எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, November 22, 2020

கந்தன் திருநீறணிந்தால் கண்ட வினைகள் ஓடி விடும்! கந்த சஷ்டிப் பதிவுகள்! 8

 சமீவனத்து மக்கள் அனைவரும் அந்தச் சிலையை வந்து கண்டனர். பிரமித்துப் போனார்கள். அதன் அழகைப் பாராட்டுவதா? உயிரோட்டத்தைப் பார்த்து வியந்து நிற்பதா? எதுவும் புரியாத மக்கள் சிற்பியைப் பார்த்து இன்னும் திகைத்தனர். என்ன?? கண்கள் தெரியாத ஒருவராலா இது வடிக்கப் பட்டது? கண்கள் இல்லாதவராலேயே இத்தனை அழகும், ஜீவனும் நிரம்பிய சிற்பத்தைச் செதுக்க முடிந்ததா?? ஆயிரம் கண்கள் கொண்டவராலே கூட இத்தனை அழகுச் சிலையை, உயிருள்ள முருகனைச் செதுக்க முடியுமா?? இதைப் பார்க்க, பார்த்து அனுபவிக்கக் கண் கோடி வேண்டும் அல்லவா?? அடடா, இத்தனை அழகு வாய்ந்த, பெரும் சக்தி வாய்ந்த முருகனை நம்ம ஊர்க் கோயிலில் அல்லவா வைக்கவேண்டும்? மக்கள் ஒரு முடிவுக்கு வந்து, சிற்பியைப் பார்த்து, "ஐயா, எங்கள் ஊர்க் கோயிலில் உள்ள பிரம்மபுரீஸ்வரருக்குப் புத்திரன் இல்லை. இந்த முருகனை அவருக்குப் புத்திரனாக்குங்கள் ஐயா, உங்களுக்குக் கோடி புண்ணியம். தயை செய்யுங்கள்." என்று இறைஞ்சுகின்றனர்.


படத்துக்கு நன்றி கூகிளார்!

சில்பா சிற்பிக்கு ஆனந்தம் எல்லை மீறியது. ஆஹா, இங்கேயும் ஒரு கோயில், அங்கேயும் இந்தச் சிலையைப் பிரதிஷ்டை செய்யத் தயாராய் மக்கள். நல்லவேளை தான். என்று நினைத்துக் கொண்டு, "சீக்கிரமாய் ஒரு நல்ல நாள் பாருங்கள், சிலை பிரதிஷ்டை செய்ய, பிரதிஷ்டை செய்யும்போது கண் திறக்கின்றேன்", என்று சொல்ல மக்களும் சரி என்றனர். ஆனால் சில்பா சிற்பி சொல்லிவிட்டாரே தவிர அவருக்கு அன்று இரவு பூராத் தூக்கமே வரவில்லை. மற்ற இரண்டு சிற்பங்களையும் செய்யும்போதும் சரி, செய்து முடித்ததும் சரி கண்ணாரக் கண்டு மகிழ்ந்தேன். இந்தச் சிலையை அவ்வாறு பார்க்க முடியாது. எல்லாரும் இத்தனை புகழும் இந்தச் சிலையைப் பார்க்கவாவது ஒரு நிமிஷமாவது கண்பார்வை வந்துவிட்டுப் போகாதா? என மனதிற்குள் புழுங்கினார் சிற்பி.சிலை பிரதிஷ்டை செய்ய மக்கள் பார்த்த நாளும் நெருங்கியது. சிலையைக் கோயிலுக்கு எடுத்துச் சென்றனர். உடன் சிற்பியும் பேத்தியின் கையைப் பிடித்துக்கொண்டு சென்றார். ஆறுமுகனின் விழிகள் திறக்கவேண்டிய வேளையும் நெருங்கிவிட்டது.


