எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, June 26, 2008

கதை,கதையாம் காரணமாம் ராமாயணம் - பகுதி 64


இவ்வளவு பெரிய உருவமா? என மலைத்தனர்! மலையே பெயர்ந்து வந்துவிட்டதோ என எண்ணிக் கலங்கினர். வானர வீரர்கள் இவ்விதம் எண்ணிக் கலங்கினாலும் சகுனங்கள் கும்பகர்ணனுக்கு அபசகுனமாகவே இருந்ததை அவன் காண்கின்றான். ஆகவே அபசகுனங்களால் கும்பகர்ணனின் மனம் கொஞ்சம் தளர்ந்தது. எனினும் அதைக் காட்டிக் கொள்ளாமலேயே அவன் போர்க்களத்தில் முன்னேறினான்.

அங்கதன், முதலில் கும்பகர்ணனின் பேருருவைக் கண்டு திகைத்து நின்றாலும், பின்னர் சுதாரித்துக் கொண்டு, நீலனையும், நளனனயும் பார்த்து, பயந்து ஓட இருக்கும் வானரப் படைகளைத் திறம்படச் சேர்ப்பிக்கச் சொல்லிக் கட்டளை இடுகின்றான். வானர வீரர்களுக்குத் தானும் தைரியம் சொல்கின்றான். நாம் திறமை அற்றவர்கள் அல்லவே? ஏன் பயப்படவேண்டும்? எனத் தைரியம் சொல்கின்றான். இதைக் கேட்ட வானரவீரர்கள் திரும்பி வந்து, மலைக்குன்றுகளையும், பெரும் மரங்களையும் பிடுங்கி கும்பகர்ணன் மீது வீசுகின்றனர். ஆனால் அவை பொடிப்பொடியாகப் போயிற்றே ஒழிய கும்பகர்ணனுக்கு ஒன்றும் ஆகவில்லை. வானரர்களைப் பிடிக்கக் கும்பகர்ணன் தன் பெரிய கைகளை நீட்டிப் பிடிக்க ஆரம்பித்தான். உடனேயே வானரர்கள் அவன் கையில் பிடிபட்டு நசுங்கத் தொடங்கினார்கள். பிடிக்க முடியாத வானரர்கள் ஓடி மறைந்து கொள்ள ஆரம்பித்தனர். அங்கதன் கோபம் கொள்கின்றான். இப்படியாவது நம் உயிரை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமா??? ராமனை எதிர்த்துக் கும்பகர்ணன் உயிரோடு இருக்க முடியுமா??? நாம் ஓடி ஒளிந்தால் நம் புகழும் ஒழிந்துவிடும், திரும்பி வாருங்கள் எனக் கூவி அழைக்கின்றான் அங்கதன் வானர வீரர்களை.


