எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, January 03, 2020

மார்கழித் திங்கள், மதி நிறைந்த நன்னாள் 18

திருப்பாவைப் படங்கள் 18 க்கான பட முடிவு   திருப்பாவைப் படங்கள் 18 க்கான பட முடிவு

செந்தாமரைக் கோலம் க்கான பட முடிவு


உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்!
கந்தங் கமழும் குழலீ! கடை திறவாய்!
வந்தெங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலியுன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!

செந்தாமரைக் கோலம் க்கான பட முடிவு   செந்தாமரைக் கோலம் க்கான பட முடிவு

யானையைக் குறிப்பிட்டிருப்பதால் யானைக் கோலம் போடலாம்.  செந்தாமரைக் கைகளைக் குறிப்பிட்டிருப்பதால் செந்தாமரைக் கோலமும் போடலாம். குயில், கோழி போன்ற பறவைகளைக் குறித்துச் சொல்லி இருப்பதால் பறவைகளையும் கோலத்தில் வரையலாம்.

செந்தாமரைக் கோலம் க்கான பட முடிவு   யானைக் கோலம், க்கான பட முடிவு
                                     
இறைவனை ஒரு கோரிக்கைக்கு அழைத்தால் முதலில் அவன் சக்தியைத் துதிக்க வேண்டும்.  அந்த சக்தி தான் இங்கே உந்து மத களிற்றனாகவும், ஓடாத தோள்வலியனாகவும் குறிப்பிடப் பட்டிருக்கிறது.  நம் புராணங்களின்படி இறைவனின் சக்தியைப் பெண்ணாக உருவகம் செய்திருப்பதால் இங்கே நாராயணனின் சக்தியைத் தாயாராக நினைத்துக் கொண்டு முதலில் தாயாரிடம் கோரிக்கை வைக்க வேண்டும்.  நம் வீட்டில் அப்பாவிடம் நேரடியாகச் சொல்ல பயந்தால் அம்மா மூலமாக நிறைவேற்றிக் கொள்வது உண்டல்லவா?  அது போலத் தான் இங்கேயும்.  தாயாரிடம் போனால் அவள் கடைக்கண் பார்வையின் மூலம் எவ்விதமான கஷ்டமான காரியங்களும் சிரமமின்றி நிறைவேறும்.  ஆகவே இங்கே கண்ணனின் அருளை வேண்டித் துதிக்கும் ஆண்டாள் அதற்கு முதலில் கண்ணனின் மனைவியான நப்பின்னையை வேண்டுகிறாள்.  நப்பின்னை திருப்பாவையில் மட்டுமே குறிப்பிடப் படுகிறாள் என எண்ணுகிறேன்.

ஸ்ரீராமாநுஜர் துறவறம் வாங்கிக் கொண்டதும் தினமும் உஞ்சவ்ருத்தி எடுத்தே உணவு உண்டு வந்தார். தினமும் எல்லாப் பாசுரங்களையும் பாடிக்கொண்டே உஞ்சவ்ருத்தி எடுப்பது வழக்கம். மார்கழி மாதமென்றால் கேட்கவே வேண்டாம். ஆண்டாளின் திருப்பாவைக்குத் தான் முன்னுரிமை. தினந்தோறும் எல்லாத் திருப்பாவைகளையும் பாடினாலும் அந்த அந்த நாளுக்குரிய திருப்பாவையை விஸ்தாரமாக அநுபவித்துப் பாடி வந்தார். அன்றும் அப்படித்தான்,

இந்த" உந்துமதகளிற்றன்" பாடலைப் பாடிக்கொண்டே பிக்ஷைக்கு வந்தார். ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு வீடாக பிக்ஷை எடுக்கிறார். அப்போது, "பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாட" முடிந்து அடுத்து "செந்தாமரைக்கையால் சீரார் வளையொலிப்ப" என்னும் அடி பாடிக்கொண்டே ஒரு வீட்டு வாசலில் வந்து நிற்கிறார். சந்நியாசிகளுக்கே உரிய நிதானத்தோடும், கண்ணியத்தோடும் குனிந்த தலை நிமிரவில்லை. காதுகளில் சீரார் வளை ஒலிக்கும் சப்தம் கேட்கிறது. மீண்டும் செந்தாமரைக்கையால் சீரார் வளையொலிப்ப எனப் பாடுகிறார். செக்கச் சிவந்த தாமரை வண்ணக் கை ஒன்று கதவைத் திறக்கிறது. கையில் பிக்ஷை போட வைத்திருக்கும் பாத்திரம்.

