
ராவணனின் புத்திரர்களில் ஒருவனும், பிரம்மாவிடம் வரம் பெற்றவனும் ஆன அதிகாயன் பற்றிய விபரங்களை விபீஷணன் சொல்லத் தொடங்கினான். அந்த மஹாவிஷ்ணுவே வந்து ராவணனுக்காக யுத்தம் செய்கின்றாரோ என்று எண்ணும் வண்ணம் தன் வீரத்தைக் காட்டிய அதிகாயனைப் பார்த்த ராம, லட்சுமணர்கள் அவன் வீரத்தைப் பார்த்து வியந்தனர். விபீஷணன் சொல்கின்றான்:"தந்தையான ராவணனுக்கு நிகரானவன் இவன். அவன் மனைவிகளில் ஒருத்தியான தான்யமாலினி என்பவளுக்குப் பிறந்த இவன் அதி புத்திசாலி, ஆலோசனைகள் சொல்லுவதில் வல்லவன், வேதங்களை முழுமையாகக் கற்றறிந்தவன், எதிரிப்படைகளைத் துண்டிப்பதில் சிறந்தவன், அதே போல் சமாதானம் பேசுவதிலும் வல்லவன், இன்று இலங்கை நகரே இவன் ஒருவனையே நம்பி உள்ளது என்றால் மிகை இல்லை. பிரம்மாவிடமிருந்து வரங்கள் பெற்ற இவனின் ஒளி பொருந்திய தேரும், கவசங்களும் கூட அவராலேயே அளிக்கப் பட்டது. மிக்க அறிவு படைத்த இவன் இந்திரனின் வஜ்ராயுதத்தையே அடக்கியவன். நாம் சற்றும் தாமதிக்காமல் இவனை அழிக்க வேண்டும். இல்லையேல் வானரப் படையை இவன் அழித்து விடுவான் என்பதில் சற்றும் ஐயமில்லை." என்று சொல்கின்றான்.
வானர வீரர்களை எல்லாம் கதிகலங்க அடித்துக் கொண்டிருந்த அதிகாயனைக் கண்டு அவன் முன்னே லட்சுமணன் வீரத்தோடு போய் நின்றான். அதிகாயனோ லட்சுமணனைச் சிறுவன் என்றே மதித்தான். வயதில் மிக இளையவன் ஆன நீ தப்பிப் போ. உன்னால் என்னோடு போர் புரியவேண்டிய பலம் இல்லை, என் அம்புகளைத் தாங்கும் சக்தி உன்னிடம் இல்லை, திரும்பிப் போவாய், இளைஞனே!" என்று அதிகாயன் சொல்ல லட்சுமணன் தீரத்தோடு அவனை எதிர்த்து நிற்கின்றான். அதிகாயனும், லட்சுமணனை எதிர்க்க இருவருக்கும் கடும்போர் நடக்கின்றது. லட்சுமணனின் அம்புகளை எல்லாம் எதிர்த்து ஒரு பாதிப்பும் இல்லாமல் நிற்கும் அதிகாயனைக் கண்டு திகைக்கின்றனர் வானர வீரர்கள். தேவர்களும், யட்சர்களும், ரிஷி, முனிவர்களும் இந்த அதிசயச் சண்டையைக் காண விண்ணில் கூடி நின்றனர். லட்சுமணன் அதிகாயனை வீழ்த்தும் வழி தேடித் திகைத்து நிற்க அப்போது வாயு அவன் காதில் மெல்ல, "அதிகாயனைத் தோற்கடித்துக் கீழே வீழ்த்த வேண்டுமானால் பிரம்மாஸ்திரத்தைப் பயன்படுத்து." என்று சொல்ல லட்சுமணன் பிரம்மாஸ்திரத்தைக் கையில் எடுத்தான்.
சந்திர, சூரியர்கள் திகைத்து நடுங்க, பூமி அதிர, லட்சுமணன் பிரம்மாஸ்திரத்தை ஏவினான். தன் முழு பலத்தோடு அது அதிகாயனைத் தாக்கியது. அதிகாயன் பிரம்மாஸ்திரத்தை வீழ்த்த ஏவிய அஸ்திரங்கள் பலனற்றுப் போயின. பிரம்மாஸ்திரம் தாக்கிக் கீழே வீழ்ந்தான் அதிகாயன். அவன் தலையைத் துண்டித்தது பிரமாஸ்திரம். அதிகாயன் உயிரை இழந்தான். ராவணனுக்குச் செய்தி தெரிவிக்கப் பட்டது. மிக்க கவலையுடன் அவன் தூம்ராக்ஷனைப் பார்த்துத் தன் மனக்கவலையைப் பகிர்ந்து கொள்கின்றான்: "இந்த ராம, லட்சுமணர்களை வீழ்த்தக் கூடியவர் எவரேனும் இருக்கின்றனரா தெரியவில்லை. பலம் மிகுந்த இந்திரஜித்தின் கட்டில் இருந்தே இவர்கள் இருவரும் விடுவித்துக் கொண்டு விட்டனர். அந்த ஸ்ரீமந்நாராயணன் தான் ராமனாக வந்திருக்கின்றானோ என எண்ணுகின்றேன். சீதை இருக்கும் அசோகவனமும், அதைச் சுற்றிய இடங்களும் பாதுகாக்கப் படவேண்டும். வானரர்களைச் சாதாரணமாய் நினைத்து அலட்சியம் செய்ய வேண்டாம்." என்று சொல்லி விட்டுத் தன் உறவினர் ஒவ்வொருவராய்க் கொல்லப் படுவதை எண்ணிப் பெருந்துக்கத்தில் மூழ்கினான். அவனைக் கண்டு வருந்திய இந்திரஜித் தன் தகப்பனுக்குத் தைரியம் சொல்ல ஆரம்பித்தான்.

போர்க்களத்தில் நுழைந்ததும் படையை அணிவகுத்துவிட்டுத் தான் பிறர் கண்ணில் படாமல் மாயமாய் நிற்கும்படியாகத் தன் மாயாசக்தியைப் பயன்படுத்தித் தன்னை மறைத்துக் கொண்டான். வானர வீரர்களும், தளபதிகளும், சுக்ரீவன், அங்கதன் உள்ளிட்ட மற்ற மாபெரும் வீரர்களும் அவன் தாக்குதலில் நிலை குலைந்தனர். இதைக் கண்டு மனம் மகிழ்ந்த இந்திரஜித், ராம, லட்சுமணர்களையும் தன் அம்பு, மழையால் முழுதும் மூடினான். பின்னர் பிரம்மாஸ்திரத்தை அவன் ஏவ, அதைக் கண்ட ராமர், லட்சுமணனிடம், பிரம்மாஸ்திரத்தை இவன் ஏவுகின்றான். நாம் இதற்குக் கட்டுப் பட்டே ஆகவேண்டும். தாங்க வேண்டியது தான். நாம் நினைவிழந்து விழுந்துவிட்டதும், ஏற்கெனவே வானரப் படையின் நிலைகுலைந்த கதியை நினைத்து, அவன் உற்சாகம் அடையப் போகின்றான். நாம் இப்போது இந்த அஸ்திரத்துக்குக் கட்டுப் பட்டே தீரவேண்டும்" என்று சொல்கின்றார். அதே போல் இந்திரஜித் ஏவிய அஸ்திரம் இருவரையும் கட்ட, இருவரும் அதற்குக் கட்டுப் பட்டு கீழே விழுகின்றனர். இலங்கை திரும்பி இந்திரஜித் மிக்க மன மகிழ்வோடு தன் தந்தையிடம், தான் அனைவரையும் வீழ்த்திவிட்டதையும், வானர வீரர்கள் நிலை குலைந்துவிட்டதையும் தெரிவிக்கின்றான். வானர வீரர்கள் மிக்க கவலையுடன் தங்கள் உடலில் ரத்தம் பெருகுவதையும், தங்கள் காயங்களையும் கூட மறந்துவிட்டுக் கவலையுடனும், திகைப்புடனும், இனி என்ன என்று ஒன்றும் புரியாமல் நின்றனர்.
ராம, லட்சுமணர்கள் தவிர, அங்கே தலைமை வகித்த பெரிய வீரர்கள் ஆன, சுக்ரீவன், ஜாம்பவான், அங்கதன், நீலன், ஆகிய அனைவரும் மயக்க நிலையிலும், கிட்டத் தட்ட இறக்கும் தருவாயிலும் இருப்பதைக் கண்ட அனைவரும் செய்வதறியாது யோசிக்கையில், ஓரளவு காயத்துடனும், நினைவுடனும் இருந்த அனுமன் மற்ற அனைவரையும் எவ்வாறேனும் காக்கவேண்டியது தன் கடமை என்று உணர்ந்தான். அதைப் புரிந்து கொண்ட விபீஷணனும் அவனைத் தேற்றி, யாரேனும் உயிர் பிழைத்துள்ளார்களா எனப் பார்க்கச் சொல்ல, விழுந்து கிடந்தவர்களில் அனுமன் தேட ஜாம்பவான் மட்டுமே அரை நினைவோடு முனகிக் கொண்டு இருந்ததைக் கண்டனர் இருவரும். ஜாம்பவானைக் கூப்பிட்டு, இந்திரஜித்தின் பாணங்கள் உங்களைத் தாக்கியதா என விசாரிக்க, என்னால் கண் திறந்து பார்க்க முடியவில்லை, ஆனால் எனக்கு ஒரு யோசனை தோன்றுகின்றது. அதை நிறைவேற்ற அனுமனால் தான் முடியும். அவன் இங்கே இருக்கின்றானா என்று வினவ, அனைவரையும் விட்டு, விட்டு அனுமனை ஏன் தேடுகின்றான் ஜாம்பவான் என்று யோசித்த விபீஷணன், அதை ஜாம்பவானிடம் கேட்டான்.
//மிக்க அறிவு படைத்த இவன் இந்திரனின் வஜ்ராயுதத்தையே அடக்கியவன்//
ReplyDeleteஅட! கதை தெரிஞ்சா சொல்லுங்க!