எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, November 02, 2017

மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!

வடகிழக்குப் பருவ மழைக்காலம் இப்போத் தான் ஆரம்பம்! நான்கைந்து நாட்களுக்குள் தான் ஆகிறது. சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் இரண்டு நாட்களோ என்னமோ மழை பெய்திருக்கு போல! ஏனெனில் இங்கே திருச்சி/ஶ்ரீரங்கத்தில் அவ்வளவு மழை இல்லை! அதுவும் ஶ்ரீரங்கத்தில் தூறினாலே பெரிய விஷயம்! இங்கே வந்த இந்த ஐந்து வருஷங்களில் நல்ல மழை ஒரு இரண்டு நாட்கள் சேர்ந்தாற்போல் பெய்து பார்க்கவே இல்லை! இந்த வருஷம் இங்கேயும் தண்ணீருக்குக் கஷ்டம் தான் என்று திருச்சி வாழ் மக்கள் சொன்னார்கள். இங்கே எங்களுக்குக் காவிரிக்கரையோரம் என்பதால் அதிகம் பிரச்னை இல்லை. போரில் வேலை செய்தாலோ, அல்லது தண்ணீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்தாலோ அன்று தண்ணீர் வராது. முன்கூட்டியே சொல்லி விட்டால் பிடிச்சு வைச்சுடலாம். பெரிய அளவில் பிரச்னை இல்லை. மழை இல்லாமல் இங்கே காய்கறிகள் விலை எல்லாம் தாறுமாறாக ஏறிக் கிடக்கின்றன.


சென்னைக்குப் பல இடங்களில் இருந்தும் காய்கள் வரும்! அப்படியும் அங்கும் விலை ஏற்றம் தான். ஏனெனில் மக்கள் பெருக்கம். காய்களுக்கு உள்ள தேவை! சுற்று வட்டாரங்களில் மழை பொழிந்து காய்கறிகள் பயிரிடுவோர் தண்ணீர்க் கஷ்டம் இல்லாமல் இருந்தால் தான் காய்கள் விலை குறைய வாய்ப்பு! 2015 ஆம் வருஷத்தில் பெய்த மழையினாலும் வெள்ளத்தினாலும் சென்னை வாசிகள் மழை என்றாலே பயப்படுகிறார்கள். இது ஓர் உளவியல் பிரச்னையாகவே இருக்கிறதோ எனத் தோன்றுகிறது. ஏனெனில்
 சென்னையில் தண்ணீர்ப் பிரச்னை தீராத பிரச்னை! அங்குள்ள ஏரிகள் எல்லாம் கூறுபோடப் பட்டு வீடுகளாகவும், குடியிருப்புகளாகவும் மாறி எத்தனையோ ஆண்டுகள் ஆகின்றன. அம்பத்தூரில் இருந்து கொரட்டூர் ஏரிக்குச் செல்லும் மழைநீர் வாய்க்காலை எல்லாம் ஆக்கிரமித்தாயிற்று. இப்போ மழைநீர் சாலைகளில் தான் தேங்கும்! அது போகும் வழியெல்லாம் மூடி எந்தக் காலமோ ஆகிறது. இப்படி இருக்கும்போது தண்ணீர் சாலைகளில் தேங்குகிறது என அரசைச்  சாடுவது எந்த விதத்தில் நியாயம்?

மின் வாரியம் மின்சாரத்தைத் துண்டித்தால் மின் வாரியத்தைத்திட்டும் நாமே மின்சாரத்தின் மூலம் இறப்போரைக் குறித்தும் அதே மின் வாரியத்தைச் சாடுகிறோமே! தண்ணீர் சாலைகளில் அதிகம் தேங்கி இருந்து மின்சாரக் கம்பங்கள் அருகே, மின்சார ட்ரான்ஸ்ஃபார்மர்கள் அருகே எல்லாம் நீர்த் தேக்கம் இருந்தால் மின் வாரியம் மின்சாரத்தைத் துண்டிக்கத் தான் செய்யும். அப்படி எல்லாம் கவனமாக இருந்தும் இரு சிறு பிஞ்சுக்குழந்தைகள் உயிர் இழந்திருக்கின்றன. இதற்குக் காரணமானவர்கள் என்று சிலரைத் தாற்காலிகமாக வேலை நீக்கம் செய்திருக்கிறார்கள். ஆகவே முன்கூட்டியே மின்சாரத்தை எச்சரிக்கை உணர்வோடு துண்டித்தால் பொதுமக்களாகிய நாம் அதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

இருக்கும் கொஞ்ச, நஞ்ச ஏரிகளையும் தூர் வாரி மழைநீர் சேமிக்கும்படி பண்ண வேண்டும், அதை விடுத்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து கொள்கிறது.  சாலைகளில் வெள்ளம் என்று சென்னையை மட்டுமே தொலைக்காட்சிகளில் காட்டுகிறார்கள். அரசைக் குற்றமும் சொல்கிறார்கள். ஆனால் முகநூலில் இன்று ஒரு நண்பர் எழுதி இருந்ததில் அவர் கொளத்தூரில் இருந்து மயிலாப்பூர் வரை சென்று திரும்பியதில் சாலைகளில் நீர்த்தேக்கத்தைக் காண முடியவில்லை என்றும், ஆங்காங்கே குப்பைகளைத் துப்புரவுப் பணியாளர்கள் உடனுக்குடன் அகற்றி வந்தார்கள் எனவும் சொல்கிறார். இத்தனைக்கும் அவர் ஷேர் ஆட்டோவில் கொளத்தூரில் இருந்து அண்ணாநகர் திருமங்கலம் வரையும், அங்கிருந்து மயிலாப்பூர், மந்தவெளிக்குப் பேருந்திலும் தான் சென்றிருக்கிறார். அதுவும் பகல் நேரம்! பீக் அவர்ஸ் எனப்படும் போக்குவரத்து அதிகம் இருக்கும் நேரம். எல்லோரும் நம்மைப் போன்ற மனிதர்கள் தாமே! அவர்களுக்கும் குடும்பம், வீடு, பிள்ளைகள் இருக்கின்றனர் அல்லவா? அவற்றை எல்லாம் மறந்து தான் நம்போன்றவர்க்கு சேவை செய்ய வருகின்றனர்.


