
பின்னர் லட்சுமணனும், விபீஷணனும், சுக்ரீவன், அனுமன், நீலன், ஜாம்பவான் ஆகியோருடன் பின் தொடர, ராமர் வானரப் படையை முன்னேறிச் செல்லக் கட்டளை பிறப்பித்துவிட்டுத் தானும் தொடர்ந்து முன்னேற ஆரம்பித்தார். ராம, லட்சுமணர்கள் ராவணனால் பாதுகாக்கப் பட்ட வடக்கு வாயிலை அடைந்தனர். மற்றவர்கள் தங்களுக்குக் குறிப்பிடப் பட்ட வாயிலை நோக்கிச் சென்று காற்றுக் கூடப் புக முடியாத அளவுக்கு இலங்கையைச் சூழ்ந்து கொண்டு, யுத்தம் தொடங்கும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அப்போது மீண்டும் ஒரு முறை ஆலோசனைகள் செய்த ராமர் அங்கதனை அழைத்து, ராவணனிடம் சென்று, எச்சரிக்கை கொடுக்குமாறு சொல்லித் தூது அனுப்புகின்றார். ராவணன் செய்த பாவங்களுக்கெல்லாம் முடிவு கட்டிவிட்டு அவன் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டிய வேளை நெருங்கிவிட்டதென்றும், சீதையை ஒப்படைத்துவிட்டு, பாதுகாப்பைக் கோரவேண்டும் என்றும், விபீஷணன் இலங்கை அரசனாய் முடிசூட்டப் படுவான் என்றும், நீ ஒத்துழைக்கவில்லை எனில் உன் உயிர் என் கையில் என்றும் சொல்லி அனுப்புகின்றார். மண்ணோடு மண்ணாக ஆக்கிவிடுவதாயும் சொல்லி அனுப்புகின்றார். அங்கதன் அவ்வாறே ராமனின் உத்தரவை ஏற்று ராவணனின் அரண்மனை அடைகின்றான்.


தன்னைத் தாக்கிய இந்திரஜித்தின் தேரோட்டியும், தேர்க்குதிரைகளும் அங்கதனால் கொல்லப் படுகின்றனர். இந்திரஜித் களைப்புடன் போர்க்களத்தை விட்டு அகலுகின்றான். ராமர், லட்சுமணர், சுக்ரீவன், விபீஷணன் போன்றோர் அவனைப் போற்றினார்கள். அங்கதனால் துன்புறுத்தப் பட்ட இந்திரஜித்தோ கோபம் மிகக் கொண்டு தன்னுடைய மாயாவி யுத்தத்தில் இறங்கிவிட்டான். தன்னை மறைத்துக் கொண்டு, ராம, லட்சுமணர்களை அம்பு உருக் கொண்ட விஷப் பாம்புகளால் தாக்கினான். மனித சக்திகளை மீறிய சக்தி கொண்ட இந்திரஜித் தன்னுடைய இந்த அம்புகளால் ராமனையும், லட்சுமணனையும் கட்டிவிட்டான். சகோதரர்கள் இருவரும் மயங்கிக் கீழே விழுந்தனர். அம்பு உருக் கொண்ட பாம்புகளால் அவர்கள் உடல் துளைக்கப் பட்டது. ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. வானரப் படை செய்வதறியாது கலங்கி நின்றது.
**************************************************************************************
பெரும்பாலனவர்கள் இந்த ராமாயணத்தைப் படிப்பதில்லை. சிலர் தெரிந்த கதைதானே என்றும், வேறு சிலர் பத்துப் பதினைந்துக்கு மேல் படிக்க முடியவில்லை என்றும் சொல்கின்றனர். எனினும் உத்தர ராமாயணம் வரையிலும் பூராவும் எழுதி முடிக்கவே திட்டம்!!! ஆனால் நம்மில் பெரும்பாலோர் வால்மீகியின் மூலக் கதையை முழுதும் படித்திருக்க மாட்டோம், பெரும்பாலோருக்குத் தெரிந்தது கம்பரும், மற்றச் சில சுருக்கமான ராமாயணங்களுமே/ ஆனால் இது முழுக்க, முழுக்க வால்மீகியின் மூலத்தையே எடுத்துச் சொல்லும் ஒரு முயற்சி. அதற்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய கம்பரை நன்கு அறிந்தவர்கள் அறிந்தது எல்லாம் ராமன் ஒரு அவதாரம் என்றே. ஏனெனில் கம்பர் ராமாயணம் பூராவுமே ராமரை ஒரு அவதாரம் என்றே குறிப்பிடுகின்றார். அதனாலேயே வாலி வதம் பற்றிய கேள்விகளும், சீதையின் அக்னிப் ப்ரவேசம் பற்றிய கேள்விகளும் எழுகின்றன.