எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, November 19, 2020

கற்றதெல்லாம் உந்தன் கனிமொழியாலே! கந்த சஷ்டிப்பதிவுகள்! 5

 இப்போது குறிப்பிடப் போகும் கதை தெரிந்தவர்கள் இருக்கலாம், எனக்கு இதன் ஒரு பகுதி மட்டுமே சிறிய வயதில் அறிந்திருக்கின்றேன் வாய்மொழியாக. இந்தக் கதையை நான் படிச்சது 4,5 வருஷத்துக்கு மேல் இருக்கும்.   . வடிவேலனைக் கல்லில் வடித்த ஒரு சிற்பியைப் பற்றிய கதை இது. செவிவழிச் செய்தியாகவே சொல்லப் பட்டு வருகின்றது. ஆகவே யாராவது "தரவு"னு கேட்டுட்டு வந்தால், தரவே மாட்டேன் என்பதையும் சொல்லி விடுகின்றேன். ***********************************************************************************சோழநாட்டு அரசர்கள் அனைவருமே சைவப் பற்றுடையவர்கள். ஈசனிடம் பற்றுள்ளவர்களுக்கு அவர் குமாரனிடம் பக்தி இல்லாமல் போகுமா? குறைவின்றி நிறைவாகவே இருந்து வந்த சமயம் அது. இந்தக் கதை நடந்த காலத்தில் விஜயநகரப் பேரரசு ஆட்சி புரிந்து வந்தது என்றும், அதன் கீழ் கப்பம் செலுத்தி வந்த சோழச் சிற்றரசன் என்றும் சொல்லுவாருண்டு. ஆன்மீகக் காவலர்கள் ஆன சோழச் சிற்றரசர்களில் ஒருவன் ஆன முத்தரசன் என்பான் அப்போது சோழ நாட்டை ஆண்டு கொண்டிருந்தான். ஒருமுறை அவன் சிக்கலில் ஈசனைத் தரிசனம் செய்ய வந்திருக்கின்றான். அதுவரையிலும் சிக்கிலில் ஈசன் மட்டுமே கோயில் கொண்டிருந்ததாயும் சொல்கின்றனர். சிக்கிலுக்கு வந்த முத்தரசன் ஈசனின் வரலாற்றைக் கேட்டறிந்தான். வசிஷ்டர் காமதேனுவின் வெண்ணையை லிங்கமாய்ப் பிடித்து வைத்துப் பூஜை செய்து வந்ததையும், அந்த லிங்கத்தைப் பெயர்த்து எடுக்க முயன்ற பலராலும் முடியாததையும் லிங்கம் மண்ணில் சிக்கிக் கொண்டதாலேயே ஊருக்கும் சிக்கில் எனப் பெயர் வந்ததையும் கேட்டறிந்த முத்தரசன் உணர்ச்சி மேலிட்டுப் பல மானியங்களை ஒதுக்கினான் கோயிலுக்கு. 

அந்தக் கோயிலில் சிவ குமாரன் கோயிலில் இல்லை என்பதையும் அறிந்துகொண்டு சிங்காரமாய், அழகாய், நேர்த்தியாய் ஒரு வேலனை வடிக்கச் செய்து அங்கே பிரதிஷ்டை செய்யவும் உத்தரவிட்டான் மன்னன். மன்னனின் ஆட்கள் சிற்பிக்காக அலைந்து, திரிந்து வெண்ணாற்றின் கரையில் ஒரு பாழடைந்த மண்டபத்தில் தன்னந்தனியே சிலைகள் வடித்துக் கொண்டிருந்த ஒரு சிற்பியைக் கண்டார்கள். சிலைகளின் அழகோ பிரமிக்க வைத்தது. சிலையா அல்லது உயிருள்ள தெய்வமா என்று எண்ணும்படிக்கு ஜீவசக்தி ததும்பிக் கொண்டிருந்தன சிற்பங்களில். சிற்பியின் நெற்றியில் திருநீறு, மார்பில் உத்திராட்ச மாலை. பார்த்தாலே கை எடுத்துத் தொழவேண்டிய தோற்றம். சிற்பியா, இல்லை சிவனடியாரா?? முத்தரசனிடம் அழைத்துச் செல்லப்பட்ட சிற்பியைக் கண்டதும் ஈசனே சிற்பி வடிவில் வந்து விட்டானோ என்று முத்தரசனுக்குச் சந்தேகம். என்றாலும் அவனிடம் தன் வேண்டுகோளை வைக்கின்றான் முத்தரசன். 


