எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, June 20, 2008

கும்பகர்ணன் வதை பற்றிய கம்பர் பாடல்கள்!

இந்த இடத்தில் வழக்கம்போல் கம்பர் வால்மீகியிடமிருந்து வேறுபடுகின்றார். கும்பகர்ணன் போருக்கு ஆயத்தம் ஆகி வருவதைக் கண்ட ராமர், அவனைப் பார்த்து வியந்தவராய், விபீஷணனிடம் அவனைப் பற்றிய விபரங்களைக் கேட்டு அறிகின்றார். விபீஷணனும், கும்பகர்ணனும் ராவணனுக்கு நல்லுபதேசங்கள் செய்ததையும், ராவணன் அதைக் கேட்காமல் இருந்ததையும், இப்போது ராவணனுக்கு ஒரு பிரச்னை என்றதும் கும்பகர்ணன், உதவிக்கு ஓடி வந்திருப்பதையும் தெரிவிக்கின்றான்.
"தருமம் அன்று இதுதான் இதால்
வரும் நமக்கு உயிர் மாய்வு எனா
உருமின் வெய்யவனுக்கு உரை
இருமை மேலும் இயம்பினான்.": கும்பகர்ணன் வதைப் படலம்:பாடல் எண்:1336

"மறுத்த தம்முனை வாய்மையால்
ஒறுத்தும் ஆவது உணர்த்தினான்
வெறுத்தும் மாள்வது மெய் எனா
இறுத்து நின் எதிர் எய்தினான்." பாடல் எண்: 1337


"நன்று இது அன்று நமக்கு எனா
ஒன்று நீதி உணர்த்தினான்
இன்று காலன் முன் எய்தினான்
என்று சொல்லி இறைஞ்சினான்." :பாடல் எண்: 1338

என்று விபீஷணன் கும்பகர்ணனின் தன்மையைப் பற்றி ராமனிடம் எடுத்து உரைக்கின்றான். அப்போது சுக்ரீவன், ராமனிடம், கும்பகர்ணனைத் தங்களுடன் சேர்த்துக் கொண்டு விடலாம் என ஆலோசனை சொல்கின்றான். அந்தப் பாடல் இவ்வாறு:

"என்று அவன் உரைத்தலோடும் இரவி சேய் இவனை இன்று
கொன்று ஒரு பயனும் இல்லை கூடுமேல் கூட்டிக் கொண்டு
நின்றது புரிதும் மற்று இந்நிருதர்கோன் இடரும் நீங்கும்
நன்று என நினைத்தேன் என்றான் நாதனும் நயன் ஈது என்றான்." பாடல் எண்: 1339

என்று கும்பகர்ணனைத் தங்களுடன் சேர்த்துக் கொள்ளலாம் என சுக்ரீவன் சொன்ன யோசனையை ஏற்று ராமனும், அப்போது கும்பகர்ணனிடம் சென்று பேசுபவர்கள் யார் எனக் கேட்க, விபீஷணன் தானே சென்று பேசுவதாய்க் கூறிவிட்டுச் சென்று கும்பகர்ணனிடம் பேசுவதாயும், அவன் அதை மறுத்துப் பேசுவதாயும் கம்பர் கூறுகின்றார். விபீஷணன் ராமனைச் சரணடையுமாறு கேட்பதை இவ்வாறு கூறுகின்றார் கம்பர்:

"இருள் உறு சிந்தையேற்கும் இன் அருள் சுரந்த வீரன்
அருளும் நீ சேரின் ஒன்றோ அபயமும் அளிக்கும் அன்றி
மருள் உறு பிறவி நோய்க்கு மருந்தும் ஆம், மாறிச் செல்லும்
உருளுறு சகட வாழ்க்கை ஒழித்து வீடு அளிக்கும் அன்றே." :கும்பகர்ணன் வதைப் படலம்: பாடல் எண்: 1351

"போதலோ அரிது போனால் புகலிடம் இல்லை வல்லே
சாதலோ சரதம் நீதி அறத்தொடும் தழுவி நின்றாய்
ஆதலால் உளதாம் ஆவி அநாயமே உகுத்து என் ஐய?
வேதநூல் மரபுக்கு ஏற்ற ஒழுக்கமே பிடிக்க வேண்டும்." பாடல் எண் 1353