வாலியைக் கண்டு ராவணன் அஞ்சினான். வாலி ராவணனை வென்றிருக்கின்றான். ராவணன் பயந்த ஒரே ஆள் வாலி மட்டுமே. அத்தகைய வீரம் பொருந்திய வாலி, சீதையை, ராவணன் தூக்கிக் கொண்டு சென்ற போது, வாலியின் நாட்டின் வழியாகவே சென்ற போதும் அதைத் தடுத்து நிறுத்தவில்லை என்பதைத் திருமதி ஜெயஸ்ரீ அவர்கள் தம் பதிவில் சுட்டிக் காட்டி உள்ளார். அவரின் இந்த வாதம் ஓரளவு ஏற்கக் கூடியதே! ஏனெனில், தன்னை வீழ்த்தியதும், வாலியே ராமனிடம் சொல்கின்றான்:"தர்மச் சங்கிலியை அறுத்துவிட்டு, நன்னெறிக்கட்டுகளைத் தளர்த்திவிட்டு, நியாயம் என்ற அங்குசத்தையும் அலட்சியம் செய்துவிட்டு,மதம் பிடித்த ஒரு யானை போல் நடந்து கொண்டுவிட்ட ராமன் என்பவன் என்னை கொன்றுவிட்டானே? உனக்கு என்ன வேண்டும்? உன் மனைவி சீதை தானே?என்னிடம் சொல்லி இருந்தால் நான் ஒரே நாளில் கொண்டு வந்து சேர்த்திருப்பேனே? ராவணனைக் கழுத்தில் சுருக்குப் போட்டு இழுத்து வந்திருப்பேனே?" என்று ராமனைப் பார்த்துக் கேட்கின்றான். ஆகவே வாலி ராவணனைத் தடுக்காததின் காரணமாகவே ராமர் கொன்றிருக்கலாம் என்பது திருமதி ஜெயஸ்ரீயின் கூற்று. jeyasri
ஆனால் வால்மீகியோ தான் அறிந்த ஒரு மனிதனின் வாழ்க்கையையே தான் அறிந்தும், கேட்டும், பார்த்தும் தெரிந்து கொண்ட வரையில் எழுதி இருக்கின்றார். ஆகவே, ராமர் அவ்வாறு நடந்து கொண்டதிலோ, அல்லது சீதையோ, ராமரோ கைகேயியைக் குறை கூறிப் பேசும்போதோ சற்றும் யாருடைய கோபத்தையுமோ, அல்லது, பேச்சுக்களையோ கூட்டியோ, குறைத்தோ சொல்லவில்லை.ராமரோ, அல்லது சீதையோ இப்படி எல்லாம் பேசி இருப்பார்களா என்று போன அத்தியாயத்தைப் படித்தவர்கள் நினைக்கலாம். சாதாரண மானுடப் பெண்ணாக வாழ்ந்த சீதையும் சரி, ராமரும் சரி இப்படித் தான் பேசுவார்கள், பேச முடியும், என்பதை நினவில் கொள்ள வேண்டும்.
மேலும் அரசன் ஆனவன் எவ்வாறு தர்மம், கடமை, நீதி, நேர்மை, நியாயம் பொருந்தியவனாய் இருக்க வேண்டும் என்பதிலும் கடுமை காட்டியே வருகின்றது ராமாயணம் பூராவும். ராவணன் ஒரு வீரனாக இருந்தும், தன் குடி மக்களுக்கு நன்மையே செய்து வந்தும், அவன் தர்மத்தில் இருந்து தவறியதாலேயே அவனுக்கு இந்த வகையில் மரணம் ஏற்படுகின்றது. ஆகவே ஆட்சி புரிவோருக்கு ஒழுக்கம் என்பது முக்கியத் தேவையாக இருந்து வந்திருக்கின்றது என்பது நன்கு விளங்குகின்றது. அதை ஒட்டியே தோன்றி இருக்கும், "மன்னன் எவ்வழி, அவ்வழி மக்கள்" என்னும் கூற்று. ஒவ்வொருத்தரின் பிறப்புக்கும், இறப்புக்கும் தகுந்த காரணங்களையும் சொல்லி வருகின்றது இந்த ராமாயணக் கதை. அவரவர்கள் செய்யும் பாவத்துக்குத் தக்க தீய பலனும், செய்யும் புண்ணியங்களுக்குத் தக்க நற்பலனையும் கொடுத்தாலும் அவரவர்களுக்கு என்று விதிக்கப் பட்ட விதியை யாராக இருந்தாலும் மீற முடியாது. விதியின் பலனை அனுபவித்தே தீரவேண்டும் என்றும் சொல்கின்றது. தமிழில் இவ்வாறு ஊழ்வினையைச் சுட்டிக் காட்டும் காப்பியம் "சிலப்பதிகாரம்".
No comments:
Post a Comment