படத்துக்கு நன்றி கூகிளார்

 மக்கள் கூட்டம் கூடி இருக்க, சிற்பி உளியைக் கையில் எடுத்துக் கண் இமையைத் திறப்பதற்குப் பதில் வேகமாய் உளியால் அடிக்கப் போக, சிறுமியோ, கையை நடுவில் கொடுத்து, "தாத்தா, தாத்தா, கந்தன் கண்கள் உடைந்துவிடுமே?" எனக் கூவிய வண்ணம் தடுக்க, சிறுமியின் கையில் பட்ட உளியால் அவள் கையில் அடிபட்டு ரத்தம் தெறிக்கின்றது. வேகமாய்ப் பீறிட்ட ரத்தம் சிற்பியின் குருட்டுக் கண்களில் பட்டுத் தெறிக்கின்றது. சிறுமியின் அலறலில் நடுங்கி விதிர்விதிர்த்துப் போன சிற்பியின் கண்களில் தெறித்த ரத்தத்தை அவர் துடைக்க, என்ன ஆச்சரியம், பார்வை திரும்பிவிட்டது சிற்பிக்கு. என்றாலும் அருமைப் பேத்தியின் கைகளை எண்ணிக் கலங்க, அவரை அந்த சமீவனத்திலுள்ள வன்னிமரக் காட்டிற்கு அழைத்து வந்த பெரியவர், தம் கையால் சில பச்சிலைகளை வைத்துச் சிறுமியின் கையில் கட்ட, ரத்தப் போக்கு நின்றது. "ஐயா, பெரியவரே! தாங்கள் யார்? என் கண்களையும் திறந்து, இப்போது இச்சிறுமியின் காயத்தையும் ஆற்றிய தாங்கள் நிச்சயம் ஒரு மகானாகவே இருக்கவேண்டும்." என்று சில்பா சிற்பி அந்தப் பெரியவரைப் பார்த்துக் கேட்க, அவரோ சிரித்த வண்ணம், " என் பெயர் வேலவன், கந்தன் என்றும் சொல்கின்றனர். இரு மனைவியர் எனக்கு. ஒரு மனைவியின் பெயர் தெய்வானை. " என்று சொல்லிச் சிரித்தார்.

ஒரு கணம் திகைத்த சில்பா சிற்பி, "ஆறுமுகா, வேலவா, கார்த்திகேயா!" எனக் கூவிய வண்ணம் பெரியவர் கால்களில் விழுந்து அவர் பாதம் பற்ற, அடுத்த கணம் அங்கே தோன்றியதோர் ஒளிப்பிழம்பால் சிற்பியின் கைக்கட்டைவிரலும் சரியாக, பெரியவர் மறைந்து போனார். ஊரே ஸ்தம்பித்து நின்றது. அனைவரும் சில்பா சிற்பியின் சக்தியும், மகிமையும் பெரியது என அறிந்து அவரைக் கொண்டாட, பெருமானை நேரிலே கண்ட திருப்தியுடன் சிலை பிரதிஷ்டை செய்யப் பட்டது. ஏற்கெனவே ஊருக்கு இருந்த புராணப் பெயரான அஷ்ட நேத்திரபுரம் என்னும் பெயரே, சிற்பிக்குக் கண்கள் திறந்த காரணத்தால் எண்கண் எனப் பெயரிடப் பட்டு இன்றளவும் அந்தப் பெயரிலேயே அழைக்கப் படுகின்றது. சில்பா சிற்பியோ தம் வாழ்நாள் பூராவும் எண்கண் கிராமத்தில் ஆறுமுகன் சந்நிதியிலேயே தவமாய் இருந்து, உயிர் விட்டதாய்க் கூறுகின்றார்கள். கோயிலில் சில்பா சிற்பியின் சமாதி வன்னிமரத்தடிப் பிள்ளையாருக்கு அருகே காணப்படுவதாயும் கூறுகின்றார்கள்.

