எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, May 21, 2008

கதை, கதையாம், காரணமாம், ராமாயணம் பகுதி 50


மறுநாள் காலையில் தன் தமையன் ராவணனின் இருப்பிடம் நோக்கிச் சென்றான் விபீஷணன். மிக்க பாதுகாப்புடன், திறமை மிக்க அறிவிற் சிறந்த, துரோக சிந்தனை இல்லாத மந்திரி, பிரதானிகளைக் கொண்ட ராவணனின் அரண்மனையானது அந்தக் காலை வேளையில் மிக்க மகிழ்வுடன் கூடிய பெண்களுடனும், தங்கக் கதவுகளையும் கொண்டு விளங்கியதாம். வேத கோஷங்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் அந்த வேளையில் விபீஷணன் சென்று, அண்ணனை வணங்கிவிட்டு, அண்ணனின் ஆணைக்குப் பின்னர் ஆசனத்தில் அமர்ந்தான். அமர்ந்தவன், ராவணனுக்கு நல்வார்த்தைகளைக் கூறவேண்டி ஆரம்பித்தான். “அரசே, சத்துருக்களை அழிப்பவரே, சீதையை நீங்கள் இங்கே கொண்டு வந்து சேர்த்ததில் இருந்து, இலங்கையில் நல்ல சகுனங்களே காணப்படவில்லை. பசுக்கள் பால் கறப்பதை நிறுத்திவிட்டன. யாகத்துக்காக மூட்டப் படும் அக்னியானது, சுடர் விட்டு ஒளி வீசி எரியவில்லை. புகையும், தீப்பொறிகளும் கலந்து மங்கலாக இருக்கின்றது. யாகசாலைகளிலும், வேதம் ஓதும் இடங்களிலும் பாம்புகளும், எலும்புகளும் காணப்படுகின்றன. இன்னும் யானைகள் சோர்ந்து இருப்பதோடல்லாமல், ஒட்டகங்களும் முடி உதிர்ந்து சிகிச்சைக்குக் கட்டுப்படாமல் இருக்கின்றது. நரிகள் ஊளையிடுகின்றன, காக்கைகளும், கழுகுகளும் நகரில் பறந்து கொண்டிருக்கின்றன. நான் பேராசை எதுவும் கொண்டு உங்களுக்கு இதைச் சொல்லவில்லை. ஒருவேளை உண்மையை எடுத்துரைக்க மந்திரிமார்களுக்குத் தயக்கமாய் இருக்கின்றதோ என்னவோ? அல்லது பயத்தினால் சொல்லவில்லையோ? தெரியவில்லை. சீதையைத் துறந்துவிடுவது ஒன்றே சரியாகும். நன்கு ஆலோசித்து முடிவு எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.” என்று சொன்னான்.

விபீஷணன் சொன்னதைக் கேட்ட ராவணன் சற்றும் கலங்காமல் “நீ சொன்னபடிக்கான சகுனங்கள் எதுவும் எனக்குத் தெரியவில்லை. ராமனிடம் சீதையைத் திரும்பக் கொடுக்கும் பேச்சுக்கே இடம் இல்லை. சென்று வா.” என்று விடை கொடுத்து அனுப்பி விட்டான் . பின்னர் தனக்கு ஆதரவும், தைரியமும் அளித்த மந்திரிமார்களிடம் சென்று மீண்டும் கலந்தாலோசிக்க எண்ணித் தன் அழகு வாய்ந்த ரதத்தில் ஏறிக் கொண்டு தன்னுடைய மந்திரிசபையில் கலந்து கொள்ளச் சென்றான். படைத் தளபதிக்கு நகரைப் பாதுகாக்கும்படி உத்தரவிட்ட ராவணன், தன் மந்திரி,பிரதானிகளைப் பார்த்துச் சொல்கின்றான்:”இன்பமோ, துன்பமோ, லாபமோ, நஷ்டமோ, சாதகமோ, பாதகமோ உங்கள் கடமையை உணர்ந்து நீங்கள் அனைவரும் செயலாற்ற வேண்டும். இதுவரை உங்களை எல்லாம் முன்வைத்து நான் செய்த அனைத்துக் காரியங்களும் வெற்றியையே கண்டிருக்கின்றன. ஆகவே, தொடர்ந்து நமக்கு வெற்றியே கிடைக்கும் எனவும் நம்புகின்றேன். மேலும் நான் செய்த ஒரு காரியம் பற்றிய விபரமும் உங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். கும்பகர்ணன் இன்னும் தூக்கம் கலைந்து எழுந்திருக்கவில்லையே என யோசித்தேன். இப்போது தான் அவன் விழித்திருக்கின்றான் என்ற தகவல் கிடைத்தது. ஆறுமாதம் உறங்கி விழிக்கும் சுபாவம் கொண்ட அவன் விழித்திருக்கும் இவ்வேளையில் இது பற்றிப் பேச எண்ணி உள்ளேன். நான் தண்டக வனத்தில் இருந்து, ராமனின் மனைவியான சீதையைக் கடத்தி வந்தேன். என்னுடைய ஆசைக்கு அவள் இணங்க மறுக்கின்றாள், அவளைப் போன்ற பெண்ணை நான் இம்மூவுலகிலும் பார்க்கவில்லை. நெருப்பைப் போல் ஜொலிக்கின்றாள் அவள். நான் என்வசமிழந்துவிட்டேன், அவள் அழகில். ராமனைச் சந்திப்போம் என்ற எண்ணத்தில் அவள் என்னிடம் ஒரு வருஷம் அவகாசம் கேட்டிருக்கின்றாள்.” என்று நிறுத்தினான் ராவணன்.

