எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, May 08, 2008

கதை, கதையாம் காரணமாம் ராமாயணம் பகுதி 38

வாலி வதம் பற்றி இன்னும் சிலருக்குச் சந்தேகமும், ராமர் மறைந்திருந்துதான் கொன்றார் என்ற எண்ணமும் இருப்பதாய்த் தெரியவருகின்றது. இது பற்றிய வெவ்வேறு கருத்துக்கள் இருந்தாலும், சுக்ரீவனுடன் வாலி சண்டை போட்டுக் கொண்டிருந்த சமயத்தில் ராமர் மறைந்து நின்றார் எனச் சொல்லவில்லை. வாலி வீழ்ந்ததைத் தாரையிடம் சென்று தெரிவிக்கும் வாலியினுடைய வானர வீரர்களும், ராமர் வாலியின் அனைத்து ஆயுதங்களையும் பொடிப் பொடியாக்கினார் என்றே சொல்லுகின்றனர். நாரதர் வால்மீகிக்கு ராமாயணம் பற்றிய விபரங்களைக் கூறியதாக ஆரம்பத்திலேயே பார்த்தோம். நாரதர் சுக்ரீவனின் வேண்டுகோளின்படியே ராமன் வாலியைக் கொன்றதாய்க் கூறி இருக்கின்றார். அதை ஒட்டியே நடந்த சம்பவங்களையும், நடக்கும் சம்பவங்களையும், நடக்கப் போகின்றவங்களையும் காணும் வல்லமை பெற்ற வால்மீகியும் எழுதி உள்ளார். எனினும் இது பற்றிய ஒரு தெளிவான கட்டுரைக்கு இன்னும் சிலர் கேட்டிருப்பதால் கூடிய சீக்கிரம் அதைத் தனியாக எழுதுகின்றேன். இப்போது நாம் கதைக்குப் போவோம். வாலி வீழ்ந்தான் எனக் கேட்ட தாரை வந்து கண்ணீர் விட்டு அழுது, ராமனைத் தூற்றியதைப் போன அத்தியாயத்தில் பார்த்தோம். பின்னர் வாலியின் உயிரும் பிரிகின்றது. என்னதான் பகைவன் ஆனாலும் அண்ணன் பாசம் மேலோங்க, சுக்ரீவனும் வாலி வீழ்ந்ததில் இருந்தே, தன் தவற்றை நினைத்து நொந்து கொண்டிருந்தான். வாலி இறந்ததும், ராமனின் ஆணைப்படி ஒரு பல்லக்கில் வாலியின் உடலை ஏற்றிச் சிதைக்குக்கொண்டு சென்று, அவன் மகன் ஆகிய அங்கதனை விட்டு முறைப்படி ஈமச்சடங்குகள் செய்ய வைக்கின்றான்.

பின்னர் ராமரைக் கிஷ்கிந்தைக்குச் சென்று சுக்ரீவனுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைக்குமாறு அனுமன் வேண்ட, ராமன் அதை மறுக்கின்றார். தகப்பன் கட்டளையை ஏற்றுத் தான் வனவாசம் வந்திருக்கும் வேளையில் நகருக்குள் நுழைவதோ, இம்மாதிரியான கொண்டாட்டங்களில் பங்கேற்பதோ, ஏற்றுக் கொண்ட பிரதிக்ஞைக்கு மாறானது என்று சொல்லி மறுக்கின்றார். வானர வீரர்களுடனும், அனுமனுடனும், சுக்ரீவன் கிஷ்கிந்தைக்குச் சென்று முடிசூட்டிக் கொள்ளட்டும் என்று சொல்லி விட்டு, மழைக்காலம் வந்துவிட்டபடியால், தாம் லட்சுமணனுடன் இந்தக் காட்டிலேயே ஒரு குகையில் தங்குவதாயும், மழைக்காலம் முடிந்த பின்னர் மேற்கொண்டு என்ன செய்யலாம் என ஆலோசிக்கலாம் எனவும் சொல்லி அவர்களை அனுப்புகின்றார். அதன்படிக்குக் கிஷ்கிந்தை சென்ற சுக்ரீவன் முடிசூட்டிக் கொண்டு தன் மனைவியான ருமையோடு கூடி ஆட்சி, அரச போகத்தை அனுபவிக்கத் தொடங்குகின்றான்.