"கந்தன் திருநீறணிந்தால் கண்ட வினைகள் ஓடி, அனைவருக்கும் சுகமே" என்பதை இந்தக் கதை/ கதையல்ல நிஜம் என்றும் ஒரு சாரார் கூற்று. உணர்த்துகின்றதல்லவா?? முன் பதிவில் நான் பதினெட்டுக் கண்கள் கந்தனுக்கு என்று எழுதி உள்ளேன். வெகு சிலரே அதைக் கவனித்திருக்கின்றனர். ஆறுமுகங்களில் பனிரண்டு கண்களும், நெற்றிக் கண்கள் ஆறும் ஆக மொத்தம் பதினெட்டும் சேர்த்துப் பதினெட்டுக் கண்கள் என்று கூறினேன். இந்தத் தகவலைச் சமீபத்தில் ஒரு சொற்பொழிவில்/புத்தகத்தில்??? சரியாத் தெரியலை, எதிலோ படித்தேன்/கேட்டேன். ஆறுமுகனும், சிவமும் ஒன்று எனவும், சிவனுக்கு உரிய நெற்றிக்கண்கள் ஆறும் ஆறுமுகனுக்கும் உண்டெனவும் படித்தேன். ஆகையால் பதினெட்டுக் கண்கள் என எழுதினேன். 

குமாராய நம: என்ற மந்திரம் பற்றி நண்பர் ஒருத்தர் கேட்டிருக்கின்றார். இந்த ஆறெழுத்து மந்திரத்தைக் கந்த பஞ்சாட்சரம்/ குஹ பஞ்சாட்சரம் என்று சொல்கின்றனர். இந்த மந்திரத்தோடு சிற்சில பீஜாட்சரங்களையும் சேர்த்து, அல்லது சேர்க்காமல் குரு மூலம் உபதேசம் பெற்றே அவர் அருளிய வண்ணமே ஜபிக்கவேண்டும் என்றும் சொல்கின்றனர். ஆகவே இதைப் பற்றி அதிகம் எழுத முடியாது. இதைப் பற்றிய நூல் "ஆறெழுத்து அந்தாதி" கந்தனுக்கு மிகவும் நெருங்கியவர் ஆன அகத்தியரால் அருளப் பட்டதாயும் தெரிய வருகின்றது. இப்படி ஒரு புத்தகம் இருப்பதே இப்போத் தான் தெரியும். ஆகவே தெரிஞ்சவங்க சொல்லலாம். முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் வருடத்தில் மூன்று முறைகள் சூர சம்ஹாரம் நடைபெறுகின்றது. திருத்தணிகையிலேயோ சூர சம்ஹாரமே நடைபெறுவதில்லை. சூரனை சம்ஹாரம் செய்த பின்னார் பகை தணிந்த கந்தன் அமர்ந்த இடம் என்பதால் இம்மாதிரி எனக் கூறுகின்றனர். 

திருச்செந்தூரில் ஆறுமுகன் சிவனைப் பூஜிக்கும் கோலத்திலேயே கையில் மலரோடு காணப்படுவான். சூரனைச் சம்ஹாரம் செய்து முடித்துத் தம் தந்தையாகிய ஈசனைப் பூஜிக்க எண்ணி மலர்களைக் கொண்டுவரச் செய்து, சிவலிங்கம் அமைத்து ஒவ்வொரு நாமத்துக்கும் ஒவ்வொரு மலரை இட்டு வழிபட, மெய்ம்மறந்த தேவாதிதேவர்கள், "முருகா, ஆறுமுகா, கார்த்திகேயா" எனத் தம்மை மறந்து கூவ, கையில் மலரோடு கந்தன் திரும்ப அந்தக் கோலத்திலேயே இன்றளவும் காட்சி தருகின்றார் செந்தூராண்டவர். பழநியிலோ தண்டாயுதபாணியாகச் சடைமுடியுடன் காட்சி தருவது தான் உண்மையான கோலம். போகர் வடித்த சிலை கையில் ஞான தண்டத்துடன் கூடிய சடைமுடியுடன் கூடிய ஞான தண்டாயுதபாணியே. ஆண்டிக் கோலம் எல்லாம் பின்னால் ஏற்பட்டதே. இப்போதும் பழநி மலை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்யும் முன்னால் பார்த்தால் மூல விக்ரஹத்தில் சடைமுடி இருப்பது தெரியவரும் என்று ஆன்றோர் பலரும் சொல்கின்றனர். நாங்கள் பார்க்கும்போது ராஜாங்கக் கோலத்தில் காட்சி அளித்துக் கொண்டிருந்தான்.

25 comments:

  1. முருகனுக்கும் நெற்றிக்கண் உண்டு என்பது எனக்கு இப்போதுதான் தெரிகிறது.  