என்று விபீஷணன் கும்பகர்ணனிடம் கூறுவதாய்த் தெரிவிக்கும் கம்பர், இன்னும் ராமன் தனக்கு அளித்த இலங்கை சிம்மாசனத்தையும், தான் கும்பகர்ணனுக்கு அளிப்பதாய் விபீஷணன் கூறுவதாயும் தெரிவிக்கின்றார். மேலும் ராமனே, இவ்வாறு கும்பகர்ணனைக் கேட்டு வருமாறு அனுப்பி உள்ளதாயும் தெரிவிக்கின்றார் கம்பர் விபீஷணன் வாயிலாக. அது இவ்வாறு:

"வேத நாயகனே உன்னைக் கருணையால் வேண்டி விட்டான்
காதலால் என் மேல் வைத்த கருணையால் கருமம் ஈதே
ஆதலால் அவனைக் காண அறத்தொடும் திறம்பாது ஐய
போதுவாய் நீயே என்னப் பொன் அடி இரண்டும் பூண்டான்."

என ராமன் அனுப்பியதாய்க் கூறுகின்றார் கம்பர். ஆனால் வால்மீகியில் ஒரு இடத்திலும் இவ்வாறு இல்லை. கும்பகர்ணன் விபீஷணனை மறுத்துப் பேசுவதாயும், ராவணனுக்குத் தான் உயிர்த்தியாகம் செய்வதே சிறந்தது எனக் கும்பகர்ணன் கூறுவதாயும் கம்பர் கூறுகின்றார்.:

"நீர்க் கோல வாழ்வை நச்சி நெடிது நாள் வளர்த்துப் பின்னைப்
போர்க்கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது அங்குப் போகேன்!
தார்க்கோல மேனி மைந்த என் துயர் தவிர்த்தி, ஆயின்
கார்க்கோல மேனியானைக் கூடுதி கடிதின் ஏகி."
என்று விபீஷணனை, ராமனிடம் சென்று சீக்கிரம் சேரச் சொல்லி வாழ்த்தவும் செய்கின்றான். மேலும்,

"ஆகுவது ஆகும் காலத்து ஆகும், அழிவதும் அழிந்து சிந்திப்
போகுவது அயலே நின்று போற்றினும் போதல் திண்ணம்!
சேகு அறத் தெளிந்தோர் நின்னில் யார் உளர்? வருத்தம் செய்யாது
ஏகுதி எம்மை நோக்கி இரங்கலை என்றும் உள்ளாய்."

என்று தன்னை நினைத்து வருந்த வேண்டாம் எனவும் விபீஷணனிடம் சொல்லுகின்றான் கும்பகர்ணன். எல்லாவற்றுக்கும் மேல், சுக்ரீவனை, கும்பகர்ணன் எடுத்துச் செல்லும்போது யாரும் தடுக்கவில்லை, வால்மீகியின் கூற்றுப்படி, ஆனால் கம்பரோ, ராமன் தடுத்ததாய்க் கூறுகின்றார் இவ்வாறு:
"உடைப்பெருந்துணைவனை உயிரின் கொண்டு போய்
கிடைப்ப அருங்கோடி நகர் அடையின் கேடு என
தொடைப் பெரும் பகழியின் மாரி தூர்த்து இறை
அடைப்பேன் என்று அடைத்தனன் விசும்பின் ஆறு எலாம்."

