எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, April 28, 2019

தமிழ்த்தாத்தாவுக்கு அஞ்சலி!

இன்று தமிழ்த்தாத்தாவுக்கு நினைவு நாள்.  தாத்தாவின் என் சரித்திரத்திலிருந்து ஒரு பகுதி இங்கே பகிர்ந்திருக்கிறேன். இது மரபு விக்கியில் நான் வேலை செய்கையில் சேர்க்கப்பட்டது.

உ.வே.சா. க்கான பட முடிவு

என் சரித்திரம் உ.வே.சா. 3
அத்தியாயம்-2


என் முன்னோர்கள்


‘பதினாயிரம் பிராமணர்களுக்கு அன்னதானம் செய்ய எண்ணியிருக்கிறேன்; அதற்கு மகாராஜா உதவி செய்ய வேண்டும்’ என்று ஒருவர் ஓர் அரசரை வேண்டிக் கொண்டாராம். அந்த அரசர் அதற்காக நிறையப் பொருளுதவி செய்தார். அந்தத் தொகையைப் பெற்று அவர் தம் வீட்டில் இரண்டே அந்தணர்களை அழைத்து அவர்கள் திருப்தி யடையும்படி போஜனம் செய்வித்து மிகுதியான தக்ஷிணையும் கொடுத்து அனுப்பினார். அயல் வீட்டிலுள்ள ஒருவர் அவருடைய விஷயங்களை நன்கு அறிந்து கொண்டவராதலின் அவரை, “பதினாயிரம் பேருக்கு அன்னம் இடுவதாக ராஜாவை ஏமாற்றி விசேஷமான பொருளை வாங்கி வந்தீரே; இரண்டு பேருக்குத்தானே சாப்பாடு போட்டீர்?” என்று கேட்ட போது அவர், “நான் பதினாயிரத்துக்கு மேல் ஆயிரம் சேர்த்துப் பதினோராயிரம் பேர்களுக்குப் போஜனம் செய்வித்தேனே!” என்றார். கேள்வி கேட்டவர், “இது பெரும் புரட்டாக அல்லவோ இருக்கிறது? இரண்டு பேருக்குப் போட்டு விட்டுப் பதினோராயிரம் பேருக்குப் போட்டதாகவும் சொல்லுகிறீரே!” என்று மீண்டும் கேட்டார். அந்தச் சாமர்த்தியசாலி, “நான் போஜனம் செய்வித்தவர்களில் ஒருவர் எண்ணாயிரத்தார்; மற்றொருவர் மூவாயிரத்தார் இருவரும் சேர்ந்து பதினோராயிரம் பேர் ஆகவில்லையா?” என்று சமத்காரமாகப் பதிலளித்தார். குறை கூறியவருக்கு விஷயம் விளங்கியது.


அஷ்ட ஸகஸ்ரப் பிராமணர் ஒருவரும், சிதம்பர தீக்ஷிதர் ஒருவரும் அவர் வீட்டில் உணவருந்தினார்களென்றும், எண்ணாயிரவரும், தில்லை மூவாயிரவரும் சேர்ந்து உண்டதையே அவர் சாதுரியமாகப் பதினோராயிரவரென்று கூறினாரென்றும் உணர்ந்து கொண்டவராம். இந்தக் கதை உண்மையோ பொய்யோ எப்படி யிருந்தாலும், இத்தகைய தந்திரத்தை விநோதார்த்தமாக நானும் உபயோகித்த துண்டு. “நான் ஒருவனாக இருந்தாலும் எண்ணாயிரம்” என்று சிலேடை தோன்றச் சில இடங்களிற் சொல்லியிருக்கிறேன் அதைக் கேட்ட ஒவ்வொருவரும் தத்தமக்குத்
தோன்றியபடி அர்த்தம் செய்து கொள்வார்கள். “பிராமணர்களுக்குள் அஷ்ட ஸகஸ்ர மென்பது ஒரு பிரிவு; அதற்கு எண்ணாயிரம் என்று அர்த்தம். அந்தப் பிரிவைச் சேர்ந்தவன் நான்” என்று சொன்ன பிறகே யாவரும் என்னுடைய சிலேடையைத் தெளிவாக உணர்வார்கள். அந்தணர்களுக்குள் எண்ணாயிரம் பேர்கள் ஒரு தொகுதியாக வடநாட்டிலிருந்து வந்த காலத்தில் அவர்களை ‘எண்ணாயிரத்தார்’ என்னும் பெயரால் யாவரும் வழங்கியிருக்க வேண்டும். பிறகு அவர்கள் பல இடங்களிற் பரவி எண்ணாயிரம் எண்பதினாயிரமாகப் பெருகிய காலத்திலும் அஷ்டஸகஸ்ரமென்ற பெயரே அவர்களுக்கு நிலைத்து விட்டது. ஸ்மார்த்தப் பிராமணர்களுள் ஒரு வகையாராகிய இந்த வகுப்பினர் தமிழ் நாட்டிற் பல இடங்களில் இருந்து வருகின்றனர்.


இந்த வகுப்பிலும் மூன்று பிரிவுகள் உண்டு. அத்தியூர், அருவாட்பாடி, நந்திவாடி என்னும் ஊர்களின் பெயரால் அப் பிரிவுகள் வழங்கப்பெறும். நந்திவாடி யென்பது இன்னவூரென்று இப்போது தெரியவில்லை. அவ்வூரிலிருந்த பிரிவினர் இக்காலத்தில் தேப்பெருமாள் நல்லூர், திருவையாறு முதலிய இடங்களில் இருக்கின்றார். அருவாட்பாடி என்பது மாயூரத்திற்கு வடகிழக்கே மூன்று மைல் தூரத்தில் திருக்குறுக்கை யென்னும் ஸ்தலத்துக்குப் போகும் மார்க்கத்திலும், திருநீடூரென்னும் ஸ்தலத்துக்கு அருகிலும் உள்ளது; அருவாப்பாடி என்று இப்போது வழங்கி வருகிறது. அருவாளர் என்ற ஒரு கூட்டத்தினருடைய பெயர் பழைய தமிழ் நூல்களிற் காணப்படுகின்றது. அருவாப்பாடி அவர்கள் இருந்த இடமாக இருத்தல் கூடுமென்று எண்ணுகிறேன். அங்கிருந்த அஷ்ட ஸகஸ்ரத்தினர் கிடைத்த தொழில்களைப் பெற்று ஜீவித்து வந்தார்கள். அத்தியூரென்பது தென்னார்க்காடு ஜில்லாவில் உள்ளது. அதில் உள்ளவர்கள் சாஸ்திர ஞானமும் வைதிக ஒழுக்கமும் தெய்வபக்தியும் உடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் அவ்வூரில் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள். அந்த ஊரைப்பற்றி எங்கள் பிரிவினருக்குள் ஒரு வரலாறு வழங்கி வருகின்றது. அத்தியூருக்கு வெளியூரிலிருந்து ஓர் அந்தணர் வந்திருந்தார். அவர் ஒரு வீட்டில் ஆகாரம் செய்த பிறகு திண்ணையில் படுத்திருந்தார்; நடு இரவில் எழுந்து வடக்கு முகமாக இருந்து அற்பசங்கைக்குப் போனார். அப்போது ஊர்க் காவலன் அவரைத் திருடனென்று எண்ணிப் பிடித்துக்கொண்டு, “நீ எந்த ஊர்?” என்று கேட்டான். அவர், “இந்த ஊர்தான்” என்று கூறினார். காவற்காரன் அதை நம்பவில்லை; “நீ இந்த ஊர்க்காரனல்ல; நிச்சயமாகத் தெரியும். இந்த ஊர்க்காரனாக இருந்தால் இந்த மாதிரி செய்ய மாட்டாய்” என்றான்.


அந்தப் பிராமணர், “நான் என்ன காரியம் செய்துவிட்டேன்?” என்றார். “இந்த ஊரில் ‘இரா வடக்கு’ இல்லையே! இந்த ஊர்க்காரர்கள் இப்படி அநாசாரமாக நடக்க மாட்டார்களே!” என்றான் அவன். இரவில் வடக்கு திசை நோக்கி அற்ப சங்கையைத் தீர்த்துக் கொள்வது அநாசாரமாகும். ஆசாரம் நிரம்பிய அத்தியூரில் ‘இரா வடக்கு’ இல்லையாதலால் அவர் வேற்றூராரென்று காவலன் அறிந்து கொண்டான் இந்த வரலாறு அவ்வூராரினது ஆசார சீலத்தை விளக்குகிறதல்லவா? அத்தியூர்ப் பிரிவினராகிய அஷ்ட ஸகஸ்ரத்தார் தஞ்சாவூர், கும்பகோணம், புதுக்கோட்டை, மதுரை, திருநெல்வேலி முதலிய இடங்களில் குடியேறித் தங்களுக்கு ஏற்ற தொழில்களைப் பெற்று வாழ்ந்து வரலாயினர். இவர்களில் ஒருவர் உத்தமதானபுரமென்று பின்பு வழங்கிய பழையகரத்தில் வந்து குடியேறினர். அவர் திருப்பதி ஸ்ரீ வேங்கடேசப் பெருமாளிடத்தில் மிகுந்த பக்தி உடையவர்; அப்பெருமாளையே குலதெய்வமாகக் கொண்டவர் அப்பெருமாளைப் பிரார்த்தித்து, தமக்குப் பிறந்த பிள்ளைக்கு வடமலையப்பன் என்னும் பெயரை வைத்தார்; வடமலை யென்பது திருவேங்கடம்; அப்பனென்பது வேங்கடாசலபதியின் திருநாமம். அந்தத்தமிழ்ப் பெயரே வடமலை யாஞ்ஞானென்றும் வழங்கும். ஆஞ்ஞானென்பதும் அப்பனென்பதும் ஒரே பொருளுடையன. வடமலையப்பருக்கும் திருப்பதி வேங்கடாஜலபதியினிடம் அளவற்ற பக்தியிருந்தது.


