எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, May 05, 2008

கதை கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 36

கபந்தன் குறிப்பிட்ட வழியிலேயே ராம, லட்சுமணர்கள் பிரயாணம் செய்து, பின்னர் பம்பையின் மேற்குக்கரையில் உள்ள சபரியின் ஆசிரமத்தை அடைந்தனர். அங்கே இவர்களைக் கண்ட சபரி எழுந்து நின்று வரவேற்றாள். போற்றத் தக்க அந்தப் பெண் துறவி, இருவரின் காலடிகளிலும் வீழ்ந்து எழுந்தாள். ராமர் அவளைப் பார்த்துத் தங்கள் தவம் எவ்விதத் தடையுமின்றி முடிவை அடைகின்றதா என விசாரித்துத் தெரிந்து கொள்கின்றார். ராம, லட்சுமணர்களை நேரில் பார்த்ததில் மிக மன மகிழ்ச்சி அடைந்திருந்த சபரியோ, தன்னுடைய பிறவிப் பயனையே அடைந்து விட்டதாய்ப் பூரிப்பு எய்தினாள். ராம, லட்சுமணர்கள், சீதையுடன் சித்திரகூடத்துக்கு வந்தபோது ரிஷி, முனிவர்கள் மன மகிழ்ந்து சொர்க்கம் செல்லும் வழியில் சபரியைக் கண்டு, ராம, லட்சுமணர்கள், இன்னும் சிறிது நாட்களில் இங்கே வருவார்கள். அதன்பின்னர் உனக்கும் நற்கதி கிடைக்கும் என வாழ்த்தியதாயும் சொல்கின்றாள். கபந்தனிடமிருந்து சபரியைப் பற்றித் தெரிந்து கொண்டதாய்ச் சொன்ன ராமர் அந்த இடம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆசைப் படவே, மதங்க வனம் என்ற பெயரில் உள்ள அந்த இடமானது, பல்வேறு ரிஷி, முனிவர்களின் ஆசிரமம் ஆக இருந்து வருவதைக் குறிப்பிட்டுவிட்டுத் தான் இந்த உடலை ஒழித்து ஆத்மஞானிகளின் முன்னிலையில் போக விரும்புவதாயும் சொல்கின்றாள். அவ்வாறே ஆகட்டும் என ராமர் சொல்ல, சபரி தன் பூத உடலை அழிக்க எண்ணம் கொண்டவளாய், தீ மூட்டிக் கொண்டு அந்த அக்னிக்குள் பிரவேசம் செய்கின்றாள். தீக்குள் புகுந்த சபரியானவள் ஒளி பொருந்திய தேகத்தை அடைந்தவளாய், பேரழகோடு ஜொலித்துக் கொண்டு, அந்த வனமே பிரகாசமாய் விளங்கும்படியான ஜோதி சொரூபமான உடலோடு, ராமரை நமஸ்கரித்துவிட்டு விண்ணுலகைச் சென்று அடைந்தாள். பின்னர் ராமர், லட்சுமணனைப் பார்த்து, "லட்சுமணா, என்னவோ தெரியவில்லை, நம் கவலை தீரும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றிவிட்டது. என் மனம் சாந்தி அடைந்து உள்ளது. வா, நாம் புறப்பட்டு ரிச்யமூக மலையை அடைவோம். அங்கே வாலியிடம் உள்ளபயத்தின் காரணமாய் ஒளிந்து வாழும் சுக்ரீவனைத் தேடிப் பிடித்து அவன் உதவியுடன் சீதையைத் தேடுவோம்." என்று சாந்தமாய்ச் சொல்கின்றார். நடு, நடுவில் அவர் மனதைச் சோகம் கவ்வுகின்றது. சீதையின் நினைவு பெரிதும் வாட்டுகின்றது. இவ்வாறே பேசிக் கொண்டு பம்பையை அடைந்து அங்கே இருந்த வனத்தினுள் பிரவேசித்தனர்.
பம்பையைக் கடக்கும்போதெல்லாம் மனம் கலங்கிக் கதறி அழுத வண்ணமே ராமர் சென்றார். பார்க்கும் ஒவ்வொரு காட்சியும், பூக்கும் ஒவ்வொரு பூவும், பேசும் ஒவ்வொரு வார்த்தையும், உண்ணும் ஒவ்வொரு கவளமும், குடிக்கும் ஒவ்வொரு துளி நீரும் சீதையை நினைவு படுத்திய வண்ணமாகவே இருந்தது, ராமருக்கு. "லட்சுமணா, இனி நான் அவளை மீண்டும் காண்பேனோ?" எனப் பலவாறாய்ப் புலம்பிக் கொண்டே வந்தார் ராமர். லட்சுமணன் ஆறுதல் மொழிகளைச் சொல்லி அவரைச் சமாதானம் செய்கின்றான். இவர்கள் இருவரும் வருவதை ரிச்யமூக மலையில் இருந்து சுக்ரீவன் பார்த்துக் கொண்டே இருந்தான். ஒருவேளை வாலியின் நண்பர்களோ என ஐயமுற்றான் சுக்ரீவன். தன் நண்பர்களோடு கலந்து ஆலோசிக்கின்றான். அனுமனோ சுக்ரீவன் வீணே கவலைப் படுவதாய்ச் சொல்லுகின்றார். உடனே அனுமனை நேரில் சென்று அவர்கள் யார் என விசாரித்து வருமாறு கூறுகின்றான் சுக்ரீவன். அவ்வாறே செய்வதாய்ச் சொல்லி அனுமனும் உடனே அங்கு செல்கின்றார். அனுமனுக்கும் கொஞ்சம் சந்தேகம் இருந்தபடியால், தன்னை ஒரு பிராமண சந்யாசிபோல் மாற்றிக் கொண்டு அவர்களை அடைகின்றார்.

