எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, June 19, 2008

கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 62

அவமானம் தாங்க முடியாத ராவணன், தன் வலிமையும், சக்தியும் இன்று ஒருநாள் யுத்தத்திலேயே குறைந்து விட்டதையும் உணர்ந்தவனாய், தன்னுடைய கிரீடமும், தேரும் சுக்குநூறாகப் போய்விட்டதையும் கண்டவனாய், வேறு வழியில்லாமல், ராமர் சொன்ன வார்த்தைகளினால் தலை கவிழ்ந்து, திரும்பினான். விண்ணில் இருந்து இதைக் கண்ட தேவர்களும், ரிஷி, முனிவர்களும் ராமரைப் போற்றிப் புகழ்ந்தனர்.

அவமானத்துடன் திரும்பிய ராவணன், செய்வது இன்னதென்று அறியாமல் மனம் கலங்கினான். தன் ஆலோசனைக்காகக் கூடி இருந்த மற்ற அரக்கர்களிடம் ஆலோசனையும் நடத்தினான். தன் கவலைகளை வெளிப்படையாகச் சொன்னான். தேவேந்திரனையும், யமனையும் வெற்றி கொண்ட தான், இன்று ஒரு சாதாரண மனிதனிடம் தோற்றுப் போனதைக் குறிப்பிடுகின்றான். அவன் திரும்பிப் போ என்று சொன்னதையும், அதனால் தன் மனம் துயரில் ஆழ்ந்ததையும் தெரிவிக்கின்றான். பல வரங்களைப் பெற்ற தான் மனிதர்களிடமிருந்து மரணம் இல்லை என்ற வரத்தை பெறாமல் போனதற்கு மிகவும் வருந்தினான். இஷ்வாகு குல அரசன் ஆன அனரண்யன் என்பவன், மனம் நொந்து தன் வம்சத்தில் பிறந்த ஒருவனால் ராவணன் தோற்கடிக்கப் படுவான் எனச் சொன்னது உண்மையாகிவிட்டதே என்றும் வருந்தினான். மேலும் வேதவதியைத் தான் பலாத்காரம் செய்ய முனைந்தபோது அவள் கொடுத்த சாபத்தையும் நினைவு கூருகின்றான். அவள்தான் சீதை என்பதில் தனக்கு ஐயம் இல்லை தற்போது என்றும் உறுதிபடச் சொல்கின்றான். மேலும் கைலையில் நந்திஸ்வரனை நான் கேலி செய்தபோது குரங்குகளால் தனக்கு மரணம் நேரிடும் என்று நந்தி கொடுத்த சாபத்தையும் நினைவு கூருகின்றான். இவ்வாறு தான் முன்னால் செய்த தீமைகள் அனைத்துமே தனக்கு இப்போது தீவினைகளாய் வந்திருக்கின்றது என்பதில் தனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை எனச் சொல்லி வருந்துகின்றான் தசக்ரீவன்.

பின்னர் அரக்கர்களைப் பார்த்து, போனது போகட்டும், இப்போதும் ஒன்றும் ஏற்படவில்லை. எப்படியாவது அந்த எதிரிகளை வென்றால் அதுவே போதும். அதற்கான முயற்சிகளைச் செய்யுங்கள். உங்கள் ஆலோசனைகளைச் சொல்லுங்கள்.. நாம் எவ்வாறேனும் வெல்லவேண்டும். கோட்டை நன்கு பாதுகாக்கப் படவேண்டும். தவறான வார்த்தைப் பிரயோகத்தினால் , பெற்ற பிரம்மாவின் வரத்தின் காரணமாய்த் தூங்கும் கும்பகர்ணனை எழுப்புமாறும் கேட்டுக் கொள்கின்றான். ராமனின் வானரப் படைகளை அழிக்கும் ஆற்றல் அவனிடத்தில் உள்ளது என்றும் சொல்கின்றான். அரக்கர்களில் சிலர் சென்று கும் பகர்ணனை எழுப்ப ஆரம்பிக்கின்றனர். ஒரு பெரிய மலை போல் படுத்திருந்த கும்பகர்ணனின் திறந்த வாயானது, அந்த மலையின் குகை போல் தோன்றியதாம்.