அவர் காலந் தொடங்கி இந்த வமிசத்திற் பிறக்கும் பிள்ளைகளுக்கு வீட்டில் அழைக்கும் பெயர் வேறாக இருந்தாலும், உபநயனம் ஆகும் பொழுது வைக்கப்படும் சர்ம நாமம் வேங்கடாசலம், வேங்கடநாராயணன், வேங்கடராமன், வேங்கட சுப்பிரமணியன், ஸ்ரீநிவாஸன் முதலாகத் திருப்பதிப் பெருமாளின் பெயர்களுள் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்கும். பிராமணர்களை இருபிறப்பாள ரென்று வழங்குவர்; உபநயன காலத்துக்கு முன் ஒரு பிறப்பென்றும் அதற்குப் பின் ஒரு பிறப்பென்றும் சொல்லுவர். வடமலை யாஞ்ஞானது பரம்பரையினரோ, இரு பிறப்பாளராக இருந்ததோடு பெரும்பாலும் இரு பெயராளராகவும் இருந்து வருகின்றனர். இந்தக் குடும்பத்திலுள்ள ஆண் பெண் அனைவரும் புரட்டாசி மாதத்துச் சனிக்கிழமைகளில் காலையில் ஸ்நானம் செய்து ஈரவஸ்திரத்துடன் சில வீடுகளுக்குச் சென்று அரிசிப் பிக்ஷை எடுப்பார்கள். அவ்வாறு எடுத்த அரிசியை வீட்டிற்குக், கொணர்ந்து ஆராதன மூர்த்தியின் முன்னே வைத்து நமஸ்காரஞ் செய்து அதையே சமைத்து ஸ்வாமிக்கு நிவேதனம் செய்து விட்டு உண்பதும், இரவில் பலகாரம் செய்வதும் வழக்கம். இந்த வழக்கத்தை நாளடைவில் இவ்வூரில் மற்றக் குடும்பத்தினரும் பின்பற்றத் தொடங்கினர். இன்னும் உத்தமதானபுரத்தில் இது நடைபெற்று வருகின்றது. வடமலையப்பருடைய குடும்பம் நல்ல பூஸ்திதியுடையதாக இருந்தது.


அவருக்குப் பின் வந்தவர்களுள் ஸ்ரீநிவாஸையரென்பவர் ஒருவர். அவருக்கு வேங்கட சுப்பையரென்றும் வேங்கட நாராயணையரென்றும் இரண்டு குமாரர்கள் இருந்தார்கள் இவ்விருவருள் வேங்கட சுப்பையரென்பவர் தம்முடைய மாமனார் ஊராகிய சுரைக்காவூருக்குச் சென்று தம் மனைவிக்கு ஸ்திரீதனமாகக் கிடைத்த நிலங்களை வைத்துக் கொண்டு அவ்விடத்திலே நிலையாக வாழ்ந்து வரலாயினர். வேங்கட நாராயணையரென்பவர் உத்தமதானபுரத்திலேயே தம்முடைய நிலங்களைக் கவனித்துக் கொண்டு சௌக்கியமாக வசித்து வந்தார். இவ்வூரிலிருந்த எல்லோரும் தேகபலம் மிக்கவர்களாக இருந்தார்கள். அவர்களுடைய உடலுழைப்பும் சுத்தமான வாழ்க்கையும் அவர்களுக்குப் பின்னும் பலத்தைத் தந்தன. மேற்கூறிய வேங்கட நாராயணையர் மாத்திரம் மெலிந்தவராக இருந்தமையின் அவரது மெலிவு விளக்கமாகத் தெரிந்தது. அவரது மெலிவான தேகமே அவருக்குச் சிறந்த அடையாளமாயிற்று. அதனால் “சோனன்” என்று அவருக்கு ஒரு பட்டம் கிடைத்தது. சோனி யென்றும் சோனனென்றும் மெலிந்தவனை அழைப்பது இந்நாட்டுப்பக்கம் வழக்கமென்பது பலருக்கும் தெரிந்த செய்திதானே? அவர் இருந்த வீட்டைச் ‘சோனன் ஆம்’ (சோனன் அகம்) என்று பிற்காலத்தாரும் வழங்கி வருவதுண்டு. அந்த வீடுதான் எங்கள் வீடு. அவரே என்னுடைய கொள்பாட்டனார்; என்னுடைய பாட்டனாருக்குத் தந்தையார். வீரர்கள் இறந்தால் கல் நாட்டி வழிபடுவது பழைய வழக்கம். அந்தக்கல்லை வீரக்கல் என்று சொல்வார்கள். இப்படியே பதிவிரதைகள் இறந்த இடத்தையோ அவர்கள் ஞாபகத்தையோ குறிக்கும் கல்லை மாஸதிக்கல் என்று கூறுவர். இறந்த பிறகு அவர்களை இந்தக் கல்லெல்லாம் ஞாபகப்படுத்துகின்றன. எங்கள் கொள் பாட்டனார் உயிரோடு வாழ்ந்த காலத்திலேயே அவருடைய ஞாபகத்திற்கு அடையாளமாக ஒரு கல் ஏற்பட்டுவிட்டது. அந்தக் கல் இன்றும் உள்ளது. அது மற்ற அடையாளக் கற்களைப்போல உபயோகப்படாமல் இல்லை. எல்லோருக்கும் உபயோகப்பட்டு வருகிறது.


எங்கள் ஊர் குளத்துப் படித் துறையில் “சோனப் பாட்டா கல்” என்ற ஒரு கல் இருக்கிறது. குளத்தில் நீராடிவிட்டு வழு வழுப்பாயிருந்த அந்தக் கல்லிலேயே வேங்கடநாராயணஐயர் வேஷ்டி துவைப்பாராம். அதனால் அந்தக் கல்லுக்கு அப்பெயர் நிலைத்து விட்டது. எவ்வளவோ பேர்கள் எவ்வளவோ கற்களில் துவைத்திருப்பார்கள். ஆனால் எல்லாக் கல்லுக்கும் பெருமை உண்டாகிறதா? இன்றும் அந்தக் குளத்தங்கரைக் கல்லைக் காணும்பொழுது, ‘சாஸன மில்லாத இந்த வெறும் கல் நம் கொள் பாட்டனாரின் பெயரை நினைப்பூட்டுகின்றது; இதில் அவருடைய கை பட்டிருக்கிறது’ என்ற எண்ணத்தினால் என்னுடைய கைகள் தாமே குவியும்.

85 comments:

  1. இனிய காலை வணக்கம் கீதாக்கா

    தமிழ்த்தாத்தாவுக்கு அஞ்சலியில் உங்களுடன் இணைந்து கொள்கிறோம் பதிவு பார்த்துவிட்டு வருகிறேன்

    ஒவ்வொரு முறையும் புது புது தகவல் தருவீங்க என்னனு பார்க்கிறேன்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா, இம்முறை தாத்தாவின் தன் வரலாற்றுக் கதையிலிருந்து சில பகுதிகள்.

      Delete
  2. ஸ்வாரஸ்யமான தகவல்கள்.

    பதினாயிரம்// அட மலையாளத்தில் பத்தாயிரம் என்பது பதினாயிரம் என்றே சொல்லுவாங்க அப்ப இந்தத் தமிழ்ச் சொல்தான் இது. பண்டைய தமிழ்ச் சொற்க்கள் மலையாளத்தில் நிறைய இருப்பதைக் காண முடிகிறது.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தி/கீதா, பதினாயிரம் தமிழ்நாட்டிலும் வழக்கில் உள்ள சொல்லே! பதினாயிரம் கட்டி வராஹன் என இன்றளவும் விசேஷங்களுக்கு ஓதி விடும்போது சொல்லுவதுண்டு.

      Delete
  3. சில வார்த்தைகள் புரியவில்லையே ஆனால் சொற்கள் அழகாக இருக்கின்றன. அற்பசங்கைக்கு? இயற்கை அழைப்பு?!!! என்ற பொருளோ?

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அற்ப சங்க்யை, இயற்கையின் அழைப்புத்தான்!

