எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, January 14, 2020

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்! 29


   திருப்பாவைப் படங்கள் 29க்கான பட முடிவுகள்  திருப்பாவைப் படங்கள் 29க்கான பட முடிவுகள்

திருப்பாவைப் படங்கள் 29க்கான பட முடிவுகள்
சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது.
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாமாட்செய்வோம்
மற்றை நம்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்!


               இருதய கமலம்க்கான பட முடிவுகள்  இருதய கமலம்க்கான பட முடிவுகள்


                                                                                                                                       
இருதய கமலம்க்கான பட முடிவுகள்தாமரைக் கோலம்,க்கான பட முடிவுகள்



 தாமரைக் கோலம்,க்கான பட முடிவுகள்  தாமரைக் கோலம்,க்கான பட முடிவுகள்

கண்ணனோடு ஐக்கியம் அடைவதை இங்கே சொல்வதால் நம் இருதயவாசியான கண்ணனைச் சுட்டும் விதமாக இருதய கமலம் கோலம் போடலாம்.  எனினும் வாசலில் அனைவரும் மிதிக்கும் இடத்தில் பலரும் போடத் தயங்குவார்கள் என்பதால் வீட்டில் பூஜையறையில் போடலாம்.

 படங்களுக்கு நன்றி கூகிளார்!

தாமரைப்பூக்கள் கொடியோடு வரைந்து வண்ணம் தீட்டலாம்.

இந்தப் பாடலின் பொருளாவது:  கண்ணனின் பொற்பாதங்களை வணங்க வந்திருக்கும் காரணம் என்னவெனில் மாடுகளை மேய்க்கும் குலத்தில் வளர்ந்த நீ, நாங்கள் செய்யும் சிறு விரதத்தை ஏற்றுக் கொள்வாய்!  உன்னை ஆராதித்து நாங்கள் செய்து வந்த இந்தச் சின்ன விரதத்தைக் கண்டு கொள்ளாமல் போய்விடாதே! உன்னுடைய பரிசுகளான பாடகம், சூடகம் போன்ற பொருட்களுக்காக மட்டும் நாங்கள் விரதம் மேற்கொள்ளவில்லை.  இந்தப் பிறவி மட்டுமின்றி இனி வரப் போகும் பிறவிகளிலும் நாங்கள் உன்னை மறக்காமல் உனக்கு உறவினர்களாகவே பிறக்க வேண்டும்.  உனக்கே நாங்கள் எங்கள் தொண்டுகளைச் செய்து வருவோம். கண்ணா!  எங்களை உன் உறவினர்களாக ஏற்றுக் கொண்டு உன்னோடு எங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டு எங்களிடம் இருக்கும் மற்ற உலக ஆசைகளை அடியோடு அழித்து ஒழித்துவிடுவாய்!

பெருமானின் திருவடிகளையே அடைக்கலம் எனச் சரணாகதி அடைந்தோர்க்கு முக்தி நிச்சயம் என்பதே இந்தப் பாடலின் உட்பொருள்!

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய்= கண்ணனும் வந்துவிட்டான். நோன்பும் முடிந்தாகிவிட்டது. கண்ணனைக் கண்ணார, மனமாரக் கண்டு களித்துக்கொண்டிருக்கிறோம். மேலும் கண்ணனிடம் கேட்பதற்கு வெறும் அணிகலன்களும், ஆடைகளும் மட்டுமா?? இல்லை, இல்லை அவை எல்லாம் வெறும் வெளிப்பார்வைக்கு வேண்டுமானால் ஆடம்பரமாக, அத்தியாவசியமாய் இருக்கலாம், நமக்கு வேண்டியது அதுவல்லவே/

அதிகாலையிலேயே கருக்கலிலேயே எழுந்து, தோழிகளையும் அழைத்துக்கொண்டு நீராடி நோன்பு வழிபட்டு, இப்போது நோன்பையும் முடித்துவிட்டு உன்னையும் கண்டு சேவித்துக்கொண்டோம் கண்ணா, உன் பொற்றாமரை அடியே எங்களுக்குக் கதி. வேறெதுவும் இல்லை அப்பா. அந்தப் பொற்றாமரை அடியைப் போற்றும் காரணம் என்ன தெரியுமா கேள் கண்ணா!

பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது.= அப்பா, எங்களைக் கடைத்தேற்றவே இந்த ஆயர் குலத்தில் நீ பிறந்தாய். பசுக்களை நாம் ரக்ஷிக்கிறோமா, அவை நம்மை ரக்ஷிக்கிறதா? ஆயர்கள் எவருமே பசுக்களை மேய விட்டு அவற்றின் வயிறு நிரம்பாமல் உணவு உண்ண மாட்டார்கள். பசுக்களை அப்படி ரக்ஷிப்பார்கள். அத்தகைய குலத்தில் பிறந்து நீ எங்களை ரக்ஷித்து ஆட்கொள்ளாமல் இருப்பாயா? எங்களை உன்னுடன் ஐக்கியம் செய்து கொள்ளாமல் இருப்பாயா? அதுதான் நடக்கும் அப்பா, வேறு எதுவும் நடவாது.

இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு= கோவிந்தா, கோபாலா, நாங்கள் வந்தது வெறும் பறை என்னும் வாத்தியத்துக்காக மட்டும் அல்ல, எங்களுக்குத் தேவை மோக்ஷம், முக்தி. அதுவும் எப்படிப்பட்ட முக்தி?? ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும், என்றைக்கும், எப்போதும், எந்தப் பிறவியிலும் உன்னோடு நாங்கள்


உற்றோமே யாவோம் உனக்கே நாமாட்செய்வோம்
மற்றை நங்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்!= உறவினர்களாகவே இருப்போம். நீ வந்து எங்கள் குலத்தைத் தேடிப் பிறந்துவிடு அல்லது எங்களை உன் குலத்தில் பிறக்கச் செய். உன்னைத் தவிர வேறொருவருக்கு நாங்கள் எந்தவிதத் தொண்டும் செய்ய மாட்டோம். உனக்கே நாங்கள் அடிமையாக இருப்போம். ஆகவே எங்களிடம் இருக்கும் மற்ற ஆசைகளை எங்களிடமிருந்து விட்டொழிக்க வேண்டி, எங்கள் மண்ணாசை, பொன்னாசை போன்ற எந்தவிதமான இவ்வுலக ஆசைகளும் எங்களிடம் ஒட்டாதபடிக்கு எங்களை மாற்றி அருள் புரிவாய் கண்ணா. எங்களுக்கு வேறு எதுவுமே வேண்டாம், நின்னருளே வேண்டும். உனக்கே நாங்கள் என்றென்றும் அடிமை.

இதை பட்டத்திரி எப்படிச் சொல்கிறார் என்று பார்த்தால்,பகவானின் சொரூபமே தியானிக்கத் தக்கது என்கிறார். பகவானின் செளந்தர்யமே நம்மை மகிழ்ச்சி பொங்க வைக்கும் என்கிறார். மேலும் அவர் பகவானின் செளந்தர்யத்தை எவ்விதம் வர்ணிக்கிறார் என்றால்

ஸூர்யஸ்பர்த்திகிரீடம் ஊர்த்த்வதிலக ப்ரோத்பாஸி பாலாந்தரம்
காருண்யாகுலநேத்ரம் ஆர்த்ர ஹஸிதோல்லாஸம் ஸுநாஸாபுடம்
கண்டோத்யந் மகராப குண்டலயுகம் கண்டோஜ்ஜ்வலத் கெளஸ்துபம்
த்வத்ரூபம் வநமால்ய ஹாரபடல ஸ்ரீவத்ஸ தீப்ரம் பஜே

