எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, May 31, 2008

கதை கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 53 - யுத்த காண்டம்



விபிஷணன், சமுத்திரத்தைக் கடக்க , ராமரே சமுத்திர ராஜனை அணுகி உதவி கேட்க வேண்டும் எனச் சொல்கின்றான். மேலும் இக்ஷ்வாகு குல மன்னன் ஆன சகரன் முயற்சியால் தோன்றியதே சமுத்திரம் ஆகவே சமுத்திர ராஜன் இக்ஷ்வாகு குலத்துக்குக் கட்டுப் பட்டவன். அவன் நிச்சயம் ராமனுக்கு உதவி செய்வான்.” என்று சொல்கின்றான்.

ராமனிடம் சுக்ரீவன் இதைத் தெரிவிக்க அவரும் அந்த யோசனையை ஏற்றுக் கொண்டு, லட்சுமணனைப் பார்த்து மேலே என்ன செய்யலாம் என்று கேட்கின்றார். லட்சுமணனும், சமுத்திர ராஜனைக் கேட்டுக் கொள்வதே சிறந்த வழி என்று சொல்கின்றான். ஒரு பாலத்தைக் கட்டாமல் சமுத்திரத்தைக் கடந்து செல்ல முடியாது. ஆகையால் நேரத்தை வீணாக்காமல் சமுத்திர ராஜனை உதவி செய்யுமாறு கேட்க வேண்டும்.” என்று சொல்கின்றான். இதனிடையில் ராவணனால் அனுப்பப் பட்ட ஒற்றன் ஒருவன் வானரப்படையில் புகுந்து கொண்டு அனைத்து விபரங்களையும் அறிந்து கொண்டு ராவணனிடம் திரும்பிப் போய் ராமனின் படை பலத்தையும், வானர வீரர்களின் எண்ணிக்கை மற்றொரு சமுத்திரமோ என்னும் அளவில் இருப்பதையும் தெரிவித்து விட்டு சமாதானம் செய்து கொள்வதா, அல்லது எதிரிகளிடையே பிளவை உண்டு பண்ணுவதா என்று முடிவு செய்யுமாறு கூறுகின்றான். ராவணனும் இதைக் கேட்டுவிட்டு மற்றொரு ஒற்றன் ஆன சுகன் என்பவனை அழைத்து, சுக்ரீவனைச் சென்று அடைந்து, இனிமையாய்ப் பேசி, அவனைப் புகழ்ந்து, கிஷ்கிந்தைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தும்படிக் கேட்டுக் கொள்கின்றான். சுகனும் ஒரு பறவையின் வடிவில் உடனேயே சமுத்திரக் கரை நோக்கிப் பறந்து வருகின்றான். சுக்ரீவனை நெருங்கி, ராவணன் கூறியதைச் சொன்ன சுகனை உடனேயே வானரவீரர்கள் பிடித்து, ராமன் முன்னிலையில் கொண்டு நிறுத்தினர். தூதர்களைக் கொல்லுவது நீதி அன்று ராமா என்று சுகன் சொல்லவே, ராமனும், அவனை விடுவிக்குமாறு கூற அவன் விடுவிக்கப் பட்டு ஆகாயத்திலே போய் நின்று கொண்டு, ராவணனிடம் நான் தெரிவிக்க வேண்டியது என்னவெனக் கேட்க, சுக்ரீவன் அவனைப் பார்த்துச் சொல்கின்றான்:”ராவணனே, நீ என் நண்பன் அல்ல. என் நலனை விரும்புபவனும் அல்ல, ராமனின் எதிரி ஆன நீ எனக்கும் எதிரியே. ராமனும், லட்சுமணனும் இல்லாத வேளை பார்த்து நீ சீதையைக் கடத்தினாய்! உன்னைக் காப்பாற்றக் கூடியவர் இம்மூவுலகிலும் எவரும் இல்லை இப்போது. நீ எங்கே சென்றாலும் சரி, ராமனால் கொல்லப் படப்போகின்றாய். படையோடு இலங்கை வந்து இலங்கையையும், உன் மக்களையும் எரித்துச் சாம்பல் ஆக்குவேன் தகாத காரியத்தைச் செய்த நீ எவ்விதம் உயிரோடு தப்பிக்க முடியும்? இது தான் நான் ராவணனுக்குச் சொல்லும் செய்தி!” என்று சொல்கின்றான் சுக்ரீவன்.
அப்போது அங்கதன் ராமனைப் பார்த்து இவன் ஒற்றன் என்றே நான் எண்ணுகின்றேன். தூதுவனாய்த் தெரியவில்லை. நமது படை பலத்தை முழுதுமாக அறிந்து கொண்டு விட்டான். இவனை வெளியே விடுவது முழுத்தவறு.” என்று சொல்லவே அவன் மீண்டும் பிடித்துக் கட்டிப் போடப் பட்டான். சுகன் ராமனைப் பார்த்து,” ராமா, என்னை இந்த வானரர்கள் துன்புறுத்துகின்றனரே? உன் கண் எதிரிலேயே என் உயிர் போனால், நாம் எந்த இரவில் பிறந்தேனோ, அன்றில் இருந்து என் உயிர் போகும் வரைக்கும் நான் செய்த பாவங்கள் அனைத்தும் உன்னையே சேரும்,” என்று உரக்கக் கூவி அழ, ராமன் வானரர்களைப் பார்த்து, சுகனை விட்டுவிடுமாறு கூறுகின்றார். அவன் திரும்பிப் போகட்டும் என்றும் சொல்கின்றார். ஆனால் அவனை விடுவித்த வானரர்கள் அவனைத் திரும்ப அனுமதிக்கவில்லை.

இதை அடுத்து கடற்கரையில் தர்ப்பைப் புற்கலினால் ஆன ஆசனத்தில் அமர்ந்து உடல், மனம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஒரே தியானத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் ராமன் அமர்ந்தார். மூன்று நாட்கள் கடந்த பின்னரும் சமுத்திர ராஜன் அவர் முன்னே தோன்றவில்லை. ராமர் லட்சுமணனைப் பார்த்து மிகுந்த கோபத்துடனேயே, சமுத்திர ராஜனின் கர்வத்தைப் பார்த்தாயா? நீரால் நிரம்பிக் காட்சி அளிக்கும் இந்தக் கடலை இப்போது என்னுடைய சக்தி வாய்ந்த அம்புகளால் துளைத்து நீரை வற்றிப் போகும்படிச் செய்து விடுகின்றேன். முத்துக்களாலும், சங்குகளாலும், மீன்களாலும், முதலைகளாலும், பவளங்களாலும் நிரம்பி இருக்கும் இந்த சமுத்திரத்தை வற்றச் செய்கின்றேன். என்னுடைய பொறுமைக் கண்ட சமுத்திர ராஜன் என்னைச் சக்தியற்றவன் என்று நினைத்துக் கொண்டான் போலும். உடனே சென்று என்னுடைய வில்லையும், அம்புகளையும் எடுத்துவா,” என்று சொல்லி விட்டு மிகுந்த கோபத்தோடும், வீரத்தோடும் வில்லை அம்பை ஏற்றி அவற்றை எய்து விடத் தொடங்கினார்.

அம்புகள் இந்திரனின் வஜ்ராயுதம் போல் கடல் நீரைத் துளைத்துக் கொண்டு சென்று கடல் வாழ் ஜந்துக்களை எல்லாம் வாட்டத் தொடங்கியது. முத்துக்களும், பவளங்களும், மீன்களும், சங்குகளும் உள்ளே இருந்து மேல்நோக்கி வந்து தூக்கி அடிக்கப் பட்டன. நெருப்பை ஒத்த அம்புகள் கடல் நீருக்கு மேல் ஊழிப் பெருந்தீ போன்ற ஒளிமயமான தீயைத் தோற்றுவிக்க அங்கே எழுந்த புகை மண்டலத்தால் விண்ணை மூடும் அபாயம் ஏற்பட்டது. கடல் கொந்தளித்துக் கொண்டு பேரலைகள் எழுந்தன. தூக்கி அடிக்கப் பட்ட கடல்வாழ் பிராணிகளின் ஓலம் தாங்க முடியாமல் இருந்தது. மேலும் அம்புகளைப் பொருத்தி எய்வதற்காக நாணில் ஏற்றிய ராமரை லட்சுமணன் “போதும், போதும்” என்று சொல்லி வில்லைக் கையில் இருந்து வாங்கினான். கோபம் கொள்ளாமல் வேறு வழியில் கடலைக் கடக்க உதவியை நாடுங்கள் என்றும் சொன்னான். விண்ணில் இருந்து இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டும் ,கேட்டுக் கொண்டும் இருந்த தேவர்களும், ரிஷி, முனிவர்களும், பயத்தினால் அலறிக் கொண்டு ,”போதும், போதும், நிறுத்து, நிறுத்து.” என்று கூறவே ராமனும் சமுத்திர ராஜனைக் கூப்பிட்டுப் பேசத் தொடங்கினார்.

No comments:

Post a Comment