      Delete
  4. ஓ சாரி அக்கா இதுக்கு முன்ன போட்ட கமென்ட் போடாதீங்க ஹீ ஹிஹிஹிஹி

    அற்பசங்கை என்பது வேறு என்று தெரிந்து விட்டது

    கொஞ்சம் புரிவது கஷ்டமாக இருந்ததால் நேர்ந்த குழப்பம் ஹிஹிஹி

    கீதா

    ReplyDelete
    Replies
    1. முதலில் சொன்னது தான் சரி!

      Delete
  5. ஹையோ ஹையோ அற்பசங்கை நான் நினைத்ததுதானோ..? இரா வடக்கு?

    ஹை அக்கா நான் சரியாத்தான் புரிந்துகொண்டிருக்கேன் இல்லையா ஹெ ஹெ ஹெ ஹெ...

    இரண்டாவது முறையாக வாசிக்கிறேன் முழுவதையும் ஹிஹிஹிஹி

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், இயற்கை உபாதையைக் கழிப்பதைத் தான் "அற்ப சங்க்யை" எனச் சொல்வார்கள். பொதுவாகக் கை, கால் கழுவுவதில் இருந்து இம்மாதிரி உபாதைகளைக் கழிப்பது வரை எல்லாவற்றிற்கும் நியமங்கள் உள்ளன. பின்னொரு சமயம் விரிவாகச் சொல்கிறேன். அதிலே ஒன்றே ஒன்று புரிந்து கொள்ள முடிந்தது மட்டும். சாப்பிட உட்காரும்போது கால் கழுவிவிட்டுத் துடைக்கக் கூடாது. சாப்பிட்டு முடித்த பின்னர் கால் கழுவிட்டுத் துண்டால் துடைச்சுக்கணும். உள்ளங்கைகள் முழுவதும் ஆகும்படி சாப்பிடக் கூடாது!

      Delete
    2. நண்பர்கள் அனைவருக்கும், "அல்ப சங்க்யை" என்று பெயரே தவிர அதில் உள்ள நியமங்கள்/கட்டுப்பாடுகள் பற்றி நம் அனைவருக்கும் தெரிந்தவர் திரு.தி.வாசுதேவன் எழுதியதன் சுட்டி இங்கே கொடுக்கிறேன். சந்தேகம் இருப்பவர்கள்/இல்லாதவர்கள், தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்கள் போய்ப் பார்த்துப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
      https://anmikam4dumbme.blogspot.com/2016/06/2.html

      Delete
  6. எவ்வளவோ பேர்கள் எவ்வளவோ கற்களில் துவைத்திருப்பார்கள். ஆனால் எல்லாக் கல்லுக்கும் பெருமை உண்டாகிறதா? இன்றும் அந்தக் குளத்தங்கரைக் கல்லைக் காணும்பொழுது, ‘சாஸன மில்லாத இந்த வெறும் கல் நம் கொள் பாட்டனாரின் பெயரை நினைப்பூட்டுகின்றது; இதில் அவருடைய கை பட்டிருக்கிறது’ என்ற எண்ணத்தினால் என்னுடைய கைகள் தாமே குவியும்.//

    அருமை...ஆமாம் இஹ்டில் முதல் வரி அர்த்தமுள்ள வரி.

    ஸ்வாரஸ்யமான தகவல்கள். அப்போதைய அத்தியூர் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது.

    சோனி//எங்கள் வீட்டில் ஒல்லியானவர்களை அப்படித்தான் சொல்லுவாங்க ஆண் பிள்ளைய சோனிப்பய என்று...பெண்பிள்ளையை சோனிக் குட்டி...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், என் சித்திக்குச் சின்ன வயசில் (அசோகமித்திரன் மனைவி) சோனி என்றே பெயர்! ஆனால் வட நாட்டில் இது செல்லப் பெயர்! சோனா என்றால் தங்கம் எனப் பொருள் அல்லவா? ஆகவே சோனா, சோனி என்பது அங்கே செல்லப் பெயர். சில சமயங்கள் காரணப் பெயர்!

      Delete
  7. கொஞ்சம் மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டுமாக இருந்தது. என் மூளையின் திறன் அப்படி ஆகிப் போனது!! ஹிஹிஹிஹி
    இரா வடக்கு????? அந்தக் காலத்து கழிவறையா?

    ஆனால் ஸ்வாரஸ்யமாக இருந்தது

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //‘இரா வடக்கு’ இல்லையே! // - இரவு நேரத்தில் வடக்கு முகமாகப் போவது (சூசூக்குத்தான்... அதைத்தான் அல்பசங்கைன்னு சொல்லுவாங்கன்னு ஞாபகம்). 'இரவு வடக்குமுகமாகப் போவது இல்லையே' என்று அர்த்தம்.

      என்னுடைய மாமனார் சில வாரங்களுக்கு முன்பு, கிழக்குமுகம் பார்த்து கம்மோட் இருந்தால் வாஸ்துப்படி நல்லதில்லை. அதனை மற்ற திசைக்கு மாற்றணும்' என்றார். இங்க பார்த்தா இரவில் வடக்கு முகமாகப் போகக்கூடாதுன்னு இருக்கு. அந்தக் காலத்துல தெரியுமா...இதெல்லாம் வீட்டுக்குள்ளேயே வந்துவிடும் என்று....

      Delete
    2. அந்தக் காலத்தில் கழிவறை எல்லாம் இல்லை. வெளியில் ஒதுங்குவது தான்! அதைத் தான் வெளியே போவது என்றும் சொல்லுவார்கள். முன்னெல்லாம் வீட்டில் அப்பா இல்லை எனில் "வெளியே" போயிருக்கார் எனச் சொல்லக் கூடாது என்பார்கள். கடைக்குப் போயிருக்கலாம், பள்ளிக்குப் போயிருக்கலாம், அல்லது வேறே எங்கானும் போயிருக்கலாம் என்றே சொல்லணும். காலப்போக்கில் நாற்றம்,என்னும் அழகிய சொல் வீணானது போல், மயிர் எனத் திருஞானசம்பந்தரே சொன்ன சொல் "முடி" என ஆனதைப் போல், இதுவும் மாறி இப்படிச் சொல்ல ஆரம்பிச்சிருக்கோம்.

      Delete
    3. என்னோட ஒரு பெரியப்பா (திருமணம் ஆகாதவர்) கழிவறைக்குச் செல்வது மட்டுமல்லாமல், சாதாரணமாய்க் கைகால், கழுவுவது, குளிப்பது என எல்லாவற்றிற்கும் நியமங்களைக் கடைப்பிடிப்பார். அதோடு அல்லாமல் மற்றவரையும் கடைப்பிடிக்கச் சொல்லுவார். சாப்பிட்டுக் கை கழுவிய பின்னர் உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது என்பார். சற்று நேரம் உட்கார்ந்த பின்னரே தண்ணீர் அருந்த வேண்டும். அப்போதும் ஜபம் சொல்லி ஆசமனம் செய்ய வேண்டும்! சாப்பிட உட்காரும்போது ஒரு ஸ்லோகம், பரிசேஷணம் செய்த பின்னர் அவர் சாப்பிட ஆரம்பிக்கவே பத்து நிமிஷம் ஆகும். சாப்பிட்டு எழுந்திருக்கையில் இன்னொரு ஸ்லோகம். சமைத்தவர்களைப் பார்த்து "அன்னதாதா சுகீ பவ!" என வாழ்த்துதல்! 98 ஆம் வருடம் இறந்தார்! அதுவரையில் இந்த நியமங்களைக் கடைப்பிடித்து வந்தார்.

      Delete
    4. சமீபத்தில் பெங்களூரில் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் செல்ல நேர்ந்தது. காரியம் முடிந்தவுடன், ஒரு வயதான பரிஜாரகருடன் பேசிக்கொண்டிருக்கையில், சாப்பாடு போடவிருக்கும் இலையை சுத்தி செய்தல், சாதம், நெய், பருப்பு ஆகியவற்றைக் கிரமப்படி பரிமாறுதல், பரிசேஷணம் என்று மேலும் பல விஷயங்கள், நாம் மறந்துவிட்டிருப்பவை, அல்லது நமக்கு (என்னைப் போன்ற அரைகுறைகளுக்கு)த் தெரியாதவை என சொல்லிக்கொண்டிருந்தார். நான் இவற்றைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டியது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது! இப்படிப்பட்ட மனிதரை சந்தித்துப் பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது, இந்தக்காலத்திலும் விபரம் தெரிந்தவர் ஒரு சிலர் இருக்கிறார்களே, இவர்களிடமிருந்து நாம் கொஞ்சமாவது மண்டையில் ஏற்றிக்கொள்ளவேண்டுமே என்கிற சிந்தனையும் கூடவே.