சிற்பி சொல்கின்றான்:" மன்னா! நாங்கள் முருகனடிமைகள். பரம்பரைச் சிற்பிகளும் கூட. என்னைச் "சில்பா சிற்பி" என்றே சொல்லுவார்கள். பூர்வ ஜென்மத்தின் புண்ணியத்தாலும், முருகனின் கருணையாலுமே அவன் உருவை வடிவமைக்கும் வாய்ப்பைத் தாங்கள் எனக்களிக்கின்றீர்கள். தங்கள் சித்தம் போல் மயிலோனை அனைவரும் வியக்கும் வண்ணம் சிங்காரமாய் வடிவமைக்கின்றேன்." என்று உறுதிமொழி கொடுக்கின்றார் சில்பா சிற்பி. நாட்கள் பறக்கின்றன. அருமையான கல்லைத் தேர்ந்தெடுத்துச் சிற்ப வேலையை ஆரம்பிக்கின்றார் சிற்பி. ஒருநாள் அவர் கனவில் ஆறுமுகன் தோன்றி, " நீ என்னை இந்த ஆறுமுகக் கோலத்தில் பனிரண்டு கைகளுடனேயே உருவாக்கு!" என்று கட்டளை இட, அவ்வாறே உருவாக்கத் தொடங்கினார் சிற்பி. வலக்கைகளில் சக்திவேல், கதை, கொடி, தண்டு, அம்புடன் கூட மற்றொரு வலக்கரத்தில் அபய ஹஸ்தமும், இடக்கைகளில் வஜ்ரம், பத்மம், கடகாஸ்தம், சூலம், வில், வரத ஹஸ்தமும் கொண்டு அழகை அள்ளிச் சொரியும்படியான சுந்தர வடிவேலனை மயில் வாகனத்தில் வடித்தார் சில்பா சிற்பி. 

பார்த்தவரைப் பித்துப் பிடிக்க வைத்தான் ஆறுமுக வேலன். மயிலோடு பறந்துவிடுவானோ என நினைக்கும் வண்ணம் ஜீவன் ததும்பி நின்றது சிலையில். கண்களின் அழகைச் சொல்லுவதா? புன்முறுவலைச் சொல்லுவதா? கைகளின் வடிவைப் பாராட்டுவதா? மயில் சிற்பமா? உண்மையான மயிலா? என்னும்படிக்குச் சிற்பம் அனைவரையும் திகைக்கவும், பிரமிக்கவும் வைத்தது. மக்கள் மன்னனைப் பாராட்டுவதா? சிற்பியைப் பாராட்டுவதா எனத் தெரியாமல் மயங்கி இருவரையும் மனதாரப் பாராட்டி இத்தகையதொரு சிற்பத்தை இனி எவராலும் உருவாக்க முடியாது என்று சொன்னார்கள். ஜெயகோஷங்கள் முழங்கின. ஒரு நன்னாள் பார்த்துக் குடமுழுக்குக்கு ஏற்பாடு செய்தான் முத்தரசன். நன்னாளில் குடமுழுக்கையும் நடத்தி ஆறுமுகனைச் சிக்கில் கோயிலில் பிரதிஷ்டையும் செய்வித்தான். ஊரெங்கும் கொண்டாட்டம், கோலாகலம், ஆனந்தத் திருவிழா! மக்கள் மனதில் மகிழ்ச்சி! ஆனால் மன்னனுக்கோ மனதில் ஏதோ குழப்பம்! வேகம், என்ன என்னவோ கணக்குகள். என்னவோ எண்ணங்கள். 

