எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, June 13, 2008

கதை, கதையாம், காரணமாம் ராமாயணம் பகுதி 60

கருடன் செவ்வொளி வீசப் பறந்து வருவதைக் கண்ட வானரர்கள் மனம் மகிழ்ந்தனர். ராம, லட்சுமணர்களைக் கட்டி இருந்த அம்புகளின் உருவில் இருந்த பாம்புகள் பயந்து ஓடிப் போயின. அதைக் கண்ட வானரகள் மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்ப, ராம, லட்சுமணர்கள் இருவரும் எழுந்தனர். புத்துயிர் பெற்று எழுந்த அவர்களைக் கண்ட வானரர்கள் ஆரவாரம் எழுப்பினார்கள். அவர்கள் முகத்தைத் தன் கையால் கருடன் துடைத்தான். அவர்களின் பலம், தேஜஸ், அனைத்தும் மீண்டும் இரு மடங்காய்ப் பெருகிவிட்டது போல் ஒரு தோற்றம் எழுந்தது.இருவரையும் கட்டி அணைத்தான் கருடன். ராமர் அவனிடம், "இத்தனை அன்புடன் என்னையும் என் சகோதரனையும் காத்த நீ யாரோ?? உன்னைக் கண்டதுமே என் மனதில் அன்பு வெள்ளமாய் ஓடுகின்றதே? எனக்கு மிக நெருங்கியவன் நீ என்ற எண்ணம் உண்டாகின்றதே? நீ யார்??" என்று கேட்க, கருடனோ, " நான் கருடன், உனக்கும், எனக்கும் உள்ள பிணைப்பு அசைக்க முடியாதது. எவராலும் நினைத்துப் பார்க்க முடியாத வல்லமை கொண்ட இந்திரஜித்தால் நீ தாக்கப் பட்ட போது தேவர்களே எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தனர். அந்த அம்பு உருக் கொண்ட பாம்புகள் என் ஒருவனால் மட்டுமே விரட்ட முடியும். இந்தச் செய்தியை அறிந்ததுமே, நம்மிருவரின் நட்பின் பிணைப்பையும், அன்பின் உறுதியையும் மனதில் கொண்டு உன்னைக் காக்க வேண்டி இங்கே வந்தேன். இப்போது அந்தப் பாம்புகள் ஓடி விட்டன. ஆனாலும் இந்த ராட்சதர்கள் மாயத் தன்மை கொண்டவர்கள். அதிலும் இந்திரஜித்திடம் நீ மிகக் கவனமாய் இருக்கவேண்டும். "

"நான் யார் என்பதெல்லாம் இருக்கட்டும். நம் நட்பு பற்றியும் நீ இப்போது சிந்திக்கவேண்டியதில்லை. உன் கடமை இப்போது சீதையை மீட்பதே. இலங்கையின் இளைஞர்களையும், வயோதிகர்களையும் விடுத்து மற்றவர்களையும், ராவணனையும் அழித்து, சீதையை மீட்பது ஒன்றே உன் இப்போதைய கடமை. பின்னால் நீயே தெரிந்து கொள்வாய், நம் நட்பின் பிணைப்புப் பற்றி. இப்போது நான் சென்று வருகின்றேன். உனக்கு மங்களம் உண்டாகட்டும்." என்று வாழ்த்திவிட்டு, என்ன தான் மகாவிஷ்ணுவே மனித உருவில் இருந்தாலும், மனித உருக் கொண்டவனிடம் தான் யார் என்றும், அவன் தான் விஷ்ணு என்பதையும் தான் சொல்லுவது தகாது என்ற உணர்வோடு கருடன் திரும்புகின்றான். புதுப் பலம் எய்திய வானர வீரர்களின் ஆரவாரம் ராவணன் காதை எட்டுகின்றது. ராவணன் என்ன விஷயம் என்று பார்த்து வரச் சொல்ல, ராட்சதர்கள் அவ்வாறே பார்த்துச் சென்று ராம, லட்சுமணர்கள் இந்திரஜித்தின் கட்டில் இருந்து விடுபட்டுவிட்டனர் என்று சொல்கின்றார்கள். உடனேயே ராவணன் தன் தளபதியான தூம்ராக்ஷனை அனுப்ப, வானரப் படைக்குப் பெரும்நாசத்தை உண்டு பண்ணிய தூம்ராக்ஷனை அனுமன் வீழ்த்துகின்றான். பின்னர் ராவணன் வஜ்ரத்ம்ஷ்ட்ரனன், அகம்பனன் ஆகியோரை அனுப்ப அவர்களை முறையே அங்கதனும், அனுமனும் வீழ்த்துகின்றனர்.