      Delete
    5. மீள் வருகைக்கு நன்றி ஏகாந்தன். உங்கள் ஆர்வம் பாராட்டத் தக்கது. சில வருடங்களுக்கு முன்னர் நான் இந்த எச்சல், பத்து, தீட்டு பற்றியும் எழுத ஆரம்பித்தேன். ஒரு சிலருக்குப் பிடிக்கலை! யூதர்களுக்கும் நமக்கும் இதில் உள்ள ஒற்றுமைகள் குறித்தும் ஓர் பதிவில் படித்துக் குறிப்பு எடுத்து வைத்திருந்தேன். ஆனால் இந்தக் காலங்களில் எச்சல், பத்துப் பார்க்கிறவர்கள் யார்? எங்க வீட்டில் 40 வருஷங்களுக்கு முன்னாலேயே என்னைக் கேலி செய்வார்கள். இப்போக் கேட்கவே வேண்டாம். ஆகவே அதை நிறுத்தி விட்டேன். ஆனால் அதில் எவ்வளவு ஆரோக்கிய சம்பன்தமான விஷயங்கள் என்பதை யாரும் புரிஞ்சுக்கலை. :( நான் இதை எல்லாம் கடைப்பிடிப்பதால் எனக்குக் கெட்ட பெயர் நிறையவே உண்டு. ஆனாலும் விடாமல் கடைப்பிடிக்கிறேன். :))))))

      Delete
  8. தமிழ்த் தாத்தாவின் பிறந்த நாளையும், நினைவு நாளையும் மறக்காமல் இருந்து அந்நாட்களில் பதிவிடுகிறீர்கள். பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஶ்ரீராம், இன்றைக்கு எல்லோரும் தமிழர்களின் பாரம்பரியத்தைக் குறித்துச் சிறிதானும் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்றால் அது தமிழ்த்தாத்தாவால் தான்! அவரையும், பாரதியையும் நினைக்காமல் தமிழே இல்லை!

      Delete
  9. அஷ்ட சஹஸ்ரத்தார் பற்றிய தகவல் புதிது. அப்படியொரு பிரிவு இருக்கிறது என்பதையும் இன்றே அறிந்தேன். சுவாரஸ்யமான சம்பவம் அது. அந்த பக்கத்து வீட்டு பிராமணர் இதை அரசன் காதுக்கு எடுத்துச் செல்லவில்லையா? வழக்கு நிற்காது என்று விட்டு விட்டானோ!(என் சகோதரி இப்படித்தான், சொல்ல வருவதை விட்டு விடுவார். நடுவில் இருக்கும், உதாரணமாகச் சொல்லபப்டும் ஒரு சிறு விஷயத்தை நொண்டி நொண்டிக் கேட்பார்!)

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம், ஊரின் ஆசாரத்தையும் அஷ்ட சஹஸ்ரத்தாரின் ஆசாரத்தையும் குறிப்பிடவென ஏற்பட்டதல்லவா இது? அதனால் மேலே தொடர்ந்திருக்காது. அஷ்ட சஹஸ்ரப் பிரிவு ஸ்மார்த்தர்களில் உண்டு. வடமாள் எனச் சொல்லப்படும் பிரிவிலேயே 3 இருக்கு. பவித்ர வடமாள்,வடமாள், சோழதேசத்து வடமாள். இதிலே ஒருத்தருக்கொருத்தர் சம்பந்தமே பண்ணிக்கொள்ளாமல் இருந்திருக்காங்க. பிரஹசரணம் என்பதிலும் கண்டர்மாணிக்கம் பிரஹசரணத்தார் மற்ற பிரஹசரணத்தாரோடு சம்பந்தம் பண்ணிக்க மாட்டாங்களாம்! இப்போல்லாம் அப்படி நடப்பது இல்லை! இது குறித்து விரிவாக சோ அவர்கள் துக்ளக்கில் தொடராக விரிவாக எழுதி இருந்தார். அநேகமாக "எங்கே பிராமணன்?" நூலில் என நினைக்கிறேன். மற்றபடி இம்மாதிரிப் பிரிவுகள் இருப்பது குறித்து நன்கு அறிவேன்.

      Delete
  10. இரவுக்காலங்களில் வடக்கு நோக்கி நடப்பது கூட ஆராரமில்லாத செயலா அடேங்கப்பா... ஆனால் அப்படியிரா வடக்கு போகக்கூடாது என்பதற்கு என்ன காரணம்?

    ReplyDelete
    Replies
    1. சூசூ போவதைச் சொல்கிறார் (அதுதான் அல்ப சங்கை). இது புரியவில்லையா ஸ்ரீராம்?

      Delete
    2. சூசூ அல்லது இன்னொன்று என்று தெரியும். அது ஏன் இரா வடக்கு கூடாது என்பதற்கான காரணத்தைக் கேட்கிறேன்.

      Delete
    3. வாங்க ஶ்ரீராம், உங்கள் சந்தேகங்களுக்குப் பின் ஒரு முறை பதில் கொடுக்க முயற்சிக்கிறேன்.அதோடு இல்லாமல் இம்மாதிரி வெளியே செல்லும்போது பிராமணர்கள் பூணூலைக் காதில் மாட்டிக் கொண்டே செல்ல வேண்டும். திரும்ப வந்து ஆசமனம் செய்து பின்னரே பூணூலைச் சரியாகத் தரிக்க வேண்டும். இதை இங்கே தென்னாட்டில் கடைப்பிடித்துப் பார்த்ததே இல்லை. ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்ட்ராவில் கண்டிப்பாக இந்த வழக்கம் உண்டு. அதே போல் பஞ்சகச்சம் இல்லாத பிராமணர்களையும் காண முடியாது!

      Delete
    4. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கீசா மேடம்.... என் பெரியப்பா (சிற்றப்பாவும்), காதில் மாற்றிக்கொள்வது, வாயைக் கொப்பளிப்பது பிறகு திரும்ப பூணூலை சரிசெய்துகொள்வது என்று சம்பிரமாக செய்வார்கள். இதுபோல் பலரைப் பார்த்திருக்கிறேன். இதுபோன்ற நியமங்கள் பல உண்டு. பார்த்திருக்கிறேன்... அத்தகையவர்களோடு வளர்ந்திருக்கிறேன்......

      Delete
    5. ஆமாம், நெல்லைத் தமிழரே, வல்லி சொல்லி இருக்கிறாப்போல் பஞ்சகச்சமும் மாற்றிக் கொண்டு பின்னர் சரி செய்து கொள்வார்கள். நீங்க உங்களுக்கு வயசே ஆகலை என்பதால் இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லைனு நினைச்சேன்! :P :P :P

      Delete
  11. உத்தமதானபுரத்தில் பிக்ஷை சமாச்சாரம் தாத்தா காலத்தில் நடந்தது சரி, இன்று? வழக்கொழிந்து போயிருக்கும்...

    //‘சாஸன மில்லாத இந்த வெறும் கல் நம் கொள் பாட்டனாரின் பெயரை நினைப்பூட்டுகின்றது; இதில் அவருடைய கை பட்டிருக்கிறது//

    நம் கைகளும் குவிகின்றன.

    ReplyDelete
    Replies
    1. நான் 'உஞ்சவ்ருத்தி' என்று சொல்லப்படும் பிஷையை சிறு வயதில் நான் வளர்ந்த கிராமத்தில் கண்டிருக்கிறேன். (உண்மையில், பிராமணன் உஞ்சவ்ருத்தி செய்துதான் சாப்பிடணும், அவனுக்கென்று எதுவும் சொந்தமாக இருக்கக்கூடாது என்பது பழையகால சாஸ்திரம்)

      Delete
    2. ஆமாம். தெரியும்.

      Delete
    3. ஶ்ரீராம், அம்பத்தூரில் ஶ்ரீராமநவமி சமயம், ராகவேந்திரர் ஆராதனை சமயம், புரட்டாசி மாதங்கள், மார்கழி மாதங்களில் உஞ்சவ்ருத்தி வருவது உண்டு.2012 ஆம் ஆண்டு ஏப்ரலில் நாங்க இருந்தவரை பார்த்து பிக்ஷையும் போட்டிருக்கோம்.

      Delete
    4. உஞ்சவ்ருத்தி எடுத்துத் தான் சாப்பிடணும் என்பதை விட முக்கியம் அது அன்றாடத் தேவைக்கு மட்டுமே காணும்படி இருக்கணும். அதிகம் இருக்கக் கூடாது!

      Delete
    5. கீசா மேடம்... சொல்லவிட்டுப்போய்விட்டேன். அந்த உஞ்சவ்ருத்தி எடுப்பவர், ஒரு சில வீடுகளிலேயே தங்களுக்கு அன்றைக்குத் தேவையானவை சேர்ந்துவிட்டால், அப்படியே திரும்பி அவர் வீட்டுக்குப் போய்விடுவார். எல்லா வீடுகளுக்கும் வரமாட்டார்.

      இதையெல்லாம் சிந்தித்தால், எவ்வளவு நுணுகி ஆராய்ந்து இத்தகைய பழக்கவழக்கங்கள் ஒரு காலத்தில் ஒரு சாராரிடம் இருந்திருக்கின்றன என்பதை நினைந்து வியக்கிறேன்.

