எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, January 11, 2018

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தன்!

ஆண்டாள் க்கான பட முடிவு

முதன் முதல் நோன்பு ஆரம்பிக்கும் போது "மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில்" ஆரம்பிக்கும் கோதை நாச்சியார், பின்னர் 2-வது பாடலில் இந்த வையத்தில் எல்லாம் வாழ்வோர்களை அழைத்து, நோன்பைப் பற்றியும் அதற்கான விதிமுறைகளையும் கூறுகிறாள். அதற்கான அழகான தமிழ் வார்த்தை "செய்யும் கிரிசைகள்" என்று குறிப்பிட்டு விட்டுப் பின் நோன்பு நூற்குங்காலையில் தாங்கள் மேற்கொள்ளப் போகும் விரதத்தையும் கூறுகிறாள் இவ்வாறு:
"நெய்யுண்ணோம் பாலுண்ணோம், நாட்காலே நீராடி
செய்யாதன செய்யோம், தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்!" என்று உறுதி எடுத்துக் கொள்ளுகிறாள் அவ்வாறே உறுதி எடுத்துக் கொண்டு தன் தோழிகளையும் அழைத்துக் கொண்டு, நந்தகோபன் வீட்டு வாயில் காப்போனை அழைத்து மணிக்கதவம் தாள் திறக்கச் சொல்லிப் பின்னர், நந்தகோபனையும் யசோதையையும் எழுப்பிப் பின்னர், அவர்தம் மருமகளாம், திருமகள் நப்பின்னைப் பிராட்டியையும் எழுப்பிக் கண்னனையும் எழுப்பச் சொல்லி வேண்டுகிறாள். அதுவும் எப்படி?
"உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்!" என்று சொல்லுகிறாள். பொதுவாகக் காலையில் எழுந்து கொள்ளும்போது முதன் முதல் பார்க்க வேண்டிய விஷயங்களில் ஒன்று மனைவியின் முகம். நப்பின்னை பால் கொண்ட காதலால், ஏழு எருதுகளை அடக்கி அவளைத் திருமணம் செய்து கொண்டிருக்கும் கண்ணன் அவளை எவ்வாறு பிரிவான்? மனம் வருந்தும் அல்லவா? அதனால் நப்பின்னையையே வேண்டுகின்றாள் ஆண்டாள், "நப்பின்னாய், நீ உன் மணாளனைத் துயில் எழுப்பு! உன் அழகான செந்தாமரை போன்ற முகத்தைக் காட்டி, அவனுக்குப் புத்துணர்ச்சி ஊட்டி, உன் வளையல் கரங்களால், வளையலில் இருந்தி இன்னிசை எழுப்பிப் பள்ளி எழுச்சி பாடு, அவனைத் திருப்திப் படுத்தி எங்களுடன் நீராட்டலுக்குத் தயார் செய்து அனுப்பி வை!"
"பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவோய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!"

இவ்வாறு நப்பின்னையை வேண்டிக் கொண்ட ஆண்டாள், பின்னர் கண்ணனைத் திங்களும், ஆதித்யனும் ஒரு சேர எழுந்தாற்போல் எங்கள் சாபம் தீர நீ எங்களை உன் அருட்கண்ணால் நோக்குவாய்!" எனக் கேட்டுக் கொள்கின்றாள். மழைக்காலத்தில் குகைக்குள் பதுங்கி இருக்கும் சிங்கத்துக்கு ஒப்பானவன் கண்ணன் எனச் சொல்லும் ஆண்டாள் தன் 24-வது பாடலில் கண்ணனின் அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரம், ராம அவதாரம் இரண்டையும் குறிப்பிட்டுப் பாடிப் பின்னர் அடுத்த பாடலில் கண்ணன் பிறந்த கதையை வர்ணிக்கின்றாள். ஒருத்தி மகனாய்ப் பிறந்து, அந்த ஓர் இரவிலேயே ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்க்கப் பட்ட கண்ணனைப் பாடும் போது
"திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து ,மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!" எனச் சொல்கின்றாள். மாலுக்கு, மணிவண்ணனுக்கு, கோல விளக்குக்குப் பல்லாண்டு பாடும் விதமாய்
"சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே!" என்று சொல்லிப் பின்னர் 27-வது பாடலுக்கு வருகின்றாள் ஆண்டாள்.

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!* உந்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம்பெறும் சம்மானம்*
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்*
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே*
பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்*
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு*
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்*
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

ஆண்டாள் அருளிச் செய்த இந்தத் திருப்பாவையின் 27-வது பாடல் இது. இது வரையிலும் "பாவை நோன்பு" நூற்றுக் கொண்டிருந்த நாச்சியார் ஆனவள் தன் நோன்பை முடிக்கிறாள். அதுவும் எப்படி? "கூடாரை வெல்லும் சீர்க்கோவிந்தா!" என்று கண்ணனைக் கூப்பிடுகிறாள். இங்கே கூடார் எனத் தீயவர்களைச் சொல்லும் சொல் மிக அழகாய் ஆண்டாளால் சொல்லப் பட்டிருக்கிறது. சாதாரணமாய்க் கெட்டவங்க என்று சொல்லுவதில் உள்ள கடுமை இங்கே குறைக்கப் பட்டுக் கூடார் என்று அவர்களைக் குறிப்பிட்டிருப்பதன் மூலம் தன் மென்மையான போக்கையும், நாகரீகத்தையும் ஆண்டாள் வெளிப்படுத்தி இருக்கிறாள். இப்படிக் கூப்பிட்டு இறைவனைப் பாடிப் பணிந்து நோன்பு நூற்றுத் தாங்கள் அடையப் போகும் அணிகலன்களையும் அந்நாளைய வழக்கப் படி குறிப்பிடுகிறாள் ஆண்டாள்.
இந்த 27-ம் நாளிலே தாங்கள் கொண்ட பாவை நோன்பை முடிக்கும் விதமாய் இந்தப் பாடலை ஆண்டாள் பாடி இருக்கின்றாள். அது வரை நெய் உண்ணாமல், பால் உண்ணாமல்,மையிட்டு எழுதாமல், மலரிட்டு முடியாமல் இருந்த வந்த பெண்கள் அன்று முதல் நல்ல ஆடை அணிகலன்கள் மட்டுமில்லாமல் :
""அதன் பின்னே பால்சோறு
மூட நெய்பெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!" எனச் சொல்கின்றாள். சொல்லின் திறம் மட்டுமில்லாமல் கூடி இருந்து அனைவரும் உண்ணும் பாங்கையும் எடுத்து உரைக்கும் இந்தப் பாடல் இன்று அதாவது ஜனவரி 12-ம் நாளான இன்று.

இன்று மதுரை மாநகரில் அனைவர் வீட்டிலும் பால் பொங்கும், நெய் மணக்கும், பொங்கல் உண்ணும் மக்கள் அனைத்து இல்லங்களிலும். அனைத்துப் பெருமாள் கோவிலிலும் இன்று நெய் மணக்கும் சர்க்கரைப் பொங்கல் பிரசாதமாய்க் கொடுக்கப் படும். முக்கியமாய் அழகர் கோயில் அழகருக்கு இன்று செய்யப் படும் நைவேத்தியம் ஆண்டாள் அவள் காலத்திலே வாய்மொழியாக வேண்டிக் கொண்ட ஒன்று ஆகும்.

"நாறு நறும் பொழில் மாவிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்;
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
எறுதிருவுடையான் இன்று இவை கொள்ளுங்கொலோ ?"

திருமாலிருஞ்சோலை நம்பியான அழகருக்கு நூறு தடா வெண்ணெயை உருக்கிக் காய்ச்சி, பதமாய் நெய்யாக்கி, அந்த நெய்யால் நூறு தடா நிறைய அக்கார அடிசில் செய்து வைப்பதாயும், அழகரை அதை ஏற்றுக் கொள்ளுமாறும் தன் வேண்டுகோளை நிறைவேற்றுமாறும் கேட்டுக் கொள்கிறாள் ஆண்டாள். அவள் செய்கின்றாளோ இல்லையோ, அவள் பாமாலையால் மகிழ்ந்த எம்பெருமான் அவள் வேண்டுகோளை நிறைவேற்றுகின்றான். ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதருடன் ஐக்கியம் ஆகின்றாள் ஆண்டாள். வருஷங்கள் பறக்கின்றன. நூற்றாண்டுகள் செல்கின்றன. வைணவத்தை உய்விக்க வந்த எம்பெருமானாக ராமானுஜர் தோன்றி, வைணவத்தை மட்டுமில்லாமல் கோயில் வழிபாட்டு முறைகளையும் செம்மைப் படுத்தி வந்த சமயம் அது.

அப்போது ஆண்டாள் பாசுரத்தைப் படித்து வந்த ராமானுஜர், தற்செயலாகப் பாண்டிய நாட்டுக்குச் சென்றார். அழகனைக் கண்டார். அவன் அழகில் மெய்ம்மறந்தார். அன்று இரவு அவருக்கு ஆண்டாளின் வேண்டுகோளும், அவள் அதை நிறைவேற்றாததும் நினைவுக்கு வந்தது. ஆண்டாள் செய்யவில்லை என்றால் என்ன? அதை நாம் நிறைவேற்றுவோம் என எண்ணிக் கொண்டு கோயிலில் சொல்லி ஆண்டாளின் விருப்பம் போலவே நூறு தடா நிறைய வெண்ணெய் வாங்கிக் காய்ச்சி, நூறு தடா நிறைய அக்கார அடிசில் செய்ய்ச் சொல்லி அழகனுக்குப் படைக்கின்றார். அழகன் மனம் மகிழ்ந்தானோ இல்லையோ, ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் மனம் மகிழ்ந்தாள். அழகர் கோயிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்றார் ராமானுஜர். ஆண்டாளின் திருக்கோயிலினுள் நுழைந்தார். நுழையும்போதே, ஒரு குரல், "என் அண்ணாரே!" எனக் குயில் போலக் கூவியது. சுற்றும் முற்றும் பார்த்தால் அழகிய ஆண்டாள் விக்ரகம் அசைந்து, அசைந்து வந்து ராமானுஜரைப் பார்த்து, " என் அண்ணாரே, தங்கையின் வேண்டுகோளை ஒரு அண்ணன் தான் நிறைவேற்றுவான். என் வேண்டுதலை நிறைவேற்றிய நீர் என் அண்ணார்!" எனச் சொல்லி மறைந்தாள். அன்று முதல் தென் மாவட்டங்களில் "கூடாரவல்லி" என்று செல்லமாய் அழைக்கப் படும் கூடாரவல்லித் திருநாள் விமரிசையாகக் கொண்டாடப் பட்டு வருகின்றது. இப்போ எப்படினு தெரியாது!


மீள், மீள், மீள் பதிவு! 2008 ஆம் ஆண்டில் எழுதியது!

17 comments:

  1. வையத்து வாழ்வீர்காள் - மையிட்டு எழுதோம் மலர் இட்டு நாம் முடியோம் (கூந்தலை முடிக்கமாட்டார்கள், நோன்பு முடியும் காலம் வரை விரித்தவாரே இருக்கும்) - இந்த வரிகளை சுவாஹா பண்ணிட்டீங்களே (இல்லை... இடையில் அதைக் கோடி காண்பித்திருப்பதை இப்போது வாசித்தேன்)

    தீக்குறளை - கோள் சொல்லமாட்டோம் என்று சொல்லியிருக்கிறார் (அந்தக் காலத்திலும் பெண்கள்தான் கோள் சொல்வதில் சிறந்தவர்களோ? )

    ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. ரசித்துப் படித்தேன். (ருசிக்க, நீங்கள், முழங்கை வழிவார சர்க்கரைப் பொங்கல் எப்போ பண்ணுவீங்கன்னு சொன்னா வருவோம்)

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். இதெல்லாம் 2008 ஆம் ஆண்டில் எழுதியது! அதை மீள் பதிவாய்ப் போட்டேன்! நாலைந்து நாட்கள் இணையம் வர முடியாது என்பதால் பதிந்தது. ஆனால் பாருங்க, மொக்கைக்குக் கூடும் கூட்டம் இதுக்குக் கூடவேஇல்லை! :))))) எங்க வீட்டிலே ஒவ்வொரு வருஷமும் கூடாரவல்லிக்கு முழங்கை வழிவாரச் சர்க்கரைப் பொங்கல் உண்டு! :)

      Delete
  2. சிறந்த பதிவு.

    ReplyDelete
  3. கூடாரவல்லி பற்றி இன்றுதான் என் அலுவலகத்தில் ஒரு நண்பி விளக்கம் கேட்டார். வழவழா கொழகொழா என்று நான் விளக்கம் சொல்லி வந்தேன்! இதை அவருக்கு அனுப்புகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. ஜூரம் தேவலையா ஶ்ரீராம்? உங்க நண்பிக்கு அனுப்பினீங்களா? படிச்சாங்களா?

      Delete
  4. அது தானே பார்த்தேன். இதெல்லாம் ஏற்கனவே படிச்ச மாதிரி இருக்கேன்னு! கடைசி வரியில கன்ஃபர்ம் ஆயிடுச்சு :))

    கூடார் : கூடத் தகாதவர் அல்லது சேரக் கூடாதவர் என்று கொள்ளலாமா? அப்போது அவர்கள் கெட்டவர் தீயவர் அழிக்கப்பட வேண்டியவர் என்ற எண்ணம் வருவதில்லையே. ’கூடாரை வெல்லும்’ என்பது அன்பினால் அல்லது அருளினால் வெல்லப்படுவது என்று பொருள் கொள்ளலாமா ?

    ReplyDelete
    Replies
    1. வாங்க கபீரன்பன். நீண்ட நாட்களுக்குப் பின்னர் சந்தித்ததில் மகிழ்ச்சி! நீங்க சொல்லும் பொருளும் நன்றாகவே இருக்கிறது!

      Delete
  5. கூடார வல்லித் திருநாள்.. புதுசா அறிகிறேன்...