அதோடு இல்லாமல் 2015--2016 மழை, வெள்ளத்தின்போது கொடுத்த செய்திகளை இப்போது புதிய செய்தி போல் வாட்ஸப், முகநூல் மூலம் பரப்பி வருகின்றனர். அந்தச் செய்தியில் கொஞ்சமும் உண்மை இல்லை. அதை நம்பி யாருக்கும் அனுப்பாதீர்கள்! தேவை எனில் அதில் உள்ள தொலைபேசி எண்களுக்குத் தொலைபேசி உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். அதன் பின்னர் செய்தியை மற்றவர்க்கு அனுப்புங்கள்.

ஆகவே தொடர்ந்து நேர்மையான முறையில் செய்திகளைப் பொதிகை போல் தரும் செய்தி சானல்களை மட்டுமே பாருங்கள்! சென்னையில் மழை  நின்றால் போதும் என நினைக்காதீர்கள். மழை வேண்டும். அதிலும் சென்னை வாழ் மக்களுக்கு மழை கட்டாயம் தேவை. இல்லை எனில் இன்னும் இரண்டு மாதம் சென்றால் மார்ச்--ஏப்ரலில் இருந்தே குடிநீருக்குத் தட்டுப்பாடு வந்து விடும். மழை நன்றாகப் பொழிந்து புழல், போரூர், செம்பரம்பாக்கம் போன்ற ஏரிகள் மட்டுமில்லாமல் இங்கே தமிழ்நாட்டின் உள் பாகங்களிலும் மழை நன்கு பொழிந்தால் தான் சென்னை வாசிகளுக்கு வீராணம் ஏரி நிரம்பிக் குடி தண்ணீர்த் தட்டுப்பாடில்லாமல் கிடைக்கும். இங்குள்ள விவசாயிகளுக்கு வயல்களில் பயிரிட ஏதுவாக இருக்கும். காய்கறிகள் நன்கு விளையும். காய்கறிகள் விளைச்சல் அதிகமானால் தான் உங்களுக்கு வாங்கும் விலையில் கட்டுப்படி ஆகும்படி காய்கள் விற்க முடியும்!

உணவு தானியங்கள் என எல்லாவற்றிற்கும் மழை நீர் தேவை! மழையை யாரும் வேண்டாமென்று சொல்லாதீர்கள்! அவரவர் வீட்டுச் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகவும் சுத்தமாகவும் மழை நீர் வடியும்படியும் வைத்துக் கொண்டாலே போதும். மழை நீர் தேங்காமல் ஓடி விடும்! அதை விடுத்துத் தொலைக்காட்சிகளுக்குப் பேட்டிகள் கொடுத்து மழையை விரட்டி அடிக்காதீங்க! மழையையே நம்பி இருக்கும் மாவட்டங்கள் பல இருக்கின்றன தமிழ்நாட்டில்! அவங்களுக்காகவாவது மழை நன்றாகப் பொழிய வேண்டும்.

மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்! 

Tuesday, October 31, 2017

கொஞ்சம் ரசிக்க! நோ போட்டி ஶ்ரீராமோடு! :)

முகநூல் நண்பர்கள் பலருக்கும் திரு பாக்கியம் ராமசாமி என்னும் ஜ.ரா.சு. அவர்களைத் தெரியாமல் இருக்காது. பல்லாண்டுகளுக்கு முன்னர் அவர் எழுதின ரவாதோசை பற்றியதொரு கட்டுரையை யாரோ மீண்டும் கேட்க அதைப் பதிவிட்டதோடு ஆனியன் ரவாதோசை ரசிகர் சங்கம் என்னும் பொருள்படி ORDS என்னும் ரசிகர் மன்றத்தையும் துவக்கி அதில் சேருபவர்கள் அவரவருக்கு வெங்காய ரவாதோசையோடு ஏற்பட்ட அனுபவங்களைப் படங்களுடன்பதியச் சொல்லி இருந்தார். அப்போ நான் அம்பேரிக்காவில் இருந்தேன்னு நினைக்கிறேன். பையர் வீட்டிலோ, பெண்ணின் வீட்டிலோ ரவாதோசையே பண்ண முடியாது! அப்படியும் ஒரு நாள் எங்க ரெண்டு பேருக்கு மட்டும் எனப் பெண் வீட்டில் ரவாதோசை பண்ணியும் அதைப் படம் எடுத்துப் போட முடியலை. அதுக்குப் பரிசு எல்லாம் கொடுத்தார்! ம்ஹூம்னு பெருமூச்சு விட்டதோடு சரி! நமக்குக் கொடுத்து வைக்கலைனு நினைச்சுண்டேன்.  அவர் ரவாதோசை பற்றி எழுதிய வெங்காய ரவாதோசை மஹாத்மியம் சுட்டி கிடைச்சால் பகிர்கிறேன்.

அப்புறமா இந்தியா வந்ததும் பலமுறை ரவாதோசை (ஆசை தீர) பண்ணினாலும் ஆனியன் போட்டுப் பண்ண முடியலை. நேத்திக்குத் திடீர் என ரவாதோசை பண்ணும் எண்ணம் வந்தது. ஆனால் காலம்பர சாம்பார் வைக்கலை. ராத்திரிக்கு வைச்சால் மிஞ்சிடும். ஆகவே தேங்காய்ச் சட்னி, ஏற்கெனவே முதல்நாள் அரைச்சு வைச்சிருந்த தக்காளிச் சட்னி மற்றும் கொத்துமல்லிச் சட்னி, வெங்காயச் சட்னியோடு திருப்தி அடையலாம்னு முடிவு கட்டினேன். இதிலே நம்ம ரங்க்ஸ் தேங்காய்ச் சட்னியைத் தவிர மற்றவற்றைக் கண்ணெடுத்தும் பாரார்! ஆகவே கொத்துமல்லிச் சட்னியும் ஏற்கெனவே அரைச்சது கொஞ்சம் இருந்ததைத் தேவை எனில் எடுத்துக்கலாம்னு விட்டுட்டேன். யாருப்பா அங்கே கொத்துமல்லி விற்கிற விலையில் னு கூவுறது? ஹிஹி, அதான் அரைக்கலையே! மற்றபடி தேங்காய், வெங்காயச் சட்னிகள் தயார் செய்யப்பட்டன. ரவாதோசைக்குக் கலவையும் கலந்து வைக்கப்பட்டது.  ஹிஹி, மாவு கலக்கும்போது படம் எடுக்கும் நினைவு வழக்கம் போல் இல்லை. முதல் தோசையை அடுப்பில் உள்ள தோசைக்கல்லில் ஊற்றியதும் நினைவு வந்தது. கீழே மாவு கலந்திருக்கும் பாத்திரத்தின் மேல் தோசைத்திருப்பியோடு! :)


தோசையை தோசைக்கல்லில் ஊற்றியதும் எடுத்த படம்! நினைவா எடுத்துட்டோமுல்ல! :)


தோசையைத் திருப்பிப் போட்டதும் எடுத்த படம் கீழே!