      Delete
  12. தாத்தாவின் முன்னோர்கள் வரலாறு மிக அருமையாக இருக்கிறது.
    எவ்வளவு விஷயங்கள் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
    புராட்டாசி மாதம் சனிக்கிழமையில் மாயவரத்தில் இருக்கும் போது நன்றாக இருக்கும். ஜனங்கள் வந்து கொண்டே இருப்பார்கள். மஞ்சள் வஸ்திரம் அணிந்து நெற்றியில் நாமம் அணிந்து கோவிந்தனை அழைத்துக் கொண்டு வருவார்கள்.

    இரா வடக்கு பற்றி தெரிந்து கொண்டேன்.

    //‘சாஸன மில்லாத இந்த வெறும் கல் நம் கொள் பாட்டனாரின் பெயரை நினைப்பூட்டுகின்றது; இதில் அவருடைய கை பட்டிருக்கிறது’ என்ற எண்ணத்தினால் என்னுடைய கைகள் தாமே குவியும்.//
    அவரின் கைகள் தாமே குவிந்த உண்ர்வை உணர்ந்து கொள்ள முடிகிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி! எங்க வீட்டில் புரட்டாசி மாசம் பெரிய வக்கீலான என் பெரியப்பாவே நாமம் தரித்துக் கொண்டு உஞ்சவ்ருத்திக்குப் போவார். என் அண்ணா, தம்பி, அப்பா எல்லோருமே போயிருக்காங்க. என் அண்ணாவின் பூணூல் இப்படி பிக்ஷை எடுத்துத் தான் போடறோம்னு வேண்டிக் கொண்டதால் அப்படியே செய்தார்கள்.

      Delete
  13. தமிழ்த்தாத்தாவுக்கு அஞ்சலிகள்.
    கதை சுவாரஸ்யம் சகோ

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி. முழுச் சரித்திரத்தையும் பகிரணும்னா நாளாகும்!

      Delete
  14. தமிழ்த்தாத்தா அவர்களது எழுத்து மிக்க ரசனையானது. எத்தனை முறை படித்தாலும் திகட்டாதது. (ஆனா இந்த போர்ஷன் அவர் புத்தகத்துல நான் படிக்கலையே)

    ReplyDelete
    Replies
    1. நீங்க என்ன புத்தகம் வைச்சிருக்கீங்கனு தெரியாது. இது அவருடைய சுய சரிதை. என் சரித்திரம் என்னும் பெயரில் அந்தக்காலத்து ஆனந்த விகடனில் வந்தது. சித்தப்பாவிடம் பைன்டிங் இருந்தது. படிச்சிருக்கேன். இது மின் தமிழுக்காக மரபு விக்கியில் சேர்க்கப்பட்டது.அங்கே போனால் உ.வே.சா. என்னும் தலைப்பில் வேண்டியது கிடைக்கும்.

      Delete
  15. எதற்காக உவேசா அவர்களின் பிறந்த நாளையும் நினைவு நாளையும் மறக்காமல் பதிவிடறீங்க? உங்க உறவினரா? (நீங்க பாரதியாருக்கும் அதே மரியாதை செய்வதும் நினைவுக்கு வருது)

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத் தமிழரே, எதுக்காக காந்தி பிறந்த நாளையும், நினைவு நாளையும் இன்னமும் நினைவில் வைத்துக் கொண்டு மறக்காமல் அஞ்சலி செலுத்துகிறோம்? காந்தி நமக்கெல்லாம் உறவா?

      Delete
    2. சீரியசான கேள்விக்கு இப்படி எடக்கு மடக்கு பதிலா? ரொம்ப நாளா உங்கள்ட கேட்கணும்னு நினைத்த கேள்வி இது.

      Delete
    3. மன்னிக்கணும் நெ.த. உ.வே.சா. அவர்களை நினைக்காமல் நாம் தமிழ் படிக்க முடியுமா? அதனால் தான் ஒவ்வொரு வருஷமும் பிறந்த/நினைவு நாளில் அஞ்சலி செலுத்தி வருகிறேன். நான் பள்ளியில் படிக்கையில் இந்த நாட்களில் கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி என வைப்பார்கள். தமிழ் மன்றத்தில் சிறந்த தமிழறிஞர்களால் சொற்பொழிவு நடக்கும். இப்போல்லாம் யாரும் நினைப்பதே இல்லை.:(

      Delete
  16. ஸ்ரீ உ.வே.சா.வின் எழுத்தைப் படிப்பது ஆனந்தமாயிருக்கிறது. அந்தக்கால மனிதர்களின் பக்தி, ஆச்சாரங்கள், ஒழுக்க மதிப்பீடுகள் கேட்டாலும் இனிக்கிறது. எத்தகைய முன்னோர்கள் நமக்கிருந்திருக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏகாந்தன். ஆமாம் உ.வே.சாவின் எழுத்தை அப்படியே அவர் எழுதியபடியே படிப்பது ரொம்பவே ஆனந்தமாக இருக்கும். ஆனால் அதில் வார்த்தைகளை இப்போதெல்லாம் மாற்றுகின்றனர். அதான் பிடிக்கவில்லை. :(

      Delete
  17. நேற்று சீமானின் ஒரு காணொளியை கேட்டு விட்டு,இவர்களுக்கெல்லாம் ஏன் உ.வே.சா. நினைவு வருவதில்லை என்று நினைத்துக் கொண்டேன். தமிழ் தமிழ் என்று கூவும் பலர் தமிழ் தாத்தாவை நினைப்பதே இல்லை. என்ன செய்வது அவர் தெரியாத்தனமாக பிராமணராக பிறந்து விட்டாரே? ஒவ்வொரு வருடமும் நீங்கள் அவரை நினைவு கூர்வது சிறப்பு. அவருடைய எழுத்தை படிப்பது கறந்த பாலை குடிப்பது போல் ஆனந்தமாக இருக்கிறது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி, அவங்கல்லாம் தனித் தமிழர்கள் அல்லவா? உ.வே.சா. போன்றவர்கள் எல்லாம் நினைவில் வர மாட்டார்கள். அதனால் என்ன?

      Delete
  18. அற்பசங்கை என்னும் வார்த்தையை சுஜாதா கூட உபயோகிப்பாரே? சுஜாதா தாசர்களுக்கு கூட இது தெரியவில்லையா??

    ReplyDelete
    Replies
    1. இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை என்று நான் சொல்லவில்லை.

      Delete
    2. ஹாஹாஹாஹா!

      Delete
  19. அஷ்ட சஹஸ்ரம் (எட்டு ஆயிரம்) என்பதைத்தான் இன்று பலரும் அஷ்டசாஸ்திரம் என்று சொல்லுகிறார்கள் போலிருக்குது.

    வடமாள், வாத்திம்மாள், பிரஹசரணம், அஷ்ட சஹஸ்ரம் என எத்தனைப் பிரிவுகள் உள்ளன. ஆச்சர்யம்தான்.

    பிரஹசரணத்திலேயே தாங்கள் சொல்லியுள்ள ’கண்ட்ர்மாணிக்கம்’ நானும் கேள்விப்பட்டுள்ளேன். அவர்கள் ’கண்டிராத மாணிக்கங்கள்’ என்று ஒரு பெரியவர் எனக்கு விளக்கம் அளித்தார்.

    பிரஹசரணத்திலேயே ‘மழநாட்டு அல்லது மழைநாட்டு பிரஹசரணம்’ என்று ஒன்று உள்ளது. கேள்விப் பட்டுள்ளீர்களா?

    பல்வேறு விஷயங்களை விளக்கிடும் இந்தப் பதிவு மிகவும் அருமை. பாராட்டுகள். வாழ்த்துகள். நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வைகோ சார், தமிழ்த்தாத்தா உங்களை இழுத்து வந்துவிட்டார். ஆமாம், மழநாட்டு பிரஹசரணம் உண்டு தெரியும். எங்க உறவிலேயே சிலர் மழநாட்டு பிரஹசரணத்தோடு சம்பந்தம் செய்திருக்கார்கள். அஷ்ட சஹஸ்ரமும், வாத்திமாளிலும் கூட எங்க குடும்பங்களிலே சம்பந்தம் உண்டு. உங்கள் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

      Delete
    2. நாங்களே ’மழநாட்டு பிரஹசரணக்காரர்கள்’ தான். அது என்ன அப்படியொரு பெயரோ எனக்கே இன்றுவரை தெரியவில்லை. தங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கோ.

      என் பெரிய அக்காவின் கணவர் ‘கண்ட்ரமாணிக்க பிரஹசரணம்’ என்ற பிரிவினைச் சேர்ந்தவர். அவரின் தற்போதைய வயது : 92 அவர்: ஸாமவேதம். நாங்கள்: யஜூர் வேதம்.

      யஜூர் வேதத்திலும் கூட சுக்ல யஜூர், கிருஷ்ண யஜூர் என இரு பிரிவுகள் உள்ளன.

      பெரும்பாலானோர் (நாங்கள் உள்பட) கிருஷ்ண யஜூர் வேதக்காரர்களே.

