அனுமனும் அந்தச் சூடாமணியை வாங்கிக் கொண்டு சீதையிடம் ராமனுடனும், பெரும்படையுடனும், வந்து உங்களை மீட்டுப் போவது உறுதி என்று சொல்கின்றார். சீதை அனுமனைப் பார்த்து இன்னும் ஓர் நாள் தங்கிவிட்டுப் போகின்றாயா? நீ இருந்தால் என் மன உறுதியும், தைரியமும் என்னைக் கைவிடாது எனத் தோன்றுகிறது, கடலைக் கடந்து வந்து எவ்வாறு மீட்டுச் செல்லுவார்கள் என்பதை எண்ணும்போது சந்தேகமாய் உள்ளது. கருடனையும், வாயுவையும், இப்போது உன்னையும் தவிர மற்றவர்களால் முடியுமா எனத் தெரியவில்லையே? பெரும்படை வருவது எவ்வாறு" என்று எண்ணிப் புலம்ப ஆரம்பித்தாள். அனுமன் அவளுக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்லி, சுக்ரீவனின் படை பலத்தையும், வீரர்களின் வல்லமை, திறமை போன்றவற்றையும் எடுத்துரைக்கிறார். உண்மையில் இந்தக் காரியத்துக்காக ஏவப்பட்ட நான் அவர்கள் அனைவரிலும் தாழ்ந்தவனே. ஒரு காரியத்துக்கு ஏவப் படுகின்றவன், மற்றவர்களை விட மேன்மையானவனாய் எவ்விதம் இருப்பான்? ஆகவே தாங்கள் அஞ்ச வேண்டாம். உங்கள் துன்பம் அழியும் நேரம் வந்துவிட்டது. பொறுங்கள், அமைதி காத்து இருங்கள்" என்றெல்லாம் சொல்லிச் சீதையிடம் விடைபெற்றுக் கொண்டு அனுமன் வடதிசையில் செல்லத் தீர்மானித்தான். செல்லும்போதே அனுமன் நினைத்தான்."சீதையைக் கண்டு பேசியாகிவிட்டது. எடுத்த காரியத்தில் வெற்றி அடையும் அடுத்த வழியைப் பார்ப்போம். அரக்கர்களிடம் பேச்சு வார்த்தை பலனில்லை. துணிவின் மூலமே அவர்களுக்குத் தக்க தண்டனை அளிக்கவேண்டும். மேலும் நமக்கும், ராவணனுக்கும் நடக்கப் போகும் யுத்தத்தில் வெற்றி அடையவேண்டுமானால், ராவணன் பற்றியும் அவன் பலம் பற்றியும் அறிந்து கொள்ளவேண்டும்.அதற்கு அவனைச் சந்திக்கவேண்டும், அவன் அமைச்சர்களைச் சந்திக்க வேண்டும். என்ன செய்யலாம்? ம்ம்ம்ம்ம்??? இந்த நந்தவனம எத்தனை அழகு? பல்வேறு விதமான கொடி, செடிகள், மரங்கள், உத்தியான மண்டபங்கள், லதாமண்டபங்கள்???ம்ம்ம் இதை நான் அழித்தால் ராவணன் கட்டாயம் கோபம் கொண்டு என்னை அழிக்கப் படையை ஏவுவான், அல்லது அவனே வரலாம். எதிராளியின் பலம் அப்போது தெரிய வரும்" என்றெல்லாம் எண்ணிய அனுமன் அசோகவனத்தை அழிக்க முற்பட்டு, அதை நாசம் செய்யத் தொடங்கினார்.