பதினாறு வயது கூட நிரம்பாத ஒரு அழகிய மங்கை வந்து தன் செந்தாமரைக்கைகளால் சீரார் வளை ஒலிப்ப பிக்ஷை இட வந்தாள். ராமாநுஜர் பார்த்தார். பார்த்த கண்கள் நிரம்பின. பிக்ஷா பாத்திரம் கீழே நழுவிற்று. "என் அம்மா, என் தாயே!" என்றாராம். அப்படியே மூர்ச்சித்துக் கீழே விழுந்துவிட்டார். அந்தப்பெண் பதறிப் போக உள்ளிருந்து வந்தார் அந்தச் சிறுமியின் தந்தை. அவர் வேறு யாரும் இல்லை. திருக்கோஷ்டியூர் நம்பி என்னும் ஸ்ரீராமாநுஜரின் குருவே ஆவார். ஆசாரியர் வந்து பார்த்துவிட்டுச் சீடன் இருக்கும் நிலை புரிந்ததும், புன்னகை புரிந்தார். கூட வந்தவர்களைப் பார்த்து, "உந்து மத களிற்றனில், சீரார்வளை ஒலிப்ப " என்ற வரிகளில் அநுசந்தானமோ?" என்று கேட்டாராம். உடன் வந்தவர்கள் ஆச்சரியத்தால் திகைத்துப் போய் ஆமெனத் தலை அசைக்க, திருக்கோஷ்டியூர் நம்பி விளக்குகிறார்.

"இந்தப் பாடல் ஆண்டாள் ஸ்ரீமஹாலக்ஷ்மியைக் கண்ட நிகழ்வைப் பற்றிப் பாடியது. அதுவும் அவள் தன் பதியோடு சேர்ந்திருக்கும் சமயம் பார்த்து அவள் கருணா கடாக்ஷம் இருந்தாலே நமக்கு உய்வு என்பதை உணர்ந்து பாடியது. கண்ணனை யாசித்த ஆண்டாள் அவனைத் தனக்குத் தரக்கூடிய வல்லமை கொண்டவள் ஸ்ரீயாகிய மஹாலக்ஷ்மித் தாயே என்பதை உணர்ந்து அவளிடம் விடுத்த வேண்டுகோள் இது. அத்தகைய பாடலை உணர்ச்சியோடு பாடி வந்த ஸ்ரீராமாநுஜர் இங்கே என் பெண்ணைப் பார்த்ததும், ஸ்ரீயையே நேரில் கண்ட உணர்வைப் பெற்றிருக்கிறார். அதனால் வந்த மயக்கம் இது." என்று கூறிவிட்டு சீடரை ஆசுவாசப் படுத்தி எழுப்பினாராம். அத்தகைய அபூர்வமான பாசுரம் இது.

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்!= நப்பின்னைப் பிராட்டி நந்தகோபனுக்கு மருமகள் என்றும் ஏழு எருதுகளை அடக்கிவிட்டுக் கண்ணன் அவளை மணந்தான் என்றும் செவிவழிச் செய்திகள் பல கூறுகின்றன. பாகவதத்திலோ, மற்றக் கண்ணன் கதைகளிலோ இது பற்றிக்குறிப்புகள் இல்லை எனினும் தமிழ்நாட்டு மரபை ஒட்டி ஆண்டாள் நப்பின்னையைப் பற்றிக் கூறி இருக்கிறாள் என்று எடுத்துக்கொள்ளவேண்டும். யசோதையின் அண்ணன் ஸ்ரீகும்பன் என்பவரின் மகள் என்றும் சொல்வார்கள். ஸ்ரீமஹாலக்ஷ்மியைக் குறிப்பதாயும் பொருள் கொள்வார்கள்.

இது வரைக்கும் தோழிகளை எழுப்பிக்கொண்டு, பின்னர் நந்தகோபன் அரண்மனைக்கு வந்து வாயில்காப்போனிடம் அநுமதி பெற்று உள்ளே நுழைந்து நந்தகோபனை எழுப்பிப் பார்த்து யசோதையையும் எழுப்பிப் பார்த்தாயிற்று. ம்ஹும், ஒண்ணும் அசையலை. பலராமனுக்கும் அசையவே இல்லை. ஒரே வழி, கண்ணனின் மனைவி காலில் விழுவது தான். நப்பின்னையின் கருணை துளி கிடைத்தால் போதுமே! நம்ம வீட்டிலேயே நமக்கு ஏதானும் வேணும்னா நேரடியா அப்பாகிட்டே கேட்பது வெகுசிலர்தான் இருப்பார்கள். எல்லாருமே அம்மா மூலமாத் தானே அப்பாவிடம் விண்ணப்பம் வைப்போம்.

பலமுள்ள பல களிறுகளை, யானைகளை அடக்கும் தோள்வலிமை கொண்ட நந்தகோபனின் மருமகள் ஆன நப்பின்னைப் பிராட்டியே

கந்தங் கமழும் குழலீ! கடை திறவாய்!
வந்தெங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்= நல்ல நறுமணமுள்ள பூக்களைச் சூடி, வாசனாதித் திரவியங்களைப் பூசிக்கொண்டதால் எப்போதுமே மணம் வீசும் குழலைக் கொண்டவளே, அல்லது எந்நேரமும் கண்ணனைப் பிரியாமல் இருப்பதால் கண்ணனின் அருளாகிய நறுமணம் பூராவும் உன்னிடமும் நிறைந்திருப்பதால் நீயே நறுமணமுள்ளவளாய் இருக்கிறாயே என்றும் கொள்ளலாம். வாசல் கதவைத் திற அம்மா, எனக் கேட்க, அவளோ என்ன அவசரம் விடிந்துவிட்டதா? என்று கேட்கிறாள்.

ஆஹா விடியாமல் என்னம்மா? கோழிகள் கத்துகின்றனவே, தெரியலையா? உன் வீட்டு மாதவிக்கொடி படர்ந்து இருக்கும் மாதவிப் பந்தல் மேல் பலவேறு விதமான தொனிகளில் குரல் கொடுக்கும் குயிலினங்கள் கூவிக்கொண்டிருக்கின்றனவே கேட்கவில்லையா?

பந்தார் விரலியுன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!= எல்லாம் சொல்லியும், கேட்டுக்கொண்டு இருக்கும் அவளிடமிருந்து பதிலே இல்லை. கொஞ்சம் எட்டிப் பார்க்கிறார்கள். அவள் ஒரு கையில் பந்தை வைத்துக்கொண்டு இன்னொரு கையால் கண்ணனை அணைத்துக்கொண்டு படுத்திருக்கிறாள். அவள் எழுந்து கண்ணனை அனுப்பவேண்டும். கண்ணனும் வரவேண்டும், அவளும் வரவேண்டும். என்ன செய்யலாம்?? பந்தை வைத்துக்கொண்டு கண்ணனோடு விளையாடிக்கொண்டிருந்துவிட்டு அப்படியே தூங்கிட்டாள் போல, "அடி பந்தை வைத்துக்கொண்டிருக்கும் பெண்ணே, உன் மைத்துனன் ஆகிய பலராமன் சிறப்பையும், கூடவே கண்ணனின் சிறப்பையும் பாடவேண்டி, நீ உடனே வா. உன் அழகான செந்தாமரை மலர்போன்ற கைகளால் உன் கைகளில் நீ அணிந்திருக்கும் வளைகள், ஜல் ஜல் என ஒலி எழுப்ப, ஓடி வந்து கதவைத் திறந்தால் நாங்கள் அனைவரும் மகிழ்வோம் அம்மா. உன் கருணா கடாக்ஷம் ஆகிய கதவைத் திற. பகவானின் திவ்ய செளந்தரியத்தில் அதன் அழகில் நாங்கள் எங்களை மறந்து பாடி ஆடுகிறோம்.

இதை பட்டத்திரி கூறுவது எப்படி எனில், கண்ணனிடம் மாறாத பக்தி பூண்டவன் தனக்குத் தானே துணைவன் ஆவான் என்கிறார்.

க்ஷூத் த்ருஷ்ணா லோபமாத்ரே ஸததக்ருத தியோ ஜந்தவ: ஸந்த்யநந்தா:
தேப்யோ விஜ்ஞாநவத்த்வாத் புருஷ இஹ வரஸ்தஜ்ஜநிர்துர்லபைவ:
தத்ராப்யாத்மாத்மந: ஸ்யாத்ஸூஹ்ருதபி ச ரிபுர்யஸ்த்வயி ந்யஸ்தசேதா:
தாபோச்சித்ருபாயம் ஸ்மரதி ஸ ஹி ஸுஹ்ருத் ஸ்வாத்மவைரீ ததோந்ய:

ஆடு, மாடுகளிலிருந்து எல்லாருக்கும் பசி, தாகம் உண்டு. தாவரங்கள் கூட நீர் ஊற்றினாலோ, எருக்கள் போட்டாலோ தான் பலன் தரும். ஆகவே இந்தப் பசி, தாகம், மற்ற உணர்வுகள் என்று இந்த உலகத்தில் வாழும் அனைத்துவிதமான ஜீவராசிகளும் அதைத் தீர்த்துக்கொள்வதிலேயே முயல்கின்றனர். அவங்க நேரமும், கவனமும் அதிலேயே இருக்கின்றன. இவர்களுக்குள்ளே மனிதனுக்கு மட்டுமே சிந்திக்கும் ஆறாம் அறிவு உண்டு. அந்தப் பகுத்தறிவினால் மனிதன் எது நன்மை, எது தீமை என்பதைப் புரிந்து கொள்கிறானா? இல்லை.

கிடைத்தற்கரிய இந்த மனிதப் பிறவியை மனிதன் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் தனக்குத் தானே கேடு விளைவித்துக்கொண்டு தனக்குத் தானே சத்ருவாகிறான். நன்மை செய்துகொண்டால் நண்பனும் ஆகிறான். ஆகவே நாம் பகவானிடம் உண்மையாகவும், ஒரே தியானமாகவும் மனதைச் செலுத்தி, இந்தப் பிறவியாகிய மாபெருங்கடலில் இருந்து அதைக் கடக்கும் வித்தையை, உபாயத்தை ஆலோசித்துக் கேட்டுக்கொண்டு அதன் படி நடந்தால் மனிதன் தனக்குத் தானே துணைவனும் ஆவான். இல்லை எனில் அவனுக்கு அவனே பகைவன்.


படங்களுக்கு நன்றி கூகிளார்




18 comments:

  1. ராமானுஜர் சம்பவம் இப்போதுதான் படிக்கிறேன்.   மகான்களுக்கே இந்த மாதிரி அனுபவம் வாய்க்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ராமானுஜரின் இந்த மயக்கம் பற்றிச் சின்ன வயசிலே சந்தான கோபாலாசாரியாரின் உபந்நியாசத்தில் கேட்டிருக்கேன். அப்போக் கொஞ்சம் ஆச்சரியமான புரிதலாக சந்தேகமாக இருந்தது. வயது ஏற ஏறப் புரிந்து கொள்ள முடிகிறது.

      Delete
  2. பாடல் வரியிலிருந்தே கோலங்கள் தேர்ந்தெடுப்பது எல்லோரும் செய்வதுதானா?   நான் அப்படியெல்லாம் ஊன்றி கவனித்ததில்லை.

    ReplyDelete
    Replies
    1. கோலங்கள் தேர்ந்தெடுத்துப் போடுவது குறித்து மின் பங்கெடுப்பு அதிகமாக இருந்தப்போ ஆர்வத்துடன் செய்தேன். உதயன் என்பவர் கோலங்களில் திறமைசாலி. அவர் இணையத்துக்கு அறிமுகம் ஆனதிலிருந்து நட்பு. தற்சமயம் தொடர்பில் இல்லை. அப்போ நான் கோலங்கள் தேர்ந்தெடுத்துச் சொல்ல அவர் கோலம் போடுவார். அப்படி ஒரு தொடர் மார்கழி 30 நாட்களும் மின் தமிழில் வந்தது. அந்தத் தொகுப்பைத் தேடினேன். கிடைக்கலை. இப்போதைய கோலங்கள் நானாகத் தேர்ந்தெடுத்துப் போடுவது. கோலங்களுக்குக் காப்பி ரைட் இல்லை என்றாலும் அதை இணையத்தில் வெளியிட்ட பக்கங்களுக்குச் சொந்தக்காரங்க இருப்பாங்களே! அதனால் பொதுவாக நன்றி தெரிவித்து விடுகிறேன்.

      Delete
    2. //மின் பங்கெடுப்பு அதிகமாக இருந்தப்போ// மின் தமிழ்க்குழுமப் பங்கெடுப்பு ! எப்படியோ வார்த்தைகள் விடுபட்டிருக்கின்றன! :( இப்போத் தான் கவனிக்கிறேன்.

      Delete
  3. கோலங்கள் அருமை சகோ
    தொடர்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி கில்லர்ஜி!

      Delete
  4. உங்கள் எழுத்து விரிவாக அமைப்பாக இருக்கிறது. மல்லிகைப்பூ பந்து விளையாடுவார்களாம்.
    ஜகார்த்தா கோவில் ஸ்ரீனிவாச கல்யாணத்தில் நலங்கின் போது
    பெருமாள் சார்பில் சிலரும் தாயார் சார்பில் பூப்பந்து ஆடினார்கள்.
    ரசிக்கும்படியாக இருந்தது.