ஆனால் பயத்தின் எல்லையில் இருந்த அந்த வானர வீரர்கள் வர மறுக்கவே, மிகுந்த பிரயாசைக்கு இடையில் அங்கதன் அனுமன் தலைமையில் சில வானர வீரர்களைச் சேர்க்கின்றான். அனைவரும் கும்பகர்ணனைக் கடுமையாகத் தாக்குகின்றார்கள். அனுமன் தலைமையில் கடும் சண்டை நிகழ்ந்து கும்பகர்ணனின் ஆதரவுக்கு அனுப்பப் பட்ட படை வீரர்களுக்குப் பெரும் சேதம் விளைகின்றது. கோபத்துடன் கும்பகர்ணன் அனுமனைத் தாக்க அனுமன் நிலைகுலைந்து ரத்தம் கக்கிக் கொண்டு, சற்றே தடுமாற, அதைப் பயன்படுத்திக் கொண்ட கும்பகர்ணன், வானரர்களை அழிக்க ஆரம்பித்தான். கோபம் கொண்ட அங்கதன் கும்பகர்ணனின் கடுமையான தாக்குதலில் கீழே, விழ, அங்கே சுக்ரீவன் பெரும் கோபத்தோடு வருகின்றான். சுக்ரீவனோடு பொருத கும்பகர்ணன் விரைய, இருவருக்கும் கடும் சண்டை நடக்கின்றது. ஆனால் தன் சூலத்தால் சுக்ரீவனைக் கீழே வீழ்த்தி விடுகின்றான் கும்பகர்ணன். ஆனால் அனுமன் இடையில் புகுந்து சூலத்தைப் பொடிப் பொடியாக்க சுக்ரீவன் தப்ப முயல, கும்பகர்ணனோ ஒரு பெரும் மலைச்சிகரத்தால் சுக்ரீவனைக் கீழே மீண்டும் வீழ்த்தியே விடுகின்றான். அரக்கர் படை கோலாகலம் அடைகின்றது. சுக்ரீவனைத் தன் கையிலே இடுக்கிக் கொண்டு கும்பகர்ணன் இலங்கை நகருக்குள்ளே செல்ல விரைகின்றான். அப்போது வானரப்படை நிலைகுலைய, இதைக் கண்ட அனுமன் தான் என்ன செய்வது என்று யோசிக்கின்றார்.

இப்போது தன் பலத்தைக் காட்டினால், அது பயன் தராது. எப்படியும் சுக்ரீவன் தானாகவே தன் பலத்தால் திரும்ப வந்து சேருவான். இப்போது நம் பூரண பலத்தைக் காட்டி சுக்ரீவனை விடுவிப்பது அவனுக்கும் புகழ் தராது, நமக்கும் பயன் இல்லை என்று முடிவு செய்கின்றார். இலங்கை நகருக்குள்ளே கும்பகர்ணன் நுழையும் வேளையில் சுக்ரீவன் நினைவு திரும்பி, கும்பகர்ணனைத் தாக்குகின்றான் அவன் சற்றும் எதிர்பாராவண்ணம், சற்றே நிலைகுலைந்த கும்பகர்ணன் தடுமாறவும், அதைப் பயன்படுத்திக் கொண்டு திரும்ப ராமர் இருக்கும் இடம் வந்து சேருகின்றான் சுக்ரீவன். கும்பகர்ணன் கோபத்தோடு மீண்டும் போர்க்களம் வருகின்றான். இம்முறை வானரப்படைக்கு அவன் விளைவித்த நாசத்தால் அச்சம் கொண்ட வானரப்படை மீண்டும் ராமரைச் சரணடைய, முதலில் லட்சுமணன் வருகின்றான், போருக்கு. கும்பகர்ணன் அவனிடம் அவனைப் பாராட்டிப் பேசிவிட்டு எனினும் தான் ராமனையும், அவன் வீரர்களையும் அழித்துவிடுவதாய்ச் சபதம் பூண்டே வந்திருப்பதாயும் அதே போல் செய்யப் போவதாயும் சொல்லுகின்றான். ஆகவே ராமனோடு நேருக்கு நேர் போர் புரியும் அவன் ஆசையை நிறைவேற்ற வேண்டி அவனிடம் ராமன் இருக்குமிடம் இதுவே எனக்காட்டுகின்றான் லட்சுமணன். அவன் ஆசைப்படியே ராமனுடன் பெரும்போர் புரிகின்றான் கும்பகர்ணன். வானரர்களைத் தொடர்ந்து அவன் அழிப்பதைப் பார்த்த லட்சுமணன், வானர வீரர்களை கும்பகர்ணன் மீது ஏறச் சொல்லுகின்றான். இவ்விதம் ஏறினால் அவனால் ஏதும் செய்ய முடியாமல் தொடர்ந்து அழிக்க முடியாமல் திணறுவான் எனச் சொல்ல, கும்பகர்ணனோ ஒரே உதறலில் அத்தனை வானரர்களையும் கீழே வீழ்த்தி விடுகின்றான். அவனின் அளப்பரிய ஆற்றலை எண்ணி வியந்த ராமர், அவனைப் பார்த்து, “உன்னை அழிக்கும் பாணம் தயார், வா உடனே, என்னோடு பொருத,” என அழைக்கக் கும்பகர்ணனும்,” ஹே, இக்ஷ்வாகு குலத் திலகமே, நான் வாலியோ, கபந்தனோ, கரனோ, விராதனோ, அல்லது மாரீசனோ அல்ல என்பதை அறிவாய். என்னை வீழ்த்துவது என்பது கடினம் என்று தெரிந்து கொள்வாய். முதலில் உன் பலத்தைக் காட்டு, பின்னர் நான் உன்னை விழுங்கிவிடுகின்றேன்.” என்று சொல்கின்றான்.

