எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, May 25, 2008

கதை கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 51 - யுத்த காண்டம்


விபீஷணனை இகழ்ந்து பேசிய ராவணனைத் தொடர்ந்து அவன் மகனும், இந்திரனை வென்று புகழ் நாட்டியவனும் ஆன இந்திரஜித் தன் சிற்றப்பனை அரக்கர் குலத்திலேயே தைரியமும், வீரமும், துணிவும், வலிமையும் இல்லாதவன் என்று தூற்றுகின்றான். மேலும் இந்திரஜித் இந்த சாதாரண வலிமை பொருந்திய இரு அரச குமாரர்களையும் நம் அரக்கர் கூட்டத்தில் உள்ள பலவீனமானவே கொன்று விடுவான். நீர் கோழையைப் போல் நம்மைப் பயமுறுத்தும் காரணம் என்ன? தேவேந்திரனை நான் வென்றது உமக்குத் தெரியாதா? அவன் யானையான ஐராவதம் என்னால் பூமியில் தள்ளப் பட்டதை நீர் அறிய மாட்டீரா? " என்றெல்லாம் வீரம் பேசினான். பின்னரும் விபீஷணன் விடாமல் அவனைப் பார்த்து, " நீ இன்னும் சிறுவனே! உனக்கு நன்மை, தீமை பற்றிய பாகுபாடு அறிந்திருக்கவில்லை. அதனால் தான் உன் தந்தைக்கு அழிவு ஏற்படும் என்பது தெரியாமல் அழிவுக்கான பாதையையே நீயும் தேர்ந்தெடுக்கின்றாய். உன்னைப் போன்ற சிறுவனின் ஆலோசனையைக் கேட்கும் மன்னனும் அறிவற்றவனே! உண்மையில் உன் தகப்பனும், இந்த இலங்கையின் அரசனும் ஆன ராவணனின் நலனை நீ விரும்புவாயெனில் இவ்வாலோசனையைக் கொடுக்க மாட்டாய்! கெடுமதி படைத்தவனே! நீ உளறுகின்றாய்! எமனை ஒத்த ராமனின் வில்லில் இருந்து கிளம்பும் பாணங்கள் ஆன அம்புகளை வெல்லும் வல்லமை நம்மிடம் மட்டுமில்லை, யாரிடமும் கிடையாது. நீ அந்த ராமனின் வலிமையையும், தவத்தையும், ஒழுக்கத்தையும், தர்மத்தையும் அறியாமல் பேசுகின்றாய். தர்மம் அவன் பக்கம் இருக்கின்றது. சகல மரியாதைகளுடன் சீதையை அவனிடம் நாம் ஒப்படைத்தோமானல் நமக்கும், நம் அரக்கர் குலத்துக்கும் என்றென்றும் நன்மையே!" என்று சொல்கின்றான் விபீஷணன்.

ஆனால் பேரழிவுக் காலத்தை எட்டிவிட்டதாலோ என்னமோ,ராவணன் விபீஷணன் சொற்களால் பெரும் கோபமே அடைந்தான். " காட்டில் வளரும் சுதந்திரமான யானையானது எவ்வாறு தன் குலத்தைச் சேர்ந்த மற்றொரு யானையால் பிடிபட்டு மனிதர் வசம் ஆகின்றதோ,அது போல் நீயும் நம் குலத்தைச் சேர்ந்தவனாய் இருந்தாலும் இன்னொருவர் வசம் சென்று அவர்கள் பக்கமே பேசுகின்றாய். இது உனக்கு அழகல்ல. மேலும் மூவுலகிலும் என்னை மதிப்பதைக் கண்டும், தேவருலகையும் நான் வெற்றி கொண்டதைக் கண்டும், என் வல்லமையைக் கண்டும், என் விரோதிகள் அனைவரையும் நான் காலால் மிதித்துக் கொண்டு இருக்கும் பலம் பெற்றவன் என்பதும் உன்னால் சகிக்க முடியாமல் இருக்கின்றது விபீஷணா! யானை தன் தலையிலேயே தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதைப் போல் நீ உன் நிலையை
நீயே கெடுத்துக் கொள்கின்றாய். இது நல்லதல்ல. இந்தக் குலத்துக்கும் ஏற்றதல்ல. குலத்தைக் கெடுக்க வந்துள்ளாய் நீ." என்று சொல்ல, விபீஷணன்
உடனேயே தன் ஆசனத்தில் இருந்து எழுந்தான். அவனுடன் அவனை ஆதரிக்கும் நால்வரும் எழுந்தனர். "மன்னனே, உன்னை நீயே ஏமாற்றிக் கொள்கின்றாயே? நீ உன்னையே அடக்கிக் கொள்ளவில்லை. உனக்கு அழிவு காலம் நெருங்கிவிட்டதாலேயே உனக்கு வேண்டியவர்கள் சொல்லும் புத்திமதியை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கின்றாய். ஒருவனுக்கு மனதுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக இந்த அறிவுரையைச் சொல்லாமல் இருப்பவன், உண்மையானவன் அல்ல. நீ இறந்துவிடப் போகின்றாயே, என்ற கழிவிரக்கத்தினாலும், நீ எப்படியாவது பிழைத்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தினாலும் நான் இவ்வளவு தூரம் உன்னிடம் எடுத்துச் சொன்னேன். உன் நலனை நினைத்து நான் சொன்ன வார்த்தைகளை உனக்குப் பிடிக்கவில்லை எனில் விட்டு விடு. ஆனால் எவ்வாறேனும் அரக்கர் குலத்தையும், உன்னையும் காத்துக் கொள். உனக்கு எல்லா நலன்களும் உண்டாகப் பிரார்த்திக்கின்றேன். நான் இல்லை எனினும் உனக்கு நன்மையே உண்டாகட்டும் என நினைக்கின்றேன். உன் மனம் போல் இன்புற்று வாழ்வாய்!" என்று சொல்லிவிட்டு விபீஷணன் தன் ஆதரவாளர்களுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்.

அதற்கு ஒரு முகூர்த்தம் என்று சொல்லப் படும் ஒன்றரை நாழிகைக்குப் பின்
அவன் ராம, லட்சுமணர்கள் இருக்கும் இடம் தேடி வந்தான். கூடியிருந்த
வானரர்கள் விண்ணிலே நிலை பெற்ற விபீஷணனையும்,அவனுடன் வந்த நால்வரையும் கண்டு திகைத்தனர்.

No comments:

Post a Comment