எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, August 30, 2016

ஒரு சின்னத் திப்பிசம்! ஆனாலும் ரசிக்கலாம்!

இன்னிக்கு வீடு நிறைய விருந்தினர்கள். ஒரு குட்டிப் பயலும் வந்தான். வீட்டில் வாங்கி வைச்சிருந்த சின்ன வெங்காயத்தை எல்லாம் வாரி இறைச்சான். ரொம்ப சந்தோஷமா இருந்தது. வீட்டில் வைச்ச சாமான் வைச்ச இடத்தில் இருந்தால் அதில் என்ன அழகு இருக்கு! கலையணும் இல்லையா? அதுவும் சின்னக் கையால் கலைவதுன்னா! அதுவே ஒரு கவிதை!

அப்புறமா இப்போச் சொல்ல வந்தது ஒரு முக்கியமான விஷயம். ஹிஹிஹி! நேத்திக்கு ராத்திரிக்கு என்ன செய்யறதுனு மண்டை காய்ஞ்சது. ஏற்கெனவே குளிர்சாதனப் பெட்டியில் வெந்தய தோசை மாவு இருந்தது தான். ஆனால் அது இரண்டு நாட்களாகச் சாப்பிட்டாச்சு. ரவா இட்லி பண்ணலாமானு பார்த்தால் அதுக்குத் தோதாக எதுவும் கிடைக்கலை! சரி கோதுமை தோசை பண்ணலாம்னு நினைச்சால். கேழ்வரகு ரவா இட்லிக்காக வாங்கின எம்.டி.ஆர் கேழ்வரகு ரவா இட்லி மாவு இருக்குனு நினைவுக்கு வந்தது. அதோடு கிருஷ்ணன் பிறப்புக்காக மிக்சியில் பொடித்த அரிசி மாவுக் கப்பியும் இருந்ததா! போதாதுக்குக் கிருஷ்ணனுக்குத் தட்டின வடை போக மிச்ச மாவும் இருந்தது. இங்கே தினம் தினம் ராத்திரி மழை பெய்யுதா! சூடு அதிகம் இல்லை. ஆகவே வடை மாவும் புளிக்கலை!

ஆகவே ஒரு திப்பிச வேலை செய்யலாம்னு முடிவு பண்ணினேன். கேழ்வரகு ரவா இட்லி மாவு அரைக்கிண்ணமும், அரிசி ரவை பொடித்தது அரைக்கிண்ணமும், கோதுமை ரவை(சம்பா) அரைக்கிண்ணமும் எடுத்துக் களைந்து ஊற வைச்சேன். சாயந்திரமா எல்லாத்தையும் போட்டு அரைச்சு மிச்சம் இருந்த வடை மாவையும் (உளுந்து வடை மாவு) கலந்தேன். இஞ்சி, ப.மி. கருகப்பிலை, கொத்துமல்லி, வெங்காயம் பொடியாக நறுக்கிச் சேர்த்தேன்.



அரைச்சுக் கலந்த மாவை தோசையாக ஊற்றியதன் படம். தோசையைத் திருப்பிப் போட்டதும் உள்ள படம் கீழே.



திருப்பிப் போடப்பட்டு வெந்து கொண்டிருக்கும் தோசை. சாம்பார், வத்தக்குழம்பு எல்லோத்தோடயும் நன்றாகவே இருக்கும்போல! :)

வாட்சப்பில் ஶ்ரீராமுக்குப் படத்தை அனுப்பினேன். அவர் என்னோட மெயிலுக்கு அனுப்பப் படத்தைப் போட்டாச்சு! இனிமே செல்லில் எடுக்கிறதுன்னா இன்னொரு செல்லில் தான் எடுக்கணும். இல்லைனா காமிராவிலேயே எடுத்துடணும்! :)

 என்ன என்று ஆவலுடன் கேட்ட ரங்க்ஸிடம் விஷயத்தைப் பட்டென்று உடைக்க அவருக்கு பயம் வந்துடுச்சு. மறுபடி நான் சோதனை எலியா என்று கவலை வந்துடுச்சு. அவரைச் சமாதானம் செய்வதற்காகத் தேங்காய்ச் சட்னி என்னும் அஸ்திரப் பிரயோகம் பண்ணிச் சட்னி அரைச்சுட்டு தோசை வார்த்துக் கொடுத்தால் வாயே திறக்காமல் மூன்று தோசைகள் சாப்பிட்டார்.