திருப்பிப் போட்டதும் எடுத்த படம். வெங்காயத்தைப் பொடிப்பொடியாக நறுக்கியதால் ஜாஸ்தி தெரியாது. அதோடு நான் வெங்காயத்தை மாவோடு கலந்து விட்டேன். ஓட்டல்களில் மேலே தூவுறாப்போல் தூவவில்லை. ஏனெனில் வெங்காயம் கொஞ்சம் முறுகலாக ஆனால் தான் எங்க ரெண்டு பேருக்குமே பிடிக்கும். மேலே தூவினால் பச்சை வெங்காயம் மாதிரியே இருக்கு பல சமயங்களிலும். கீழே சட்னி வகைகள்.


முன்னால் தெரிவது தேங்காய் அதுக்கு வலப்பக்கம் தக்காளி+கொத்துமல்லிச் சட்னி, இடப்பக்கம் வெங்காயச் சட்னி! ஆசையாய் தோசை சாப்பிட வாங்க!


ரவாதோசை கலவைக் குறிப்பு:

நல்ல பொடி ரவையாக இருந்தால் அரை மணி முன்னால் ஊற வைச்சால் போதும். எங்களோடது கொஞ்சம் பெரிய ரவை.  என்றாலும் அரை மணி முன்னால் தான் ஊற வைச்சேன்.

ரவை இரண்டு கரண்டி அல்லது ஒரு சின்னக்கிண்ணம்

அரிசி மாவு ஒரு சின்னக் கிண்ணம்

வறுத்து அரைத்த உளுத்தமாவு இரண்டு டேபிள் ஸ்பூன்

கோதுமை மாவு ஒரு கரண்டி! (மைதாமாவு இப்போதெல்லாம் சேர்ப்பதில்லை! ஆதலால் கோதுமை மாவு! உளுத்தமாவு சேர்ந்து வரதுக்காக! எப்போவுமே கைவசம் இருக்கும் வறுத்து அரைத்த உளுத்த மாவு!) எந்த தோசைக்கும் உளுத்தமாவு போட்டால் நன்றாக எடுக்க வரும். இதில் பச்சைமிளகாய், ஜீரகம், இஞ்சி, கருகப்பிலை, கொத்துமல்லி சேர்த்துக் கடுகு தாளித்துவிட்டு அரை மணி வைத்துப் பின்னர் தோசை வார்க்க ஆரம்பிக்கலாம். 

Monday, October 30, 2017

தீராத மன வேதனை! :( எப்போ மாறும்!

நேற்றுக்  காலம்பர இருந்து இணையம் வரலை! இணையச் சேவையில் தான் குறைபாடுனு நினைச்சா இங்கே நம்ம குடியிருப்பிலே உள்ள மின் இணைப்பு ஒரு ஃபேஸ் முழுக்க வேலை செய்யலை. பக்கத்துக் கட்டிடத்தின் லிஃப்ட், விளக்குகள், அவங்க வீட்டு மின் சாதனங்கள் எதுவும் வேலை செய்யலை. நம்ம பக்கம் லிஃப்ட் இருந்தது. மின் சாதனங்கள் வேலையும் செய்தன.  இணையச் சேவை கொடுப்பவர் அலுவலகத்திலிருந்து ஒருத்தர் வந்து பார்த்துட்டு இதை உங்க குடியிருப்பு ஆட்கள் தான் சரி செய்யணும்னு சொல்லிட்டுப் போயிட்டார். அது ஆச்சு electrician வந்து பார்த்துச் சரி பண்ணி இணையம் வர மதியம் ஒரு மணி ஆச்சு! அப்புறம் தொலைக்காட்சியில் படங்கள் வரலை! சரினு மறுபடி அவங்களைக் கூப்பிட்டா யாருமே தொலைபேசியை எடுக்கலை. போனால் போகட்டும் போடானு பாடிட்டுப் போய்ப் படுத்தாச்சு!

3 மணிக்குத் தொலைக்காட்சியைப் போட்டால் வந்திருக்கு! எல்லாச் சானல்களிலும் பி.சி.யைப் போட்டு வாங்கிட்டிருந்தாங்க. தலைவர்கள் தான் இப்படின்னா மக்கள் போற போக்கு! அதுக்கும் மேலே! விசாகப் பட்டினத்தில் சாலையில் மயங்கிப் படுத்திருந்த பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்ததைப் படிச்ச வேதனை ஆறுவதற்குள்ளாக வேறொன்று. இது தமிழ்நாட்டில்னு நினைக்கிறேன்.   சமீபத்தில் மனம் பதற வைத்த வீடியோக்கள் சில பார்த்துட்டு ரொம்பவே வேதனையாப் போச்சு! தூத்துக்குடியில் ஒரு குடும்பமே எரிந்ததை யாரோ படம் எடுத்துப் பகிர்ந்திருக்காங்களேனு நினைச்சா இன்னொருத்தர் முகநூலில் ஒரு குழுமத்தில் சிநேகிதன் என நினைத்துப் பிக்னிக் சென்ற ஒரு பெண்ணை அந்தச் சிநேகிதன் வலுக்கட்டாயமாய்க் காட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்வதைப் படம் எடுத்துப் போட்டிருக்காங்க. அந்தப் பெண் கத்திக் கூப்பாடு போடுகிறாள். தப்பிக்க முயற்சி செய்கிறாள். கூடவே வந்திருக்கும் இன்னொரு பெண்ணும் அந்தப் பையருக்கு உடந்தையா, யார் படம் எடுத்தாங்க எதுவும் தெரியலை! அந்தப் பெண் தப்பினாளா இல்லையா என்றும் தெரியலை! ஆனால் கதறித் துடித்தாள்! அதைப் பார்த்த சில நண்பர்கள் முகநூலில் அதைப் பகிர்ந்த நண்பரிடம் இந்த வீடியோவை அழித்துவிடு என்று சொன்னார்கள்.

உண்மைதான்! அந்தப் பெண்ணின் முகம் தெளிவாகத் தெரியும் வண்ணம் எடுக்கப்பட்டிருந்தது. தொலைக்காட்சியில் கூட வந்தது என்று நினைக்கிறேன். அதுக்கப்புறமா யாரானும் கேட்டுக் கொண்டதன் பேரில் அதைப் போடாமல் அழிச்சிருக்காங்க போல நல்லது தான்! முகநூலில் கூட அழிச்சிருப்பாங்க என்றே நினைக்கிறேன்.  என்றாலும் இப்போதைய இளைஞர்கள் செல்லும் வழி சரியானதாய்த் தெரியலை! ஏன் இவ்வளவு மோசமாகக் கீழான இழிந்த ரசனையுடன் இருக்கிறார்கள் என்பதும் புரியவில்லை. யார் மேல் குற்றம்? பெற்றோரா? வளர்ப்பா அல்லது சமூகச் சூழலா? அல்லது சரியான வழிகாட்டி இல்லாமையா! எது நல்லது, எது கெட்டது என்பது புரியாமல் போச்சா? இவங்களுக்கெல்லாம் அக்கா, தங்கை இல்லையானு நாம் இப்போக் கேட்க முடியாது! ஏனெனில் பெரும்பாலோர் ஒற்றைப் பிள்ளைகள் அல்லது ஒற்றைப் பெண்கள்! முதல்லே இந்தக் கலாசாரத்தை உடைச்சு எறிஞ்சுட்டு குறைந்தது 2 குழந்தைகளாவது பெத்துக்கணும்னு சட்டம் கொண்டு வரணும்! :(

Tuesday, October 24, 2017

ஏன், ஏன், ஏன்??????

"மெர்சல்" திரைப்பட விவாதங்கள் ஓய்ந்து இப்போக் "கந்து வட்டி" விவாதங்கள், போராட்டங்கள் ஆரம்பிச்சிருக்கு! :( இது வரை எல்லோரும் என்ன பண்ணிட்டிருந்தாங்கனு தெரியலை! இப்போத் தான் நிதி எல்லாம் மும்முரமாத் திரட்டிக் கொடுக்கிறாங்க. இதை முன்பே பண்ணி இருந்தா நாலு உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்கும். அவங்க தீ வைச்சுக்கும்போதும் எரியும் போதும் அதைப் படம் எடுக்கும் அளவுக்கு மனசு கல்லாக அங்கிருந்த மக்களுக்கு இருந்திருக்கு! யாரும் தடுக்கலை! ஏதோ இலவசக் காட்சினு நினைச்சாங்க போல! :( மிருகங்களை விட மோசமாகப் போய்க் கொண்டிருக்கோம்! :(

இம்மாதிரி எல்லாம் நடக்காமல் இருக்க வேண்டியே மத்திய அரசு "முத்ரா"திட்டம் கொண்டு வந்திருக்கு! ஆனால் அதை மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டிய ஊடகங்கள் அதைச் செய்வதில்லை. வங்கிகள் கேட்கவே வேண்டாம். இதில் அவங்களுக்கு என்ன லாபம்னு நினைக்கிறாங்க போல! ரிசர்வ் வங்கியோ தன்னுடைய தனி ஆளுமை இதனால் பாதிக்கப்படும்னு நினைக்கிறது! ஆக ஒரு நல்ல திட்டம் பயனின்றி வீணாகிக் கொண்டிருக்கிறது. இந்த மத்திய அரசு ஏழை மக்களுக்கு எனச் செய்து கொண்டிருக்கும் பல நல்ல திட்டங்கள் அடித்தட்டு மக்கள் வரை சென்று அடைவதே இல்லை. இப்போ 108 ஆம்புலன்ஸ் திட்டமே மத்திய அரசின் நிதி உதவியுடன் ஏற்பட்டது தான்! ஆனால் தமிழ்நாட்டில் அப்படிச் சொல்லுவதே இல்லை. இத்தனைக்கும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப் பட்டது என நினைக்கிறேன். ஆனாலும் இது மத்திய அரசின் நிதி உதவியால் நடப்பதைச் சொல்லுவதே இல்லை!  மற்ற மாநிலங்களில் ஊர்தியின் இரு பக்கச் சுவர்களிலும் மத்திய அரசின் நிதி உதவி எனத் தெளிவாகக் குறிப்பிடப் பட்டிருக்கும்!

மற்ற நாடுகள் எனில் ஊடகங்கள் இந்தப் பணியைச் செய்யும். இங்கேயோ இல்லாத ஒரு விஷயத்துக்கு ஊடகம் வாத, விவாதம் செய்வதைத் தான் முக்கியமாய்க் கருதுகிறது.  ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவிலிருந்து நேற்று சோதனைக்கு விஷால் வீட்டுக்குச் செல்லவில்லை என்பதைப் பத்திரிகைகளுக்குத் துறை ரீதியாக அறிக்கை கொடுத்தும் எல்லாத் தமிழ் சானல்களும் இதை ஏதோ முக்கியமாக எடுத்துக் கொண்டு விஷாலுக்கு ஆதரவாக வாத, விவாதங்கள் நடத்திக் கொண்டிருந்தனர்.

கருத்துச் சுதந்திரம் இல்லைனு சொல்லும் ஊடகங்களும், அரசியல்வாதிகளும் சுதந்திரம் இல்லாதப்போவே இத்தனை பேசினால் சுதந்திரம் கொடுத்துட்டா இன்னும் என்னென்ன பேசுவாங்களோ!

அது மட்டுமா? விசாகப்பட்டினத்தில் பசிக்கொடுமையுடன் சாலையில் மயங்கிக் கிடந்த பெண்ணிடம் பட்டப்பகலில் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பலாத்காரம் செய்திருக்கிறான் ஒரு கயவன்! அதைப் படம் எடுத்துத் தள்ளி இருக்கிறார்கள் நம் மக்கள்! யாரும் அதைத் தடுக்கவில்லை. அந்தக் கயவனைப் பிடிக்கவும் முடியவில்லை. அவன் போயே போய்விட்டான்! அந்தப் பெண் இப்போ மருத்துவமனையில்! என்னவோ படிக்கும் செய்திகளும் சரி, பார்க்கும் செய்திகளும் சரி! மனதைக் கலங்க அடிக்கின்றன!


முத்ரா கடன் பெற இங்கே சென்று பார்க்கவும். இந்த முத்ரா திட்டத்தின் மூலம் கடன் வசதியைப் பின் தங்கிய மாநிலங்களான உத்திரப் பிரதேசம், பிஹார், ஒரிசா ஆகிய மாநிலங்களின் மக்கள் பெற்றிருக்கிறார்கள். இந்த அருமையான திட்டத்தைத் தமிழகத்தில் ஏன் அறிமுகம் செய்யவே இல்லை?  வெறும் இட ஒதுக்கீடு மட்டும் போதுமா?  இம்மாதிரியான வசதிகளை மத்திய அரசு செய்து கொடுப்பதும் அவர்களைப் போய்ச் சேர வேண்டாமா? 

Saturday, October 21, 2017

அதிராவின் சிந்தனையும் என் பதிலும்!

//எதுவும் சரியாப் புரியல்ல ... கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் எனத்தான் படிச்சோம்.. //

//அதனால கோயிலுக்குள் போய் விக்கிரங்களுக்கு அருகில் நின்று சேவை செய்தால் மட்டுமே கடவுளை நெருங்கலாம் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை...//

//அன்பு, கருணை... அடுத்தவர்கள் மேல் காட்டும் பாசம், நன்னடத்தை, அடுத்தவர் மனம் புண்படாமல் பேசுவது, மனச்சாட்சிக்குப் பயந்து வாழ்வது, முடிந்தவரை நல்ல விசயங்கள் செய்வது, பிறரைத் தூற்றாமை.... இப்படிச் செயல்கள் மூலம்தான் கடவுளை நெருங்க முடியும் அல்லது இப்படி இருப்போர் கடவுளாகத் தெரிவார்கள் என்பதே என் கருத்து.//

இங்கே

மேலே உள்ளவை தில்லையகத்து துளசிதரனின் பதிவில் அதிரா போட்டிருக்கும் கருத்து.  உயர்ந்த கருத்து என்றாலும் அதன் சாராம்சம் கடவுளை நெருங்குவதற்காகவே கோயில்களில் சேவை என்னும் பொருளில் வருகிறது. அப்படி இல்லை. அவங்க கடவுளைக் கண்டு கொண்டதாலேயே கோயில்களில் உள்ள விக்ரஹங்களை மனப்பூர்வமாகக் கடவுளின் உருவாக ஏற்றுக்கொண்டு அபிஷேஹ ஆராதனைகள், அலங்காரங்கள் செய்து அவர்களும் ஆனந்தம் அடைந்து நம்மையும் மகிழச் செய்கின்றனர். ஆனால் அதிரா அவர்கள் தன்னுள் "கடவுள்" இருப்பதைப் புரிந்து வைத்திருக்கிறார். அதனாலேயே அவருக்குக் கோயில் கட்டி விக்ரஹம் பிரதிஷ்டை செய்து அதை வழிபட ஒரு பூசாரி அல்லது அர்ச்சகர் ஏற்பாடு செய்வது குறித்துப் புரியவில்லை.

ஆனால் அவங்க சொல்வது மிகப் பெரிய விஷயம். அவரால் ஆழமாகச் சிந்திக்க முடிகிறது! எல்லோராலும் இயலுமா? சாமானியரால் புரிஞ்சுக்க முடியாத, ஏற்க முடியாத ஒரு விஷயம். கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்! உண்மை தான்! என்னைப் போன்ற பாமரர்கள்  அந்தத் தூணையும்   கடவுளாக நினைத்துக் கும்பிட ஆரம்பித்தால்? அதை விடுங்க! உண்மையில் கோயிலுக்குள்ளே போய் விக்ரஹங்களை ஆராதித்துச் சேவை செய்பவர் கடவுளை நெருங்கலாம் என்னும் காரணத்துக்காகவா போகிறார்? கடவுள் தான் நம்முள்ளே இருக்காரே! அப்புறமா எதுக்குப் போகணும்? ஏன் ஆராதிக்கணும்? கடவுள் தனி, நாம் தனி என நினைப்பவரா அவரும்? அப்படி எனில் அவரும் நம்மைப் போன்ற பாமரர் தானா?

கடவுளை நெருங்குவதற்காக அவர் வழிபாடுகள் செய்யப் போவதெனில் ஒவ்வொரு பக்தனும் கர்பகிரஹத்தின் உள்ளே போய் அல்லவா வழிபட்டு வரவேண்டும்? அப்படியா செய்கிறோம்? இல்லை! நாம் வெளியே நிற்கிறோம். கடவுளின் அருகே அல்லது விக்ரஹங்களின் அருகே செல்வது வேறு ஒருவர்! அவர் மட்டும் ஏன் போகணும்? அதான் அதிராவின் கேள்விக்குப் பொருள் என நினைக்கிறேன். அவர் தான் மட்டும் அருகே போய் வழிபாடு செய்து கடவுளின் அருகே போய்விட்டார் எனில் எல்லோருமே அதுக்குத் தான் முயல்வார்கள்.

அப்படி எல்லாம் இல்லை. கடவுள் தூணிலும் இருக்கிறான். துரும்பிலும் இருக்கிறான். உங்களுள்ளும், என்னுள்ளும் இன்னும் எல்லோருள்ளும் இருக்கிறான். கடவுள் நம்முள்ளே இருக்கிறான் என்பதை நம்மால் உணர முடியுமா? சரி, நமக்கு அது தெரியுது! ஆனால் பாமரர்களுக்கு? அவங்க புரிஞ்சுப்பாங்களா? கடவுளுக்கு என ஓர் உருவம் கொடுத்து, சிற்பமாகச் செய்து பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் செய்தால் தான் அவங்களுக்குத் திருப்தி!   இன்னும் சிவவாக்கியர் சொன்னாப்போல

நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே;
சுற்றி சுற்றி வந்து முணு, முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா!
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ!
நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்..!

என்பது போல அதைக் கல் என நினைத்தால் கல் தான்; விக்ரஹம் கடவுள் என நினைத்தால் கடவுள். சிவவாக்கியரைப் போல் நாம் நம்முள்ளே நாதனைக் காண்கிறோமா? நமக்கு என ஒரு வெளிப்பாடு தேவைப்படுகிறது. ஒரு சார்புத் தன்மை தேவை! இது தான் நம் தெய்வம் என ஏதேனும் ஒன்றை பற்றிக்கொள்ள மனம் தேடுகிறது. பற்றுக்கோட்டைத் தேடி அலையும் இப்படியான பாமரர்களுக்குத் தான் கோயில், விக்ரஹங்கள் எல்லாம். அங்கே அந்த விக்ரஹங்களுக்கு உயிர் கொடுத்து, அலங்காரம் செய்வித்து, புனிதத்தன்மையைக் கொண்டு வந்து நமக்காகப் பிரார்த்தனைகள் செய்வதற்காகவும், நம்முடைய நன்மைகளைக் கருதி வேண்டிக் கொள்வதற்காகவும் தான் அங்கே அர்ச்சகர். அவர் தனக்காக எதுவும் செய்வதில்லை! தனக்காக எதுவும் பிரார்த்தித்துக் கொள்ளுவதில்லை! நம் போன்ற மூட பக்தர்களுக்காகவே அங்கே சேவை செய்ய வேண்டிக்காத்திருக்கிறார்.

