மாமியார் வீடு தான் கிராமத்தில் சொந்தம். கொல்லைக்கிணற்றடி முற்றத்தில் பூஜை செய்வார் மாமனார். மறுநாள் மாட்டுக்கொட்டிலைச் சுத்தம் செய்து கோலமெல்லாம் போட்டு எல்லா மாடுகளுக்கும், எருமை மாடுகள் உட்படப் பூஜை செய்வார். பின்னர் மாடுகளை அவிழ்த்து விடுவார். எல்லா மாடுகளும் மிரண்டு ஓடும். இதை மாடு மிரட்டல் என்றே சொல்வார்கள் அந்தப் பக்கங்களில். மதுரையில் இருந்தப்போ எல்லா மாடுகளும் நாலு மாசிவீதிகளிலும் சுற்றி வரும். மாட்டுப்பொங்கலுக்கு மறுநாள் தான் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்கும். அப்போல்லாம் அதான் பிரபலம். இப்போ ஊருக்கு ஊர் ஜல்லிக்கட்டு!

      Delete