சிற்பிக்கு மன்னன் என்ன பரிசு கொடுக்கப் போகின்றானோ என்று மக்கள் பேசுவதும் அவன் காதில் விழுந்தது. சிற்பியை அரசவைக்கு வரவழைத்தான். அரசவையில் பெருங்கூட்டம். அனைவரும் மன்னன் அளிக்கப் போகும் பரிசையும், பாராட்டுச் சொற்களையும் எதிர்பார்த்துக் குழுமி இருந்தார்கள்.சிற்பி வரவழைக்கப் பட்டார். மன்னன் தரப்போகும் பரிசை எதிர்பார்த்துக் காத்திருந்தார் சிற்பியும். மன்னனும் சிற்பியைப் புகழ்ந்தான், இது போன்ற சிற்பம், எவராலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத பேரழகுப் பெட்டகம் ஆன சிங்காரவேலன் சிலையைச் செதுக்கியதன் மூலம் தன் உள்ளத்தைச் சிற்பி குளிர்வித்து விட்டதாயும் கூறினான். இன்னொரு உதவியையும் செய்யவேண்டும் என்றும் கேட்டான். மற்றொரு சிற்பமோ என சிற்பி ஆவலுடன் காத்திருந்தான். முத்தரசன் கூறுகின்றான்:" சில்பா சிற்பியே! இத்தனை தத்ரூபமாய் முருகன் சிலையை வடிவமைத்த நீர் இனி எந்த மன்னனுக்கும் இதே போல் எந்தக் காலத்திலும் முருகன் சிலையை மட்டுமல்ல, எந்தச் சிலையையும் வடிக்கக் கூடாது. முத்தரச மன்னன் மட்டுமே முருகப் பெருமானைப் பேரழகுடனும், பொலிவுடனும் படைத்தான் என வரலாற்றில் என் பெயர் நிலைத்து நிற்க வேண்டும். ஆகவே" என நிறுத்தினான் மன்னன். 

அடுத்து வரப்போவதை எதிர்பார்த்துச் சிற்பி காத்திருக்கையில் மன்னன் கண்ணசைவில் சில வீரர் சிற்பியை நெருங்கினார்கள். சிற்பியை இருவர் இறுக்கிப் பிடித்துக் கொள்ள மற்றும் இருவர் அவர் வலக்கைக் கட்டை விரலை வெட்டப் போனார்கள். சிற்பி பயத்திலும் நடுக்கத்திலும் ஆழ்ந்து போய் மன்னனைக் கெஞ்சினார். " கட்டை விரலை வெட்டவேண்டாம் என. கட்டை விரல் இல்லை எனில் உளியைப் பிடிப்பது எவ்வாறு?? அதற்கு என் உயிரை எடுத்துக் கொள்." என்றும் சொல்லிப் பார்த்தார், மன்னன் மனம் இரங்கவில்லை. இந்தப் பெருமை யாவும் எனக்கே வந்து சேரவேண்டும் என்ற அவன் காவலரை நோக்கி," அஞ்சாதீர்கள் கட்டை விரலை வெட்டுங்கள்" என்று சொல்ல, அவர்களும் மன்னன் கட்டளைக்கிணங்கி சில்பா சிற்பியின் கட்டை விரலை வெட்டினார்கள். சிற்பி துடிதுடித்தார். உடல்வேதனையும், மனவேதனையும் தாள மாட்டாமல், "முருகா, உன் பேரழகைச் செதுக்கிய எனக்கு நீ கொடுத்த பரிசா இது?" என கண்ணீருடன் கலங்கி, சோகம் தாங்க முடியாமல், சோர்ந்து போய் உறங்க மீண்டும் கனவில் வந்தான் சிங்காரவேலன், முகம் கொள்ளாத புன்னகையுடன்.

15 comments:

  1. இப்படியும் அரசன் செய்யக்கூடுமோ..

    முருகா.. முருகா...

    ReplyDelete
    Replies
    1. சில அரசர்கள் இப்படித்தான்! நடராஜர் சிலையை வடிக்கச் சொன்ன அரசனும் இப்படித்தான். கடைசியில் நடராஜரே சிவகாம சுந்தரியுடன் வந்து கொதிக்கும் உலோகக் கலவையைக் குடித்துச் சிலையாக நின்றாரே கோனேரிராஜபுரம் என்னும் திருநல்லத்தில்!

      Delete
  2. என்னடா இது... அரசியல் பதிவை கந்தவேளுடன் கலந்துட்டாங்களோன்னு தலைப்பைப் பார்த்து நினைத்தேன்.

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

      Delete
  3. கதைக்கு தவரெல்லாம் கேட்கமாட்டேன்.

    கதை ஆனால் மனதைக் கவர்ந்தது. எப்போதுமே அதீத திறமை இருந்தால் ஆபத்துதான் போலிருக்கிறது. இதனைப் படிக்கும்போது, முருகன் கனவில் வந்து, சிலையில் சிறிய பிழை செய்துவிடு, ஜீவகளை முழுவதுமாக இருப்பது ஆகாது என்று சொல்லப்போகிறாரோ என்று படைத்தேன்.

    துரோணர் ஆரம்பித்தது, பல்வேறு கதைகளுக்கு அடித்தளமாகிவிட்டது.