இங்கே காட்டில் ஒரு குகையைத் தேர்ந்தெடுத்து அதில் தங்கும் ராமருக்குச் சீதையின் நினைவுகள் வந்து துன்புறுத்துகின்றன. மேலும் சுக்ரீவன் சொன்ன வாக்கைக் காப்பாற்றுவானா என்ற எண்ணமும் வந்து அலை மோதுகின்றது. லட்சுமணன் ஆறுதல் வார்த்தைகள் சொல்லி சுக்ரீவனைத் தாராளமாய் நம்பலாம் எனக் கூற ராமர் கூறுகின்றார்: "நான் என் மனைவியைப் பிரிந்து இருக்கின்றேன். ஆனால் சுக்ரீவனோ வெகுநாட்கள் கழித்து மனைவியோடு சேர்ந்திருக்கின்றான். இப்போது நாம் அவனைத் தொந்தரவு செய்வதும் நியாயமில்லை. இந்த மழைக்காலம் முடிந்ததும் அவனே இறங்கி வந்து நமக்கு உதவி செய்வான் என்று நம்புகிறேன்." என்று தன் மனதையும் தானே சமாதானம் செய்து கொண்டார். மழைக்காலமும் முடிந்தது. கிஷ்கிந்தையில் போகத்தில் மூழ்கி இருந்த சுக்ரீவனைக் கண்ட அனுமன், அவனுக்குச் செய்ய வேண்டிய கடமை இருப்பதை நினைவூட்டுகின்றார். ராமர் திரும்ப வந்து கேட்கும்வரை காத்திருக்கக் கூடாது எனவும், சீதையைத் தேட ஏற்பாடுகள் செய்யுமாறும் அறிவுறுத்துகின்றார். அதை ஒப்புக் கொண்ட சுக்ரீவனும் தன் தளபதியான நீலனை அழைத்துப் படைகளை ஒருங்கே கொண்டு வந்து சேர்க்குமாறு கட்டளை இடுகின்றான். அன்றிலிருந்து பதினைந்து இரவுகள் செல்வதற்குள் அனைத்து வானர வீரர்களும் அங்கே வந்து சேர்ந்திருக்கவேண்டும் எனவும் ஆணை இடுகின்றான்.
அதற்குள் இங்கே குகையில் வசிக்கும் ராமருக்குப்பொறுமை எல்லைமீறி விட்டது. மழைக்காலம் முடிந்தும் சுக்ரீவன் இன்னும் தன்னை வந்து காணவும் இல்லை, எதுவும் ஏற்பாடுகள் செய்தானா எனவும் புரியவில்லையே எனத் தவித்தார். கோபத்தில் லட்சுமணனிடம் வாலிக்குச் செய்ததை சுக்ரீவனுக்குச் செய்துவிடுவேனோ என அஞ்சுகின்றேன். லட்சுமணா, நீ உடனெ சென்று அவனுக்கு அனைத்தையும் எடுத்துச் சொல், ஆனால் கோபம் கொள்ளாமல் சாந்தமாகவே சொல்லுவாய்!" என்று கேட்டுக் கொள்கின்றார். லட்சுமணன் அப்படியும் தாளாத கோபத்துடன் கிளம்பினான். கிஷ்கிந்தையை அடைந்தான். அவன் கோபத்துடன் வருவதைப் பார்த்த வானர வீரர்கள் அஞ்சி ஒளிந்து கொண்டனராம். இன்னும் சிலர் சுக்ரீவனிடம் போய்ச் சொன்னார்கள். ஆனால் அதுசமயம் தாரையுடன் கூடி மகிழ்ந்துகொண்டிருந்த சுக்ரீவன் அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. ஆகவே அவன் மந்திரிமார் கூடி ஆலோசித்து, ஒரு பெருங்கூட்டமாய்ச் சென்று லட்சுமணனை வரவேற்கச் சென்றனர். வாலியின் மைந்தனான அங்கதன் கோட்டையின் வாயிலைக் காத்து நின்றான். அவனிடம் லட்சுமணன் சுக்ரீவனிடம் சென்று தான் வந்திருப்பதைச் சொல்லுமாறு கூற அவனும் அவ்வாறே சென்று சொல்கின்றான். வேறு இருவரும் சென்று சொல்கின்றனர். ஒருமாதிரித் தன்னுணர்வு வந்த சுக்ரீவனுக்குப் பயம் மேலிடுகின்றது.