ராம, லட்சுமணர்களை நெருங்கி அவர்களை வணங்கிய அனுமன், ரிஷிகள் போல் மரவுரி தரித்து, ஆனால் பூரண ஆயுதங்களோடு நீங்கள் இருவரும் இந்தக் காட்டில் வருகை புரிந்ததின் நோக்கம் என்ன? இந்தக் காட்டைப் பாதுகாக்க சூரிய, சந்திரர்கள் போல் நீங்கள் இருவரும் வந்துள்ளீர்களோ? அல்லது விண்ணிலிருந்து சூரிய, சந்திரரே இறங்கி விட்டனரா?" என விசாரிக்கின்றார். இருவரும் பேசாமல் இருப்பது கண்டு மேலும் சொல்லுவார்:" வானர அரசன் ஆகிய சுக்ரீவன், என் அரசன், நான் அவன் நண்பன், அமைச்சன், நானும் ஒரு வானரனே. என் அரசனை அவன் அண்ணன் ஆகிய வாலி, நாட்டை விட்டுத் துரத்தி விட்டான். ஆகவே என் அரசனாகிய சுக்ரீவனுடன் நாங்கள் இங்கே வாழ்ந்து வருகின்றோம். அவர் அனுப்பியே நான் இங்கே வந்தேன். எங்களுக்கு நினைத்த போது நினைத்த உருவை எடுக்க முடியும். என் அரசனை உங்கள் நண்பனாய் ஏற்றுக் கொள்ளுங்கள்." என்று சொல்கின்றார். உடனே ராமர் லட்சுமணனைப் பார்த்து, நாம் தேடி வந்திருக்கும் சுக்ரீவனின் அமைச்சரும், நண்பரும் ஆன இந்த அனுமனின் சொல் வல்லமையைப் பார்த்தாயா? என வியந்து பேச, லட்சுமணனும், அனுமனிடம் தாங்கள் சுக்ரீவனையே தேடி வந்திருப்பதாய்ச் சொல்ல, அனுமன் அவர்கள் வந்த காரணத்தைக் கேட்கின்றார். லட்சுமணன், மீண்டும் ஒரு முறை ராமர் பட்டம் துறந்து காட்டுக்கு வந்தது முதல் சீதை அபகரிக்கப் பட்டது வரை அனைத்தும் சொல்லி முடிக்கின்றான். கபந்தன் சுக்ரீவனைப் பற்றிக்கூறியதாயும் சொல்லிவிட்டு, ராமர் சுக்ரீவனின் நட்பை வேண்டி வந்திருப்பதாயும் கூறுகின்றான். உடனே மன மகிழ்ச்சி கொண்ட அனுமன், ராம, லட்சுமணர்களைத் தன் தோளில் சுமந்து கொண்டு சுக்ரீவன் இருக்குமிடம் நோக்கிச் சென்றான். அங்கே சுக்ரீவனின் முன்னிலையை அடைந்ததும், அனுமன் ராம, லட்சுமணர்களைப் பற்றி எடுத்துச் சொல்ல, தன் நிலையையும், தான் அண்ணனால் துரத்தப்பட்டு வந்திரூப்பதையும் சுக்ரீவ்ன் எடுத்துக் கூறுகின்றான். தன் மனைவியும் வாலியினால் அபகரிக்கப் பட்டதையும் சுக்ரீவன் எடுத்துச் சொல்லுகின்றான். ராமர் வாலியை அழித்து, சுக்ரீவன் இழந்த ராஜ்யத்தை மீட்டுத் தருவதாய் உறுதி கூற, ராமனுக்கும், சுக்ரீவனுக்கும் இடையே நட்பு உறுதி செய்யப் பட்டது. அதே நேரத்தில், கிஷ்கிந்தையில் வாலிக்கும், இலங்கையில் ராவணனுக்கும், சீதைக்கும் ஒரே சமயத்தில் அவர்களுடைய இடது கண் துடிக்கின்றது. அன்றலர்ந்த தாமரை போன்ற சீதையின் கண்களில் இடது கண்ணும், தங்கம் போல் ஜொலிக்கும் வாலியின் இடது கண்ணும், பிரளய கால நெருப்புப் போன்ற ஜொலிப்புடன் கூடிய ராவணனின் இடது கண்ணும் துடித்தனவாம். பெண்களின் இடதுகண்கள் துடித்தால் நன்மை பயக்கும், என்றும் ஆண்களின் இடது கண்கள் துடித்தால் தீமை எனவும் நிமித்தங்கள் கூறுகின்றன.