அசோக வனம் நாசமடைந்ததைக் கண்ட அரக்கிகள் சீதையிடம் சென்று யார் அது உன்னிடம் பேசியது/ எங்கிருந்து வந்தான் என்றெல்லாம் கேட்டார்கள். சீதையோ எனில், தாம் விரும்பிய வடிவம் எடுத்துக் கொள்ளும் அரக்கர்கள் எப்போது என்ன செய்கின்றார்கள் என்பதை நான் அறியேன். யார் வந்தார்களோ, நான் என்ன கண்டேன் என்று சொல்லிவிடுகின்றாள். அரக்கிகள் ராவணனிடம் ஓடிச் சென்று நடந்த நாசத்தைக் குறித்து விவரிக்கின்றார்கள். சீதை அமர்ந்திருக்கும் இடம் தவிர, மற்ற இடங்களெல்லாம் அழிக்கப் பட்டு விட்டது என்பதை அறிந்த ராவணன் பெரும்கோபத்துடன் கிங்கரர்கள் என அழைக்கப் படும் அரக்கர்களை அனுப்பினான். அனுமன் ராமநாமத்தைச் சொல்லிக் கொண்டே, தான் வாயுவின் மைந்தன் எனவும், ராமனின் தூதன் எனவும் சொல்லிவிட்டு, கிங்கரர்களை அழித்துவிடுகின்றார். பின்னர் பிரஹஸ்தன் என்பவனின் மகன் ஜம்புமாலி என்பவன் வந்து அனுமனுடன் மோத, ஜம்புமாலியும், அவனுடன் சேர்ந்து அசோகவனத்தில் மீதமிருந்த ஓர் மண்டபமும், அதைக் காத்த அரக்க வீரர்களும் மாண்டனர். ராவணனின் அமைச்சர்களின் மகன்கள் எழுவர் வர, அனுமன் அவர்களையும் எதிர்கொண்டார். தன் தளபதிகளையும் அனுமன் வென்றதைக்கண்ட லங்கேசுவரன், பின்னர் தன் மகன்களில் ஒருவன் ஆன அக்ஷ குமாரனை அனுப்ப அவனும் அனுமன் கையால் மடிகின்றான். அக்ஷ குமாரன் மடிந்தது கேட்ட ராவணன், உடனேயே இந்திரஜித்தை அழைத்துச் சொல்கின்றான்:"மூவுலகிலும் உன்னை யாராலும் வெல்ல முடியாது. உன்னாலும், உன் தவத்தாலும், பலத்தாலும் சாதிக்க முடியாதவை எவையும் இல்லை. இப்போது இந்த வானரத்தால் நம் வீரர்கள், உன் சகோதரன் அக்ஷகுமாரன் அனைவரும் மடிந்துவிட்டனர். இந்த அனுமனின் பலத்துக்கு எல்லை இல்லை என்பதாலேயே உன்னை அனுப்புகின்றேன். இது புத்திசாலித் தனமான காரியமா இல்லையா என்பது தெரியவில்லை. எனினும் நன்கு ஆலோசித்து இந்த அழிவைத் தடுத்து நிறுத்துவது உன் கடமை." என்று சொல்லி அனுப்புகின்றான். இந்திரஜித்தும் அனுமன் நிற்கும் இடம் நோக்கிச் செல்கின்றான். துர்சகுனங்கள் ஏற்பட்டன. அப்படி இருந்தும் இந்திரஜித் தொடர்ந்தான். அனுமன் விஸ்வரூபம் எடுத்து நின்றுகொண்டு உரக்கக் கோஷம் இடுகின்றார். பலத்த மோதல் இருவருக்கிடையே நடக்கின்றது. இருவரின் பலமும் சமமாய்த் தெரிகின்றது. இந்திரஜித்தை வீழ்த்தும் வழி அனுமனுக்குத் தெரியவில்லை. அனுமனை எப்படி வீழ்த்துவது என இந்திரஜித்துக்குக் குழப்பம். ஆனால் இந்திரஜித் அனுமனை எவ்வாறேனும் சிறைப்பிடித்துவிடலாம் என எண்ணினான். உடனேயே யோசனை செய்து பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகித்தான். அனுமன் கீழே வீழ்ந்தான். எனினும் அவனுக்குத்தான் பிரம்மாஸ்திரத்தால் கட்டப் பட்டுவிட்டோம் என்பது புரிந்தது. ஆனால் அதன் வலி அவனுக்கு இல்லை. மேலும் இந்த அஸ்திரத்தால் தான் கட்டுப்பட்டாலும் விரைவில் விடுதலையும் கிடைக்கும் என்பது அனுமனுக்கு நினைவு வந்தது. பிரம்மாவின் இந்த அஸ்திரத்தில் இருந்து நாமாய் விடுவித்துக் கொள்ள முடியாது. ஆகவே காத்திருப்போம் என்ற முடிவுக்கு வந்தார்.