ராமர் ஏவிய வாயு அஸ்திரத்தால் கும்பகர்ணனின் ஒரு கையை வெட்டக் கீழே விழுந்த அந்தக் கையில் சிக்கி, பல வானரர்கள் உயிரிழந்தனர். பின்னர் மற்றொரு கையையும் வெட்டி வீழ்த்துகின்றார் ராமர். எனினும் தன் வலிமை பொருந்திய கால்களின் துணை கொண்டு போருக்கு வருகின்றான் கும்பகர்ணன். அவன் கால்களை யும் வெட்டித் தள்ளுகின்றார் ராமர். திசைகள் நான்கும் நடுங்க, மலைகள் ஆட்டம் போட, கடல் கொந்தளிக்க, ராமர் விடுத்த அம்பு இப்போது கும்பகர்ணனின் தலையை அறுத்து எறிகின்றது. அவன் தலை கீழே விழுந்த பேரதிர்ச்சியில் இலங்கைக்கோட்டை வாயில் தகர்ந்தது. உடல் விழுந்த அதிர்ச்சியில் கடல் பொங்கியது. நீர்வாழ் உயிரினங்கள் பலவும் உயிரை விட்டன. மீன்களும், சுறாக்களும் நசுங்கிச் செத்தன. ஆனால் வானரவீரர்களோ ஆடிப் பாடி மகிழ்ந்தனர். எங்கும் மகிழ்ச்சி, கோலாகலம், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், மலை போன்ற கும்பகர்ணன் வீழ்ந்து பட்டான். இனி???

வானரப்படை கோலாகலமாய்க் கொண்டாட, மிகுந்திருந்த அரக்கர்கள் ராவணனிடம் சென்று கும்பகர்ணன் ராமனால் மாய்க்கப் பட்டான் எனத் தெரிவிக்கின்றனர். அதைக் கேட்ட ராவணன் மயங்கி விழுகின்றான். மற்ற அவன் உறவினர்களும் பெரும் துக்கத்தில் ஆழ்ந்தனர். ஒருவாறு சமாளித்து எழுந்த ராவணன், “ஆஹா, தேவர்களையே போரில் வென்ற என் தம்பி கும்பகர்ணனா இறந்து பட்டான்??? இடி, இடித்தாலும் , மின்னல் மின்னினாலும் அவற்றையும் எதிர்க்கும் வல்லமை படைத்த என் தம்பி கும்பகர்ணனுக்கு மரணம் நிகழ்ந்தது? அதுவும் ஒரு நரன் ஆகிய ராமனின் கையாலேயே ஏற்பட்டு விட்டதே?? கும்பகர்ணா!, கும்பகர்ணா! இந்த ரிஷி,முனிவர்கள் இனிமேல் எதற்கும் அஞ்ச மாட்டார்களே? வானரர்களுக்கும் இனி இலங்கைக் கோட்டைக்குள் நுழைவது எளிது எனத் தோன்றி விடுமே?? ஐயகோ! என்ன செய்வேன் நான்?? அருமைத் தம்பி, உன்னைப் பறி கொடுத்தேனே?” என்றெல்லாம் புலம்புகின்றான் ராவணன். இனியும் இந்த ராஜ்யத்தாலோ, அல்லது சீதையை நான் அடைந்தாலோ என்ன பயன் ஏற்படும்? கும்பகர்ணா! நீ இல்லாமல் நான் உயிர் வாழ்வதெப்படி?? ஆனால் உன்னைக் கொன்ற அந்த ராமனைக் கொன்று நான் பழி தீர்க்கவேண்டுமே? அதற்காகவே என் உயிரை வைத்துக் கொண்டு இருக்கிறேன். இல்லையேல் நானும் உன் வழியே இதோ புறப்படுகிறேன், காலதேவனை நோக்கி! ஆஹா, அன்றே விபீஷணன் கூறினானே?? விபீஷணன் வார்த்தைகளை அலட்சியம் செய்தேனே? அதற்கான பலனை அல்லவோ இப்போது அனுபவிக்கின்றேன்? பிரஹஸ்தனும், மாண்டான், கும்பகர்ணனும் மாண்டான், இனி நான் என்ன செய்வது?” புலம்பினான் ராவணன்.