    இராமானுஜ அனுபவம் எல்லோரையும் உணர்ச்சியில்
    ஆழ்த்திவிடும்.
    இந்த பக்தியைத் தான் ஸ்ரீ ஆண்டாளும் அனுபவித்து இருப்பாள்.
    நப்பின்னை நீளா தேவியின் அவதாரம். ஆண்டாள்
    பூமாதேவியின் அவதாரம்.
    ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்கிறார்கள்.

    கோலங்கள் மிகக் கச்சிதமாகத் தேர்ந்தெடுத்துப் பதிவிடுவதும் ஒரு அழகு.
    எல்லாவற்றையும் விட்டு விட்டு எங்கோ இருக்கிறோமே என்று சில சமயம்
    தோன்றும்.
    இதுவும் அவன் செயல்தான். நன்றி கீதாமா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, ஆமாம், நானும் இந்தியாவை விட்டு இருப்பதில் நிறைய வருத்தத்துடன் தான் இருக்கிறேன். இங்கே குழந்தை ஒருத்தி தான் ஆறுதல்! அவள் விஷமங்களைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கோம். எங்களோடு விளையாடனு தனியான ஒரு விளையாட்டு வைச்சிருக்கா! :)))) பாசுரத்தின் கருவைக் கொஞ்சமாவது கோலங்கள் வெளிப்படுத்தணும் என்னும் எண்ணம். அவ்வளவு தான்.

      Delete
  5. ஸ்ரீராமாநுஜர் பற்றிய செய்திகள் படிக்க படிக்க மனம் நிறைகிறது. அருமையான பகிர்வு.

    //கிடைத்தற்கரிய இந்த மனிதப் பிறவியை மனிதன் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் தனக்குத் தானே கேடு விளைவித்துக்கொண்டு தனக்குத் தானே சத்ருவாகிறான். நன்மை செய்துகொண்டால் நண்பனும் ஆகிறான். ஆகவே நாம் பகவானிடம் உண்மையாகவும், ஒரே தியானமாகவும் மனதைச் செலுத்தி, இந்தப் பிறவியாகிய மாபெருங்கடலில் இருந்து அதைக் கடக்கும் வித்தையை, உபாயத்தை ஆலோசித்துக் கேட்டுக்கொண்டு அதன் படி நடந்தால் மனிதன் தனக்குத் தானே துணைவனும் ஆவான். இல்லை எனில் அவனுக்கு அவனே பகைவன்.//

    ஆமாம் உண்மை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி அரசு!

      Delete
  6. மாக் கோலங்களுடன்
    தமிழ்த் திருக்கோலமும் அருமை.. இனிமை..

    ஆண்டாள் திருவடிகள் போற்றி..

    ReplyDelete
  7. //மாதவிப்
    பந்தல்மேல் பல்கால்// - இந்தத் தடவை ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றிருந்தபோது வடபத்ரசாயி கோவில் பக்கத்தில் இந்த மாதவிப் பந்தல் என்று சொல்லப்படும் இடத்தைக் காண்பித்தார்கள். பாடல் அதனை நினைவுக்குக் கொண்டுவந்துவிட்டது.

    நிறைய வேலைகளினால் இணையம் பக்கம் வரமுடியலை. நிறைய எழுதமுடியலை.

    ரொம்ப உபயோகமான பதிவுகள் நீங்க எழுதியிருப்பது.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி நெல்லைத்தமிழரே! உங்கள் வேலைகளை முதலில் கவனியுங்கள். ஒண்ணும் அவசரம் இல்லை.

      Delete
  8. இராமானுசரின் சம்பவம் படித்திருக்கிறேன். மகான்களுக்கே இத்தகைய ஆழ்ந்து இருக்கும் நிலை, அதாவது பாடலின் பொருளின்மீது ஆழ்ந்திருக்கும் தன்மை வாய்க்கும். மிக அருமையா கொண்டுவந்திருக்கீங்க.

    ReplyDelete
    Replies
    1. மெய்ம்மறந்த நிலை என்பார்கள். ராமானுஜர் போன்றவர்களுக்கு அத்தகைய நிலை எளிதில் வாய்க்கும்.

      Delete
  9. ராமானுஜர் அனுபவம் பற்றி தெரிந்து கொண்டேன் மா...

    நல்லதொரு பாசுரமும் அதற்கான விளக்கமும். தொடரட்டும் பாசுரங்களும் விளக்கங்களும்.

    ReplyDelete