எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, May 20, 2008

கதை, கதையாம், காரணமாம், ராமாயணம் - பகுதி 49

அனுமன் வந்து சொன்னவைகளைக் கேட்ட ராமன் மிக்க மனமகிழ்ச்சி அடைந்தார். மேலும் மற்ற யாராலும் செய்ய முடியாத ஒரு காரியத்தை அனுமன் நிறைவேற்றிவிட்டு வந்திருக்கின்றார். சமுத்திரத்தை அனுமனைத் தவிர வேறு யார் சென்றிருந்தாலும் கடக்க முடியாது என்பது உண்மை. ராவணனின் கடுங்காவலில் இருக்கும் இலங்கையில் நுழைந்து, சீதையையும் கண்டு பேசிவிட்டு, அங்கே கடும் விளைவுகளையும் ஏற்படுத்திவிட்டு உயிருடன் திரும்பி இருக்கின்றான் அனுமன் என்றால் அவன் ஆற்றல் எப்படிப் பட்டது என்பதை உணர முடிகின்றது. இந்த அனுமனுக்குத் தக்க பரிசளிக்கக் கூடிய நிலைமையில் தற்சமயம் நான் இல்லையே என்பதை நினைத்து வருந்துகின்றேன் என்ற ராமன் அனுமனை நெஞ்சாரக் கட்டித் தழுவினார். பின்னர் சீதையை என்னமோ தேடிக் கண்டு பிடித்தாகிவிட்டது. ஆனால் வானர வீரர்கள் அனைவரையும் எவ்வாறு அழைத்துச் சென்று சமுத்திரத்தைக் கடப்பது என்றே புரியவில்லையே என்ற கவலையில் ராமன் சோகத்தில் ஆழ்ந்தார். சுக்ரீவன் ராமனின் மனக்கவலையை விரட்டி அடிக்கும் வகையில் பேசத் தொடங்கினான்: "மிக மிகச் சராசரியான மனிதன் போல் நீங்கள் அடிக்கடி மனக் கவலைக்கு இடமளிக்கக் கூடாது. சீதை எங்கிருக்கின்றாள் என்பது தெரிந்து விட்டது. எதிரியின் நிலைமையும் நமக்குத் தெள்ளத் தெளிவாய்ப் புரிந்துவிட்டது. தாங்களோ ஆற்றல் மிகுந்தவர். அனைத்து அறிந்தவர். அப்படி இருக்கையில் கவலை வேண்டாம், சமுத்திரத்தைக் கடப்போம், இலங்கையை அடைவோம், ராவணனை வீழ்த்துவோம், சீதையை மீட்போம். இலங்கையை அடைய சமுத்திரத்தை எவ்வாறு கடப்பது என்ற ஒன்றே தற்சமயம் யோசிக்க வேண்டிய ஒன்றாகும். தாங்கள் அது பற்றிச் சிந்தியுங்கள். ஒரு பாலம் அமைக்க முடியுமா என யோசிக்கலாம்." என்று கூறுகின்றான்.

ராமனும் சுக்ரீவன் கூறியதை ஒத்துக் கொண்டு, தன் தவ வலிமையால் சமுத்திரத்தை வற்றிப் போகச் செய்யலாம், அல்லது, பாலமும் அமைக்கலாம் என்பதையும் ஒத்துக் கொள்கின்றார். மேலும், மேலும் அனுமனிடம் இலங்கையின் அமைப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள், செல்வம், படைபலம், வீரர்பலம் போன்றவற்றைப் பற்றி எல்லாம் விவாதிக்கின்றார். அனுமன் அவரிடம், அங்கதன், த்விவிதன், நீலன், மைந்தன், ஜாம்பவான், நளன், ஆகியோரே போதும் இலங்கையை வென்று சீதையை மீட்டும் வருவதற்கு. இவ்வாறிருக்கையில் வானரப் படைகள் சமுத்திரத்தைக் கடப்பதும் சாத்தியமான ஒன்றே என்று தெளிவாய் எடுத்துக் கூற ராமனும் மன அமைதி அடைந்து, படைகளைத் திரட்டி அணி வகுக்குமாறு சுக்ரீவனை உத்தரவிடச் சொல்லுகின்றார். நீலன் என்ற வானரத் தளபதியின் தலைமையில் படைகள் அணிவகுக்கப் பட்டு, யார், யார், எந்த, எந்தப் படைக்குப் பொறுப்பு எனவும் தீர்மானிக்கப் படுகின்றது. வானரவீரர்கள் கிளம்புகின்றனர் தென் திசை நோக்கி. ஒரு மாபெரும் அலையானது சமுத்திரத்தில் இருந்து பொங்கி வேகமாய்க் கரையை நோக்கி வருவதைப் போன்ற வேகத்துடனும், வீரத்துடனும், ராமனுக்கு ஜெயம், சீதாராமனுக்கு ஜெயம் என்ற ஜெய கோஷங்களை எழுப்பிக் கொண்டு வானரப் படையானது தென் திசை நோக்கிச் செல்கின்றது. வழியிலே காணப்பட்ட நற்சகுனங்கள் லட்சுமணன் மனதை நிறைக்கின்றது. காற்றானது, இளந்தென்றலாகவும் தென் திசை நோக்கி வீசிக் கொண்டும், பறவைகள் இனிமையான குரலில் கூவிக் கொண்டும், சூரியனானது மேக மூட்டமில்லாமல் ஒளி வீசிக் கொண்டும் காணப்பட்டான்.
வானரப்படை நதிகளைக் கடந்து, மலைகளைக் கடந்து, காடுகளைக் கடந்து சஹ்யாத்திரி மலைத் தொடர்களையும் கடந்து, மலய மலைப்பகுதிகளையும் தாண்டி மஹேந்திர மலையையும் கடந்து, சமுத்திரக் கரையை அடைந்தது. சமுத்திரக் கரையில் படைகள் ஓய்வெடுத்துக்கொள்வதற்காக முகாமிட்டார்கள். ராமனும், லட்சுமணனும் அடுத்துச் செய்ய வேண்டியவைகள் பற்றி வானர வீரர்களில் முக்கியமானவர்களுடன் கலந்தாலோசிக்கின்றனர். ராமருக்கு மீண்டும் சீதையின் நினைவு வந்து துக்கம் பெருக்கெடுக்க, லட்சுமணன் அமைதிப் படுத்துகின்றான் அவரை. அப்போது அங்கே இலங்கையில்????????