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், பிள்ளையாருக்கும் உண்டு, பெருமாளுக்கும் உண்டு. பிள்ளையார் பற்றி ஔவையார் விநாயகர் அகவலிலும் பெருமாளின் நெற்றிக்கண் பற்றி ஆழ்வார் ஒருத்தரும் பாடி இருக்காங்க.

      Delete
  2. நிறைய விஷயங்கள். சூரசம்ஹாரம் திருப்பரங்குன்றம் வருடத்தில் மூன்று முறை. திருத்தணியில் நடைபெறுவதில்லை பகை தணிந்த கந்தன் அமர்ந்த இடம் என்பதால் என்று சொல்லப்படுகிற தகவல்....திருச்செந்தூரில் ஆறுமுகன் சிவனைப் பூஜிக்கும் கோலத்தில் சூர சம்ஹாரம் செய்து முடுத்துத் தம் தந்தையை பூஜித்து...திருத்தணியில இல்லைந்றதுக்குக் காரணம் திருச்செந்தூருக்கும் அப்ளை ஆகணுமே ஆனால் திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறுவதுண்டு இல்லையா?

    பழனி தகவல்கள் என்று நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன் கீதாக்கா.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. திருச்செந்தூரில் தான் சூர சம்ஹாரம் செய்தான் முருகன். போரூரில் சூரனின் சகோதரனான சிங்க முஹாசுரனை சம்ஹாரம்செய்தார். தாரகாசுரன் எனவும் சொல்கின்றனர். சமராபுரிஎன அழைக்கப்பட்ட இந்த ஊரே இப்போது திருப்போரூர் என அழைக்கப்படுகிறது. திருச்செந்தூர் தான் சூர சம்ஹாரத்துக்கு உரிய தலம்.

      Delete
    2. ஓ ஓகே புரிந்தது கீதாக்கா. மிக்க நன்றி அக்கா

      கீதா

      Delete
    3. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! திருத்தணியில் குடும்பஸ்தனாகக் காணப்படுகிறான் கந்தன். மேலும் அவன் கோபம் தணிந்த இடம் "தணிகை" என்பார்கள். ஆகவே அங்கே சூர சம்ஹாரம் கிடையாது. வள்ளிமலை ஸ்வாமிகளால் ஏற்படுத்தப்பட்ட படி பூஜை ஒவ்வொரு படிக்கும் திருப்புகழ் சொல்லிக் கொண்டே ஏறுவது. படிப்பாடல்கள் எனத் தனியாகவே உண்டு. முன்னெல்லாம் சொல்லி இருக்கேன். இப்போல்லாம் நினைவிலே கொண்டு வரதே பெரிய விஷயம்.

      Delete
    4. சமரா புரி வாழ் சண்முகத்தரசே - வரிகளின் காரணம் பின்னூட்டம் படித்ததும் புரிந்தது.

      Delete
  3. இப்ப கமென்ட் போயிருச்சே!!!

    கீதா

    ReplyDelete
  4. கந்தவேல் முருகனுக்கு அரோஹரா..
    கதிர்வேல் முருகனுக்கு அரோஹரா..

    ReplyDelete
  5. வணக்கம் சகோதரி

    கதை இறுதியில் எல்லாமே நல்லபடியாக அமைந்து முடிந்தது சந்தோஷமாக இருந்தது. இக்கதை மூலமாக நிறைய தகவல்களை தந்துள்ளீர்கள். நானும் அறிந்து கொண்டேன் நன்றி.