நமக்குக் கோயிலுக்குச் செல்வதும் அங்கே போய் வேண்டிக் கொள்வதும் அப்போது தான் கடவுள் அருள் புரிவார் என நம்புவதும் தான் வாழ்க்கை! நம்பிக்கை தான் வாழ்க்கை! எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாத அறிய முடியாத மஹாசக்தியை உணரத் தான் முடியும்! அதன் இருப்பை எவ்வகையில் வெளிப்படுத்துவது? அதற்குத் தான் இவ்வகை வழி! இதன் மூலம் ஏதும் அறியாப் பாமரர்களுக்கு ஓர் வடிகால் கிடைக்கிறது. மனதில் நம்பிக்கை பிறக்கிறது. ஆகவே நம்மளவில் இந்தக் கோயில்களுக்கு எல்லாம் செல்வதில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் செல்கிறவர்களின் நம்பிக்கையை நாம் தகர்க்க முடியாது!

கோயில்கள் ஒவ்வொன்றும் யோக முறைப்படி கட்டியவை! அந்தக் காலத்துக் கோயில்களைச் சொல்கிறேன். நம் உடம்பையே ஓர் கோயிலாகச் சொல்லுவார்கள்.
"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற்பிரானுக்கு வாய் கோபுர வாயில்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளாமணி விளக்கே!" என்பது திருமூலர் வாக்கு! அதோடு இல்லை. இன்னும் சொல்கிறார்.

"உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்புக்குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை நான் இருந்து ஓம்புகின்றேன்!" என்கிறார். நம் உடலே ஓர் கோயில் என்றும் சொல்கிறார். ஆகையால் உடம்பைப் பேண வேண்டிய அவசியத்தையும் கூறுகின்றார்.

உடம்பே ஆலயம் க்கான பட முடிவு
ஆகவே கோயில்கள் எல்லாம் வெறும் கட்டடங்கள் அல்ல. நாம் நம்முள்ளே காண வேண்டிய இறைவனைக் கோயிலில் முதலில் காண்பது தான் நம்முடைய ஞானம் ஆரம்பிக்கிறது என்பதன் அடிப்படை! இதிலிருந்து தான் படிப்படியாக நாம் நம்முள்ளே இருக்கும் சீவன் தான் சிவன் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அங்கே வழிபாடு நடத்துகிறவர்களும் இதைப் புரிந்து கொண்டு தான் செயலாற்ற வேண்டும். இந்தக் காலத்தில் இது எத்தனை பேரால் முடிகிறது என்பது கேள்விக்குறியே!  கோயில்களும் தேவை! அதில் வழிபாடுகள் நடத்த ஆட்களும் தேவை! ஆனால் அவர்கள் உண்மையாக இறை பக்தியுடன் சித்தத்தைச் சிவத்திலே ஒடுக்கி வழிபாடுகள் செய்பவராக இருக்க வேண்டும்.

இப்போக் கேரளத்திலே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அர்ச்சகர்களிலே ஒருவரான யது கிருஷ்ணன் என்பவர் தன் எட்டாம் வயதிலிருந்தே இறை பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். அவர் சம்ஸ்கிருதத்தில் முதுகலைப்படிப்புப் படித்ததோடு அநிருத தந்திரி என்பவரிடம் வேதம் பயின்றிருக்கிறார். இவர் கல்லூரிப்படிப்பையும் முடித்து மத்திய அரசின் சிவில் சர்வீஸ் தேர்விலும் தேர்வாகி இருந்திருக்கிறார். எனினும் பெற்றோரும் இவரும் இந்த அர்ச்சகர் வேலையையே தேர்ந்தெடுத்திருக்கின்றனர். குருநாதர் மூலம் பெற்ற மந்திர உபதேசத்தை 50 லட்சம் முறை உச்சரித்து குருவின் கட்டளையை நிறைவேற்றி இருக்கிறார்.

இங்கே தமிழ்நாட்டில் எல்லா ஜாதியும் அர்ச்சகர் ஆகணும்னு சொல்றாங்க தான். ஆனால் சம்ஸ்கிருதம் கூடாது, ஹிந்தி கூடாது என்கிறார்கள். வேதப்படிப்பையும் கேலி செய்கின்றனர்.ஆகமம் கற்க சம்ஸ்கிருத அறிவு கொஞ்சமானும் தேவை. என்ன தான் மொழிபெயர்ப்புக்களில் கிடைத்தாலும் மூலத்தில் படிப்பது போல் வராது. ஆனால் இங்கே அது கூடாது என்கின்றனர். ஒரு பக்கம் சம்ஸ்கிருதப் படிப்பை பிராமணர்கள் மற்றவர்களுக்கு அளிக்க மறுத்தார்கள் என்று சொல்கின்றனர். இன்னொரு பக்கம் சம்ஸ்கிருதம் படிக்க மறுப்பவர்கள். சமஸ்கிருதம் என்னும் மொழிப்பாடமே தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது என்று எதிர்ப்போர்! ஆக எல்லா ஜாதியினரும் அர்ச்சகர் ஆவது என்பது எப்படி எனப் புரியவில்லை. ஆகம முறைப்படியான கோயில்களில் அந்த அந்த ஆகமப்படியே வழிபாடுகள் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான உச்ச நீதிமன்ற ஆணை உள்ளது. இவை எல்லாவற்றையும் தாண்டி இதெல்லாம் நடக்க வேண்டும். நடைமுறைக்கு சாத்தியமா என்பது புரியவில்லை.    இவை எல்லாம் தமிழ்நாட்டில் நடப்பதற்கான சாத்தியங்களே கண்களில் படவில்லை! அப்படி நடந்தால் அனைவருக்கும் நல்லதே! யாரும் எதிர்க்கப் போவதில்லை. நல்லதே நடக்கும் என எதிர்பார்ப்போம். எல்லோருடைய மனங்களும் மாறப் பிரார்த்திப்போம். யதுகிருஷ்ணனைப் போன்ற இளைஞர்கள் இங்கே தமிழ்நாட்டில் மட்டும் இருக்க மாட்டார்களா என்ன? நம்பிக்கையுடன் தேடுவோம்.