    அதுபோல, யாரோ ஒருவர், பசுமாடு ஒரு புற்றில் பால் சுரக்க, அதைத் தோண்டும்போது இந்த இறைவன் சிலை வந்தது, அங்கேயே கோவில் கட்டினார்கள் என்று ஆரம்பித்து வைக்க, இதுவே பல கோவில்களுக்கும் அடிப்படைக் கதையாக ஆகிவிட்டது.

    இருந்தாலும் ரசனையான பதிவு

    ReplyDelete
    Replies
    1. தவரு இல்லை தரவு! 100 தரம் இம்பொசிஷன் எழுதுங்க! ஒரு வகையில் நீங்க சொல்வது உண்மைதான். திறமை இருந்தால் எவ்விதத்திலாவது ஆபத்து நேரிடுகிறது. இந்தக் கதையிலாவது மன்னன் பின்னர் புரிந்து கொண்டான். ஆனால் நிஜ வாழ்க்கையில் திறமை இருக்கிறவங்களைக் கேவலப்படுத்துவதே அவங்களைச் சுற்றி இருக்கிறவங்க செய்கிறார்கள். :(

      Delete
  4. முருகா என்றதும் உருகாதா மனம் மோகனக் குஞ்சரி மணவாளா என்ற பாடல் மனதில் ரீங்காரமிடுகிறது.

    ReplyDelete
    Replies
    1. நல்லது தானே! நினைப்பதில் தவறேதும் இல்லை.

      Delete
  5. இந்தக் கதை அறிந்ததுதான் என்றாலும் நல்ல இடத்தில் தொடரும் போட்டு நிறுத்திய உங்கள் சாதுர்யத்திற்கு பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்குத் தெரியலைனால் தான் ஆச்சரியம். மற்றபடி எனக்கு ஏதோ கொஞ்சம் தான் தெரியும். பின்னர் தான் எழுதுவதற்காக வேண்டி தேடி அறிந்து கொண்டேன்.

      Delete
  6. கேள்விப்பட்ட மாதிரி இருக்கிறது.

    அவன் முத்தரசன் இல்லை, முட்டாள் அரசன்!

    ReplyDelete
    Replies
    1. பானுமதி எழுதிக் கேள்விப் பட்டிருக்கலாம். ஏனெனில் பனிரண்டு வருஷங்கள் முன்னர் நீங்க அப்போத் தான் கணினியில் ஏபிசிடி படித்துக் கொண்டிருந்தீர்கள்! :)))))

      Delete
  7. வணக்கம் சகோதரி

    கதை அருமை. சிக்கல் என்ற அந்த பெயருக்கு அர்த்தம் தெரிந்து கொண்டேன். அந்த மன்னனுக்கு சடாரென இந்த முடிவு எடுக்க எப்படி மனம் வந்ததோ? மன்னனின் அந்த சுயநலத்திற்கு கந்தன் கண்டிப்பாக துணைப் போயிருக்க மாட்டான். சிற்பிக்கு தன்னருளை வாரி வழங்க கந்தன் முடிவெடுத்திருந்தாலும், கை கட்டைவிரல் வெட்டப்படுவதற்கு முன் வந்து காப்பாற்றியிருக்கலாம். இருப்பினும் தான் வைக்கும் சோதனையில், தன் பக்தர்கள் நின்று ஜெயிக்கிறார்களா என அறிந்து கொள்வது தெய்வங்களின் விருப்பமாக இருந்து விடுகிறதோ என நினைப்பேன். அதனால், கதை கண்களை கலங்க வைக்கிறது. இறுதியில் சுபமாக முடிந்திருக்கும் இல்லையா? முடிவுக்கு காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, சிற்பிக்கு உடனே எல்லாம் அருளை வாரி வழங்கலை முருகன். சோதித்துப் பார்த்துட்டுத் தான் அருள் வழங்கினான். இறுதியில் சுபமே! இன்னும் இருக்கே கதை! அதற்கப்புறமாத் தான் முடிவு.

      Delete
  8. கதை படித்து இருக்கிறேன் முன்பு. மிக அழகாய் சொன்னீர்கள் கதையை.அடுத்து என்ன ஆவலுடன் படிக்க வைக்க தொடரும் போட்டு விட்டீர்கள். வாழ்த்துக்கள். இவை எல்லாம் செவி வழி கதைகள் தானே ! அதற்கு தரவு எப்படி கொடுப்பது!

    ReplyDelete