பின்னர் அங்கதனை அனுப்பிச் சகல மரியாதைகளுடனும், லட்சுமணனை அழைத்துவரச் சொல்ல அவனும் அவ்வாறே சென்று அழைத்து வருகின்றான். நகரின் கோலகலங்களாலும், வானரப் பெண்கள் எழுப்பிய சப்தங்களாலும் கோபம் கொண்ட லட்சுமணன் வில்லின் நாணோசையை எழுப்ப கிஷ்கிந்தையே அதிர்ந்தது. சுக்ரீவன் இன்னும் பயம் கொண்டு தாரையைப் பார்த்து இப்போது என்ன செய்வது? நான் எந்தத் தவறும் செய்யாமல் இருக்கும்போதே லட்சுமணன் இவ்வளவு கோபத்துடன் வந்திருக்கின்றானே எனச் சொல்லித் தாரையை முதலில் சென்று லட்சுமணனைப் பார்த்துக்கோபத்தைத் தணிக்கச் சொல்கின்றான். தாரை மிக புத்திசாலியும், எந்த சமயத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது அறிந்தவளாயும் இருப்பதாலேயே அவளைப் போகச் சொல்கின்றான். தாரையோ எனில் அந்தச் சமயம் அவளும் குடிமயக்கத்திலேயே இருந்தாள். கண்கள் செருகி, ஆடை விலகி, ஆபரணங்கள் நழுவிய கோலத்தில் அவளைக் கண்ட லட்சுமணன் குனிந்த தலை நிமிரவில்லை. அவள் லட்சுமணன் கோபத்தின் காரணம் கேட்க சுக்ரீவன் ஆட்சி சுகத்தில் தங்கள் வேலையை மறந்துவிட்டதாய்க் கூறு அவனைத் தூற்றுகின்றான் லட்சுமணன். அதி புத்திசாலி ஆன உன்னையும் இப்போது அவன் மணந்த பின்னரும் இவ்வாறு அவன் நட்புக்குத் துரோகம் இழைக்கலாமா எனக் கேட்கின்றான். தாரை அவனிடம் சொல்கின்றாள்: "வீரரே, அவ்வாறில்லை. ஏற்கெனவே சுக்ரீவன் வீரர்களை நாலாபுறத்திலும் அனுப்பி இங்கே திரட்டிக் கொண்டிருக்கின்றார். பல மலைப் பிரதேசங்களைச் சேர்ந்த நினைத்தபோது நினைத்த உருவம் எடுக்கும் வல்லமை படைத்த பல வானர வீரர்கள் இங்கே வந்து சேர்ந்து கொண்டிருக்கின்றனர். இப்போது நீர் உள்ளே வந்து எம் அரசனை கண்டு பேசுவீராக!" என அழைக்க உள்ளே சென்ற லட்சுமணன், குடிபோதையில் மனைவிமார்கள் புடைசூழ இருந்த சுக்ரீவனைக் கண்டு கோபம் அடைந்தான். சுக்ரீவனோ இருகையும்கூப்பிக் கொண்டு லட்சுமணனைத் தொழுது தலை குனிந்து நின்றான்.

No comments:

Post a Comment