பகவானின் திவ்ய மங்கள சொரூபத்தைத் தியானிப்போம். அதில் அடங்கி இருக்கும் இனிமையான செளந்தர்யத்தை வர்ணிக்க வார்த்தைகளால் இயலாது. சூரியனைப் போல் பிரகாசிக்கும் கிரீடமும், நீண்ட கஸ்தூரித் திலகமும், அழகான அகன்ற நெற்றியும், அருள் பொழியும் செந்தாமரையை நிகர்த்த கண்களும், அன்பான புன்னகையும், நீண்ட நாசியும், காதில் போட்டிருக்கும் மகரகுண்டலங்களின் ஒளியானது கன்னங்களில் பட்டுப் பிரகாசிக்கும் அழகும், கழுத்தில் கெளஸ்துபமணியும், வனமாலையும், ஸ்ரீவத்ஸம் என்னும் மறு உள்ள மார்பும் அணிந்த பகவானின் திருவடிகளைத் தியானிப்போம். அது ஒன்றே நம்மைக் கடைத்தேற்றும்.

10 comments:

  1. கோலங்களோடு சொல்லி வருவது பொருத்தமாக அமைகிறது...

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, பாராட்டுக்கும் தொடர்ந்து வந்ததுக்கும் நன்றி. கடைசிப் பாடல் இன்னும் சிறிது நேரத்தில் சுமார் 11-00 மணி அளவில் வெளியாகும். அதையும் பார்த்துடுங்க. மார்கழி 29 தேதி தான் என்பதால் 30 ஆம் பாடலையும் இன்றே போட்டு விட்டேன். நாளை பொங்கல் சிறப்பு வாழ்த்துகளுக்காக மட்டும் பதிவு.

      Delete
  2. மூன்றாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் ஒரு பாடல் சொல்லித் தந்தார்கள்.  "மாடுகள் மேய்த்துவரும் ஒரு ஆயர்குலச் சிறுவன்..."   என்று வரும்.  அந்த முதல் வரியும், அதன் டியூனும் மட்டும் நினைவுக்கு வருகிறது.

    எந்தக்குலத்தில் பிறந்தாலும் கண்ணனின் கருணை கிட்டுமல்லவா?

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், கண்ணன் அனைவருடனும் சகஜமாகப் பழகுபவன் இல்லையோ! அவன் நம்மைப் போலத் தான் ஆசாபாசங்கள் நிறைந்தவன். அதனால் நமக்கு அணுக எளிமையாகக் காண்கிறான்.

      Delete
  3. அருமையான பாசுரம். ஆராதனம் முடிந்ததும் சாற்றுமுறையாக
    கடைசி இரு பாடல்களையும் சேர்த்தே சேவிப்பது வழக்கம்.
    மிக முக்கியமான அழகான பதிவு. ஆண்டாள் தானும் கண்ணனிடம் ஒன்றி
    நம்மையும் அவனுடன் சேர்த்து விடுகிறாள்.
    முப்பது பாடல்களையும் முத்துப் போல் கொடுத்தீர்கள்.
    மிக நன்றி கீதா மா.இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, மார்கழியில் எப்போவானும் 30 தேதி அமைகிறது. அதற்கு என் அப்பா ஏதோ காரணம் சொல்லுவார். அது என்னனு இப்போ நினைவில் வரலை. பாராட்டுக்கு நன்றி.

      Delete
  4. எத்தனை பிறவி எடுத்தாலும் இறைவனை மறவாத நிலை வேண்டும்.

    //பகவானின் திருவடிகளைத் தியானிப்போம். அது ஒன்றே நம்மைக் கடைத்தேற்றும்.//

    பாதகமலங்கள் தியானிப்போம் அது ஒன்றுதான் நாம் கடையேற வழி.

    கோலங்களும், பாடல் விளக்கங்களும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, பாராட்டுக்கும் தொடர்ந்து வந்ததுக்கும் நன்றி.

      Delete
  5. எத்தனை பிறவி எடுத்தாலும் இறைவன் திருவடிகளைப் பற்றும் நிலை.... அதுவே சரியான வழியும்...

    சிறப்பான விளக்கங்கள். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இந்த மார்கழி மாதத்தில் சிறப்பான பதிவுகளைத் தந்த உங்களுக்கு வாழ்த்துகளும் நன்றியும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், அதிசயமாக உங்களையும் இரண்டு வாக்கியங்களை எழுத வைத்த இந்தப் பதிவுக்கும், ஆண்டாளுக்கும் நன்றி. :)))))))))

      Delete