அடுத்து அதிரா கடைசிப் பத்தியில் சொல்லி இருக்கிறாப்போல் அன்பு, பண்பு, கனிவான பேச்சு, நன்னடத்தை, ஒழுக்கம், பிறர் மனம் புண்படாமல் பேசுவது எல்லாமும் வேண்டும் தான்! அதிலும் அர்ச்சகர்களுக்குக் கட்டாயம் தேவைதான்! ஆனால் எல்லோரிடமும் இந்தக் குணங்கள் இருப்பது என்பது சாத்தியம் அல்ல என்றே நினைக்கிறேன்.  அர்ச்சகர்கள் பொதுவாகக் கோபம் கொள்வதில்லை என்பதைப் பார்த்திருந்தாலும் சிலர் கொஞ்சம் இல்லை நிறையவே கோபக் காரர்களாக இருக்கின்றனர். அப்படியும் பார்க்கத் தான் செய்கிறோம். ஆனால் கோயிலில் வழிபாடுகள் செய்கிறவர்கள் அனைவருமே கெட்டவர்கள் என்னும் எண்ணமும் கொள்ளக் கூடாது! எல்லோரிடமும் இரண்டும் கலந்தே இருக்கும்.   எல்லாவற்றுக்குமே இரண்டு பக்கம் உள்ளது. 

Wednesday, October 18, 2017

ஆனையுடன் தீபாவளி கொண்டாடுங்க!


நேற்றைய தினம் துலா மாதப் பிறப்பு. இந்தத் துலா மாதம் எனப்படும் ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியில் ஸ்நானம் செய்வது சிறப்பாகச் சொல்லப் படுகிறது. காவிரி பற்றிய புராணம் "துலா புராணம்" என்றே அழைக்கப்படுகிறது. இங்கே ஶ்ரீரங்கம் கோயிலில் நம்பெருமாளுக்கு (சின்ன ரங்கு) தினம் தங்கக்குடத்தில் காவிரி நீர் எடுத்துச் செல்லப்பட்டு திருமஞ்சனம் நடைபெறும்.  கடந்த ஐந்து வருஷங்களாக இதைப் பார்த்து வருகிறோம். இந்த வருஷமும் அதே போல் ஆண்டாளம்மா காவிரி நீர் எடுத்துச் செல்லும் காட்சியைக் காணலாம்.  சரியா அம்மாமண்டபத்திலிருந்து ஆனையார் தெருவில் ஏறும் நேரம் தெருவிளக்கை எல்லாம் அணைச்சுட்டாங்க. அதனால் தூரத்தில் வருவதை எடுத்திருப்பது சரியாத் தெரியலை.



இது எங்க குடியிருப்பு வளாக வாசலில்!




 ஆனையார் செல்லும் காட்சி. இந்த வருஷம் ஆனையை வரவழைத்து அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துச் சொல்லியாச்சு. ஶ்ரீரங்கநாதரும் தீபாவளி கொண்டாடப் போகிறார்.  இணையத்து நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். இந்த தீபாவளித் திருநாளில் அனைவர் வாழ்க்கையிலும் அமைதியும் மகிழ்ச்சியும் ஓங்கட்டும்.

Monday, October 16, 2017

ஶ்ரீராம்+நெ.த.வுக்குப் போட்டி!

இந்தப் புதிர் விளையாட்டுப்பெரும்பாலோருக்குப் பிடிக்கிறது எனத் தோன்றுகிறது. இதை இன்னும் கொஞ்சம் பிரபல எழுத்தாளர்களின் எழுத்தைக் கொடுத்துத் தெரிகிறதா என்று பார்க்கலாம். மிகிமா "தேவன்" அவர்களின் "கோமதியின் காதலன்" நாவலைத் தேடிப் பிடித்து வாசித்த மாதிரி பலருக்கும் இதன் மூலம் வாசிக்கும் பழக்கம் வரலாம். ஆகவே கொஞ்ச நாட்கள் தொடரலாமா? அந்தக் கால கட்டத்து நாகரிகம், பேச்சு, வார்த்தை, சுற்றுவட்டாரங்களின் சூழல், சமூகச் சூழல்னு எல்லாமும் தெரிந்து கொள்ள இயலும்.  அப்போதைக்கு இப்போது நாம் எவ்வளவு மாறி இருக்கோம், எந்த விதத்தில் மாறி இருக்கோம்னு எல்லாம் புரியும்.  நம் தமிழ் பேசும் பாங்கே மாறி இருப்பதைப் புரிஞ்சுக்கலாம். சங்கத்தமிழ், பக்தி இலக்கிய காலத் தமிழ், பின்னால் சோழர் காலத் தமிழ், பிற்காலத் தமிழ், நாயக்கர் காலத் தமிழ், பின்னர் ஆங்கிலேய ஆட்சி காலத் தமிழ் எனத் தமிழ் மாறி வந்ததும் அறிய முடியும். வை.மு.கோ. காலத்தில் இருந்து எடுத்துப் போடணும்னு ஆசை தான்! ஆனால் எல்லோரும் படிச்சிருக்கணுமே! :)

ம்ம்ம்ம் எல்லோரும் தீபாவளி பக்ஷணம், பட்டாசு, துணிமணிகள் வாங்குவது என மும்முரமா இருப்பீங்க. நம்ம வீட்டிலே இந்த வருஷம் தீபாவளி இல்லை. அதுக்குனு இனிப்புச் செய்யாமல் இருப்போமா என்ன? இன்றைய விசேஷத்துக்காக நேத்திக்கு ஓர் இனிப்புச் செய்தேன். அது தென் மாவட்டங்களிலேயே குறிப்பாத் திருநெல்வேலிப் பக்கம் அதிகம் செய்வாங்க. அதுவும் தலை தீபாவளிக்கு மாப்பிள்ளை வந்தால் இது நிச்சயம் இருக்கும். அப்புறம் அல்வா, தவலை வடை! இப்போ இந்த ஸ்வீட் எப்படிச் செய்யறதுனு பார்ப்போமா? இதை முதல் முதலாச் செய்யறேன் என்பதால் சோதனை எலியாக யார் மாட்டிப்பாங்கனு கவலையா இருந்தது. அப்புறமா இன்றைய விசேஷத்துக்கு என வைச்சுட்டதாலே இன்னிக்குச் சாப்பிட வரவங்க சாப்பிட்டுப் பார்க்கட்டும்னு நாங்க தப்பிச்சுட்டோம். சேச்சே, நாங்க அப்புறமாச் சாப்பிடலாம்னு இருந்துட்டோம். நம்ம ரங்க்ஸுக்குத் தான் இதிலே ஏக சந்தோஷம்! அவர் இம்முறை சோதனை எலியாக இருப்பதிலிருந்து தப்பிச்சுட்டாரே!

இதோட பெயர் திரிபாகம். இதைப் பத்திக் கேள்விப் பட்டிருந்தாலும் செய்முறை எல்லாம் தெரியாது. இப்போத் தான் முகநூலில் ஒருவர் பகிர்ந்திருந்ததைப் பார்த்துட்டு நானும் கூகிளார் தயவில் தேடிப் பார்த்துத் தெரிந்து கொண்டேன். தேவையான பொருட்கள்.

கடலை மாவு இரண்டு கிண்ணம்

பால் நல்ல கொழுப்புச் சத்து உள்ள பாலாக அரை லிட்டர்

சர்க்கரை இரண்டு அல்லது மூன்று கிண்ணம்

நெய் ஒரு கிண்ணம்

ஏலக்காய், பச்சைக் கற்பூரம் பொடித்தது ஒரு டீஸ்பூன்

பாதாம், முந்திரிப் பருப்புப் பொடித்தது இரண்டு டேபிள் ஸ்பூன். பாதாமை நீரில் ஊற வைத்துத் தோலுரித்துக் கொள்ளவும். 50 கிராம் பாதாம் எனில் 50 கிராம் முந்திரிப்பருப்பு, இரண்டையும் மிக்சி ஜாரில் போட்டு நறநறவெனப்பொடிக்கவும்.

 தட்டில் கடலை மாவு, ஏலக்காய்த் தூள் (சுமார் 30,40 ஏலக்காய்களை அல்லது பத்து கிராம் ஏலக்காய்களைத் தோலுரித்துக் கொண்டு இரண்டு டீஸ்பூன் சர்க்கரையோடு சேர்த்துப் பொடித்து வைத்துவிடுவேன். தேவையானப்போ உபயோகிக்கலாம். குட்டி டப்பாவில் பச்சைக் கற்பூரம்.


மற்றத் தேவையான பொருட்கள், முன்னால் இருப்பது அரை லிட்டர் பால், பக்கத்தில் நெய், பின்னால் கவரில் சர்க்கரை, பக்கத்தில் முந்திரி, பாதாம் பொடித்தது!


அடுப்பில் கடாயை வைத்துக் கடலைமாவை அதில் போட்டு நன்றாக மணம் வரும் வரை வறுக்கவும். பின்னர் அரை லிட்டர் பாலை அதில் சேர்க்கவும்.



பால் சேர்த்துக்கிளறும்போது மேலே காணும்படி பேஸ்ட் மாதிரி வரணும். நன்கு கிளறிக் கொடுக்கவும். கட்டி தட்டக் கூடாது! பின்னர் சர்க்கரை இரண்டு அல்லது மூன்று கிண்ணம் அவரவர் இனிப்புச் சுவைக்கு ஏற்றாற்போல் சேர்க்கவும். சர்க்கரை சேர்த்ததும் கலவை நீர் விட்டுக் கொண்டு கீழ்க்கண்டபடி வரும்.



இப்போது இதில் நெய் சேர்த்துக் கிளறிக் கொண்டே இருக்கவும். கட்டிகள் இருந்தால் உடைத்து விடவும். கிளறிக் கொண்டே இருக்கையில் உள்ளே நாலாபக்கமும் நிறம் மாறிப் பொன் நிறத்தில் பூத்துக் கொண்டு பொங்கி வர ஆரம்பிக்கும். அந்த நிலையில் படம் எடுக்க முடியவில்லை. ஏனெனில் படம் எடுத்தால் கிளற முடியாது! ஒரு கையால் கிளறிக் கொண்டே படம் எடுப்பது சிரமம். ஆகவே அந்தச் சமயம் பொடித்து வைத்திருக்கும் முந்திரி, பாதாம் கலவையைக் கொட்டிக் கிளறிவிட்டு ஏலக்காய், பச்சைக் கற்பூரம் சேர்த்து ஒரு கிளறு கிளறிக் கீழே இறக்கித் தாம்பாளத்தில் கொட்டி விட்டேன். இது பாதாம் அல்வா பதத்துக்கு அல்லது திரட்டுப் பால் பதத்துக்கு இருக்க வேண்டும். முந்திரி, பாதாமைச் சேர்த்த பின்னர் அதிகம் கிளற வேண்டாம் என்கின்றனர். ஆகவே இது நன்கு ஆறியதும் பட்டர் பேப்பர் என்னும் வெண்ணெய் பேப்பரில் உருட்டி வைத்துத் தட்டையாக ஆக்கி நாலாபக்கமும் மூட வேண்டும். விநியோகம் மற்றவர்களுக்குக் கொடுக்க எல்லாவற்றுக்கும் அப்படித் தான் வைச்சுப்பாங்க! கீழே அடுப்பிலிருந்து எடுத்துக் கொட்டியதன் படம்.

இது தான் திரிபாகம் என்பது! இது கடலைமாவு சேர்ப்பதால் மைசூர்ப்பாகு மாதிரியும், பால் சேர்ப்பதால் திரட்டுப் பால் மாதிரியும், முந்திரி, பாதாம் சேர்ப்பதால் காஜு கத்லி மாதிரியும் இருப்பதால் இதுக்கு அந்தப் பெயர்னு நினைக்கிறேன். இந்த வருஷ தீபாவளி சிறப்புப் பலகாரம் இதான்!

இன்னிக்கு வர முடியாதுனு நினைச்சேன். வந்துட்டேன். சுடச் சுடப் பதிவும் போட்டுட்டேன். எங்கள் ப்ளாக் "திங்க"ற கிழமைக்குத் தான் அனுப்ப இருந்தேன். ஆனால் இப்போ தீபாவளி என்பதாலும் நாளைக்கே இதைச் செய்து பார்க்கலாம் என்பதாலும் என்னோட வலைப்பக்கமே போட்டுட்டேன். நாளைக்கு எப்படி வர முடியும்னு சொல்ல முடியாது! இதுக்குக் கருத்தெல்லாம் சொல்லி வைங்க! மெதுவா வந்து பார்க்கிறேன். :) அநேகமா இதுக்குக் கூட்டம் கூடும்!

ஶ்ரீராம்+நெ.த.வுக்குப் போட்டி! புதிர் வருது, வருது, வந்துட்டே இருக்கு!