      Delete
    3. அப்படியா? உங்க அக்கா கணவர் கங்காதர சர்மா? சாஸ்திரிகள்?கனபாடிகள்?அவர் குறித்துக் கேள்விப் பட்டிருக்கேன்.நாங்களும் சாம வேதம் தான். உங்கள் மருமான் திரு நாராயணன் எங்க வீட்டு விசேஷங்களுக்குப் புரோகிதத்துக்கு வருவது உண்டு. அவர் முக ஜாடையைப் பார்த்துவிட்டு நம்ம ரங்க்ஸ் உங்களுக்குச் சொந்தம்னு கண்டு பிடிச்சுட்டார். அப்புறமா அவரும் சொன்னார் என் மாமா தான் என! :))))

      Delete
    4. சுக்ல யஜுர்வேதக் காரங்கசிலர் எனக்குத் தெரிந்து குழுமணி கிராமத்தில் இருந்தனர். பின்னர் அம்பத்தூர் வந்து வசித்தனர். இப்போவும் அவங்களில் சிலர் அங்கே இருக்காங்க! அவங்க குடும்பத்திலே ஒரு பாட்டி குழுமணிப்பாட்டி என்றே அழைப்போம். சாஸ்திர, சம்பிரதாயங்களில் வல்லவர். ஆசாரம் அதிகம். தினம் தன் கையால் சமைத்தே சாப்பிடுவார்/அதுவும் ஒரே வேளை! ஆனாலும் திட மனதும், அதனால் வந்த திட உடலும் கொண்டவர். நீண்ட ஆயுளோடு வாழ்ந்தார். பத்து வருஷங்கள் முன்னர் தான் உயிரை விட்டார்.உயிரை விட்டார்னு தான் சொல்லணும். ஏனெனில் அவர் பலருக்கு நாடி பார்த்துச் சொல்லி இருக்கார். நாடி பேசுவது குறித்து நன்கு அறிந்தவர். மணி மந்திர ஔஷதம் அறிந்தவர். என் அம்மா படுத்த படுக்கையாக இருந்தப்போ அவர் நாடியைப் பார்த்து எத்தனை நாள், எத்தனை மணி, எத்தனை நொடி, என்ன திதி, கிழமை எனச் சரியாகச் சொன்னார். அதே போல் என் அப்பாவுக்கும் 2002 ஆம் ஆண்டில் நாடி பார்த்துச் சொன்னார். சரியாக இருந்தது.

      Delete
    5. ஆமாம். அவர் பெயர் ப்ரும்மஸ்ரீ A. கங்காதர ஸ்ரெளதிகள். என் பெரிய அக்கா + அத்திம்பேர் மிகவும் அபார சம்சாரிகள். அவர்களுக்கு ஆறு பிள்ளைகள் + இரண்டு பெண்கள். நிறைய பேரன்கள் + பேத்திகள். கொள்ளுப் பேரன்கள்கூட எடுத்தாச்சு. அவர்களின் மூத்த பிள்ளைக்கே சஷ்டியப்த பூர்த்தி ஆகி விட்டது. அவர்களின் இரண்டாவது பிள்ளைதான் தங்கள் இல்லத்திற்கு அவ்வப்போது வந்து போகும் சிரஞ்ஞீவி. நாராயணன் ஆகும்.

      அத்திம்பேர் மிகவும் கடும் உழைப்பாளி. கடந்த ஓராண்டாக, காது மட்டும் சுத்தமாகக் கேட்காமல் உள்ளது. ஏதேனும் சொல்ல வேண்டுமானால் ஒரு ஸ்லேட்டில் சாக்பீஸால் எழுதிக்காட்டணும். படித்துப் புரிந்துகொள்வார். இந்த வயதிலும் ஆச்சார அனுஷ்டானங்களுடன், ஸாம வேத பாராயணம் தரையில் அமர்ந்து நன்றாகச் சொல்லக்கூடியவர்.

      சமீபத்தில் யூ-ட்யூப்பில் ஓர் பேட்டி எடுத்துச் சென்றார்கள். அதில் ஓரிரு நிமிடங்கள் ஸாமவேத பஞ்சாதி சொல்கிறார். அதற்கான இணைப்பு: https://www.youtube.com/watch?v=URFKr9n8qiY&feature=youtu.be

      Delete
    6. திருச்சியில், நங்கவரம் ஸ்டோரில் (தற்போதைய சாரதாஸின் பின்புறம்) வாழ்ந்து பிரபல ஜோஸ்யராகத் திகழ்ந்தவர் ’ஜோஸ்யம் இராமமூர்த்தி சாஸ்திரிகள்’ என்பவராகும். அவரும் குழுமணிதான். பல்லாண்டுகள் (95+++) வாழ்ந்து சமீபத்தில் 2011 க்குப் பிறகே காலமானார். அவர் என் பெரிய அக்காவின் மூத்த பிள்ளைக்கு மாமனார் ஆவார். என் மூன்றாவது நாட்டுப்பெண்ணுக்கு அம்மாவழித் தாத்தாவும் ஆவார்.

      குழுமணிகாரர்களில் பலருக்கும், சிறுவயது முதற்கொண்டே காது கொஞ்சம் மந்தமாக இருக்கும் என்பது என் ஆராய்ச்சிகளின் முடிவாகும். நீங்கள் குழுமணிப்பாட்டி என்ற பெயரில் நாடி பிடித்து ஜோஸ்யம் சொல்லும் ஒரு பிரபலத்தைப்பற்றி சிறப்பித்துக்கூறியுள்ளதால் நானும் இவற்றையெல்லாம் சொல்லியுள்ளேன். :))))

      Delete
    7. நன்றி வைகோ சார். அந்தக் கால மனிதர்கள் பலரிடமும் எத்தகைய திறமைகள் மறைந்திருக்கின்றன என்பதை நினைத்தால் ஆச்சரியம் தான். இந்தக் குழுமணிப் பாட்டியின் பிள்ளைகளில் இருவரும் ஜோசியம் பார்ப்பார்கள். இப்போது அவர்களும் இல்லைனே நினைக்கிறேன்.

      Delete
    8. GS/VGK உரையாடல் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள உதவுகிறது. ’கண்ட்ரமாணிக்கம்’ போன்ற வார்த்தைகளை சிறுவயதில், பெரிசுகள் திண்ணையில் உட்கார்ந்து அடித்த அரட்டையின் போது ஓரத்தில் உட்கார்ந்திருந்து கேட்டிருக்கிறேன் - அர்த்தம் புரியாமல். இப்போது கொஞ்சம் புரிகிறது!

      Delete
    9. நன்றி ஏகாந்தன், இந்த பிராமணர்களின் பிரிவு பற்றி விலாவரியாக எழுதணும்னு குறிப்புகள் எல்லாம் எடுத்து வைச்சிருந்தேன். அநேகமாய்ப் பழைய கணினியில் இருக்கும். அப்புறமாக் கொஞ்சம் யோசனை, தயக்கம், விட்டுட்டேன்! :))))))

      Delete
    10. ராமூர்த்தி ஜோசியர் உங்களுக்கு உறவினரா? அவர்தான் எங்கள் பெரிய அக்காவின் மாமனாருக்கு இன்னொரு வகையில் என் அப்பாவின் மாமாவுக்கு) ஆஸ்தான ஜோசியர். அவர்களும் நங்கவரம் ஸ்டோரில்தான் வசித்தார்கள். நங்கவரம் பண்ணை அண்ணாதுரை அய்யரின் மூத்த பெண் என் அக்காவின் மாமியார். என் பெரிய அக்கா, இரண்டாவது அக்கா இவர்களுக்கெல்லாம் திருமணத்திற்கு பொருத்தம் பார்த்தது ராமூர்த்தி ஜோசியர்தான்.

      நடிகர் பிரசன்ன ராமூர்த்தி ஜோசியருக்கு உறவு என்று கேள்விப்பட்டேன்.

      Delete
    11. இந்தப் பிரிவுகள், சம்பந்தப்பட்ட ஊர்கள் போன்ற விபரங்களை ஒரு பதிவில் விளக்கிப் போடலாமே. நீங்களே தயங்கினால், மற்றவர்கள், ஏதும் புரியாது மயங்குவார்களே!

      Delete
    12. மீள் வருகைக்கு நன்றி பானுமதி. எனக்கு நங்கவரம் பண்ணை பற்றிக் கல்யாணம் ஆனப்புறமாத் தான் தெரியும். திருச்சியில் அவங்க இருந்ததெல்லாம் இப்போ வைகோ சொல்லித் தெரியும். மற்றபடி திரு ராமமூர்த்தி ஜோசியரைத் தெரியாது. இங்கே ஸ்ரீரங்கத்தில் பிரபலமாக இருந்த ஜோசியர் ஒருத்தர் 2 வருடங்கள் முன்னர் இறந்து விட்டதாகச் சொன்னார்கள். இப்போதைக்கு சம்பத் என்பவர் நன்றாகச் சொல்லுவதாகவும் சொல்வார்கள்.

      Delete
    13. ஏகாந்தன், தயக்கம் தான்! புரிஞ்சுப்பீங்கனு நினைக்கிறேன். :)))))))

      Delete
    14. To Mrs. Geetha Sambasivam

      //இப்போதைக்கு சம்பத் என்பவர் நன்றாகச் சொல்லுவதாகவும் சொல்வார்கள்.//

      அவர் பெயர் Mr. சம்பத் குமார். வைஷ்ணவர். ஸ்ரீரங்கத்தில் பஸ் ஸ்டாண்ட் அருகே பத்மாவதி கல்யாண மண்டபத்திலிருந்து நடக்கும் தூரத்தில், வடக்கு பார்த்த ஓர் வீட்டின் மாடியில் வசித்து வந்தார். அப்போது நான் அவரிடம் சிலமுறை போய் வந்துள்ளேன். (இப்போது அந்த வீட்டில் இல்லாமல், ஸ்ரீரங்கத்திலேயே வேறு எங்கோ குடிமாறிவிட்டார் என்று கேள்வி)

      மேலும் அவர் என்னுடன் BHEL இல், பல்லாண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். என் இரண்டாம் பிள்ளை கல்யாண விஷயமாகவும், என் மூன்றாம் பிள்ளையின் மேற்படிப்பு + உத்யோக விஷயமாகவும் அவர் சொன்னதும், டைப் அடித்துக் கொடுத்ததும் அநேகமாக அப்படியே 100% பலித்துள்ளது. :)

      Delete
    15. //(நடிகை ஜோதிகாவின் மாமனார்)// ஜோதிகாவின் மாமனார் சிவகுமார் இல்லையோ? ஸ்நேகாவை ஜோதிகா என்கிறீர்களோ?பிரசன்னாவை ஸ்நேகா தான் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

      Delete
    16. நன்றி வைகோ சார், திரு சம்பத் அந்தப்பக்கம் தான் எங்கேயோ இருக்கிறார் என்கிறார்கள்.

      Delete
    17. ஒரு ஜோதிடர் நல்லாச் சொல்லுவார் என்று சொல்லிட்டா, அவர் இப்போ எங்க இருக்கார்னு யாருக்குமே சொல்லத் தெரியலையே... கோபு சார்...அதற்கப்புறம் எதற்கும் கன்சல்ட் பண்ணலை போலிருக்கு...

      பிரசன்னாவின் அப்பா என்று சொன்னால் போதாதா? தேவையில்லாமல் சிநேகாவை இழுக்கணுமா?

      Delete
    18. தேவை இருந்தால் தான் ஜோசியரிடம் போகணும் நெல்லைத் தமிழரே! நானெல்லாம் கிடைப்பது எதுவானாலும் சரியான நேரத்தில் கிடைச்சுடும் என நம்பிக்கை உள்ள ஆள்! எதிர்காலம் என் கைகளில் இல்லை. ஆகவே அதைக் குறித்து அதிகம் நினைப்பதில்லை.

      Delete
    19. //Geetha Sambasivam 30 April, 2019
      (நடிகை ஜோதிகாவின் மாமனார்)// ஜோதிகாவின் மாமனார் சிவகுமார் இல்லையோ? ஸ்நேகாவை ஜோதிகா என்கிறீர்களோ? பிரசன்னாவை ஸ்நேகா தான் திருமணம் செய்து கொண்டுள்ளார்.//

      Yes....Yes.... I am Very Sorry. What you say is very correct.

      ஸ்நேகா என்றுதான் நான் எழுதியிருக்க வேண்டும். தவறுதலாக ஜோதிகா என குறிப்பிட்டு விட்டேன்.

      எனக்கு தற்கால சினிமா நடிகர்கள் + நடிகைகள் பற்றிய ஞானம் மிகவும் குறைவு. நான் தியேட்டருக்குப் போய் சினிமா பார்த்தே ஒரு பத்தாண்டுகளுக்கு மேல் இருக்கும். அதனால் நான் டைப்பும்போது தவறாகி விட்டது. தவறுக்கு வருந்துகிறேன். :(

      Delete
    20. To Mrs. Bhanumathy Venkateswaran

      1995 வரை சாரதாஸ் ஜவுளிக்கடலுக்கு பின்புறம் காமகோடி கல்யாண மண்டபம் என்ற ஒன்றும், நூற்றுக்கணக்கான வீடுகளும் இருந்தன. பெரும்பாலும் பிராமணர்களே சொந்த வீடு கட்டிக்கொண்டு அங்கு வசித்து வந்தார்கள். ஒருசிலர் அவற்றில் வாடகைக்கும் குடியிருந்து வந்தனர். அது திருச்சியில், உச்சிப்பிள்ளையார் கோயில் மலைவாசலுக்கு, மிக அருகே இருந்த Heart of the City யாகும். அங்கிருந்த அனைத்து வீடுகளையும், கல்யாண மண்டபத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக ‘சாரதாஸ்’ நிறுவனமே அதிக விலைகள் நிர்ணயித்து, நிர்பந்தப்படுத்தி காலிசெய்யச்சொல்லி, விலைக்கு வாங்கிக்கொண்டு, அனைத்தையும் இடித்துத்தள்ளிவிட்டு, தங்களின் ஜவுளிக்கடையை உள்பக்கமாக நன்கு விஸ்தரித்துக்கொண்டு விட்டது.

      முன்னொரு காலத்தில் அங்கு வசித்து வந்த ராமமூர்த்தி ஜோஸ்யர் குடும்பம், 1982 க்குப் பிறகு திருச்சி மேலச்சிந்தாமணி காவிரிக்கரையை ஒட்டி ஓர் வீட்டுக்கு குடிமாறிவிட்டது.

      அதன்பின் அவரின் மூத்த பிள்ளை (Bank of India வில் பணியாற்றியவர்) திருவானைக் கோயில் பகுதியில் பேங்க் காலனி என்ற இடத்தில் சொந்த வீடு கட்டிக்கொண்டதால் அங்கு சென்று விட்டார்கள். ஜோஸ்யர் இராமமூர்த்தி அவர்கள் கடந்த 4-5 ஆண்டுகளுக்கு முன்பு இங்குதான் காலமானார்.

      ஜோஸ்யரின் இரண்டாம் பிள்ளை (BSNL) ஸ்ரீரங்கம் கீதாபுரத்தில் சொந்த வீடு வாங்கிக்கொண்டுள்ளார்.

      ஜோஸியரின் மூன்றாம் பிள்ளை திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே ஏதோவொரு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கிக்கொண்டுள்ளார்.

      ஜோஸ்யர் இராமமூர்த்தி மாமாவின் சம்சாரம் (இன்று வயது சுமார் 93) இன்றும், கொஞ்சம் உடம்பு முடியாமல், இருந்து வருகிறார்கள்.

      குழுமணி ஜோஸ்யர் இராமமூர்த்தி அவர்களுக்கு 3 பிள்ளைகள் இருப்பது போலவே மூன்று பெண்களும் உள்ளனர். அதில் இரண்டாவது பெண் மலைவாசல் அருகேயுள்ள சின்னக்கடைத் தெருவில், கோபால்தாஸ் வைரக்கடைக்கு அருகில் ஏதோவொரு சந்தில் சொந்த வீட்டில் வசித்து வருகிறார்கள். அந்தப் பெண்ணும் தற்சமயம் நன்கு ஜோஸ்யம் பார்ப்பதாகச் சொல்லுகிறார்கள்.

      ஜோஸ்யர் இராமமூர்த்தி அவர்களின் மூன்றாம் பெண்தான் என் மூன்றாம் பிள்ளைக்கு மாமியாராகும். மேலும் அவங்க என்னுடைய மூத்த அக்காவுக்கு மூத்த நாட்டுப்பெண்ணும் ஆவாள்.

      //நடிகர் பிரசன்ன ராமூர்த்தி ஜோசியருக்கு உறவு என்று கேள்விப்பட்டேன். //

      எனக்குத் தெரிந்து அதுபோலெல்லாம் ஒன்றும் இல்லை.

      நடிகர் பிரசன்னாவின் அப்பா (நடிகை ஸ்நேகாவின் மாமனார்) என்னுடன் BHEL-இல் பணியாற்றியவர். 1981 to 2000 BHEL Township Quarters இல் எங்களுடன் குடியிருந்தவர். எனக்கு ஓரளவுக்கு நன்கு அறிமுகம் ஆன நண்பர்.

      Delete
    21. To நெல்லைத்தமிழன்

      //ஒரு ஜோதிடர் நல்லாச் சொல்லுவார் என்று சொல்லிட்டா, அவர் இப்போ எங்க இருக்கார்னு யாருக்குமே சொல்லத் தெரியலையே...//

      அவர் இப்போது எங்கிருக்கிறார் என்பதை அறிந்தவர் (சமீபத்தில் அவரை சந்தித்துவிட்டு வந்தவர்) இங்கு எனக்குத் தெரிந்து ஒருத்தர் இருக்கிறார். நீர் ஒருவேளை புறப்பட்டு வருவதாக இருந்தால், அவரிடம் கேட்டு உமக்கு, அந்த ஜோதிடரின் தற்போதைய விலாசம் + தொலைபேசி எண் முதலியன என்னால் சொல்ல முடியும்.