பின்னர் தலை கவிழ்ந்து யோசனையில் ஆழ்ந்த ராவணன், பிரஹஸ்தனை அழைத்து ஆலோசனை செய்கின்றான். மேலே என்ன செய்வது என்ற யோசனையில் ஆழ்ந்த ராவணனிடம் பிரஹஸ்தன் சொல்கின்றான்:" இந்த ஆலோசனை முன்னால் நடந்த போதே நான் சீதையைத் திருப்பி அனுப்புவதே உகந்தது எனத் தெரிவித்தேன். இத்தனை பயங்கரமான, பெரிய யுத்தத்தை எதிர்பார்த்தே அவ்விதம் சொன்னேன். எனினும், நான் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டவன். என்னால் என்ன முடியுமோ அதை உங்களுக்காக நான் செய்யத் தயாராக இருக்கின்றேன். உயிர்த் தியாகம் கூடச் செய்யுவேன்." என்று கூறிவிட்டு யுத்தகளத்துக்குச் செல்கின்றான் பிரஹஸ்தன். பிஹஸ்தனைப் பார்த்த ராமர், அவன் பலத்தையும், வந்த நொடியில் பல வானரர்களை அவன் அழித்ததையும் கண்டு வியந்தார். அதே சமயம் நீலன் பிரஹஸ்தனைத் தோற்கடித்து அவனையும் கொன்றான். பிரஹஸ்தனே போரில் மாண்டான் என்ற செய்தி கேட்ட ராவணன் திகைத்தான். பின்னர் தானே நேரில் போரில் இறங்குவதே சரி என்ற முடிவுக்கும் வந்தான்.

தன்னுடைய அம்பு வெள்ளத்தால் வானர சேனையையும், ராம, லட்சுமணர்களையும் மூழ்கடிக்கும் எண்ணத்துடன் தேரில் ஏறிக் கொண்டு வந்த ராவணனையும், அவன் தலைமையில் வந்த படைகளின் அணிவகுப்பையும் கண்டு ராமர் வியந்த வண்ணம், விபீஷணனிடம், "கம்பீரமான ஒளி பொருந்திய, இந்த அணி வகுப்பை நடத்தி வருபவர் யார்? இந்த அணி வகுப்பில் யார், யார் இருக்கின்றனர்?" என்று கேட்கின்றார். விபீஷணன் சொல்கின்றான்:
"இந்திர வில்லைப் போன்ற வில்லைக் கையில் ஏந்தி, சிம்மக் கொடியுடன் இந்திரஜித்தும்,
மலைபோன்ற தோற்றத்துடன் அதிகாயனும்,
சிவந்த நிறமுள்ள கண்களை உடைய மஹோதரனும்,
இடி போன்ற வேகம் உடைய பிசானனும்,
கையில் வேலுடன் திரிசிரனும்,
மேகங்கள் போன்ற தோற்றத்துடம் கும்பனும்,
எல்லாருக்கும் மேல், தெய்வங்களுக்கே அஞ்சாத துணிவும், வல்லமையும் கொண்டவனும், இந்திரனையும், யமனையும் ஜெயித்தவனும், ருத்ரனுக்கு நிகர் ஆனவனும் ஆன ராவணனே இந்தப் படை அணிவகுப்புக்குத் தலைமை தாங்கி வருகின்றான்." என்று சொல்கின்றான்.

ராவணனின் அணிவகுப்பு போர்க்களத்தை அடைந்தது. போர் ஆரம்பம் ஆனது. தன் இடைவிடாத அம்பு மழையால் வானரப் படையைச் சிதற அடிக்கின்றான் ராவணன். வானரப் படையோ திக்குத் தெரியாமல் ஓடுகின்றது. தன் அம்பால் சுக்ரீவன் மார்பில் ராவணன் அடிக்க அதனால் சுக்ரீவன் நிலை குலைந்து கீழே விழ, கோபம் கொண்ட வானரப் படை ராவணனைத் தாக்க, அவனோ அம்புமழை பொழிய, வானர வீரர்கள் ராமனிருக்கும் இடம் தேடி ஓடுகின்றது, பாதுகாப்புக்காக.

No comments:

Post a Comment