எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, July 20, 2008

கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி - 75

சீதையை மனமுவந்து ஏற்றுக் கொண்ட ராமரின் எதிரே பரமசிவன் காட்சி அளித்தார். ராமர் அயோத்திக்குத் திரும்பிச் சென்று இக்ஷ்வாகு குலப் பெருமையை நிலை நாட்டும் வண்ணம் அரசாட்சி செய்து பின் மேலுலகம் திரும்புவார் என்று, இப்போது ராமரைக் காண அவரது தந்தையான தசரதர் வந்திருப்பதாயும் சொல்கின்றார். ராமருக்கும், சீதைக்கும் தசரதர் காட்சி அளிக்கின்றார். ஆனால் இந்த நிகழ்ச்சிகளெல்லாம் ராமர், சீதை இருவரையும் தவிர கூடி இருந்த மற்றவர்கள் பார்த்ததாய் வால்மீகி சொல்லவில்லை. ஏதோ அதிசயம் ஒன்று நடக்கின்றது என்ற அளவில் மட்டுமே புரிந்து கொண்டதாய்ச் சொல்கின்றார். தசரதன் தன் அருமை மகன் ராமனை ஆரத் தழுவிக் கொண்டு தன் மகன் புருஷர்களில் உத்தமன் எனத் தான் உணர்ந்து கொண்டு விட்டதாய்ச் சொல்கின்றார். பதினான்கு வருட வனவாசமும் முடிவடையப் போகின்றதால் ராமர் சீக்கிரமாய் அயோத்திக்குத் திரும்பி ராஜ்யத்தை ஏற்றுக் கொண்டு ஈடு இணையற்ற வகையில் அரசாட்சி செய்து நீண்ட நெடுங்காலம் பெரும் புகழோடு வாழ்வார் எனவும் வாழ்த்துகின்றார் தசரதர். அப்போது ராமர் தன் தந்தையிடம், கைகேயியையும், பரதனையும் விலக்கிவிடுவதாய்ச் சொன்னதை மறந்து அவர்கள் இருவரையும் அந்தக் கடுமையான சாபத்தில் இருந்து விடுவிக்க வேண்டினார். தசரதரும் அவ்வாறே ஆகட்டும் என வாக்களித்தார்.