      //கோபு சார்...அதற்கப்புறம் எதற்கும் கன்சல்ட் பண்ணலை போலிருக்கு...//

      எனக்கு இன்றைய ஜோதிடர்களில் பலரிடமும் நம்பிக்கை கிடையாது. இன்றைய ஜோதிடர்களில் நூற்றுக்கு ஒருத்தர் சொல்வது மட்டுமே, அப்படியே பலிக்கிறது. அதுபோன்ற நல்ல ஜோதிடரை அடையாளம் கண்டு, நாம் அவர்களை அணுக நேர்வது என்பது, நமது தலையெழுத்து + அதிர்ஷ்டத்தைப் பொறுத்ததாகும். அந்த நல்ல ஜோதிடர்கள் காசுக்காகவும், வயிற்றுப்பிழைப்புக்காகவும் ஜோதிடம் பார்ப்பவர்களாக இருக்கவும் மாட்டார்கள்.

      இதுபற்றி நான் ஏற்கனவே எழுதியுள்ளேன். http://gopu1949.blogspot.com/2011/03/blog-post_09.html

      சில சமயங்களில் அடியேன் சொல்வதும்கூட, அருள் வாக்குபோல அப்படியே பலிப்பதாக என் வலையுலக நெருங்கிய ஸ்நேகிதிகள் பலரும் சொல்லி வருகிறார்கள். தினமும் அடியேன் பக்தி சிரத்தையுடன், லோக க்ஷேமத்திற்காகச் சொல்லி வரும், ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணத்தின் மஹிமையினால்கூட இதுபோன்ற வாக்பலிதங்கள் நேர்ந்து கொண்டிருக்கலாம்.

      //பிரசன்னாவின் அப்பா என்று சொன்னால் போதாதா? தேவையில்லாமல் சிநேகாவை இழுக்கணுமா?//

      ஸ்நேகா அளவுக்கு பிரஸன்னா பிரபலம் இல்லை என்று நான் நினைத்து விட்டேனோ என்னவோ! நாம் சொல்ல வருவது பிறருக்கு டக்குன்னு புரியணும் ..... அதுதான் முக்கியம். அதனாலும் அப்படி நான், அந்த ஸ்நேகாவை இழுத்திருக்கக்கூடும். அதனால் அது தேவையில்லாதது அல்ல.

      தேவையில்லாமல் நீர்தான் என்னை வம்பு இழுத்து என் வாயைக் கிளறியுள்ளீர்கள், ஸ்வாமீ. :)))))

      Delete
  20. வணக்கம் சகோதரி

    தமிழ் தாத்தாவின் நினைவு நாள் பகிர்வு மிக அற்புதமாக உள்ளது. அவரின் கதையை முழுக்க படிக்க ஆர்வம் எழுகிறது. அந்த காலத்தில் அனைவருமே சிலேடையாக பேசுவதில் இயல்பாகவே நிபுணர்களாக இருந்திருக்கிறார்கள். எத்தனை வார்த்தைகள், எத்தனை ஆச்சாரமான செய்கைகள், நம் முன்னோர்கள் காரணமில்லாமல் எதையும் சொல்லவில்லையே.! நாம்தான் மாறி வரும் கலாசாரத்திற்கு தகுந்தபடி அதன்பின் மாறியுள்ளோம். இந்த காலத்தில் வேறு வழியில்லாமல் போகும் தறுவாயில், கோத்திரம் மாற்றிக்கூட திருமணம் செய்விக்கிறார்கள்.வடக்கில் கூட கோத்திரம் ஒன்றானால் திருமணத்துக்கு தடை போட்டு விடுவதாக படித்திருக்கிறேன். பதிவு மிகவும் ஸ்வாரஸ்யமாக இருந்தது. நிறைய விஷயங்களை தங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது... முடிகிறது. தமிழ் மேல் அபரிமிதமான பற்று கொண்ட தங்களுக்கு என் பணிவான வணக்கங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, உ.வே.சா.வின் "என் சரித்திரம்" இணையத்திலேயே கிடைக்கிறது. இல்லை எனில் சென்னையில் திருவான்மியூரில் உ.வே.சா. நினைவு நூலகத்தில் கிடைக்கும். வாங்கிப் படித்துப் பாருங்கள். சுவையாக இருக்கும். இந்தத் தமிழ் நடை அந்தக் கால தினசரிகள் பலவற்றிலும் இவ்வாறே வந்திருக்கிறது. நாலைந்து வருடங்கள் முன்னர் நான் "தினத்தந்தி" நூற்றாண்டு மலருக்காக வேலை செய்த போது இத்தகைய மணிப்ரவாளத் தமிழ் நடையில் தான் 40 முதல் 50 வரையிலான தினத்தந்தி வெளி வந்திருக்கிறது. அதோடு இல்லாமல் இப்போ மாதிரி நடிக, நடிகையரை அவர், இவர் என்றெல்லாம் சொல்லாமல் அந்த நடிகை வந்தாள், இந்த நடிகர் போனான். என்றெல்லாம் போட்டிருக்கிறார்கள். 50களில் திராவிடக் கட்சிகளின் முன்னேற்றத்துக்குப் பின்னரே தினத்தந்தியின் போக்கு மாறி இருந்திருக்கிறது.

      Delete
    2. // தமிழ் மேல் அபரிமிதமான பற்று கொண்ட தங்களுக்கு என் பணிவான வணக்கங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி. // நாம் அனைவருமே தமிழ் மேல் கொண்ட பற்றுக்காரணமாகவே இணைந்திருக்கிறோம் இல்லையா? இதில் எனக்கு மட்டும் தனிச் சிறப்பெல்லாம் இல்லை. என்றாலும் உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

      Delete
  21. தாத்தா எழுதிய சரித்திரங்கள் அன்பு கீதா வழி புரியும்போது பல சாஸ்திரங்களும் தெரிய வருகின்றன.
    அப்பா இருக்கும் வரை இந்தக் காதில் பூணூலைப் போட்டுக் கொள்வது இருந்தது.
    கச்சத்தையும் மாற்றிச் சொருகுவார்கள்.
    இரா வடக்கு இப்போது எப்படிப் பின்பற்றுவது என்றுதான் தெரியவில்லை.

    விடாமல் உ வேசா தமிழ்த் தாத்தாவை கௌரவித்து எங்களுக்கு விஷயதானம் செய்கிறீர்கள்.
    நன்றி கீதா மா.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வல்லி, இந்தப் பஞ்சகச்ச விஷயம் மறந்து போனேன். :)))) உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

      Delete
  22. தமித் தாத்தா அவர்களை அன்புடன் நினை கூர்ந்தமைக்கு மகிழ்ச்சி...

    பழந்தமிழ் இனிமை.. இனிமை..

    தமிழ் கொண்டு உழைக்கும் தங்களை
    தமிழ்த் தாத்தா அன்புடன் வாழ்த்தியருள்வாராக...

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, என்ன பிரச்னையோ வரக் காணோமேனு நினைச்சேன். வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  23. உவேசா அவர்கள், நல்லவேளை 'என் சரித்திரம்' எழுதினார். அந்தக் காலத்தில் பல்வேறு சாதிகளாக பிரிவுகள் இருந்தாலும் சமூகம் நடைபெறுவதற்கு ஒரு குந்தகமும் இருந்ததில்லை... தமிழ்ப் பண்டிதர்களாக பல்வேறு சாதியினர் இருந்தார்கள், தமிழின் பெயரால் பிராமணர்களுக்கோ மற்றவர்களுக்கோ உதவுவதில் ஒரு குறையும் இருந்ததில்லை என்றெல்லாம் விளக்கமாக எழுதியிருக்கிறார். அவருடைய குருநாதர் யார், மற்ற தமிழ்ப்பண்டிதர்கள் பற்றியும் எழுதியிருக்கிறார்.

    இதையெல்லாம் 'பிராமண எதிர்ப்பு', மற்ற சாதியினரை கல்வி கற்க அனுமதிக்கவில்லை, பணம் முழுவதும் பிராமணர்களிடமே சேர்ந்திருந்தது என்றெல்லாம் அரசியல் பேசுபவர்கள் ரசிக்க மாட்டார்களே... அதனால் அரசியல்வாதிகள் இத்தகைய நூல்களைப் புறக்கணிப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத் தமிழரே, நான் உங்களுக்குப் பரிந்துரைக்கும் இன்னொரு புத்தகம். திரு தரம்பால் அவர்கள் எழுதிய
      The Beautiful Tree! தமிழாக்கமும் "அழகிய மரம்" என்னும் பெயரில் வந்துள்ளது. ஆனாலும் ஆங்கில மூலத்தில் படித்துப் பாருங்கள். http://www.samanvaya.com/dharampal

      Delete