அனுமன் வீழ்ந்தது கண்ட அரக்கர்கள் தைரியமாய்க் கிட்டே வந்து அனுமனைக் கொடி, செடிகளால் ஏற்படுத்தப் பட்ட கயிற்றினால் பிணைக்கவும், அதன் காரணமாய், பிரம்மாஸ்திரக் கட்டு அனுமனை விடுவித்தது. வேறு வகையில் கட்டப் பட்டவனை பிரம்மாஸ்திரம் கட்டாது என்பது அதன் விதி. இந்திரஜித் உடனேயே விஷயம் புரிந்து அரக்கர்களின் மூடத் தனமான செயலை நினைந்து வருந்தினான். எனினும் கட்டுண்டு அமைதியாகக் கிடந்த அனுமனை மற்ற அரக்கர்கள் ராவணனின் சபைக்கு இழுத்துச் சென்றனர். சபையில் அமைச்சர்களும், மற்றா வீரர்களும், படைத்தலைவர்களும் வீற்றிருந்தனர். ராவணன் முன்னிலையில் பலரால் இழுத்துச் செல்லப் பட்டான் அனுமன். அவன் முன்னே நின்றான். அமைச்சர்கள் அனுமனை அவன் யாரெனவும், வந்த காரியம் பற்றியும் பலவித விசாரணைகள் செய்ய ஆரம்பித்தனர். அனுமனின் ஒரே பதில்:'நான் சுக்ரீவனிடமிருந்து வந்திருக்கும் தூதன்" என்பதே. பேசும்போதே ராவணனைப் பற்றி ஆராய்ந்தறிந்தார் அனுமன். எத்துணை கம்பீரம் பொருந்தியவன்? ஒளி வீசும் தோற்றம்?அவன் மகனா இந்திரஜித்? மகனே இவ்வளவு வீரன் என்றால் தகப்பன் எத்தனை பெரிய வீரன்? என்ன அழகு? என்ன மதிநுட்பம்? முகமே காட்டுகின்றதே? இவன் ஓர் அரக்கர் தலைவனா? இவன் மட்டும் நன்னடத்தை உள்ளவனாய் இருந்திருந்தால் இவ்வுலகையே வென்றிருப்பானே? அதே சமயம் ராவணன் நினைக்கின்றான் அனுமனைப் பற்றி:" கைலையில் இருக்கும் அந்த ஈசனின் அமைச்சன் ஆன நந்திதேவனே இந்த உருவெடுத்து வந்துவிட்டானோ? இவன் பெரும் வீரம் செறிந்தவனாய்க் காணப்படுகின்றானே என நினைத்துக் கொண்டே, தன் அமைச்சர்களில் முக்கியமானவன் ஆன பிரஹஸ்தன் என்பவனைப் பார்த்து இந்த அனுமன் வந்த காரியம் என்ன என்பது அறியப் படட்டும் என்று உத்தரவிடுகின்றான். பிரஹஸ்தன் கேள்விகள் கேட்கத் தொடங்குகின்றான்.
சரியான உளவு! சீதையை தேடி போகிற இடத்திலே உளவு வேறப் பாக்கிறாரா?
ReplyDeleteஆமாம், கடலை தாண்டி எப்படிவருவாங்கன்னு சீதை கவலை படுகிறாள்.. ஆனால்எல்லாரும்திரும்பும்போது தரை மார்கமாவே திரும்பி வந்ததாக நினைவு? வால்மீகி என்னசொல்கிறார்?