பின்னர் லட்சுமணனுக்கும் ராமருக்குத் தொடர்ந்து சேவைகள் செய்து வருமாறு ஆசி கூறிவிட்டு, சீதையைப் பார்த்து, ராமன் இப்போது நடந்து கொண்ட விதத்தாலும், இங்கே நடந்த இந்த அக்னிப் பிரவேச நிகழ்ச்சியாலும் சீதையின் மனம் துன்புறக் கூடாது என்றும் சொல்லிவிட்டு, உன்னுடைய தூய்மை அனைவருக்கும் புரியவே இவ்வாறு நடந்தது. செய்ய முடியாத ஒரு காரியத்தை நீ செய்ததால் உன்னுடைய புகழ் மற்றப் பெண்களின் புகழை விட ஓங்கும். இனி உன் கணவனின் பணிவிடைகளில் நீ இன்புற்று இருப்பாயாக என்று சொல்லிவிட்டுப் பின்னர் அனைவரும் மேலுலகம் செல்கின்றனர். பின்னர் இந்திரன் ராமரைப் பார்த்து, ஏதாவது வரம் வேண்டிப் பெற்றுக் கொள்வாய் எனச் சொல்ல ராமரும், இந்தப் போரில் உயிர் நீத்த அனைத்து வானரங்களும் உயிர் பெற்று எழ வேண்டும் என்பதே தனக்கு வேண்டிய வரம் என்றும் சொல்லி விட்டு, அவர்கள் முழு ஆரோக்கியத்தோடும் எழச் செய்யும்படிக்கும் பிரார்த்திக்கின்றார். இந்திரன் இது மிக அரிதான வரம் எனினும் நான் வாக்குக் கொடுத்துவிட்டதால் நீ கேட்டது கேட்டபடி நடக்கும் எனச் சொல்ல, இறந்த வானரர்கள் அனைவரும் தூங்கி எழுவது போல் எழுந்தனர். பின்னர் ராமரை நீ மீண்டும் அயோத்திக்குச் செல்வாய். உன்னுடைய பிரிவால் வாடி, வருந்தி தவங்களையும், கடும் விரதங்களையும் செய்து கொண்டிருக்கும் பரத, சத்ருக்கனர்களைக் காக்க வேண்டியும், அவர்களை மகிழ்விக்க வேண்டியும் விரைவில் அயோத்தி
செல்வாய். என்று கூறிவிட்டு அனைவரும் மறைந்தனர். மறுநாள் விபீஷணன் ராமரைச் சகல வசதிகளோடும் நீராடி, நல்லாடை உடுத்தி, ஆபரணங்களை அணிந்து அனைவரையும் மகிழ்விக்கக் கோர, ராமரோ, தான் உடனே சென்று பரதனையும், சத்ருக்கனனையும் பார்க்க வேண்டும் என்று சொல்கின்றார். விரைவாக அயோத்திக்கு அருகே இருக்கும் நந்திகிராமம் செல்லவேண்டும் எனவும், கால்நடையாகச் சென்றால் பல நாட்களாகிவிடும் என்பதால் அது வரையில் பரதன் தாங்க மாட்டான் எனவும் சொல்கின்றார். விபீஷணனும் உடனேயே, ராவணனால் அபகரித்துவரப் பட்ட குபேரனின் புஷ்பகம் இங்கேயே இருப்பதாயும், அதில் அமர்ந்து வெகு விரைவில் அயோத்தி சென்று விடலாம் எனவும் சொல்கின்றான். ஆனால் ராமர் இலங்கையில் சில நாட்கள் தங்கிச் செல்வதே தனக்கு விருப்பம் எனவும் சொல்கின்றான். ராமர் விபீஷணன் செய்த உதவிகளைப் பாராட்டிப் பேசிவிட்டு, இப்போது தங்க நேரம் இல்லை எனவும், பரதனைச் சென்று உடனேயே பார்க்க வேண்டும் எனவும், தாயார்களைப் பார்க்க வேண்டும் எனவும் சொல்கின்றார். ஆகவே விடை கொடுக்குமாறு கேட்கின்றார். விபீஷணன் மிக்க மரியாதையுடனே ராமரை வணங்கி, மேலும் என்ன வேண்டும் எனக் கேட்க, போரில் சாகசங்கள் பல புரிந்த வானரங்களுக்குப் பரிசளிக்கும்படிச் சொல்கின்றார் ராமர். அவ்வாறே வானரங்கள் அவர்கள் விரும்பிய வண்ணம் தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள் எனப் பரிசைப் பெற்றனர். பின்னர் வானரங்களையும், சுக்ரீவனையும், விபீஷணனையும் பார்த்து ராமர் அவர்கள் அனைவரும் அவர்களின் சொந்த இடத்துக்குச் செல்லலாம் எனவும், தனக்கு விடை கொடுக்குமாறும் கேட்கின்றார்.