தோசை நல்லாவே இருந்தது. நினைவாகப் படமும் எடுத்தேன். ஆனால் பாருங்க காமிராவில் எடுக்கலை. :( மொபைலில் எடுத்தேனா! அதை அங்கிருந்தே என்னோட மெயில் பாக்சுக்கு அனுப்பிப் பின்னர் அதைப் பதிவில் இணைப்பேன். ஆனால் மொபைல் டாட்டா டிசேபிள் பண்ணி இருக்காம். சரினு அதை எனேபிள் பண்ணினால் என்னஎன்னவோ சொல்லுது! மொத்தத்தில் படம் இங்கே போட முடியலை! :( என்ன செய்யலாம்னு யோசிக்கிறேன். பார்க்கலாம். யாருக்கானும் என்ன செய்யணும்னு தெரிஞ்சால் சொல்லுங்க! இன்னிக்கு வந்திருந்த உறவினர்கள்  இன்னும் சிறிது நேரம் இருந்திருந்தால் அவங்க கிட்டே கேட்டுப் போட்டிருக்கலாம். இன்னிக்கு முழுக்க கணினியைத் திறக்கவே இல்லை. நேத்திக்கு இடிச்ச இடியிலும், மின்னிய மின்னலிலும் காலை பத்து மணி வரை இணையமும் வரலை. தொலைக்காட்சியும் வரலை! 

33 comments:

  1. என்னென்னவோ ஜோடி சேர்த்து புது மாதிரி கலக்கிட்டீங்க.. மாமாவுக்கு தேங்காய் சட்னி கொடுத்து ஏமாற்றி விடலாமா? அட!

    என் பாஸ் அவ்வப்போது 'இன்று இரவுக்கு என்ன டிபன் செய்வது கவலையில் முழுகும்போது பார்க்கப் பாவமாக இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, எனக்கும் இது மண்டையை உடைக்கும் ஒன்று. :) தேங்காய்ச் சட்னி என்றால் அவருக்கு வேறே எதுவும் வேணாம்! :) எனக்கு தோசைன்னாலே அது எந்த தோசையானாலும் தக்காளிச் சட்னி தான் உள்ளே இறக்கும்! :)

      Delete
  2. படங்கள் போட மறந்து விட்டு ஏதோ சாக்கு! நண்பர்களுக்கு வாட்ஸாப்பில் அனுப்பி விட்டு என் மெயிலுக்கு அனுப்புங்கள் என்று சொன்னால் அனுப்பியிருக்க மாட்டார்களா!

    ReplyDelete
    Replies
    1. ஆமா இல்ல! அது தோணலை, இதோ அனுப்பிடறேன். என்னோட மெயிலுக்கு அனுப்புங்க! இன்னிக்கே போட்டுடுவோம்! :)

      Delete
  3. எல்லாத்தையும் கலந்து தோசை
    :)

    ReplyDelete
  4. //வாயே திறக்காமல் மூன்று தோசைகள் சாப்பிட்டார். // வாய தெறக்காம எப்டி சாப்டார்? உலக மஹா அதிசயம்!

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, கீழே ஜேகே அண்ணாவும் அதே தான் கேட்டிருக்கார். :)

      Delete
  5. ​//​
    -- வாயே திறக்காமல் மூன்று தோசைகள் சாப்பிட்டார்.
    ​//​

    வாயைத் திறக்காமல் தோசை சாப்பிடும் வித்தையை கொஞ்சம் விவரமாக எழுதுங்கள்.
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. எழுதிடுவோம். தம்பியும் அதான் கேட்கிறார். :)

      Delete
  6. திப்பிசம் என்ற பொருள் நிறைந்த சொல்லைக் கேட்டு நூறு வருடங்கள் ஆயின. அடுத்த தடவை அரிசி உப்பமாவுக்கு பதில், இந்த எனேபிள்ட் தோசை சாப்பிட வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நமக்கு பாரம்பரிய சமையலை விட இந்தத் திப்பிச சமையலில் தான் கற்பனா வளம் கொடிகட்டிப் பறக்குமாக்கும். சீக்கிரமா வாங்க. தோசை மாவு ரெடி பண்ணிடறேன். ஆனால் நான் செய்தது திடீர்த் தயாரிப்பு! :)

      Delete
  7. ரசிக்கும்படியான திப்பிசம்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, இப்போப் படங்களும் சேர்த்தாச்சு ஶ்ரீராம் தயவிலே. மறுபடி வந்து ரசிக்கவும். நன்றி. :)

      Delete
  8. /திப்பிசம் என்ற பொருள் நிறைந்த சொல்லைக் கேட்டு நூறு வருடங்கள் ஆயின./ நூறு வருடங்கள் என்றால் வயதென்ன/? திப்பிசம் எனும் வார்த்தை புழக்கத்தில் கேட்டதில்லை. மலையாளத்தில் திரிசமனம் என்பார்கள் அதற்கு குறும்பு என்றோ எதையாவது நோண்டுதல் என்றோ பொருள் கொள்ளலாம்

    ReplyDelete
    Replies
    1. என்ன திரிசமன் என்பார்கள்! எங்க வீடுகளிலே புழக்கத்தில் இருக்கும் வார்த்தை! திப்பிசம் என்பது தீராமையோடு சேர்ந்து வரும். திப்பிசமும் தீராமையும் என்பார்கள். :) இம்மாதிரி தகிடுதத்த வேலைகளைத் திப்பிசம் என்று சொல்வதுண்டு! :)

      Delete
  9. அடடே.... படம் வந்துடுச்சே...!