அப்போது சுக்ரீவன் மேலும் ராமனிடம் கூறுவான்:" ராமா, உன் மனைவியை ராவணன் கடத்திச் செல்லும்போது நான் அவர்களைப் பார்த்தேன் என்று தான் நினைக்கின்றேன். ராமா, லட்சுமணா, என்று கதறிக் கொண்டே அந்தப் பெண் ராவணன் கையிலிருந்து தன்னை விடுவிக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். மலையின் மீது நானும், இன்னும் சில வானரங்களும் இருப்பதைப் பார்த்துவிட்டு ஒரு சிறு மூட்டையையும், இன்னும் சில நகைகளையும் எங்களை நோக்கி வீசினாள். அவற்றை நாங்கள் எடுத்துப் பத்திரமாய் வைத்துள்ளோம். இவை சீதையின் நகைகளா எனப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்." என்று சொல்லவே, சுக்ரீவன் மீண்டும் குகையினுள்ளே சென்று, ஒரு மூட்டையைக் கொணர்ந்து ராமனிடம் கொடுக்க அதைப் பார்த்த ராமன் மீண்டும் கதறி அழுதான். பின்னர் லட்சுமணனைப் பார்த்து அரக்கனால் கவர்ந்து செல்லப் பட்ட சீதை இவற்றை வீசி எறிந்திருக்கின்றாள் என்று கூறுகின்றார். லட்சுமணனோ, என்னால் கால் கொலுசுகளைத் தவிர, மற்றவற்றை அடையாளம் காணமுடியவில்லை எனச் சொல்கின்றான். அபின்னர் ராமன் சுக்ரீவனைப் பார்த்து, சீதை எந்தத் தேசத்தில் சிறை இருக்கின்றாள்? யார் அவன்? எங்கே உள்ளான்? என்ற விபரம் கேட்க,சுக்ரீவன், ராமரை ஆறுதல் வார்த்தைகளினால் சமாதானம் செய்கின்றான். பின்னர் ராமர் அவனின் அண்ணன் எந்தக் காரணத்துக்காக சுக்ரீவனைத் துரத்தினான் எனக் கேட்கத் தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கின்றான் சுக்ரீவன்.
ரிக்ஷரஜஸ் என்னும் வானர அரசனின் வளர்ப்பு மகன்கள் தாங்கள் இருவரும் எனவும், தங்கள் வளர்ப்புத் தந்தை இறந்ததும், மூத்த மகன் ஆன வாலி பட்டம் ஏற்றதாயும், வாலிக்கும் "மாயாவி" என்னும் அரக்கனுக்கும் ஒரு பெண்ணின் காரணமாய்ப் பல வருடங்களாய் விரோதம் இருந்ததையும் சொல்கின்றான். ஒருமுறை நள்ளிரவு நேரத்தில் மாயாவி கிஷ்கிந்தை வந்து வாலியைச் சண்டைக்கு அழைத்ததையும், வாலி உடனே புறப்பட்டதையும், மனைவி தடுத்தும் கேளாமல், தான் சொல்லியும் கேளாமல், வாலி யுத்தம் செய்யச் சென்றதையும் சொல்கின்றான். ஆனால் சுக்ரீவன் வாலியோடு தானும் உடன் சென்றதாயும், அசுரன் இருவரும் வருவதைப் பார்த்துவிட்டுப் பூமியில் இருந்த ஒரு பெரிய பள்ளத்தினுள் புகுந்து விட்டதாயும் சொல்கின்றான். இருவரும் அசுரனைப் பின்பற்றிச் செல்ல முயல, வாலி, சுக்ரீவனைத் தடுத்துத் தான் மட்டும் உள்ளே செல்வதாயும், அசுரனைக் கொன்றுவிட்டுத் திரும்புவதாயும் சுக்ரீவன் அங்கே இருந்து காவல் காக்குமாறும் கூறிவிட்டுச் செல்கின்றான். ஒரு வருஷம் செல்கின்றது. சுக்ரீவன் அப்படி, இப்படி அசையாமல் நின்று காவல் காக்கின்றான். வாலி திரும்பவில்லை. திடீரென ஒரு நாள் ஒரு அசுர கர்ஜனை கேட்கின்றது, அங்கிருந்து, பின்னர் அந்தப் பள்ளத்தில் இருந்து ரத்தம் ஊற்றுப் போல் பொங்கி வர ஆரம்பிக்கின்றது. அண்ணன் இறந்துபட்டான் என உறுதி கொண்ட சுக்ரீவன் அழுது கொண்டே பள்ளத்தை மூடிவிட்டுப் பின்னர் அங்கேயே வாலிக்கு இறுதிச் சடங்குகள் செய்துவிட்டுக் கிஷ்கிந்தை திரும்புகின்றான்.

கிஷ்கிந்தை வந்த சுக்ரீவன் வாயே திறக்கவில்லை. எனினும் மந்திரி, பிரதானிகள் விஷயத்தை அறிந்து கொண்டனர். பின்னர் ஆலோசனைகள் பலவும் செய்துவிட்டு சுக்ரீவனுக்கு முடிசூட்டுகின்றனர் வலுக்கட்டாயமாய். சுக்ரீவனின் ஆட்சி நடக்கும்போது ஒரு நாள் திடீரென வாலி திரும்பி விடுகின்றான். மனம் மகிழ்ந்த சுக்ரீவன் அண்ணனை மகிழ்வோடு வரவேற்கின்றான். நடந்ததைச் சொல்கின்றான். தான் மகுடம் சூட இஷ்டப் படவில்லை என்றும், மந்திரி, பிரதானிகளால் பட்டம் கட்டப் பட்டதையும் சொல்கின்றான். தன் மீது கோபம் கொள்ளவேண்டாம் எனவும் சொல்கின்றான். இதை ஏற்காத வாலி, சுக்ரீவனைச் சந்தேகம் கொண்டு கடுமையாகவும், கொடுமையாகவும் திட்டுகின்றான். தன்னால் கொல்லப் பட்ட மாயாவியின் ரத்தத்தினால் அந்தப் பள்ளம் நிரம்பித் தான் வெளியேற வழி இல்லாமல், தவித்ததையும், பள்ளம் மூடப் பட்டிருந்ததையும் சொல்கின்றான். சுக்ரீவனைக் கூவிக் கூவி அழைத்தும் பலனில்லாமல் போனதையும் சொல்கின்றான். ராஜ்யத்தை அடையவே சுக்ரீவன் இவ்வாறு செய்ததாயும் சொல்கின்றான். பின்னர் கட்டிய துணியோடு சுக்ரீவனை நாடு கடத்தினான். எங்கும் தங்க இடமின்றி அலைந்த சுக்ரீவன், வாலியினால் நுழைய முடியாத இந்த ரிஷ்யமுக மலையைத் தேர்ந்தெடுத்து அங்கே தங்க ஆரம்பித்ததாயும் சொல்கின்றான். தனக்கு உதவி செய்யுமாறும் ராமனிடம் வேண்டுகின்றான். ராமனும் அவ்வாறே வாலியை அழித்து சுக்ரீவனுக்கு உதவுவதாய் வாக்களிக்கின்றார். இனி கிஷ்கிந்தா காண்டம் நாளையில் இருந்து ஆரம்பிக்கின்றது.

2 comments:

  1. /லட்சுமணனோ, என்னால் கால் கொலுசுகளைத் தவிர, மற்றவற்றை அடையாளம் காணமுடியவில்லை எனச் சொல்கின்றான். //

    இதில் உள்ள nuance ஐ சொல்லி இருக்கலாமே!

    ReplyDelete
  2. அட சரியாக சுந்தர காண்டம் பதிவு போடும் போது சென்னை வந்து விடுவேன். மிக அருமையாக எழுதுகிறீர்கள். படங்களும் தூள்.

    ReplyDelete