கும்பகர்ணனின் மூச்சுக் காற்று அனைவரையும் வெளியிலும், உள்ளேயும் மாறி, மாறி இழுக்க, சமாளித்த அரக்கர்கள் அவனை எழுப்பும் ஆயத்தங்களைச் செய்தனர். தூக்கத்தில் இருந்து எழுந்ததும் கும்பகர்ணன் சாப்பிடப்பல்வகை மிருகங்கள், அவற்றின் மாமிசங்கள், குடம் குடமாய்க் கள், ரத்தம், பல்வேறு விதமான உணவு வகைகள் போன்றவை தயார் நிலையில் இருந்தன. பின்னர் அவன் உடலில் வாசனைத் திரவியங்கள் பூசி, கொம்புகளையும், எக்காளங்களையும், சங்குகளினாலும் பெரும் சப்தங்கள் எழுப்பிப் பல யானைகளை அவன் மீது நடக்க வைத்து ஒருவழியாக மிகுந்த சிரமத்துடனேயே அவனை எழுப்புகின்றனர். எழுந்த உடனேயே உணவு உட்கொண்ட கும்பகர்ணன் பின்னர், தன்னை எழுப்பிய காரணத்தை வினவுகின்றான். ராவணன் தான் தன்னை எழுப்பச் சொன்னான் என அறிந்ததும் அற்பக் காரணத்துக்குத் தன்னை எழுப்புபவன் இல்லையே எனக் கேட்க, அரக்கர்கள் சீதையை அபகரித்து வந்ததையும், அதன் காரணமாய் ராமன் போருக்கு வந்திருப்பதையும், அதற்கு முன்னாலேயே அக்ஷகுமாரன், அனுமனால் கொல்லப் பட்டான் என்பதையும், ராமன் நேற்றைய போரில் ராவணனை, “இன்று போய் நாளை வா” எனச் சொல்லிவிட்டதையும், அதனால் ராவணன் மனம் மிக நொந்து போயிருப்பதையும் சொல்கின்றனர் அரக்கர்கள்.



கோபம் கொண்ட கும்பகர்ணனைச் சமாதானம் செய்த மஹோதரன் ராவணனைப் பார்த்து என்ன வழிமுறைகள், என்ன கட்டளைகள் எனத் தெரிந்து கொண்டு போர்க்களம் செல்வதே நலம் எனச் சொல்ல அதன் படியே நீராடிவிட்டுத் தன் அண்ணன் ஆன ராவணனைப் பார்க்கச் செல்கின்றான் கும்பகர்ணன். அப்போது கும்பகர்ணன் தன் அரண்மனையில் இருந்து ராவணன் அரண்மனை நோக்கிச் செல்வதை ராமரும் பார்க்கின்றார். விபீஷணனிடம் இவன் யார்?? ஒரு மலையே பெயர்ந்து வந்துவிட்டதோ எனத் தோன்றுகின்றானே எனக் கேட்கின்றார். விபீஷணன் உடனேயே, ராவணனின் தம்பியானவனும் மஹரிஷி விஸ்ரவஸின் மகனும் ஆன கும்பகர்ணன் ஆவான் அவன், எனச் சொல்லிவிட்டுக் கும்பகர்ணனின் பெருமைகளை விவரிக்கின்றான். யமனையும், இந்திரனையும் வென்றவன் அவன். பெரும்பலம் பொருந்தியவன் ஆவான். மற்ற அரக்கர்கள் வரங்களினால் பலம் பெற்றார்கள் என்றால் இவனுக்கோ பிறவியிலேயே பலம் நிரம்பிப் பெற்றவன் ஆகிவிட்டான். இந்திரன் இவனை அழிக்கச் செய்த முயற்சிகள் அனைத்தும் பலனின்றிப் போய்விட்டது. இவன் கொடுமை தாங்க முடியாமல் தவித்த இந்திரன், இவனைத் தோற்கடிக்க முடியாமல் தவிக்க, பிரம்மா இவனுக்குத் தூக்கத்தில் ஆழ்ந்து போகும் வரம் கொடுத்துவிட்டார். வரத்தின் கடுமையைக் குறைக்கும்படி ராவணன் பிரம்மனிடம் முறையிட, ஆறுமாதத்துக்கு ஒரு முறை ஒரு நாள் மட்டுமே விழித்திருப்பான் எனவும், அந்த ஒருநாள் அவனுக்குத் தோன்றியதை அவன் செய்வான் எனவும் சொல்லி விடுகின்றார். இப்போது தனக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தில் இருந்து தன்னைக் காக்க ராவணன் இவனை எழுப்பி இருக்கின்றான் என்றும் சொல்கின்றான். உடனேயே வானரப் படை வீரர்களுக்குப் பலவிதமான உத்தரவுகள் பிறப்பிக்கப் படுகின்றன.

No comments:

Post a Comment