அவன் சோகத்தைக் கண்ட அவனுடைய மற்றப் பிள்ளைகளும், மற்ற சகோதரர்களும் அவனைத் தேற்றி, தாங்கள் போருக்குச் சென்று ராம, லட்சுமணர்களை அழித்து விடுவதாய்ச் சொல்லிப் பெரும்படையுடன் போருக்குக் கிளம்பினார்கள். சூரியன் போல் பிரகாசித்த மஹோதரனும், கார்மேகத்துக்கு நிகரான திரிசிரனும், மலை போன்ற தோற்றத்துடன் அதிகாயனும் , சிவனார் மனம் குளிர இரு செவிகளிலும் உபதேச மந்திரத்தைச் சொன்ன தேவ சேனாபதியான கார்த்திகேயன் போல் நராந்தகனும், அவன் மாமன், மாயோன், போன்ற தோற்றத்துடனேயே தேவாந்தகனும், செல்வத்துக்கு அதிபதியானவனும், ராவணனுக்கு அண்ணனும் ஆன குபேரன் போல் மஹாபார்ச்வனும் தோற்றம் அளிக்க அரக்கர் படை மீண்டும் புது உற்சாகத்துடனேயே வானரப்படையுடன் பொருத ஆரம்பித்தது. வானரப்படையில் பலரையும் வந்த உடனேயே அரக்கர் படை அழித்து நாசம் செய்தது. அங்கதன், நராந்தகனையும், அனுமன், திரிசிரன், தேவாந்தகனையும், நீலன், மஹோதரனையும், ரிஷபன், மஹாபார்ச்வனையும் முறையே கொன்றனர். ஆனால் பிரம்மனிடம் வரம் பெற்ற அதிகாயனை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பெரும் சாதனைகள் புரிந்த அவனைக் கட்டுப்படுத்தும் வழி, வகை புரியாமல் வானரப்படையினர் திகைத்து நின்றனர். பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் அந்த விஷ்ணுவே வந்துவிட்டானோ, அவன் கையிலிருந்து சக்கரம் தான் தங்களை அழிக்க வந்துவிட்டதோ, என வானர வீரர்கள் எண்ணும் வண்ணம் சுழன்று, சுழன்று சண்டையிட்டுக் குவித்தான் வானர வீரர்களைப்பிணமாக . அதிர்ச்சி அடைந்த வானர வீரர்களில் சிலர் ராமனிடம் சென்று போர்க்களச் செய்திகளைத் தெரிவிக்க, ராமரும் அதிகாயனின் வீர சாகசங்களைக் கண்ணால் கண்டு வியப்புற்றார். விபீஷணனிடம் யார் இவன் எனக் கேட்க அதிகாயன் பற்றிய விபரங்களை விபீஷணன் சொல்ல ஆரம்பிக்கின்றான்.

No comments:

Post a Comment