எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, May 12, 2008

கதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 42

பிரம்மா, சிவன், வாயுதேவன், இந்திரன் போன்றவர்களை மனதில் நினைத்து வணங்கிய அனுமன் தன் பிரயாணத்தை ஆரம்பித்தார். மலையே குலுங்கும் வண்ணம் கிளம்பிய அனுமன் சமுத்திரத்தைத் தான் தாண்டும் வண்ணம் விசுவரூபம் எடுத்துக்கொண்டு கூடி இருந்த வானர வீரர்களிடம் தான் சீதையை எவ்வாறேனும் கண்டுபிடித்துக் கொண்டு வருவதாயும் இல்லை எனில் ராவணனைச் சங்கிலியால் கட்டி இழுத்து வருவதாயும் கூறிவிட்டுச் சமுத்திரத்தைத் தாண்டுகின்றார். கடலைத் தாண்டி விண்ணில் பறந்த அனுமனைக் கண்ட தேவாதிதேவர்கள் அனைவரும் ஆனந்தம் அடைந்தனர். கடல் தாண்டும்போது சமுத்திரராஜன் அனுமனைப் பார்த்துவிட்டு, அவன் இக்ஷ்வாகு குல திலகம் ஆன ராமனின் காரியமாய்ப் போவதை அறிந்து கொண்டு அவனை உபசரித்து அனுப்புவது தன் கடமை என நினைக்கின்றான். ஆகவே தன்னுள் அடங்கிக் கிடந்த மைந்நாகம் என்னும் மலையை எழுப்பி அனுமனைத் தடுத்துத் தன்னில் சற்று நேரம் தங்கிப் போகச் சொல்லி வேண்டுமாறு சொல்கின்றான். அப்போது கடல் நடுவே இருந்த மைந்நாக மலை விண்ணளவுக்கு உயர்ந்து நின்று எழும்பியது. இந்த மலை இவ்வாறு தன் வழியில் குறுக்கிட்டுத் தடுப்பதை உணர்ந்த அனுமன் அந்த மலையைப் புரட்டித் தள்ளிவிட்டு அதைவிடவும் உயரே பறக்க ஆரம்பிக்க, மைந்நாகமோ அனுமனைத் தன் சிகரத்தில் சற்றே அனுமன் தங்கிப் போகுமாறு வேண்டியது. மேலும் இது சமுத்திரராஜனின் வேண்டுகோள் எனவும், இக்ஷ்வாகு குலத்தவரை உபசரிப்பது தன் கடமை என சமுத்திரராஜன் வேண்டியதன் பேரில் தான் கேட்பதாயும் சொன்னது, மலை உருவில் இருந்த மலையரசன். தான் ராம காரியமாய் வேகமாய்ச் செல்லவேண்டி இருப்பதாய் அனுமன் கூறிவிட்டு அதைத் தாண்டி முன்னே இன்னும் வேகமாய்ப் போனான். சூரியனே வியக்கும் வண்ணம் வேகமாய்ப் பறந்தானாம் அனுமன். அந்தச் சூரியனை மறைக்கும் ராகுபோல் அனுமன் வானத்தில் பறக்கும்போது உலகில் மேலெல்ல்லாம் ஒளிபெற்றுக் கீழெல்லாம் இருண்டிருந்தது. விண்ணில் உள்ள தேவர்கள் நாக மாதா ஆன சுரசை என்னும் தூய சிந்தை உடைய பெண்ணை நோக்கி, இந்த அனுமனின் பலத்தை நாம் அறிந்துவர உதவி செய்வாய் என வேண்ட, அவளும் உடனே சுய உருவை விடுத்து ஒரு அரக்கி வடிவம் எடுத்து அனுமன் முன்னே செல்கின்றாள்.