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, நன்னி ஹை!

      Delete
  10. "வீட்டில் வைச்ச சாமான் வைச்ச இடத்தில் இருந்தால் அதில் என்ன அழகு இருக்கு" - என் குழந்தைகள்ட நான் எப்போது சொல்வது, நான் எப்படி neatஆ வீட்டை வச்சுருக்கேன் (இங்க). 'நீங்க இருந்தபோது எப்படி கசா முசான்னு குப்பையாக் கிடந்தது என்று. என் பையன், வீடு என்ன மியூசியமா அப்படிம்பான். அதை ஞாபகப்படுத்திவிட்டது.

    நானும் கேழ்வரகு உளுந்துமாவு போட்ட தோசை எப்படி வந்ததுன்னு இன்னும் எழுதலையேன்னு நினைத்திருந்தேன். எந்தத் தோசைன்னாலும் இட்லி மிளகாய்ப்பொடி அவசரத்துக்குக் கைகொடுக்கும். தேங்காய்ச்சட்னியும் நல்லாத்தான் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லைத் தமிழன், காணோமேனு நினைச்சேன். முதல்லே கேழ்வரகு ரவை மட்டும் தான் போடும் எண்ணம் இருந்தது. அப்புறமா கோகுலாஷ்டமி பக்ஷணத்துக்கு அரைச்ச அரிசிமாவுக் கப்பி வேறே இருந்ததா, சரினு கோதுமை ரவையும் கலந்துட்டேன். உளுந்து அரைச்சுப் போடறதுக்குப் பதிலா தயாராக இருந்த உளுந்து வடை மாவு! :) நன்கு கலந்துகொண்டு எல்லா சாமான்களையும் சேர்த்துத் தோசை வார்த்தால் நன்றாகவே வருது! :)

      Delete
    2. இதுவே ஆமைவடை மாவாக இருந்திருந்தால் அரிசிக்கப்பியோடு கொஞ்சம் போல் கைப்பிடி உளுந்து சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ அரைச்சுக் கலந்து கொண்டு அடையாகவோ அடை தோசையாகவோ செய்திருப்பேன். :) பண்டங்களை வீணாக்கக் கூடாது இல்லையா! தேங்காய்ச் சட்னி இரவு அரைச்சது மிஞ்சினால் காலையில் அதோடு கொஞ்சம் பருப்பு, தனியா ஊறவைத்துச் சேர்த்து அரைத்துக் கலந்து கொண்டு மோர்க்குழம்பாக்கிடுவேன். இரண்டு பேருக்குச் சமைக்கிறதாலே மிஞ்சத் தான் மிஞ்சுகிறது! :)

      Delete
    3. கூட்டு ஏதேனும் பண்ணினாலும் தேங்காய்ச் சட்னி மிஞ்சினால் அதோடு புதுசாக் கொஞ்சம் போல் அரைத்துச் சேர்த்துக் கூட்டில் சேர்க்கலாம். ஒண்ணும் தெரியாது. ஆனால் இரவு செய்ததைக் காலை பயன்படுத்திடணும். :) காலை செய்த தேங்காய்ச் சட்னி என்றால் மதியமே சாப்பாட்டில் அதைப் பயன்படுத்திடுவேன். இரவு வரை வைச்சுக்கறதில்லை. நன்றாக இருக்காது!

      Delete
    4. எனக்கு எதனால் இந்த டிபன் பண்ணினேன் என்று என் ஹஸ்பண்ட் விளக்கமளித்தால் பிடிக்காது. (ஏதோ பாக்கி உள்ளவற்றை ஒரு வழி பண்ணி என் தலைல கட்டுறா என்று எடுத்துக்கொள்வேன்). அதுபோல, ஒரு முறை, மிளகாய் பஜ்ஜியில் bunஐ பிச்சிப்போட்டு கொஞ்சம் என்னன்னவோ பண்ணி ஸ்டஃப் பண்ணினாள். ஒண்ணும் சொல்லாம நான் சாப்பிட்டேன். எப்போ உள்ள ஸ்டஃப் என்ன என்பதைக் கண்டுபிடித்தேனோ, எனக்கு அந்த மிளகாய் பஜ்ஜி பிடிக்காமல் போய்விட்டது. மாமாட்டதான் கேட்கணும் தோசை எப்படி இருந்தது என்று. (எப்படிப் பண்ணினது என்று தெரிந்தபிறகு)