    முருகன் சொன்ன மாதிரி மூன்று சிலைகளை சிற்பி எத்தனையோ இன்னல்களுக்கிடையே நல்லபடியாக வடித்து முடித்து விட்டார். அதற்குத் துணையாக தெய்வமே கூட இருந்து அவரின் ஊனங்களையும் சரியாக்கி, அவர் புகழ் பரவும்படி செய்து காட்டியிருப்பது கதை படித்து முடிந்ததும் நிம்மதியாக இருந்தது. கடைசியில் அந்த மன்னனைப் பற்றிய தகவல் ஒன்றுமில்லையே..! மூன்றாவது சிலை செய்த விபரம் ஏதும் அவன் அறியவில்லையா? அல்லது அவன் மனம் திருந்தி விட்டானா? அப்படி மனம் திருந்திருந்தால் நல்லதுதான்... கந்தன் அனைவரையும் நலமுடன் காக்கட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா. மன்னன் முத்தரசன் சிற்பியின் பெருமையை அறிந்து கொண்டிருப்பான். அவனைக் குறித்த தகவல்கள் ஏதும் இந்தக் கடைசியான நிகழ்வில் கிடைக்கவில்லை. ஆகவே மன்னன் மனம் திருந்தி இருப்பான் என்றே கொள்வோம். இது நிஜமோ/பொய்யோ ஆனால் நல்லதொரு படிப்பினையைக் கொடுத்த கதை. உங்கள் தொடர்ந்த வரவுக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி.

      Delete
  6. திருநீறணிந்தாலே......வினைகள் விலகும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை ஐயா. ஆனால் இப்போது வருவதெல்லாம் நல்ல திருநீறாக இருப்பதில்லை. நெற்றில் தழும்பு/தடம் வந்து விடுகிறது! :)

      Delete
  7. அறியாதவை பல தெரிந்து கொள்கிறேன் சகோதரி. தொடர்கிறேன்.

    துளசிதரன்

    ReplyDelete
  8. கந்தன் திருநீற்ணிநால் என்று டி.எம்.எஸ் குரல் காதில் ஓலிக்க கேட்டுக் கொண்டு இருக்க பதிவை படித்தேன்.
    மிக அருமையாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி. நன்றி. எங்களுக்குப் பூம்பாறை குழந்தை வேலவர் சந்நிதியில் செய்த விபூதி அபிஷேஹ விபூதி கொடுத்திருக்காங்க. அதைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம்.

      Delete
  9. எண்கண் கிராமத்தின் பெயர், கதை மிகவும் சிறப்பாக இருந்தது.

    பதினெட்டு கண்கள் - இதைப் படித்த உடன் எழுதணும்னு நினைத்தேன். எதற்கு குறைகளை எழுதணும் என்று நினைத்து விட்டுவிட்டேன். நெற்றிக்கண் என்பது ஞானக்கண். சிவனுக்கு மட்டும்தான் அது எரிக்கும் கண். அதனால் ஆறுமுகனுக்கு பன்னிரண்டு கண்கள்தான் என்பது என் அபிப்ராயம்.

    பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால் என்னை நீ பார்த்தாலே போதும்
    வாழ்வில் இடரேதும் வாராது எப்போதும் - முருகா

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லைத்தமிழரே! உங்கள் கருத்து உங்களோடு. ஆனால் விரைவில் முருகனின் பதினெட்டுக் கண்கள் பற்றியும் அறியும் சந்தர்ப்பம் உங்களுக்கு அமையும். அம்பிகையின் நெற்றிக் கண் பற்றிப் பரமாசாரியார் நிறைய எழுதி இருக்கார். அதே போல் பெருமாளின் நெற்றிக்கண் பற்றியும் திருமங்கையாழ்வார் பாசுரம் ஒண்ணு இருக்குனு நினைக்கிறேன். அல்லது முதலாழ்வார்களா?

      Delete
  10. என் பெயர் காயத்ரி. சில மாதங்களாக தங்கள் பதிவுகளை படித்து வருகின்றேன்! கந்தன் கதை படிக்கப் படிக்க இனிமை. நீண்ட நாட்களுக்கு பிறகு வலைப்பதிவிடுகின்றேன் . என் வலைப்பூவிற்கு தங்களை வரவேற்கின்றேன்!

    ReplyDelete
    Replies
    1. நல்வரவு காயத்ரி. உங்கள் வலைப்பக்கம் வந்து பார்க்கிறேன்.

      Delete
    2. உங்கள் பதிவின் சுட்டி கொடுங்க. வானம்பாடியைக் "க்ளிக்" செய்தால் ப்ரொஃபைல் பக்கம் தான் போகிறது.

      Delete
    3. gayathrichandrashekar.blogspot.com (my blogger Id)

      Delete
    4. http://gayathrichandrashekar.blogspot.com/

      Delete