பிளவு பட்ட நாக்குடன் கூடியவளாய் அனுமன் முன்னே தோன்றிய சுரசை அனுமனை உண்ணும் ஆசை உள்ளவள் போல் அனுமனைப் பழித்துப் பேசுகின்றாள். ஆணவம் கொண்ட வானரமே, எனக்கு ஏற்ற உணவு நீயே, என்னெதிரே வருபவர்களைத் தடுத்து நிறுத்தி எனக்கு உணவாக்கிக் கொள்வது என் வேலை, பிரமன் எனக்களித்த வரம் எனக் கூறுகின்றாள். என் வாய் வழியே புகுந்து உட்செல்லுவதைத் தவிர வேறே வழியில்லை உனக்கு என்று கூறுகின்றாள். அனுமன் அவளிடம் நான் ராமகாரியமாய்ச் செல்கின்றேன். இப்போது தடை செய்யாதே. பெண்ணாகிய நீ பசித்துன்பத்தால் வருந்துவது கண்டால் மனம் வேதனைப் படுகின்றது. ராமனின் காரியம் முடிந்து நான் திரும்பி வரும் வேளையில் நீ என்னை உண்ணலாம், அப்போது என் உடம்பைத் தருவேன் என்று கூற சுரசை சம்மதிக்கவில்லை. உடனேயே அனுமனைத் தன் வாயினுள்ளே புகச் சொல்கின்றாள். அனுமன் அவளை எவ்வாறு வெல்லுவது என யோசித்த வண்ணம், உன்னை எவ்வாறேனும் அவமதித்துவிட்டுச் செல்வேன். உன் வாயினுள் நான் புகுந்து கொள்கின்றேன். முடிந்தால் நீ என்னை உண்ணலாம். என்று சொல்லிவிட்டுச் சட்டெனத் தன்னைச் சுருக்கிக் கொண்டு சுரசையின் வாயினுள் புகுந்துவிட்டு அவள் அதை உணரும்முன்னர் வெளியே வந்துவிட, அனுமனின் வல்லமை உறுதியானதை எண்ணி வானவர் வாழ்த்தினர், மலர்மாரி தூவினார்கள். சுரசையும் தன் பழைய உருவை அடைந்து அனுமனின் செயல்களில் இனி வெற்றியே என ஆசிகள் கூறி வாழ்த்தி வழி அனுப்புகின்றாள்.
பின்னர் அனுமன் இன்னும் அதிக உயரத்தில் விண்ணில் பறக்கக் கண்ட தேவர்களும், யக்ஷர்களும், அந்த மகாவிஷ்ணுவின் வாகனம் ஆன கருடனோ இவ்வாறு வேகமாய்ப் பறக்கின்றார் என வியந்தனர். அப்போது சமுத்திரத்தில் அனுமனின் நிழல் நீளமாய் விழவே, அந்த நிழலைப் பிடித்து யாரோ இழுக்கவே அவர் வேகம் தடைப்பட்டது. அனுமன் கீழே பார்த்தார். பெரிய உருவம் படைத்த ஒரு அரக்கி குகை போன்ற தன் வாயைத் திறந்து வைத்துக் கொண்டு இருப்பதையும் அவள் உருவம் வளர்வதையும் கண்டார் அனுமன். சிம்ஹிகை என்னும் அந்த அரக்கி குகை போன்ற தன் வாயைத் திறந்து வைத்துக்கொண்டு அனுமனை விழுங்க வர, அனுமன் அவள் வாயினுள் புகுந்து, வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்து வெற்றி காண்கின்றார். அதன் பின்னர் தடையேதும் இல்லாமல், சமுத்திர ராஜனும், வாயுவும் துணை செய்யப் பறந்த அனுமன், கடலின் மறுகரையை அடைந்து திரிகூட மலை மீது நின்று கொண்டு இலங்கையைப் பார்வை இடுகின்றார். எவ்வளவு பெரிய நகரம், எத்தனை அழகு பொருந்தியது? மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், குளங்கள், ஏரிகள், நந்தவனங்கள், பேரழகோடு ஒளிமயமாய்க் காட்சி அளித்தது இலங்கை நகரம். பாதுகாக்கத் தான் எத்தனை அரக்கர்கள்? இத்தனை அரக்கர்களின் பாதுகாப்பையும் மீறி என்ன செய்ய முடியும்? அவ்வளவு எளிதில் இந்நகரைக் கைப்பற்ற முடியுமா? இப்போது நாம் வந்தாற்போல் கடல் கடந்து இந்நகருக்குள் வர வானரத் தலைவர்கள் ஆன அங்கதன், அரசன் ஆன சுக்ரீவன், தளபதியான நீலன், நான் ஆகிய நால்வரால் மட்டுமே இவ்வாறு வர முடியும். மற்றப் பெரும்படை எவ்வாறு வரும்? சீதையை எப்படி மீட்பது? முதலில் எவ்வாறு காண்பேன்? எங்கே இருப்பாள் அந்தச் சுந்தரியான சீதை? இந்த அரக்கர்களுக்குத் தெரியாமல் தான் பார்க்கவேண்டும். இப்போது பட்டப் பகலாய் இருக்கின்றதே? இரவு வரட்டும், பார்க்கலாம். இவ்விதமெல்லாம் அனுமன் எண்ணினான். ஆராய்ந்து பார்த்துத் தான் நாம் வந்த காரியம் கெட்டுவிடாமல் வேலையை முடிக்கவேண்டும் என்று எண்ணியவனாய் அனுமன் பகல் போய் இரவுக்குக் காத்திருந்தான், இரவும் வந்தது. அனுமன் முன் தோன்றினாள், இலங்கை நகரைக் காத்து வருபவள் ஆன இலங்கிணி, மிக்க கோபத்துடன்.

கடாம்பி உ.வே.ரங்காசாரியார் அவர்களின் வால்மீகி ராமாயண மூல மொழிபெயர்ப்புக்கு இணங்க திருத்தப் பட்டது. சில தவறுகள் ஏற்பட்டதற்கு வருந்துகின்றேன்.

1 comment:

  1. ம்ம்ம். படித்து கொண்டு இருக்கிறேன்.

    ReplyDelete