உண்மையில் சீதை அவகாசம் எதுவும் கேட்கவில்லை. உறுதியாக ராவணன் ஆசைக்கு இணங்க மறுத்து விடுகின்றாள். ராவணன் தான் அவளுக்கு ஒரு வருஷம் அவகாசம் கொடுக்கின்றான். எனினும், தனக்குக் கீழ்ப்பட்டவர்கள் ஆன மந்திரி, பிரதானிகளிடம் உண்மைக்கு மாறாக இவ்விதம் சொல்லியதன் மூலம் தன் கெளரவம் நிலைநாட்டப் பட்டதாய் ராவணன் நினைத்தானாம். மேலும் சொல்கின்றான் ராவணன்:” அந்த ராமனும், அவன் தம்பியும், வானர வீரர்களுடன் கடல் கடந்து எவ்விதம் வருவார்கள்? ஆனால் அனுமன் வந்து இங்கே விளைவித்து
விட்டுப் போயிருக்கும் நாசத்தை நினைத்துப் பார்த்தால், எது, எப்போது, எவ்விதம் சாத்தியம் என நினைக்கக் கூட முடியாமல் இருக்கின்றது. நீங்கள் அனைவரும் நன்கு யோசித்து உங்கள் முடிவைச் சொல்லுங்கள்.” என்று கேட்கின்றான்.

அப்போதே பெரும் தூக்கத்தில் இருந்து விழித்து எழுந்து வந்திருந்த கும்பகர்ணன் இவற்றை எல்லாம் கேட்டுக் கோபம் மிக அடைகின்றான்:” சீதையை அபகரித்துக் கொண்டு வந்தபோதே இவற்றை எல்லாம் நீங்கள் யோசிக்கவில்லையா?? அப்போது எங்களை யாரையும் எதுவும் நீங்கள் கேட்கவில்லையே? உங்கள் தகுதிக்கு உகந்த காரியமா இது? நன்கு யோசித்துச் செய்தீர்களா இதை? அப்படி இருந்தால் எந்த மன்னனுக்கும் தோல்வி என்பதே இல்லை. முறை தவறி நீர் செய்த இந்தக் காரியம், சற்றும் தகாத இந்தக் காரியம் உம்மால் செய்யப் பட்டது என்பது வெட்கத்துக்கு உரியது. உமக்கு இன்னும் ஆயுள் பலம் இருக்கின்றது போலும், அது தான் அந்த ராமன் உம்மை இன்னும் விட்டு வைத்திருக்கின்றான்.” என்று கடுமையான வார்த்தைகளால் ராவணனைச் சாடுகின்றான் கும்பகர்ணன்.