இலங்கையில் அரக்கர்கள் ராவணன் தலைமையில் அரசவைக் கூட்டம் ஒன்று ஏற்படுத்தினார்கள். அனைத்து முக்கிய அரக்கர்களையும் கலந்தாலோசித்தான் ராவணன்.:" யாராலும் நுழையக் கூட முடியாத கடினமான கல்கோட்டை போன்றிருந்த இலங்கைக்குள் ஒரு வானரன் நுழைந்தது மட்டுமில்லாமல், சீதையையும் பார்த்துவிட்டு நகருக்கும் நாசத்தை விளைவித்துச் சென்றிருக்கின்றான். ராமன் விஷயத்தில் நான் என்ன செய்யவேண்டும் என்பதை நீங்கள் அனைவரும் எனக்கு எடுத்துக் கூறுங்கள். நண்பர்கள், சகோதரர்கள், மற்ற உறவினர்கள், மற்ற உயர்ந்தவர்கள் அனைவரையும் ஆலோசித்துவிட்டுப் பின்னர் தெய்வத்தையும் நம்பிச் செயல் பட்டாலே சிறப்புக் கிடைக்கும் என்பது உறுதி. தானாக முடிவெடுப்பவன் சிறந்த அரசனாய்க் கருதப் படமாட்டான், இந்நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்? அறிவிற் சிறந்தவர்களே! தன் தம்பியோடும், பெரும் வானரப் படையோடும் ராமன் இலங்கையை நோக்கிப்புறப்பட்டிருக்கின்றானாம். சமுத்திரக் கரையை வந்தடைந்துவிட்டானாம். அந்த ராமனின் தவ வலிமை அவ்வளவு வலியதாம். அவன் தவ வலிமையால் சமுத்திரத்தையே வற்றச் செய்தாலும், செய்யலாம் என்று பேசிக்கொள்கின்றார்களே? இந்நிலையில் இந்த இலங்கை மாநகரையும், நம் படைகளையும் நான் காக்கும் வழிதான் என்ன?" என்று கவலையுடனேயே இலங்கேஸ்வரன் கேட்கின்றான். அதற்கு அவன் மந்திரி, பிரதானிகள் ஆன அரக்கர்களோ ராவணனைப் பாராட்டிப் பேசுகின்றார்கள்.

"இலங்கேஸ்வரா, ராவணா, உன் வீரம் சொல்லவும் முடியுமோ? நாகர்கள், யக்ஷர்கள், யமன், வருணன், வருணனின் மகன்கள், குபேரன், அவன் செல்வம் தானவர்களின் தலைவன் மது, தேவேந்திரர்களின் தலைவன் இந்திரன் போன்ற பலரை நீங்கள் வெற்றி கொண்டுள்ளீர்கள் அரசே! பெரும் ஆற்றல் படைத்த பல க்ஷத்திரியர்களை நீங்கள் வென்றுள்ளீர்கள். கவலைக்கே இடமில்லை. தாங்கள் இங்கேயே இருந்தாலே போதுமானது. இந்திரஜித் ஒருவனே போதும் அனைவரையும் அழிக்க. சமுத்திரத்தைக் கடக்கும் முன்பே வானர வீரர்களை அடக்கிவிட்டு வெற்றியோடு திரும்பி வருவான்." என தைரியம் சொல்லப் பின்னர் அவன் மந்திரிகள் ஆன பிரஹஸ்தன், துர்முகன் போன்றோரும் அதை ஆதரித்தே பேசுகின்றனர். இவர்களில், வஜ்ரதம்ஷ்ட்ரன் என்னும் அரக்கன் கூறுகின்றான்: தேர்ந்தெடுத்த அரக்கர்களை மனிதர்களாய் மாறும் வல்லமை படைத்தவர்களை மனிதர்களாய் மாறச் சொல்லி, ராமனை அடைந்து பின் வரூம் வார்த்தைகளைத் தெரிவிக்க வேண்டும்:'ராமா, உன் தம்பியாகிய பரதனால் நாங்கள் அனுப்பப் பட்டு படையோடு வந்துள்ளோம். பரதனும் வந்து கொண்டிருக்கின்றார். பரதனைச் சந்திக்கும் ஆவலில், தன் படையோடு ராமன் பரதன் வரும் வழிக்குச் செல்லும்போது, நாம் காத்திருந்து சூழ்ச்சியால் முறியடிப்போம்." என்று யோசனை சொல்லுகின்றான்.
கும்பகர்ணனின் மகன் ஆன நிகும்பன் தான் ஒருவனே தனியாய்ச் சென்று, அனைவரையும் அழித்துவிட்டு வருவதாய்ச் சொல்லுகின்றான். அரக்கர்கள் அனைவருக்கும் வீரம் பொங்க அனைவரும் வெற்றிக் கோஷம் இட்டுக் கொண்டு, போருக்குச் செல்லலாம் எனக் கோஷம் இடுகின்றனர். அப்போது விபீஷணன்,ராவணனின் தம்பியானவன் எழுந்து, தன் இரு கைகளையும் கூப்பிக் கொண்டு பேசத் தொடங்கினான். :"சாம, தான, பேத, தண்டம் போன்ற நான்கு வழிகளில் முதல் மூன்று வழிகளினால் பயன் இல்லை எனத் தெரிந்தால் மட்டுமே நான்காவது வழியைப் பிரயோகிக்க வேண்டும். மேலும் தெய்வத்தால் கைவிடப் பட்டவர்கள், அஜாக்கிரதைக் காரர்கள் போன்றவர்களிடம் பிரயோகிக்கலாம் என்று தர்ம சாத்திரம் சொல்லுகின்றது. ஆனால் ராமன் அப்படிப் பட்டவர்களில் இல்லை. வெற்றிக்கும், வீரத்துக்கும் இலக்கணம் ஆன அவரை எவ்வாறு எதிர்ப்பது? சினத்தை வென்றவரும், தெய்வபலம் பொருந்தியவரும் ஆக இருக்கின்றாரே? அதை யோசியுங்கள். நியாயமும், தர்மமும் அவர் பக்கமே என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். ராமன் தானாக வலிய வந்து நம் மன்னருக்கு எந்தக் குற்றமும் செய்யவில்லையே? அவர் மனைவியை நம் மன்னர் அபகரித்து வந்தார் சூழ்ச்சியினால். அதன் பின்னரே அவர் நமக்கு எதிரியாகி இருக்கின்றார். கரன் கொல்லப் பட்டதும் கூட தன் வரம்பு கடந்து நடந்து கொண்டதாலேயே தானே? மேலும் தன்னைத் தாக்க வருபவர்களிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் இயல்பு அனைவருக்கும் இருக்கின்றதல்லவா?

"மாற்றான் மனைவியான சீதையை அரசன் அபகரித்து வந்திருக்கின்றபடியாலே தானே நமக்கு இத்தகைய துன்பம் விளைகின்றது? சீதையால் நமக்குப் பெரும் விபத்தே வந்து சேரும். அவளை அவளுக்கு உரிய இடத்தில் சேர்ப்பிக்க வேண்டியதே நம் கடமை ஆகும். ராமரை விரோதித்துக் கொண்டு, பெரிய பட்டணமும், செல்வம் கொழிக்கும் இடமும் ஆன இந்த இலங்கையை அவர் படை வீரர்கள் அழிப்பதில் இருந்து நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். வானர வீரர்களின் தாக்குதலில் இருந்தும் நம்மையும், நம் உறவினர்களையும், படை வீரர்களையும், நம் நாட்டையும், குடி மக்களையும் நாம் காப்பாற்றிக் கொள்ளவேண்டும். ஆகவே சீதை திருப்பி அனுப்பப் படவேண்டும். நாம் அனைவருக்கும் நல்லதே செய்வோம். சீதை ராமனிடம் திரும்பிப் போகட்டும்." என்று சொன்னான். ஆனால் அந்தக் கருத்துக்களுக்கு எந்தப்பதிலும் சொல்லாமல் ராவணன் திரும்பித் தன் மாளிகைக்குப் போய்ச் சேர்ந்தான். மறுநாள்?????

No comments:

Post a Comment