    படிக்கும்போது திருவெம்பாவை முதல் பத்துப் பாட்டுக்களும் தண்ணிபோல பாடம்.. கருத்தும் பாடம்.. பின்னர் இப்போ ஆராவது தொடக்கி விட்டால்தான் நினைவு வருது.. தைத்திருநாள் வாழ்த்துக்கள் கீதாக்கா.. உங்களுக்கு கற்கண்டுப் பொங்கல் பொங்கத் தெரியுமோ?:))

    ReplyDelete
    Replies
    1. வாங்க அதிராமியாவ்! ஒரு காலத்தில் திருப்பாவை, திருவெம்பாவை கரதலப்பாடம்! :)))) இப்போத் தடுமாற்றம். கல்கண்டுப் பொங்கல் பொங்குவேனே! நானுமே பொங்குவேன்! கல்கண்டுப் பொங்கலும் பொங்குவேன்! :))))))

      Delete
    2. சிதம்பரம் நடராஜர் கோயிலில் கல்கண்டுப் பொங்கல் பிரசாதம் மிகவும் பிரபலம். நாங்க அங்கே போகும்போதெல்லாம் எங்க கட்டளை தீக்ஷிதர் ஒரு பெரிய டப்பா நிறையக் கல்கண்டுப் பொங்கல் கொடுத்துடுவார்! இங்கே வீட்டிலே செய்யும்போது குங்குமப் பூச் சேர்க்க முடியாது! அதான் கொஞ்சம் குறையா இருக்கும்! மற்றபடி ஜாதிக்காய், பச்சைக்கற்பூரம், ஏலக்காய் சேர்ப்பேன்.

      Delete
  6. சூப்பர் கீதாக்கா!!! நோன்பு நூற்கத் தொடங்கியது முதல் நோன்பு முடிக்கும் வரை சொல்லி...அப்புறம் பாருங்க அடுத்த பாடலில் கறவைகள் பின் சென்று அப்புறம் இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கு உந்தன்னோடு உற்றோமேயாவோம் என்று முடித்து பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத்தமிழ்மாலை முப்பதையும் சொன்னால் எல்லா திருவருளும் கிடைக்கும்னும் சொல்லி முடிச்சுடறாங்க!!!

    நோன்பு முடிவதால் நீங்க சொல்லியிருப்பத் போல் கூடாரைவல்லி மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும்...நான் திருக்குறுங்குடிக் கோயிலில் சின்ன வயசில் அப்பா வழிப் பாட்டியிடம் சென்ற போது கோயிலில் முழங்கவழிவார அந்தபால் சோறு பாலில் கலந்து வெல்லம் சேர்த்த அக்காரைவடிசல் அவ்வளவு டேஸ்டியா இருக்கும்...தனி மணம்...நானும் தென்னகம் சென்று பல வருடங்கள் ஆகிவிட்டதால் தெரியவில்லை...

    என் அம்மா ஊரில், அதான் திருவண்பரிசாரத்தில் கூடாரைவல்லி அன்று கோயிலில் கொடுத்துவிடுவார் பாட்டி. அங்கு சர்க்கரைப் பொங்கல் செய்து பிரஸாதமாய் வீட்டுக்கு வரும்.... நானும் என் கஸினும் ஊர் முழுக்க வீடு வீடாகக் கொண்டு கொடுப்போம்...ஊரில் எங்கள் குடும்பத்தினர் இருந்தவரை செய்தார்கள்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தில்லையகத்து கீதா, மதுரை கூடலழகர் கோயிலில் இருந்து அப்பா வாங்கி வருவார். மற்றபடி அம்மா செய்யும் சர்க்கரைப் பொங்கலுக்கு ஈடு, இணை இல்லை! :)))) நீங்க ஊர் முழுக்கக் கொடுப்பீங்க. நானும் என் தம்பியும் ஊரிலுள்ள பெருமாள் கோயிலில் எல்லாம் கோஷ்டிக்குப் போவோம்! :))) ஹிஹிஹி, பிரசாதம் வாங்கத் தான்! :)

      Delete
  7. மீள் பதிவு என்றாலும் நான் இப்போதான் பார்க்கிறேன்...ரசித்தேன் கீதாக்கா...அழகா சொல்லியிருக்கீங்க

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் அது ஒரு கனாக்காலம்! எல்லாமே நிறையத் தரம் வெவ்வேறு மாதிரியா எழுதியாச்சா! இப்போ எழுதணும்னு தோணுவதே இல்லை! :))))))))))

      Delete
    2. அது எப்படி.. எழுதுங்க. படிக்கிறோம். எழுதும்போது உங்களுக்குமே அந்த எழுத்தில் ஆழ்ந்துவிட வாய்ப்பு கிடைக்குமே.

      Delete
    3. வாங்க நெ.த. மீள் வரவுக்கு நன்றி. எழுதும்போது ஆழ்ந்துவிடுவதோடு மட்டுமல்ல பல சமயங்களில் கண்ணீரே வந்துடும்! :)

      Delete