      Delete
    5. ஹாஹா, முன்னெல்லாம் சொல்லாமல் தான் பண்ணிட்டு இருந்தேன். மதியம் வைக்கும் சாம்பாரில் காய்களைச் சேர்த்து கரம் மசாலா போட்டுக் கொஞ்சம் வெல்லமும் வறுத்த ஜீரகப் பொடியும் சேர்த்து வெங்காயத்தை வதக்கிச் சேர்த்துக் கூட்டாக ஆக்கியதுண்டு. அப்போல்லாம் சொன்னதில்லை. ரசிச்சுத் தான் சாப்பிட்டாங்க. இப்போல்லாம் ரெண்டே பேர் தானே, மிச்சம், மீதி குறித்து அவருக்குத் தெரியுமே! அதைக் கொட்டாமல் இப்படிப் பண்ணிடலாம்னு சொல்லிடுவேன் முன் கூட்டியே! தோசை நன்றாகவே இருந்தது. மோசமில்லை! :)

      Delete
    6. பஜ்ஜி மிளகாயைக் கீறி உள்ளே விதைகளை எடுத்துவிட்டு வேர்க்கடலை, தேங்காய்த் துருவல், மி.பொ.உப்பு. ம.பொ, கரம் மசாலா சேர்த்து ஸ்டஃப் செய்து பஜ்ஜி போடலாம். ஆந்திராவில் உள்ளே ஸ்டஃப் பண்ணின மிளகாய் பஜ்ஜி தான். காரம் அதிகமாத் தெரியும். ப்ரெட் பகோடா, பனீர் பகோடா எல்லாம் நானே நிறையப் பண்ணி இருக்கேன். ப்ரெட் பகோடா ப்ளெயின், ப்ரெட் பகோடா ஸ்டஃப் பண்ணினது என இருவகையாகப் பண்ணுவேன். ஒண்ணும் இல்லைனா இருக்கவே இருக்கு உளுந்து அப்பளம். அதை நான்காக வெட்டி பஜ்ஜி மாவில் தோய்த்துப்பொரித்து எடுக்கலாம். அல்லது உ.கி. ஸ்டஃப் செய்து அப்பளத்தில் வைத்து சமோசா போல் மடித்துக் கொண்டு பஜ்ஜி மாவில் தோய்த்துப் போடலாம். ஆனால் இது எனக்கு அவ்வளவாப் பிடிக்காது.

      Delete
  11. சின்ன வயதில் பெரியவர்கள், நான் திருனெல்வேலியில் இருந்தபோது, 'என்ன திரிசமம் நடக்குது அங்கே' என்று அவ்வப்போது எங்களைக் கேட்பார்கள் (4-8 வய்துல இருந்தபோது). ஞாபகப்படுத்திவிட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், எங்களையும் தான்! அப்போல்லாம் அடிக்கடி திரிசமம், தீராமை, திப்பிசம் என்பார்கள்.

      Delete
  12. குறும்பு கண்ணன் வந்தது மகிழ்ச்சி.
    புதுவகை தோசை நன்றாக வந்தது மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், கோமதி அரசு, குழந்தை நன்றாக விளையாடினான். வேற்று முகமே இல்லை! எல்லோருக்கும் கை நிறைய வெங்காயத்தை எடுத்துட்டு வந்து சமமாகக் கொடுத்தான். :) நேற்று வீடே ஒளிபெற்றாற்போல் இருந்தது.

      Delete
  13. #இம்மாதிரி தகிடுதத்த வேலைகளைத் திப்பிசம் என்று சொல்வதுண்டு!#தப்பிசம்தான் திப்பிசம் ஆயிடுத்தோ :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க பகவன் ஜி, தெரியலை. ஆனால் திப்பிசம்னு சொல்லித் தான் பார்த்திருக்கேன். தப்பிசம்னு சொல்லிக் கேட்டதில்லை; பார்த்ததும் இல்லை! :)

      Delete
  14. எப்போதுமே பார்த்து, பார்த்து செய்வதை விட எதுவும் திட்டமிடாமல் செய்வது நன்றக அமைந்து விடும். க்ரியேட்டிவிட்டியின் மகிமை அது! பை தி வே, வாயை திறக்காமல் சாப்பிட்டவர், அதற்குப் பிறகு வாயைத் திறந்தாரா? சாப்பிட்டப் பிறகு வாயைத் திறக்காமல் இருந்தால் ஏதோ சரியில்லை என்று அர்த்தம்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, எங்க வீட்டில் பண்ணிய பண்டம் நல்லா இல்லைனா அது தினசரிப் பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் வந்துடும். வாயைத் திறக்கலைனா பண்ணினது நல்லா இருந்தது என்று அர்த்தம். :)

      Delete