விபீஷணனும், சுக்ரீவனும், ராமரின் பட்டாபிஷேக நிகழ்ச்சியைக் கண்டு களிக்க தாங்கள் அயோத்தி வர விரும்புவதாய்ச் சொல்ல, ராமர் அனைவரையும் புஷ்பகத்தில் ஏற்றிக் கொள்கின்றார். புஷ்பகம் பெரும் சப்தத்துடன் விண்ணில் எழும்பியது. சீதையிடம் புஷ்பகத்தில் சென்று கொண்டிருந்த சமயம், ராமர் ஒவ்வொரு இடமாய்க் காட்டுகின்றார். “இதோ பார், இது தான் நான் ராவணனை வீழ்த்திய இடம். இதுதான் முக்கியமான அரக்கர்கள் ஒவ்வொருவராய் வீழ்த்தப் பட்ட இடம். இதோ இந்தக் கடற்கரையில் தான் நாங்கள் இறங்கினோம். இதோ இந்த இடத்தில் தான் நளசேது கடல் மீது கட்டப் பட்டது. அதோ பார், எங்கும் வியாபித்திருக்கும் மகாதேவன், எனக்கு அருள் புரிந்து அணை கட்ட உதவிய இடம் இது தான். இந்தக் கடற்கரையில் உள்ள இந்தப் புனிதமான இடம் இனிமேல் சேதுபந்தனம் என அழைக்கப் படும். சகல பாவங்களையும் போக்கும் புண்ணிய இடமாய்க் கருதப் படும், என்று சொல்லிவிட்டு, விபீஷண சரணாகதி நடந்த இடம், வாலி வதம் நடந்த இடம் என ஒவ்வொரு இடமாய்க் காட்டி வருகின்றார். . ராமேஸ்வரத்தில் ராமர் சிவனைப் பூஜித்து ராவணனைக் கொன்ற பாவத்துக்குப் பிராயச்சித்தம் செய்தார் என்பது பற்றிய குறிப்பு வால்மீகி ராமாயணத்தில் இல்லை. ஆனால் ஸ்காந்த புராணத்தில் இது பற்றிய குறிப்பு வருகின்றது. ஆகவே அதன் அடிப்படையில் அங்கே ராமநாதஸ்வாமி கோயில் எழும்பி இன்றளவும் அனைவராலும் புனிதமான இடமாய்க் கருதி வழிபடப் பட்டு வருகின்றது. ஸ்காந்த புராணத்தில் மகாதேவனாகிய ஈசன் ராமரிடம், “ ராமா , உன்னால் பிரதிஷ்டை செய்யப் பட்ட இந்த லிங்கத்தை யார் வழிபடுகின்றார்களோ, அவர்கள் எல்லாவிதமான பாவங்களிலிருந்தும் விடுபடுவார்கள். சேதுபந்தனம் நடந்த தனுஷ்கோடியில் ஸ்நானம் செய்து, இங்கே என்னைத் தரிசனம் செய்து வழிபடுபவர்களுக்கு அனைத்துப் பாவங்களும் நீங்கும்,” என்று அருளியதாய் ஸ்காந்த புராணத்தில் சொல்லப் பட்டிருக்கின்றது. பின்னர் வழியில் கிஷ்கிந்தை நகர் தெரிய, ராமரும் அந்த நகரைச் சீதைக்குக் காட்டினார். சீதை நம்முடன் சுக்ரீவன் மனைவியும், தாரையும் மற்ற வானரங்களின் மனைவிமார்களும் அயோத்திக்கு வரட்டும் என வேண்ட, அவ்வாறே புஷ்பகம் அங்கே கீழே இறங்கி, மற்றவர்களையும் ஏற்றிக் கொண்டு கிளம்பியது. ராமர் ஒவ்வொரு இடமாய்ச் சீதைக்குக் காட்டிக் கொண்டே வருகின்றார். பரதன் வந்து சந்தித்த இடம், யமுனை நதி, பரத்வாஜ முனிவரின் ஆசிரமம் என ஒவ்வொன்றாக வந்தது, சரயு நதியும் கண்ணில் பட்டது. அங்கிருந்தே அயோத்தியும் கண்ணில் தெரிய ஆரம்பித்தது. பரத்வாஜரின் ஆசிரமத்தில் விமானம் இறங்கி, அனைவரும் அவரை வணங்கி நமஸ்கரிக்க, ராமர், அனைவரின் நலன் பற்றியும் பரத்வாஜரிடம் விசாரிக்கின்றார்.

1 comment:

  1. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...
    வால்மீகி ராமாயணத்துல இல்லைன்னு சொல்லி அனுமார் வாலால சிவ லிங்கத்தை கட்டி இழுக்கிற படம் போட்டு இருக்கீங்க!

    சரி சரி! ராமேஸ்வரத்துல இருக்கிற வால் அறுந்த அனுமார் கோவிலுக்கு போய் இருக்கீங்களா? அந்த இடம் மட்டுமே செம்மண்ணாக இருக்கும்.

    ReplyDelete