ராவணன் முகம் வாடக் கண்டு பொறுக்காத அவன் பின்னர், “சரி, சரி, நடந்தது, நடந்துவிட்டது. உமக்காக நான் அந்த இரு அரசகுமாரர்களைக் கொன்று உம்மை இந்த இக்கட்டில் இருந்து காப்பாற்றுகின்றேன். யார் அவர்கள்?? தேவாதி தேவர்களாய் இருந்தாலும் சரி, அவர்கள் இருவரையும்,அந்த வானரப் படையையும் நாசம் செய்துவிட்டு எனக்கு உணவாக்கிக் கொள்கின்றேன். அதன் பின்னர் சீதை உங்களுக்கு உட்பட்டுத் தான் தீரவேண்டும். நீங்கள் இன்பத்தை அனுபவிக்கலாம்.” என்று தேற்றுகின்றான். இதைக் கேட்கும் அவன் மந்திரிகளில் ஒருவன் ஆன மகாபார்ச்வன், சீதையைத் துன்புறுத்திப் பலவந்தமாய் அவளுடன் கூடி இன்பம் அனுபவியுங்கள். சீதையை வற்புறுத்துங்கள். எதிரிகளை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம்.” என்று ராவணன் மனதில் ஆசைத் தீயை மூட்டி விடுகின்றான். அதைக் கேட்ட ராவணன், தனக்கு இடப்பட்ட சாபம் ,”எந்தப் பெண்ணையாவது பலவந்தமாய் அனுபவித்தால் தலை சுக்கு நூறாகிவிடும்” என்று இருப்பதை அவனிடம் நினைவு கூர்ந்தான். கடலை விடக் கடினமான, காற்றை விட வேகமான, நெருப்பை விடத் தகிக்கும் என்னுடைய ஆற்றலை இந்த ராமன்
சந்தேகப் பட்டுக் கொண்டு என்னுடன் மோத வருகின்றானா என்றெல்லாம் பேசினான் தசகண்டன். விபீஷணன் மீண்டும் அண்ணனுக்கு நல்லுரை கூற ஆரம்பித்தான். இந்த சீதை நாகப் பாம்பைப் போன்றவள். யாராவது விஷம் கக்கும் பாம்பை எடுத்துக் கொண்டாடுவார்களா? நீர் அவ்விதம் செய்கின்றீரே? இவளை உம் கழுத்தில் கட்டியது யார்? யார் இந்த யோசனையை உமக்குச் சொன்னது? சீதையை வானரப் படை இலங்கை வந்து சேருமுன்னரே ராமனிடம் ஒப்படையுங்கள். பேராபத்து நம்மைச் சூழ்ந்துவிடும்.” என்று சொல்லவும் பிரஹஸ்தன் விபீஷணனிடம், “யக்ஷர்கள், கின்னரர்கள், தானவர்கள், தேவர்கள் , நாகர்கள், அசுரர்கள் என்று யாரிடம் இருந்தும் நமக்கு எவ்வித ஆபத்தும் வரப் போவதில்லை. வரவும் வராது. இது இவ்வாறிருக்க மனிதர்களின் அரசன் ஆன ஒருவன், அதுவும் அரசாள முடியாமல் காட்டுக்கு வந்த ஒரு மனிதன், அவனால் நமக்கு என்ன நேரிடும்?” என்று சர்வ அலட்சியமாய்ப் பேசுகின்றான்.

விபீஷணன் அதற்குச் சொல்கின்றான்:”ஏனெனில் தர்மம் அவன் பக்கம் இருக்கின்றது. நியாயம் அவனிடம் இருக்கின்றது. அந்த ராமனை எவராலும் ஏன், தேவேந்திரனால் கூட வெல்ல முடியாது. அப்படிப் பட்ட ஆற்றல் படைத்தவன். அவனிடம் போய் நாம் மோத வேண்டாம். இது நம் நன்மைக்காகவே சொல்லுகின்றேன். அதுவும் அரக்கர் குலத் தலைவன் ஆன ராவணனைக் காப்பாற்றவே இதைச் சொல்கின்றேன். சீதை திருப்பி அனுப்பப் பட வேண்டும்.” என்று விபீஷணன் வற்புறுத்தவும், ராவணன் கோபம் மிகக் கொண்டு, நம் அரக்கர் குலத்தில் உன் போல் தொடை நடுங்கி, வீரம் இல்லாதவன் எப்படிப் பிறந்தானோ?” என்று சொல்லிவிட்டு, மீண்டும் சபையினரை பார்த்துப் பேசத் தொடங்குகின்றான்.

2 comments: