எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, June 25, 2008

கதை,கதையாம் காரணமாம், ராமாயணம் -யுத்த காண்டம் பகுதி 63

இங்கே கும்பகர்ணன் ராவணன் மாளிகையை அடைந்து தனக்கு என்ன உத்தரவு எனக் கேட்கின்றான். அவன் வரவினால் மகிழ்ச்சி அடைந்த ராவணன், மிகுந்த கோபத்துடன், ராமன் சுக்ரீவன் துணையோடு கடல் கடந்து சீதையை மீட்க வந்திருப்பதையும், அந்த வானரப் படைகளால் ராட்சதர்களுக்கு நேர்ந்த அழிவையும், துன்பத்தையும் எடுத்துக் கூறுகின்றான். இந்த வானரப் படைகள் மேலும் மேலும் கடல் பொங்குவது போல் அலைகள் அவற்றிலிருந்து வந்து, வந்து மோதுவது போல் வந்து கொண்டே இருப்பதாயும், இவற்றிற்கு முடிவு இல்லையெனத் தோன்றுவதாயும் சொல்லிவிட்டு இவற்றை அழிக்க என்ன வழி என்றே தான் அவனை எழுப்பச் சொன்னதாயும் சொல்கின்றான். அரக்கர்கள் அடைந்திருக்கும் பெரும் துன்பத்தில் இருந்து அவர்களைக் காக்கும்படியும் சொல்லுகின்றான். பெருங்குரலெடுத்துச் சிரிக்கின்றான் கும்பகர்ணன்.


ஏற்கெனவே ஆலோசனைகள் செய்த காலத்தில் சொல்லப் பட்ட வழிமுறைகளை நீ பின்பற்றி இருக்கவேண்டும். அப்போதே உனக்கு இத்தகையதொரு ஆபத்து நேரிடும் என எச்சரிக்கை செய்யப் பட்டது. நீ அப்போது சொல்லப் பட்ட சமாதானத்தை நாடும் முறையிலோ,
அல்லது பொருள் கொடுத்து அவனுடன் கூட்டுறவை ஏற்படுத்திக் கொள்ளாமலோ, நேரடியாகப் போருக்குச் சென்றுவிட்டாய். உன்னுடைய, மற்றும் என்னுடைய தம்பியாகிய விபீஷணன் கூறியவற்றையோ, உன் மனைவியாகிய மண்டோதரி கூறியவற்றையோ நீ கேட்டு நடந்திருக்கவேண்டும். உன்னுடைய மேன்மைக்கும், நன்மைக்குமே அவர்கள் இந்த வழிமுறைகளைக் கூறினார்கள். நீ அலட்சியம் செய்துவிட்டாய்.” என்று கூறி மீண்டும் பெருங்குரலில் சிரிக்க ராவணன் கோபம் பொங்கி எழுந்தது. “கும்பகர்ணா, நீ என் தம்பி என்பதை மறந்து விடாதே, ஒரு ஆச்சாரியன் போல் அறிவுரைகள் கூறுகின்றாயே?? மேலும், கும்பகர்ணா, என் தவறுகள் காரணமாகவே இப்போதைய சம்பவங்கள் நடந்திருந்தாலும், நீ அதை எல்லாம் மறந்துவிட்டு, எனக்கு எவ்வாறு உதவி செய்வது என யோசிப்பாயாக! நான் நேர் பாதையில் இருந்து விலகிச் சென்றிருந்தாலும் இப்போது எனக்கு உதவி செய்வதே என் உறவினன் ஆன உன் கடமை என்பதையும் மறவாதே, உன் பலத்தை நீ உணர மாட்டாய், அதை முதலில் உணர்ந்து கொள்வாயாக, எனக்கு உதவி புரிய ஆயத்தமாகிவிடு.” என்று சொல்கின்றான்.

கும்பகர்ணன் மனம் நெகிழ்ந்து போனான். ஆஹா, நம் அண்ணனா இவன்?? எத்தனை பலவான்? எவ்வளவு தைரியம் நிறைந்தவன்?? இப்போது இப்படிக் கலங்கி இருக்கிறானே? இப்போது இவனுக்குத் தேவை தைரியமும், ஆறுதலும் அளிக்கும் வார்த்தைகளும், செயல்களுமே எனக் கண்டு கொள்கின்றான் கும்பகர்ணன். அவ்விதமே பேசத் தொடங்குகின்றான் ராவணனிடம், “அன்பு மிகுந்த அண்ணனே, என் தந்தைக்குச் சமம் ஆனவனே! உன் கவலையை விட்டொழி, உன் சகோதரன் ஆன நான் உன்னுடைய மேன்மைக்காகவே மேற்கண்ட அறிவுரைகளைக் கூறினேன். மேலும் உன்னை நல்வழியில் திருப்பவதும் என் கடமை அன்றோ. ஆனால் உனக்கு ஏற்புடையது இல்லை எனத் தெரிந்து கொண்டேன். என்ன செய்யவேண்டும் உனக்கு? அந்த ராமனை நான் அழிப்பேன், பார் நீயே! நீ இதற்கென வேறு யாரையும் அழைக்க வேண்டாம், நானே செல்கின்றேன், சென்று அந்த வானரக் கூட்டத்தையும், அந்த நர மனிதர்கள் ஆன ராம, லட்சுமணர்களையும் அடியோடு அழிக்கின்றேன். இவர்களை அழிக்க எனக்கு ஆயுதங்கள் கூடத் தேவை இல்லை. என் கைகளாலேயே அழித்து விடுவேன். நீ போய் உன் வேலையைப் பார், என்னுடைய வெற்றி முழக்கம் கேட்கும், அப்போது வந்தால் போதும், நீ இப்போது வரத் தேவை இல்லை,” என்று சொல்கின்றான்.