என்று ராமன் வழியை அம்புகளை எய்து அடைப்பதாய்ச் சொல்கின்றார். மேலும் கடும்போர் புரிந்து கும்பகர்ணன், படை வீரர்களையும் ஆயுதங்களையும் இழந்து தனித்து நின்றதாயும் அப்போது ராமர் அவனிடம் இவ்வாறு கேட்பதாயும் கம்பர் கூறுகின்றார்: அது வருமாறு:

"ஏதியோடு எதிர் பெருந்துணை இழந்தனை
எதிர் ஒரு தனி நின்றாய்
நீதியோனுடன் பிறந்தனை ஆதலின்
நின் உயிர் நினக்கு ஈவென்
போதியோ பின்றை வருதியோ அன்று எனின்
போர் புரிந்து இப்போதே
சாதியோ உனக்கு உறுவது சொல்லுதி
சமைவுறத் தெரிந்து அம்மா." பாடல் எண் 1536

என்று கும்பகர்ணனை நன்கு ஆராய்ந்து உனக்கு எது பொருத்தம் என்று சொல்லுமாறு ராமன் கேட்பதாய்க் கூறுகின்றார் கம்பர். இதுவும் வால்மீகியில் இல்லை. மேலும் இதற்குப் பின்னர் நடக்கும் கடும்போரிலே தான் ராமன் கும்ப்கர்ணனின் அவயங்களைத் துண்டிப்பதாயும், அவயங்கள் துண்டிக்கப் பட்ட நிலையில் கும்பகர்ணன், விபீஷணனுக்காக ராமனிடம் வேண்டுவதாயும் சொல்லுகின்றார் கம்பர்.

""வெல்லுமா நினைக்கின்ற வேல் அரக்கன் வேரொடும்
கல்லுமா முயல்கின்றான் இவன் என்னும் கறுவுடையான்
ஒல்லுமாறு இயலுமேல் உடன்பிறப்பின் பயன் ஓரான்
கொல்லுமால் அவன் இவனை குறிக்கோடி கோடாதாய்."
பாடல் எண் 1568

"தம்பி என நினைந்து இரங்கித் தவிரான்
அத்தகவு இல்லான்
நம்பி இவன் தனைக் காணின் கொல்லும் இறை நல்கானால்
உம்பியைத் தான் உன்னைத் தான் அனுமனைத் தான் ஒரு பொழுதும்
எம்பிரியானாக அருளுதி யான் வேண்டினேன்." பாடல் எண் 1569

என விபீஷணனை ராவணன் துன்புறுத்தாமல் பார்த்துக் கொள்ளுமாறும், அவனைப் பிரியாமல் இருக்கவும் வேண்டுகின்றான் கும்பகர்ணன் ராமனிடம், போர்க்களத்தில் இறக்கும் தருவாயில். ஆனால் வால்மீகியில் இதெல்லாம் இல்லை. அதன் பின்னர் தன்னைக் கடலில் தள்ளுமாறு அவனே ராமனைக் கேட்டுக் கொள்ளுவதாயும் சொல்கின்றார் கம்பர்.

"மூக்கு இலா முகம் என்று முனிவர்களும், அமரர்களும்
நோக்குவார் நோக்காமை நுன் கணையால் என் கழுத்தை
நீக்குவாய் நீக்கியபின் நெடுந்தலையைக் கருங்கடலுள்
போக்குவாய் இது நின்னை வேண்டுகின்ற பொருள் என்றான்."

எனக் கும்பகர்ணன் தனக்கு வரம் வேண்டி ராமனிடம் பெறுவதாயும் கம்பர் கூறுகின்றார்.

4 comments:

  1. உங்கள் அனுமதியுடன், இந்த பகுதியை என் ஐஏஸ் மாணவிகளுக்குப் பாடம் நடத்த எடுத்துக்கொள்கிறேன். அநுமதி கொடுக்கவும்.
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    இன்னம்பூரான்
    5 55 :5.1 2021

    ReplyDelete
  2. உங்கள் அனுமதியுடன், இந்த பகுதியை என் ஐஏஸ் மாணவிகளுக்குப் பாடம் நடத்த எடுத்துக்கொள்கிறேன். அநுமதி கொடுக்கவும்.
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    இன்னம்பூரான்
    5 55 :5.1 2021

    ReplyDelete
  3. உங்கள் அனுமதியுடன், இந்த பகுதியை என் ஐஏஸ் மாணவிகளுக்குப் பாடம் நடத்த எடுத்துக்கொள்கிறேன். அநுமதி கொடுக்கவும்.
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    இன்னம்பூரான்
    5 55 :5.1 2021

    ReplyDelete