ஆனால் அதைக் கேட்டுக் கொண்டிருந்த மஹோதரனுக்கோ, இதில் கொஞ்சம் கூடச் சம்மதம் இல்லை. “ கும்பகர்ணா, தன்னந்தனியாக நீ சென்று யுத்தம் செய்கின்றேன் என்று சொல்வது முற்றிலும் தவறு. ஜனஸ்தானத்தில் என்ன நடந்தது? சற்றே எண்ணிப் பார்ப்பாய், அத்தகைய பெரும்பலம் கொண்ட ராமனையோ, அவன் தம்பி லட்சுமணனையோ, நம்மால் தனியாக எல்லாம் வெற்றி கொள்ள முடியாது. நீ இப்போது யுத்தம் செய்யப் போகவேண்டாம். ராமனை வெற்றி கொள்வது என்பது எளிது அல்ல. ஆனால் சீதையை நம் வசம் ஆக்க ஒரு வழி கூறுகின்றேன். இப்போது கும்பகர்ணனை விடுத்த மற்ற நாங்கள் சென்று யுத்தம் செய்கின்றோம். அல்லது அவனும் வர விரும்பினால் வரட்டும். யுத்தத்தில் நாங்களே ஜெயிப்போம், அவ்வாறு இல்லாமல், உடல் முழுதும் ரத்தக்காயங்களோடு திரும்பும் நாங்கள், உங்கள் காலடியில் விழுந்து, ராம, லட்சுமணர்களை நாங்கள் கொன்றுவிட்டதாயும், வானரப்படையை அழித்துவிட்டதாயும் தெரிவிக்கின்றோம். நீங்கள் எங்களுக்குப் பரிசுகளை வழங்கிக் கொண்ட்டாட்டங்களை அறிவியுங்கள். அப்போது அந்தச் செய்தி சீதையைச் சென்றடையும், அந்த நேரம் பார்த்து, அவள் மனம் கவரும் வண்ணம் வண்ண, வண்ணப் பட்டாடைகளும், ஆபரணங்களும், பல்வேறுவிதமான கண் கவரும் பரிசுகளையும் அளித்து இனி ராமன் இல்லை, நான் தான் உன்னுடைய ஒரே பாதுகாவலன் என்று தெரிவித்தால் வேறு வழியில்லாமலும், செல்வத்திலே பிறந்து, செல்வத்திலே வளர்ந்து, செல்வத்தை மணந்த சீதை, அந்த செல்வத்திற்காகவும் முழுமையாக உங்களுடையவள் ஆகிவிடுவாள். இது ஒன்றே வழி” எனச் சொல்ல கும்பகர்ணன் மஹோதரனைப் பார்த்து ஏளனமாய்ச் சிரிக்கிறான்.

பின்னர் தன் அண்ணனைப் பார்த்து தான் தனியாகச் சென்று யுத்தம் செய்யப் போவதாயும், மன்னனுக்கு நெருக்கம் என்ற பெயரிலே மஹோதரன் தவறான ஆலோசனைகளைக் கூறுவதாயும், சொல்கின்றான். மஹோதரனையும் அவ்வாறே கடிந்தும் பேசுகின்றான். ராவணன் மனம் மகிழ்ந்து தன் தம்பியைப் போர்க்களத்திற்குச் செல்ல ஆயத்தப் படுத்துகின்றான். தன் அருமைத் தம்பிக்குத் தன் கையாலேயே ஆபரணங்களைப் பூட்டி, போருக்கான மாலைகளையும் சூட்டுகின்றான். கவசத்தை அணிவித்து எவரும் தன் தம்பியைத் தாக்க முடியாது என உறுதி கொள்கின்றான். கையிலே சூலத்தைக் கொடுத்து, பிரளயக் காலத்திலே அழிக்க வந்த ருத்ரனோ என்று எண்ணுமாறு தன் தம்பி இருப்பதாய் மகிழ்கின்றான். வேதியர்களை அழைத்து ஆசீர்வாத மந்திரங்களைச் சொல்ல வைக்கின்றான், இத்தனைக்கும் பின்னர் ஊழிக்காலத்துப் பரமசிவன் போலக் கையில் சூலம், ஏந்து, உடலில் கவசம் தரித்து, தன் பேருருவோடு புறப்பட்டுச் சென்று யுத்தகளத்தை அடைந்த கும்பகர்ணனைப் பார்த்த வானர வீரர்கள் திகைத்தனர்.

No comments:

Post a Comment